Sunday, May 27, 2018

எச்சரிக்கை..... எச்சரிக்கை ...

ச்சரிக்கை..... எச்சரிக்கை ...சமீப காலமாக தமிழர்களிடம்  “டுமிலண்டா” என்ற ஆபத்தான வைரஸ் வேகமாக பரவிவருகிறது. அந்த வைரசை பற்றிய விவரங்கள் கீழே

எங்கிருந்து பரவுகிறது:
மார்க்கெட் இழந்த சினிமா இயக்குனர்கள் இந்த வைரஸை பரப்புகிறார்கள். குறிப்பாக சீ..ன்,பார...ஜா,அ..ர்,கௌ..ன் ஆகியோர். இவர்கள் தவிர திரு...,வேல்...ன் ஆகியோரிடமிருந்தும் பரவுகிறது.

யாரை தாக்கும்:
இந்த வைரஸ் அனைவரையும் தாக்கும். இருந்தாலும்  அப்பாவி ஏழை மக்களையும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களையுமே  இந்த வைரஸ் எளிதில் தாக்கும்.

திடீரென இந்த வைரஸ் எப்படி தோன்றியது:
மத ரீதியான லாபத்திற்காக வெளிநாட்டில் இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

எப்படி பரவுகிறது:
பெரும்பாலும் மேலே குறிப்பிட்ட மார்க்கெட் இழந்த இயக்குனர்களின் பேச்சை கேட்பதாலும், அரை வேக்காட்டு மீம்ஸ்களை நம்புவதாலும் சில செய்தி சேனல்கள் மூலமும் இந்த வைரஸ் எளிதில் பரவுகிறது.

நோயின்  அறிகுறிகள்  என்ன?
நோய் தாக்கியவர்கள் அரசியல் பேசும்போதும்  அவர்களின்  கண்கள் சிவக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மன குழப்பம் ஏற்பட்டு அரசு தனி துறை ஒன்றை அமைத்து  தமிழர்களுக்கு எதிராக சதி செய்வதாக நம்புவார்கள். தமிழர்களின் வரலாற்றையே குழப்புவார்கள். இஷ்டத்துக்கு எதை  வேண்டுமானாலும் கூறி விட்டு   “டுமிலண்டா” என்று கூறி விட்டால் அவர்களை நம்ப வைத்து விடலாம்.

நோய் முற்றியவர்கள்  அவர்களுக்கு   எதிர் கருத்தை கூறினால் கடித்து வைத்து விடுவார்கள். அரிதாக சில நோயாளிகளுக்கு  ஆமை கறி சாப்பிட வேண்டும் என்றும் தோன்றும்.  

நோய் வந்த பின் என்ன செய்ய வேண்டும்:
ஆரம்ப நிலையில் இருப்பவர்களை உண்மையை எடுத்துக் கூறி சரி செய்யலாம். நோய் முற்றிய பின் ஒன்றும் செய்ய முடியாது.

தடுப்பு முறை:
அரசாங்கம் இதுவரை இந்த நோயை தடுக்க கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழர்கள் இப்போதைக்கு பொது அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம்  இந்த வைரஸ்  தாக்காமல் காத்துக் கொள்ளலாம்.

Friday, October 13, 2017

இறவா நினைவுகள்

“ஹலோ! சிரஞ்சீவி பிரைன் காபியர்ஸ்”

“எஸ் மேடம்.”

“என்னோட பேரு ஜான்வி. உங்க விளம்பரத்தை நான் டிவில பார்த்தேன். நீங்க என்ன மாதிரி சர்வீஸ் பண்றீங்கனு கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“நிச்சயம் மேடம். எங்க கம்பெனிதான் உலகத்தோட முதல் மற்றும் ஒரே brain copier கம்பெனி. தங்களுக்கு பிடிச்சவங்களோட மறைவுக்கு அப்புறம் அவங்களையே நினைச்சு வருத்தப்படுறது சாதாரணமா நடக்குற விஷயம். அந்த வருத்தத்தை தீர்த்து வைக்கிறதுதான் எங்க கம்பெனி நோக்கம்.”

“இன்ட்ரஸ்டிங். ஆனா எப்பிடி இதை செய்வீங்க”

“நியுரல் நெட்வொர்க் கேள்விப்பட்டு இருக்கீங்களா?”

“இல்லையே”

“நியுரல் நெட்வொர்க்னா மனித மூளை போலவே செயல்படுற கம்ப்யூட்டர். நியுரல் நெட்வொர்க் வச்சு செயல்படுற ரோபோ மனுசனை மாதிரியே யோசிக்கும்”

“ஸோ நீங்க இறந்தவங்க உருவத்துல ரோபோ செய்து குடுத்துடுவீங்க”

“நீங்க சொல்றது கிட்டத்தட்ட சரி. ஆனா உருவம் மட்டும் இறந்தவங்க மாதிரி இருக்காது. அதோட குரல், செயல்பாடுகள், நினைவுகள் எல்லாமே இறந்தவங்க மாதிரியே இருக்கும்”

“நினைவுகளா?”

“எஸ். உங்களுக்கு விருப்பமானவர் மரணப்படுக்கையில் இருக்கும்போதே நீங்க எங்களை தொடர்பு கொண்டா நாங்க அவங்க மூளைய ஸ்கேன் செஞ்சு அவங்களோட நினைவுகள்,குணாதிசியங்கள்,மூளையோட கனெக்ஷன் எல்லாத்தையும் டவுன்லோட் செஞ்சுக்குவோம். அவங்க மூளையில் இருக்குற நரம்பு இணைப்புகள் போலவே நியுரல் நெட்வொர்க் உருவாக்கிடுவோம். நினைவுகளை அந்த நியுரல் நெட்வொர்க்ல இன்ஸ்டால் பண்ணிடுவோம். உதாரணமா ...”

“ரொம்ப டெக்னிகல் டீடைல் வேணாம். இப்டி செஞ்சா என்ன ஆகும்னு மட்டும் சொல்லுங்க”

“அங்கதான் வரேன். இப்படி நாங்க உருவாக்குற நியுரல் நெட்வொர்க் மூளையை இறந்தவரோட உருவத்தில நாங்க உருவாக்குற ரோபோவில் பொறுத்திடுவோம். இப்போ ரோபோ முழுக்க முழுக்க இறந்தவர் மாதிரியே சிந்திக்கும். தவிர இறந்தவரோட பழைய நினைவுகள் ரோபோவுக்கு இருக்குறதால நீங்க அது கூட பழைய கதைகளை பேசலாம். நீங்க உங்க பிரியமானவரோட
இழப்பை உணரவே மாட்டீங்க”

“நம்பவே முடியல”

“நம்புறது கஷ்டம்தான். ஆனா இதுவரை பத்து கஸ்டமர் வரைக்கும் நாங்க சர்வீஸ் செஞ்சு இருக்கோம்”

“ஓகே. அப்போ உடனே இந்த அட்ரஸ் வர முடியுமா?. இங்க என்னோட கணவர் சீரியஸா இருக்கார். அவரோட மூளையை ஸ்கேன் செய்யணும்.”

“அவரை காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சர்டிபிகேட் குடுத்துட்டாரா?”

“எல்லாம் இருக்கு. நீங்க சீக்கிரம் வாங்க”

“ஓகே மேடம். ஆனா இது ரொம்ப செலவு பிடிக்கும் மேடம். ”

“எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. நீங்க வாங்க. அட்ரஸ்.......”

ரண்டு நாட்களுக்குப் பின் ஜான்வியின் வீட்டு கதவு தட்டப்பட்டது.

“சிரஞ்சீவி பிரைன் காபியர்ஸ்ல இருந்து வரோம் மேடம். உங்க ரோபோ, சாரி உங்க கணவர் இதோ” என்றவாறு அந்த ரோபோவை காட்டினார்.

“இது நடக்குமா?”

“நடக்காது மேடம். இதுக்கு கண் வைக்கவும், நடக்க வைக்கவும் கவர்மென்ட் பெர்மிசன் தரல. சிக்கல் வந்துரும்னு பயம்”

“சரி. வச்சுட்டு போங்க” என்றாள் ஜான்வி.

அவன் சென்ற பின்னர் கதவை அடைத்துவிட்டு அதனுடன் பேசினாள்.

“காபி சாப்பிடுறயா நிக்கி”

“வேணாம் ஜானு. எனக்கு பசியே எடுக்கல. ஏன்னு தெரியல” என்றது அது.

“சரி சொல்லு. எதுக்கு என்னை விட்டுட்டு போன” என்றாள். 

அதனிடமிருந்து பதில் இல்லை.

“நிக்கி! நான் சொல்றதை தெளிவா புரிஞ்சுக்கோ. நீ ஏற்கனவே இறந்துட்ட. மிச்சம் இருக்குறது உன்னோட நினைவுகள் மட்டும்தான். நீ தயங்கவோ குற்ற உணர்ச்சியோட இருக்கவோ
காரணமே இல்ல. ஓபன் அப்”

“சாரி ஜான்வி. ஆன்சைட் வாங்கி இங்க வந்ததுக்கு அப்புறம் எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சு போச்சு. விசா முடிஞ்ச அப்புறமும் எனக்கு கிளம்ப மனசு இல்ல, அதான் வேற வழி தெரியாம
இங்க சிட்டிசன்ஷிப் வாங்க ஸ்டெல்லாவை கல்யாணம் செஞ்சுகிட்டேன்.”

“நீ செஞ்சது தப்புன்னு தோணலியா உனக்கு?”

“தோணிச்சு. ஆனா எனக்கு திரும்ப இந்தியா வர பிடிக்கல. ஆனா இந்த ஸ்டெல்லா எனக்கு தீராத நோய் இருக்குன்னு தெரிஞ்சதும் என்னை விட்டுட்டு போயிட்டா. இன்னும் நல்ல வேளை நீ
என்னை எப்பிடியோ தேடி கண்டுபிடிச்சு வந்து என்னோட கடைசி நாட்கள்ல நல்லா பார்த்துகிட்ட. தேங்க்ஸ் ஜானு”

“வெல்கம்”

“அதுமட்டும் இல்லாம என்னோட நினைவுகளை காப்பாத்தி என்னை இன்னும் உயிரோட வச்சு இருக்கியே. உன்னோட அன்பை புரிஞ்சுக்காம நான்...”

“ஸ்டாப் இட் நிக்கி! நான் உன்னை தேடி வந்தது உன் மேல இருக்குற பாசத்துல இல்ல. உன்னை கொலை செய்யதான். ஆனா சரியா பேச முடியாம பாதி சுய நினைவோட இருக்குற உன்னை பழிவாங்க எனக்கு மனசு வரல. எப்படியும் உன்னை குணப்படுத்தி பழிவாங்கிடமுன்னு நெனச்சேன். ஆனா நீ குணமாகல. அப்போதான் சிரஞ்சீவி கம்பனியோட விளம்பரம் பார்த்தேன். என்னோட ஆத்திரம் தீரணும்னா நீ சுயநினைவோட இருக்குறப்போ உன்னை நான் கொல்லனும். அதுக்காக உன்னோட நினைவுகளை காப்பாத்தி வச்சேன். இப்போ அதை அதை அழிச்சு உன்னை ரெண்டாவது தடவை கொல்லப்போறேன்”

“வேண்டாம் ஜான்வி. ப்ளீஸ்” என்றது அது. ஜான்வி கண்டு கொள்ளாமல் அதன் மேல் பாய்ந்து அதை உடைத்து ஒவ்வொரு வயராக உருவத் தொடங்கினாள்.

Friday, September 8, 2017

ஜூலி சூழ் உலகு

பிக்பாஸ் வீட்டுக்கும் IT நிறுவனங்களுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அந்த பிக்பாஸ் வீட்டை போலவே டீம் என்ற பெயரில் முன்பின் தெரியாத பத்து பேரை டீம் என்ற பெயரில் சேர்த்து விட்டு டெய்லி டாஸ்க் என்று கொடுப்பார்கள். ஆன்சைட் மேனேஜர் என்ற பெயரில் முகம் தெரியாத பிக்பாஸ் ஒருவர் அடிக்கடி போனில் வந்து மிரட்டுவார். ப்ராஜெக்ட்  முடித்தால் வெளிநாட்டிலிருந்து மிட்டாய் அனுப்பி வைப்பார்.

இந்த பத்து பேர் கொண்ட டீம் அமையுமே அதில்தான் விசயமே இருக்கிறது. கட்டாயம் ஒரே மாதிரியான ஜீவன்களை ஒரே டீமில் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக இருப்பார்கள். டீமில் இருக்கும் பெண்களுக்குள் வெளியே சொல்லிக் கொள்ளாமல் ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும். அந்த போருக்கு காரணம் என்ன என்று யாரும் அறிந்து கொள்ள முடியாது. சொல்லப் போனால் அந்த பெண்களுக்கே அந்த காரணம் தெரியுமா என்பது சந்தேகம்'

டீமில் கட்டாயம் ஒரு ஸ்ரீ இருப்பார். எப்போதும் குழப்பத்தோடு எதையோ யோசித்து கொண்டு இருப்பார். டாஸ்க் செய்யலாமா வேண்டாமா என்று அவர்களின் சிந்தனை இருக்காது. டீமில் இருந்து எப்படி கழண்டு ஓடுவது என்று மட்டுமே யோசிப்பார்கள். அதே போல் டீமில் கணேஷ் கேரக்டர் ஒன்று இருக்கும். டீமில் எந்த பஞ்சாயத்து நடந்தாலும் ரியாக்ஷன் எதுவும் காட்டாது. ஆனால் ப்ராஜெக்ட் பார்ட்டி என்றால் மட்டும் முதல் ஆளாக ஆஜராகி . சாப்பாட்டை வெளுத்துக் கட்டும்.

அதே போல  டீமின் சிநேகன்கள்  வேடிக்கை விளையாட்டு என்று சொல்லி விட்டால் போதும்.\;குதூகலம்  ஆகி விடுவார்கள். கம்பெனி  பாஸ்கள் என்ன சொன்னாலும்  கையை கட்டி ஆமாம் சாமி போடுவார்கள். பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் விழுந்தடித்து உதவுவார்கள். பெண்களோடு சேர்ந்து கொண்டு புரணி பேசுவார்கள்.

ரைசா போன்று முழு மேக்கப்பில் வரும் ஒரு பெண் கேரக்டரையும் தவறாமல் காணலாம். அவர்கள் ஆபீசுக்கு வருகிறார்களா அல்லது பேஷன் ஷோவுக்கு வருகிறார்களா என்று கண்டுபிடிக்கவே முடியாது. தமிழ் தெரிந்தாலும் தெரியாதது போல எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். க்யுட் ரியாக்சன் என்று நினைத்துக் கொண்டு முகத்தை கோணலாக்கி அடிக்கடி பயம் காட்டுவார்கள். வேலை செய்ய சொன்னால் மட்டும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஓய்வறை சென்று படுத்துக் கொள்வார்கள். ஆர்த்தி போல ஒரு கேரக்டர் எப்போது பார்த்தாலும் சம்பந்தம் இல்லாமல் லொட லொட என்று பேசிக் கொண்டே திரியும்.

ஆரவ் கேரக்டர் எப்போதும் பெண்களுடனேயே சுத்தும். அதே போல வையாபுரி போல ஒருவர்  இருப்பார். அனைவரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பார்.  வெளிநாட்டு மிட்டாய் வரும்போது மனைவிக்கு வேண்டும், பையனுக்கு வேண்டும் என்று இரண்டு மிட்டாய்களை பையில் போட்டுக் கொள்வார். சக்தி கேரக்டர் எப்போதும் கெத்தாகவே சுத்தி வரும். பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் கொஞ்ச நாள் சென்றே அவரை பற்றி தெரியும்.

சில நேரங்களில் அபூர்வமாக ஓவியா போன்ற சில கேரக்டர்களும் டீமில் இருக்கும். மனதில் பட்டதை பேசும். பெரியவர் சிறியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் எது தவறு என்று பட்டென சொல்லி விடுவார்கள். ஆனால் ஓவியா போன்றவர்கள் மாட்டிக் கொண்டால்  டீமில் இருக்கும் மற்றவர்கள் அவரை பைத்தியமே ஆக்கி விடுவார்கள்.
காயத்ரி போன்ற தாதா கேரக்டர்  ஒன்றும் டீமில் இருக்கும். பெரும்பாலும் இந்த காயத்ரிகள் லீடர் லெவலில் இருப்பதால் மற்றவர்கள் மிக பவ்வியமாக நடந்து கொள்ளுவார்கள்.

கடைசியாக வரும் இந்த ஜூலிக்கள்தான் மிக முக்கியமானவர்கள். தனக்கு லாபம் கிடைக்கும் என்பதால் காயத்ரிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு இணக்கமாக நடந்து கொள்வார்கள். தான் முன்னேற நிறைய பொய் சொல்லுவார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நல்லவர் போல நடிப்பார்கள். நம் வாயை கிளறி நம்மிடம் இருந்தே விசயத்தை வாங்கி நேரம் பார்த்து பிக்பாசிடம் போட்டு குடுத்து விடுவார்கள். அநேகமாக  டீமில் பாதி பேருக்குள் இந்த ஜூலி கேரக்டர் இருக்கும்.

இப்படி வித்தியாசமான  கேரக்டர்கள் இருந்தாலும் எத்தனை பேர் டீமில் இருந்தாலும் அந்த வித்தியாசம்தான் it கம்பெனிகளை சுவாரசியம் ஆக்குகிறது. பிக்பாசையும்.


Wednesday, January 25, 2017

ரஜினியை பயன்படுத்தி புரட்சியாளராகும் வழிமுறை

சிலருக்கு புரட்சியாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி புரட்சியாளர் ஆக எளிய வழி ரஜினியை திட்டுவது. ரஜினியை திட்டுவதன் மூலம் கிடைக்கும் லாபம் என்னவென்றால்  எளிதில் மக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்ப முடியும். ரஜினியை திட்டுபவர்கள்   புத்திசாலிகள் என்று கூட சிலர் நம்பி விடுவார்கள். இப்படி எளிய முறையில் புரட்சியாளர் ஆகும் வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ளே வழிமுறைகளை பின்பற்றும் முன் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ரஜினியை வைத்து புரட்சியாளராக முயற்சி  செய்யும்போது  கட்டாயமாக செய்தித்தாளோ, புத்தகங்களோ படிக்கக் கூடாது. அப்படி செய்தால் சிந்திக்க தொடங்கி விடுவீர்கள். பின்னர் புரட்சியாளராக மாற முடியாது. முடிந்தவரை facebook,whatsapp மூலம் மட்டுமே செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும். இதை மனதில் நிறுத்திக் கொண்டு  வழிமுறைகளை படியுங்கள்.

Step 1:
facebook மூலம் மட்டும் நாட்டு நடப்பை  கவனித்துக் கொண்டே இருங்கள். நாட்டில் ஏதேனும் பிரச்சினை எழும்போது “ ரஜினி இதை பத்தி  ஒன்னும் சொல்லலடா” என்று status போடவும். உண்மையிலேயே ரஜினி அதை பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா என்றெல்லாம் கவலைப் பட தேவையில்லை. எல்லா பிரச்சினைக்கும் ரஜினி ஏன் கருத்து கூறவோ, போராடவோ  வர வேண்டும் என்று  மூளையை பயன்படுத்தி  யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் மேலே படிக்காதீர்கள்.

Step 2:
ரஜினி அந்த பிரச்சினை  பற்றி கருத்து கூறியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். “இப்போ இவரை யாரு கருத்து சொல்ல கூப்பிட்டா?” என்று status தட்டி விடுங்கள். ரஜினிக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் share செய்து விடுங்கள். அதனுடன் நானும் முன்னாள் ரஜினி ரசிகனே என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

Step 3:
உங்களை போன்ற புரட்சியாளர்களுக்கு எப்போதும் முதிர்ச்சி அடையப் போவதில்லை என்பதால் ரஜினியை கிழவன் என்று குறிப்பிடவும். உங்களுக்கோ, உங்கள் பரம்பரைக்கோ  முடி உதிரும் பிரச்சினை இல்லை என்று உறுதியாக தெரிந்தால் அவரை சொட்டை  என்றும் குறிப்பிடலாம்.

Step 4:
முந்தைய  நிலையை கடந்த பின் ரஜினி ரசிகர்கள் ரஜினி, அந்த பிரச்சினையில் எடுத்த நிலைப்பாட்டை பற்றி பேசுவார்கள். அப்போது நீங்கள் “ரஜினி சின்ன பொண்ணு கூட டூயட் பாடுறாருடா” என்று சம்பந்தமில்லாமல் உளற வேண்டும்.

Step 5:
அடுத்து ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்களுக்கு செய்யும் உதவிகளை பற்றி பேசுவார்கள். அப்போது “ரஜினி கர்நாடகாடா” என்று எதிர் தாக்குதல் புரியலாம். அடிக்க மாட்டார் என்று உறுதியாக தெரிந்தால் அந்த ரஜினி ரசிகரையும் திட்டலாம்.

Step 6:
ரஜினியின் அடுத்த படத்தை tamilrockersல் மட்டுமே பார்க்கப் போகிறேன் என்று status போட வேண்டும். அவ்வளவு ரோசக்காரன் ரஜினி படம் பார்க்காம இருக்கலாமே என்று யாரேனும் கேட்டுவிட்டால் “ரஜினி தமிழ்நாட்டுக்கு ஒண்ணுமே செய்யலடா” எனலாம்.

step 7:
ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் “ரஜினிக்கு நடிக்கவே தெரியாதுடா” என்று கை நோக status போடுங்கள். “நடிகன்னா கமல்தான்” எனலாம். அல்லது விஜய், அஜித் என்று தேவைக்கேற்ப பேரை போட்டு கொள்ளலாம்.

Step 8:
ரஜினி படம் வெளி வந்த முதல் இரண்டு நாட்களுக்குள் தியேட்டர் சென்று பார்த்து விடவும். படம் பார்க்க செல்லும் முன் தியேட்டர் வாசலில்   செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும். படம் எப்படி இருந்தாலும் படம் முடிந்து வெளியே வரும்போது  “படம் குப்பைடா. ரஜினி அவ்வளவுதான்டா ”  என்று கூவிக் கொண்டே வர வேண்டும்.

Step 9:
படம் 100 நாட்கள் ஓடினாலும் சரி, 150 நாட்கள் ஓடினாலும் சரி. ஒரு நாளும் கூவுவதை நிறுத்த வேண்டாம். இந்த நிலையில் உங்களை யாரும் அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள். அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. உங்கள் வயிற்றெரிச்சல் தீரும்வரை படத்தையும், ரஜினியையும் கழுவி ஊற்றவும்.

Step 10:
முதல் நிலைக்கு சென்று புரட்சி போராட்டத்தை தொடரவும்.

இப்படி மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் ஒரு கோடி பேர் போராளிகளாக உள்ளனர். அவர்களுடன் நீங்களும் ஒரு கோடியே ஒன்னாவது போராளியாக இணைய வாழ்த்துக்கள்.




Tuesday, November 15, 2016

பீதாம்பரபட்டி மக்கள்

“தம்பி! கொஞ்சம் சீக்கிரம்  ஆலமரத்து கிட்ட வாங்க” என்று அந்த பெரியவர் பதட்டமாக என்னை அழைத்தார்.

“என்னய்யா ஆச்சு? எதுக்கு இப்பிடி மூச்சு வாங்குறீங்க?”

“நம்ம ஊருக்கு ஒரு சிக்கல் தம்பி. நீங்களே வந்து என்னன்னு பாருங்க” என்று பெரியவர் என் கையை பிடித்து இழுக்காத குறையாக என்னை அழைத்தார். குழப்பத்தோடு அவருடன் நடக்க ஆரம்பித்தேன்.

“எதுவும் பெரிய பிரச்சினையா?”

“அப்பிடித்தான் தோணுது, அதான் ஊருல இருக்குற படிச்ச பசங்களையெல்லாம் கூப்பிடுறோம் என்றார். நூறு வீடுகள் கூட இல்லாத கிராமத்துக்கு அப்படி என்ன பெரிய பிரச்சினை வந்து விடப்போகிறது என்று குழப்பமாக இருந்தது. அதே நேரத்தில்  ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்த சிலரில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது மிகவும்  பெருமையாகவும் இருந்தது.

“புதுசா பாக்டரி கட்ட திட்டம்  எதுவும் போட்டுக்கிட்டுபோட்டு இருக்காங்களா?கவர்மென்ட் பூமிக்கடியில பெட்ரோல், நிலக்கரின்னு எதுவும் கண்டு பிடிச்சு நம்மள ஊர காலி பண்ண சொல்றாங்களா?”

“அதெல்லாம் இல்ல தம்பி. வந்து பாருங்க”

அவர் சொல்லி முடிக்கும்போதே அந்த ஆலமரம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் வந்து விட்டது. மரத்தை சுற்றி ஊரே திரண்டிருந்தது. சலசலவென்று பேசிக் கொண்டிருந்தவர்களை “வழி விடுங்க. வழி விடுங்க.படிச்ச பயலை கூட்டிகிட்டு வந்துட்டேன்”  என்றவாறே  விலக்கி என்னை உள்ளே கூட்டி சென்றார்.

“அங்க பாருங்க தம்பி”

பார்த்ததும் வியந்தேன்.  மரத்துக்கு கீழே அடர் பச்சை நிறத்தில் ஒரு எட்டு வயது சிறுவன்  அமர்ந்திருந்தான்.அவன் கண்கள் மட்டு இரத்த சிகப்பாக. சட்டை அணியாமல் இடுப்பில் மட்டும் ஒரு துணியை சுற்றி இருந்தான். அவன் கண்கள் வேகமாக சுழன்று கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரையும் எடை போடுவது போல தெரிந்தது. மொட்டை அடித்து ஒரு வாரம் ஆனா தலை போல அவன் தலையில் லேசாக  போல தலையில் முடி லேசாக எட்டி பார்த்தது.

“என்னங்க? பெயிண்ட் டின்னுல விழுந்துட்டானா? யாரோட பையன்” என்றேன்

“அவன் நம்ம ஊரே இல்லப்பா யாரு, எங்க இருந்து வந்தான்னே தெரியல. காலைல இரத்தினம் பால் ஊத்தப் போகும்போது  இவனை இங்க பார்த்து இருக்கான். பார்த்ததும் பயந்து  போய்  ஊருக்குள்ள ஓடி வந்து எங்களை எல்லாம்  கூட்டிகிட்டு வந்தான்” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

“பேச்சு குடுத்து பார்த்தீங்களா?”

“பேசுனோம். ஆனா இங்கிலீஷ்ல பதில் சொல்றான். அதான் படிச்ச பயலுகளை கூப்பிட்டு யாருன்னு விசாரிக்க பாக்குறோம்”

இங்கிலீஷ் என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. “நம்ம ஊரு பையன் இல்லன்னா போலீஸ்ல சொல்லிடலாம். அவங்க வந்து விசாரிக்கட்டும்”

“நம்ம ஊருல கலவரம்  நடந்து அவனவன் வெட்டிகிட்டு செத்தாலே  போலீஸ் ஒரு வாரம் கழிச்சுதான்  வரும். இதுக்கு எப்ப வருவாங்கன்னு யாருக்கு தெரியும்”
அவங்க வந்து விசாரிக்கட்டும். . நாம நம்ம வேலைய பார்க்கலாம்” என்று நடக்க ஆரம்பித்தேன்.

கூட்டத்தில் இருந்த ஒரு வெள்ளை மீசை பெருசு , “என்ன தம்பி? ஊருல எல்லாரும் இவனை பார்த்து பயந்து போய் இருக்காங்க. இவன் யாரு என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா. விசாரிச்சு சொல்லுங்க” என்றார்.

“ஆமாப்பு. இன்னைக்கு முழுக்க கரண்ட்டு இருக்காதாம். வீட்டுக்கு போனா நாடகம் பாக்காம பொழுது போகாது. கொஞ்சம் இவனை என்னன்னு கேளு” என்றது இன்னொரு கிழவி.

சுற்றி இருந்த வயது பெண்களும் ஆர்வமாக என்னையே பார்க்கவும் தயக்கமாக அந்த பச்சை பையனிடம் சென்றேன். கூர்மையாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“வாட் இஸ் யுவர் நேம்?”

“மியா கியா மயா க்கி கூ”

“விச் ப்ளேஸ் யு கம்?”

“கூ க்கி மமூ பஷி”

திரும்பி கூட்டத்தை பார்த்தேன். “என்னய்யா? இங்கிலீஷ்தான் பேசுறானா?” என்றார் ஊர் தலைவர்.

“அப்படிதான் தெரியுது”.

“அப்போ உனக்கும் புரியலையா?” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார். நான் சத்தம் காட்டாமல் கூட்டத்தில் ஒதுங்கினேன்.

“இவன் ஏலியன் மாதிரி இருக்கான் பா” என்றார் கூடத்தில் இருந்த இன்னொரு சிறுவன்.

“எலி எல்லாம் இல்லடா. கை காலு எல்லாம் மனுஷன் மாதிரிதான் இருக்குது”. என்றது ஒரு  கிழவி பதில்  சொல்லியது.

அருகில் இருந்த  ஒரு இளம் பெண் “இவனை நாமளே கொண்டு போய் வளர்த்துக்கலாம் மா. அழகா இருக்கான்” என்றாள் தனது தாயிடம்.

“அவன் கரப்பான்பூச்சி மட்டும் தாண்டி தின்பான்” என்று அவளின் தோழி கூறியதும் உவ்வே என்றாள்.

“இது பேயா,பிசாசான்னு தெரியலையே”, “மஞ்சக் காமாலை மாதிரி பச்சை காமாலைன்னு  சீக்கு வந்து இப்பிடி ஆயிட்டானா”, “அமெரிக்கால பச்சை மனுசங்க இருக்காங்கப்பா. நான் படிச்சு இருக்கேன்” என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.

“எல்லாரும்  அமைதியா இருங்கப்பா. இவனை என்ன செய்யலாம்னு யோசனை சொல்லுங்க” என்றார் தலைவர்.

அப்போது  ஒரு பெண் கூட்டத்தின் நடுவில் வந்து “தேவனே! தேவனே! கடைசியிலே  எங்க ஊருக்கே வந்துட்டீங்களா” என்று சொல்லிவிட்டு மண்ணில் விழுந்து புரளத் தொடங்கினாள். 

“பிரச்சினை ரொம்ப புதுசா இருக்கே” என்று தலைவர் தனது கன்னத்தை தடவத் தொடங்கினார். கூட்டம் மீண்டும் சலசலக்க தொடங்கியது.

“தலைவரே! ஏதோ ஒரு வண்டி வருது பாருங்க” என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னதும் எல்லாரும் அந்த திசையை கவனித்தோம்.

“போலீஸ் வண்டி மாதிரி இல்லையேப்பா” என்றார் தலைவர்.

“அதுல  அடுத்த தலைமுறை  டிவினு போட்டு இருக்கு பாருங்க” என்றேன்.

டிவி என்றதும் பையனை மறந்து எங்கள் கவனம் அந்த வண்டியின் மேல் திரும்பியது. “டிவியா?” என்று  உருண்டு கொண்டிருந்த பெண்ணும் எழுந்து கவனித்தாள்.

அந்த வேன் எங்கள் அருகில் வந்ததும் அதில் இருந்து கேமராவுடன் இரண்டு பேர் இறங்கினர். மூன்றாவதாக ஒருவர் குதித்து பின்னால் நடந்து கொண்டே  “மக்களே. இந்த ஊருல ஒரு அமானுஷ்யமான விசயம் நடக்குதுன்னு எங்களுக்கு தகவல் வந்தது. அதை பார்க்க இந்த ஊரு மக்கள் எல்லாம் கூடி இருக்காங்க” என்று சொல்லிவிட்டு  “சொல்லுங்க. இங்க என்ன நடக்குது  என்று கேட்டுவிட்டு கூடத்தில் ஒருவரிடம் மைக்கை நீட்டினார்.

அவர் முகத்தை துடைத்துக் கொண்டு  “இங்க ஒரு சின்ன பையன் வந்து இருக்கான் . யாருன்னு அடையாளம் தெரியல. அவன் பச்சை நிறத்துல...”  என்று ஆரம்பித்து முழு கதையையும் கூறி முடித்தார்.

“நேயர்களே! இப்போ இந்த அதிசய பையனை நாங்களே சென்னைக்கு கொண்டு போய் போலீஸ்ல ஒப்படைக்கப் போறோம்” என்று நடப்பதை யாரும் உணரும் முன்னரே  அவர்கள் அந்த சிறுவனை தூக்கி வேனில் ஏற்றினார்கள். நாங்கள் சிறிது நேரம் நின்று விட்டு கலைந்து சென்றோம்.

ரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் ஊரே பரபரப்பாகி ஊர்த் தலைவர் வீட்டில் கூடி பத்து மணிக்காக காத்து இருந்தோம்.

“நம்ம ஊரை பத்தி உலகத்துக்கே தெரியப் போகுது இப்போ. நமக்கு அந்த பையன் யாருன்னு தெரியப் போகுது. எல்லாரும் வெளியூர்ல இருக்குற சொந்தகாரங்களுக்கு சொல்லிட்டீங்கள்ல” என்றார் தலைவர்.

“சொல்லிட்டேன் தலைவரே.” என்று வேகமாக சொன்னார் டிவியில் பேட்டி கொடுத்தவர்.

“தலைவரே!  நம்ம ஊரை காட்டுறாங்க பாருங்க”

எல்லாரும் ஆவலாக பார்த்தோம். எங்கள் ஊர் பெயர்ப் பலகையும் வயலையும் காட்டினார்கள். அனைவரின் முகமும் பல்லாக மாறியது. பின்னர் எங்க ஊருக்கு வந்த நிருபர் டிவியில் தோன்றினார். அவரை பார்த்ததும் சிலர் விசில் அடித்தார்கள்.

“நம்ம ஊரு வேர்ல்ட் பேமஸ் ஆச்சுடா ”  என்றார் தலைவர்.

“இது வரைக்கும் தனி மனிதர்கள் கிட்ட விளையாண்டு முட்டாள் ஆக்கின நம்ம நிகழ்ச்சியில முதல் முறையா ஒரு ஊரையே முட்டாள் ஆக்கி இருக்கோம். அதை நீங்க பார்த்து ரசிக்கப் போறீங்க” என்று அந்த நிருபர் பேசிக் கொண்டிருந்தார்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...