Tuesday, December 30, 2014

டிசிஎஸ் அடிக்கும் எச்சரிக்கை மணி

டி துறை ஊழியர்களின்  எதிர்காலம் கடுமையாக இருக்கப் போவதாய் தோன்றுகிறது. இனி ஐடி  துறை ஊழியர்கள் தேவைக்கு அதிகமான ஊதியம் பெறுவதாக கருதப்படும் பொது கருத்து விரைவில் மறைந்து போகும். அதற்கு பிள்ளையார் சுழி போட்டு இருப்பது டிசிஎஸ். 25000 பேரை வேலை நீக்கம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்தியாவில் இயங்கும் அமெரிக்க கம்பெனிகள் கூட செய்ய தயங்கும் ஒரு காரியத்தை செய்து, டிசிஎஸ் வேலை அரசாங்க வேலை போல என்ற கருத்தையும் தவிடுபொடியாக்கி விட்டது  டிசிஎஸ் நிர்வாகம். குறைந்த ஊதியத்தில் புது ஊழியர்கள் 50000 பேரை வேலைக்கு தாங்கள் உருவாக்கிய காலி பணியிடங்களை தாங்களே நிரப்பவும் போகிறார்கள்.

ஆட்குறைப்பு என்பது சில சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாததே. கம்பெனி நஷ்டத்தில் இயங்கும்போது செலவுகளை குறைக்க நினைப்பதும் இயல்பானதே. ஆனால் இருக்கும் இலாபத்தை அதிகரிக்க இவர்கள் ஆட்குறைப்பு செய்வதைத்தான் ஏற்று கொள்ள முடியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களை தூக்க போவதாக சொன்னார்கள். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு கீழே அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு மேலே அதிக ஊதியம் பெறுவதாக நிர்வாகம் கருதினால் அவர்களையும் வெளியேற்றுவதாக தெரிகிறது. கம்பெனியில் உள்ள சேர், பெஞ்ச் போன்ற ரிசோர்ஸ்(resource) களுக்கும்   மனித ரிசோர்ஸ்களுக்கும் எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை நிர்வாகம்.  

வெளியேறிய ஊழியர்களின் பாடு திண்டாட்டம்தான். அதிக அனுபவம் கொண்ட ஊழியர்கள் வெளியற்றப்பட்டால் அவர்கள் மீண்டும் வேலை பெறுவது அத்தனை சுலபம் இல்லை. பத்து, பதினைந்து ஆண்டுகள் தம்மை பயன்படுத்திய நிர்வாகம் தம்மை தூக்கி எரியும் என  அவர்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். வேறு ஏதாவது துறையின் ஒரு தொழிற்சாலை மூடப் போவதாக தெரிந்தால் அரசாங்கமே தொழிலாளர் நலம் கருதி எதாவது ஒரு வகையில் அந்த தொழிற்சாலையை இயங்க வைக்க முயற்சிக்கும். இத்தனை ஆண்டுகள் வருமான வரி கட்டிய இவர்களுக்கு பரிந்து பேச அப்படி  யாரும் வரப்போவதும் இல்லை.


டாட்டா தனது பிராண்ட் இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் செய்யும் இந்த காரியம் பாதிக்கப்போவது டிசிஎஸ் ஊழியர்களை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த ஐடி  துறை ஊழியர்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக மாற்றப்போகும் மோசமான  முன்னுதாரணம். நாளை இதே முறையை அனைத்து கம்பெனிகளும் பின்பற்றினால் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு மேலே ஐடி துறையில் யாரும் நிலை கொள்ள முடியாது. அப்படியே இருக்க விரும்பினாலும் ஊதிய உயர்வை எல்லாம் மறந்து விட்டே வேலை செய்ய வேண்டியது இருக்கும். மொத்தத்தில் ஐடி துறை ஊழியர்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றியும், தாங்கள் செய்து கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகளை பற்றியும் சிந்திக்க வைத்து விட்டது டிசிஎஸ். ஐடி துறையை தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களும் இதை கவனத்தில் கொள்வது நல்லது.


Tuesday, December 9, 2014

டாஸ்மாக்கை தேடியவர்!!!

“குடி குடியை கெடுக்கும்” என்று கேள்விபட்டு இருப்பீர்கள். கேள்விப்படாதவர்கள் யாராவது இருந்தால்  மீண்டும் முந்திய வரியை படித்து கேள்விப்பட்டு கொள்ளுங்கள். மது குடிப்பவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில்லை. மது குடிப்பவர்களுக்கு உதவ நினைத்தாலும் பாதிப்புதான். அப்படி உதவி செய்யப்போய் நஷ்டம் அடைந்த ஒரு அப்பாவியின் கதை இது.


அன்று ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை. மதுரைக்கு ட்ராவல்சில் டிக்கெட் எடுத்து வைத்து இருந்தேன். எதிர்பாராத தாமதம் காரணமாக  நான் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்த  நிறுத்தத்துக்கு செல்ல முடியாத நிலை. ட்ராவல்சுக்கு மீண்டும் போன் செய்து பேருந்தை என்னுடைய  வீட்டுக்கு அருகிலேயே  இருக்கும் நிறுத்தத்தில் நிறுத்த  கேட்டு கொண்டேன். முதலில் அதெல்லாம் முடியாது என்று மறுத்தவர்கள் பத்து மணிக்கு பேருந்து வரும். ஒரு சில வினாடி மட்டுமே நிறுத்துவோம், அதற்குள் நிறுத்தத்துக்கு வந்து பேருந்தில் ஏறவில்லை என்றால் கிளம்பிவிடுவோம் என்ற  நிபந்தனையுடன் என் கோரிக்கையை ஏற்று கொண்டனர். நானும் ஒப்பு கொண்டேன்.

பத்து நிமிடங்கள் முன்பே பேருந்து நிறுத்தத்துக்கு கிளம்பி  விட்டேன். பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போதுதான்  அவரை கவனித்தேன். எனக்கு எதிர் திசையில் பரபரப்பாக நடந்து வந்த அந்த நபர்தான் இந்த கதையின் திருப்புமுனை ஏற்படுத்தப் போகிறார் என்று அப்போது உணரவில்லை. அவர்  ஒரு வட இந்தியர். ஜீன்ஸ்,டீ சர்ட் என்று உடை உடுத்தி இருந்தவருக்கு நாற்பது வயது இருக்கும். அவர் நடந்து வந்த வேகத்தில் அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்று உணர முடிந்தது. வேகமாக வந்தவர் என்னை நெருங்கியதும் பிரேக் அடித்து நின்றார்.

இங்க எங்க ஒயின்ஷாப் இருக்குஎன்று கேட்டார் ஆங்கிலத்தில்.

தெரியாது என்று ஒரே வார்த்தையில் முடித்து இருக்கலாம். இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் சரக்கு கிடைக்காமல் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவுவது நம் கடமையல்லவா? அவருக்கு உதவ முடிவு செய்து என்னுடைய நினைவை தூசி தட்டி  யோசித்தேன். எங்கேயெல்லாம் கூட்டம் நிரம்ப நிரம்ப நிற்கும்.

சார்! நீங்க வந்த வழியே போங்க. அங்க ஒரு கடை இருக்கு.

அங்க இருந்துதான் வரேன். அதை மூடிட்டாங்க என்றார். பதட்டம் கூடி இருந்தார்.

9:50 தான ஆகுது. இந்த அரசு ஊழியர்களே  இப்படிதான். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாதவங்க

"ஆமாங்க. சரக்கு இல்லைன்னு காரணம் சொல்றாங்க. நம்புற மாதிரியா இருக்கு?"

“சரி விடுங்க. அப்படியே நேரா போனா  ஒரு கடை வரும். அங்க ட்ரை செஞ்சு பாருங்க.”

“அங்க அந்த கடையே இல்லங்க. மூடிட்டாங்க” குரலில் வருத்தம் காண்பித்தார். நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளை இடம் மாற்றியது எனக்கு  நினைவுக்கு வந்தது.

“சரி. கவலையை விடுங்க. அந்த கடையை பக்கத்துல  இருக்குற தெருல  கொண்டு வச்சு இருப்பாங்க. பார்த்தீங்களா?”

“அதெல்லாம் நேத்தே நல்லா தேடி பார்த்துட்டேன்”

“அரசாங்கத்துக்கு பொறுப்பே இல்லீங்க. இடம் மாத்துனா, எங்கே மாத்துறாங்கன்னு பழைய இடத்துல  ஒரு மேப் வைக்கணும். கஸ்டமர் மேலே அக்கறையே இல்ல. அமெரிக்கால எல்லாம் இப்பிடி செஞ்சா கோர்ட், கேசுன்னு போய் நஷ்டஈடு கேட்கலாம் தெரியுமா ”

அவர் நான் சொன்னதை கேட்கும் மன நிலையில் இல்லை. தன்னுடைய கடிகாரத்தை பார்த்துக் கொண்டார்.

“டென்சன் ஆகாதீங்க சார். இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. நீங்க அந்த பழைய கடைக்கு வலது பக்கம் இருந்த சந்துல போய் பார்த்து இருக்கமாட்டீங்க. சரிதானே”

“ஆமாம். அது சின்ன சந்துன்னு”

“தப்பு செஞ்சுடீங்களே சார். இடது பக்கம் இருந்த ரோட்ல பள்ளிக்கூடம் இருக்கு. அங்க கடையை வச்சு இருக்க மாட்டாங்க அந்த சந்துல போய் பாருங்க”

அவர் சந்தேகத்தோடு இடத்து விட்டு அகன்றார். நான் மணியை பார்த்தேன். 9:55 ஆகி இருந்தது. சற்று முன்னதாகவே கிளம்பியது நல்லதே. இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது பேருந்துக்கு. நிறுத்தத்தை நோக்கி நடந்து காத்திருக்க தொடங்கினேன். 10 மணி ஆகியும் பேருந்து வரவில்லை.

ஒரு பத்து நிமிடம் கடந்தது. பேருந்து வரவில்லை. எதற்கும் போன் செய்து விடலாம் என்று மொபைலை எடுத்தேன். 1 மிஸ்ட் கால் என்று கூறியது. ட்ராபிக் சத்தத்தில் போன் வந்ததே கேட்கவில்லை. அவசரமாக அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டேன்.

“எங்க இருக்கீங்க”

“நாங்க செங்கல்பட்டு தாண்டிட்டோம்.”

“நான் நிக்கிறேன்னு சொன்னேன்லங்க”

“எங்க நின்னீங்க. நாங்க நின்னு பார்த்தோம். போன் செஞ்சும் பார்த்தோம். அதையும் எடுக்கலை”


போன் வந்த நேரத்தை பார்த்தேன். 9:55

“10 மணிக்கு வரேன்னு சொல்லிட்டு முன்னாடியே வந்துட்டீங்க?”

“சார். நீங்க என்ன பஸ் ஸ்டாண்ட்லயா நிக்குறீங்க. நாங்க சொன்ன நேரத்துல வரலன்னு சொல்ல. வழில நிக்குறவரு ஒரு பத்து நிமிஷம் முன்னாடிதான் வரணும்”

தொடர்பை துண்டித்தேன். அவர் சொல்வதும் நியாயம். இனி பேசி பயனில்லை. டிக்கெட் பணம் 600 ரூபாய் காந்தி கணக்குதான். வீட்டுக்கு போய் தூங்க வேண்டியதுதான். அந்த ஆள் பேச்சு குடுக்காமல் இருந்திருந்தால் பேருந்தை தவற விட்டிருக்க மாட்டேன்.

அப்போதுதான் கவனித்தேன். அந்த வட இந்தியர் சந்தோசமாக கையில் புட்டியுடன் வந்து கொண்டிருந்தார். என்னை பார்த்து சிரித்து நன்றி கூறினார். அரசாங்கத்தின் வருவாய்க்கு உதவிய சிறு திருப்தியுடன் ஒரு விரக்தி சிரிப்பில் அந்த நன்றியை ஏற்று கொண்டேன்.

  

Sunday, November 23, 2014

அரசியலுக்கு வர ரஜினிக்கு தயக்கம் ஏன்?

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விவாதங்கள் மீண்டும் சூடு பிடித்து விட்டது. ரஜினியோ அரசியலுக்கு வர தயங்குவதாக கூறி விட்டார் இருந்தபோதும் அவர் அரசியலுக்கு கட்டாயம் வருவார் என்பது  ரசிகர்களின்  நம்பிக்கை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது சில  அரசியல்வாதிகளின் விருப்பம். வந்து விடுவாரோ  என சில அரசியல்வாதிகளுக்கு பயம். வந்தால் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது என்பது சிலரின் கருத்து.  அவர் அரசியலை படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது  அதி மேதாவிகளின் சிந்தனை. ஆனால் என்னை பொறுத்தமட்டில் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. வரத் தேவையுமில்லை.

ரஜினி ஏன் அரசியல் பிரவேசம் செய்யக்கூடாது என்பதற்கு முதல் காரணம் அவர் உடல் நிலை. ஊர்ஊராக சென்று பிரசாரம் செய்ய அவரின் உடல்நிலை அனுமதிக்குமா என்பது சந்தேகமே.இதை ரஜினி நன்றாகவே அறிந்து வைத்து இருப்பார்.


அடுத்து கணக்கில் எடுத்து கொள்ள வேண்டிய விஷயம் ரஜினியின் இயல்பான குணம். ஆரம்ப காலங்களில் பத்திரிக்கையாளர்களிடம் சண்டையிடுவார். கோபம் வந்தால் அடித்து நொறுக்கி விடுவார் என்று நிறைய படித்து உள்ளேன். ஆனால் சமீப காலங்களில் தன்னால் யாருடைய மனமும் புண்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளார். யாரையும் பகைத்து கொள்ளவும் விரும்புவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் கண்டுகொள்வதும் இல்லை. அரசியலுக்கு வருவதென்றால் இந்த மனநிலையை அப்படியே மாற்றி கொள்ள வேண்டும். நல்லது செய்தாலும் எதிர் கட்சியினரை  விமர்சிக்க வேண்டும். நிறைய அரசியல் எதிரிகளை இயல்பாகவே சம்பாதிக்க வேண்டியது இருக்கும். கூடவே நிறைய மன உளைச்சலையும்.

அடுத்த விஷயம்  அவர் அரசியல் பிரவேசம் செய்ய வேண்டியது என்றால் திமுகவிலோ, அதிமுகவிலோ இணைந்து விட முடியாது அந்த இரண்டு கட்சி தலைமைகளும் அவர்  வெளியே இருந்து ஆதரவு அளிப்பதைத்தான் விரும்புமே தவிர அவர் தங்கள் கட்சிக்குள் வருவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவர்களை தவிர்த்து  தமிழக காங்கிரசில் அவர் இணைந்தால் வரும் விளைவுகளை  கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பாஜகவில் அவர் இணைய நினைத்தாலும் பாஜகவின் மத அடையாளம் ரஜினிக்கு மனத்தடையை ஏற்படுத்தும். இருக்கும் ஒரே வாய்ப்பு தனிக்கட்சி ஆரம்பிப்பதுதான். ஒரு வேளை அதை அவர் செய்து ஆட்சியை பிடிப்பதாகவே வைத்து கொண்டாலும் அமைச்சரவை அமைக்கும்போது  ரசிகர் மன்றங்களின் நிர்பந்தங்களுக்கு உட்பட்டே எதையும் செய்ய வேண்டியது இருக்கும். மற்ற கட்சியிலிருந்து சில தலைவர்களும், சில நடிகர்களும்  ரஜினியின் கட்சியில்  வந்து இணைவதாக  கொண்டாலும் மன்றங்களின் கையே இயல்பாக எதிலும் ஓங்கி இருக்கும். அது நல்லது என்று எளிதாக எடுத்து கொண்டுவிட முடியாது.

ரஜினி இது அனைத்தையும் மீறி அரசியலுக்கு வந்து முதல்வராகவே ஆனாலும் அவரால் தனியாக எந்த ஒரு மாயாஜாலத்தையும் நிகழ்த்தி விட முடியாது. அவர்  நல்லது செய்ய நினைத்தாலும் அரசியலில் அது அவ்வளவு எளிதில்லை. எது செய்தாலும் விமர்சிப்பார்கள். தடை போடுவார்கள். இதை ரஜினி நன்றாக உணர்ந்து வைத்து இருப்பதையே அவரின் ‘லிங்கா’ இசை வெளியீடு பேச்சு எதிரொலிக்கிறது.


இவை அனைத்தையும் மீறி ரஜினி அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கே நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே இருக்கும் . ஏனென்றால் அவர் பார்க்காத பணமும் இல்லை. இல்லாத புகழும் இல்லை. ஆட்சி அதிகாரத்தை விரும்புவரும் அவர் இல்லை. எனவே அவர் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கவேண்டியது நம் கடமை.


Saturday, November 22, 2014

'நாய்கள் ஜாக்கிரதை’ - ஜாக்கிரதை!!!

பிடித்த படங்களை பற்றி மட்டுமே எழுத வேண்டும். அப்படி எழுதும் படங்களின் கதையை எழுதக்கூடாது என்பது எனது கொள்கை. படம் பிடிக்காவிட்டால் அந்த படத்தை பற்றி எதுவும் எழுதாமல் தவிர்த்து விடுவேன். இருந்த போதும் 'நாய்கள் ஜாக்கிரதை’ என்னை  கொள்கை மீற வைத்து விட்டது.

நூறு ரூபாய் கொடுத்து படத்துக்கு வந்ததே தவறோ என்று சில படங்கள் சிந்திக்க வைக்கும். அது போன்ற படங்களில், விறுவிறுப்பே இல்லாமல் மந்த கதியில் சென்று பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ போன்ற படங்கள் ஒரு வகை. லாஜிக் எல்லாம் தேவையில்லை. படம் என்று ஏதோ ஒன்றை எடுத்து வைப்போம் என்ற ரீதியில் படம் எடுத்து பார்ப்பவர்களின் காதில் பூ வைக்க முயன்று தோற்கும்  ‘நாய்கள் ஜாக்கிரதை’ வகை படங்கள் இன்னொரு வகை.


படம் முதல் பாதியில் எல்லாம் நன்றாகத்தான் செல்கிறது. போலீஸ்காரர் சிபி பெண்களை கடத்தும் கும்பலுடன் மோதுகிறார். அந்த சண்டையில் தன்னுடைய போலீஸ் நண்பரை இழக்கிறார். அந்த சண்டையில் அவர் காலிலும் குண்டடிபட்டு விடுவதால் விடுப்பில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு நாயுடன் பழக்கம் ஏற்பட அந்த நாயை செல்லப்பிராணியாக்கி கொள்கிறார். இவை எல்லாம் நடந்து முடியும்போது சிபிராஜின் மனைவி அந்த பெண் கடத்தல் கும்பலால் கடத்தப்படுகிறார். இடைவேளை  விடுகின்றனர். இதுவரை படம் பரவாயில்லை ரகம்தான்.

இடைவேளைக்கு பின்னர்  கிளைமாக்ஸ் ஆரம்பித்து விடுகிறது. படமும் நொண்டியடிக்க ஆரம்பித்துவிடுகிறது. கடத்தல் கும்பல்  சிபிராஜின் மனைவியை சவப் பெட்டியில் வைத்து குழி தோண்டி புடைத்து விடுகின்றனர். பெட்டியில் அவரின் மனைவி படும் கஷ்டத்தை சிபிக்கு நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். இனி சிபிராஜ் அந்த நாயுடன் சேர்ந்து எப்படி தனது மனைவியை கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

கதை நன்றாக இருப்பது போல்தான் தெரியும். ஆனால் சிபி தன்னுடைய மனைவியை தேடும்  காட்சிகள் அபாரம்
  • மனைவி மண்ணுக்குள் இருக்கும்போது சிபிராஜ்  துளி பதட்டமும் சோகமும் இன்றி இருக்கிறார். அந்த ஹீரோயினுக்காக எல்லாம் சோகமாக இருக்க தேவையில்லை என்று நினைத்து விட்டாரோ என்னவோ.
  • மண்ணுக்குள் புதைத்து வைத்த பெட்டிக்குள் மழை நீர் இறங்குகிறது.
  • ஊட்டியில் மழை பெய்வது தெரிந்து சிபிராஜ்  ஊட்டியில் மனைவியை தேடி திரிகிறார். ஆனால் ஊட்டியில் மழை பெய்த அறிகுறியே எங்கும் இல்லை.  
  • நாய்க்கு வெறி பிடித்து விட்டது என்று மயக்க ஊசி போடுகின்றனர். ஆனால் மயங்கிய  நாயை பிடித்து அடைத்து வைக்காமல் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுகின்றனர்.
  • ஆறு மணிநேரம் பெட்டிக்குள் இருந்த கதாநாயகி ஏதோ தூங்கி விழிப்பதை போல எழுந்து நடந்து நடந்து செல்கிறார்.
  • சிபி நன்றாகத்தானே துள்ளி குதித்து நடக்கிறார். பின்னர் ஏன் காலில் கட்டு

மேலே சொன்னவை எல்லாம் சிறு துளிதான். லாஜிக் மீறாமல் எல்லாம் யதார்த்த படம் எடுக்க முடியாதுதான். இருந்தாலும் அதற்காக காட்சிக்கு காட்சியா லாஜிக் இல்லாமல் படம் எடுப்பது. நல்ல சினிமா விமர்சகர்கள் படத்தை பிரித்து எடுத்து விடுவார்கள். மகனுக்காக படம் எடுப்பது என்று முடிவு செய்த சத்தியராஜ் இன்னும்  நன்று அறிமுகமான நடிகர்களை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து இருக்கலாம். படம் முடிந்தபின்  ஹீரோ போல முன்னிறுத்தப்பட்ட அந்த நாயும் மனதில் பதியவில்லை. படமும் கூட.


Friday, November 14, 2014

இந்த கதையை நம்புறதும், நம்பாததும் உங்க இஷ்டம்!

தன் பின் வரும் எதையும் நீங்கள் நம்பப் போவதில்லை. உங்களை நம்ப வைப்பது எனது நோக்கமும் இல்லை. ஆனால் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதை ஒரு முறை படித்து விடுங்கள். கடந்த மாதம் கடவுள் என்னை சந்திக்க வந்திருந்தார். விடாத வேலைப்பளு அவரை சோர்வு கொள்ள செய்திருந்தது. வந்தவர் நேராக என்னை நோக்கி இந்த கேள்வியை வீசினார்.

இந்த மனுசங்களுக்கு என்னதான்பா வேணும். எப்ப பாரு அது இல்ல, இது இல்லன்னு வந்து புலம்பிகிட்டு. உங்களையெல்லாம் ஏன் படைச்சேன்னு இப்போ யோசிக்கிறேன்”

“டூ லேட் கடவுளே!”

“சரி இப்போ சொல்லு. நான் உலகத்தை எல்லாம் அழிக்க விரும்பல. ஆனா மனுஷங்களோட எல்லா பிரச்சினையையும் தீர்க்கணும்னு நினைக்கிறேன். எப்பிடி இருந்தா நீங்க சந்தோசமா இருப்பீங்க”

“கடவுளே! மனுசனோட முதல் பிரச்சினை ஆசை. அடுத்த பிரச்சினை பொறாமை. இது ரெண்டையும் தீர்த்து வச்சுடுங்க.”

“எப்பிடி சொல்லேன்?” கடவுள் ஆர்வமாக கேட்டார்.

“கொஞ்சம் பாருங்க. ஒருத்தன் பணக்காரனா இருக்கான். பெரிய வீட்ல இருக்கான். இன்னொருத்தன் ஏழையா இருக்கான். குடிசைல இருக்கான். எல்லாருக்கும் ஒரே மாதிரி சொந்த வீட்டையும், சொத்தையும் குடுங்க முதல்ல”

“இவ்வளவுதானா?” கடவுள் கேட்டுவிட்டு கைகளை தட்டினார். உலகம் எப்படி மாறிவிட்டது என்று என் கைகளில் பார் என்று உள்ளங்கையை விரித்து காட்டினார்.

ஆச்சரியம். அவர் உள்ளங்கைகளில் தெரிந்த உலகத்தில்  எல்லா வீடுகளும் ஒரே மாதிரி, எல்லா மனிதர்களும் விலை உயர்ந்த ஆடை அணிந்து. உலகமே மாறி விட்டது.

“சூப்பர் கடவுளே!“

“முடிந்ததா?”

“அது எப்பிடி முடியும் கடவுளே. கொஞ்ச நாள்ல மறுபடியும் புத்தி இருக்குறவன், மத்தவன் சொத்தை எல்லாம் ஏமாத்தி பிடிங்கிடுவான். அதனால எல்லாருக்கும் ஒரே மாதிரி புத்தியை குடுங்க.”

“இது முக்கியமா?”

“இதுதான் ரொம்ப முக்கியம்”

கடவுள் கைகளை தட்டினார். “இனிமே எல்லாரும் ஒரே மாதிரி புத்திசாலி” என்றார்.

“இனிமே மனுசங்க எல்லாரும் சந்தோசமா இருப்பாங்களா?”

“அதுக்குள்ள சந்தோசமா? உங்க கையை பாருங்க. அந்த பொண்ணு அந்த வடக்கு தெருல நடந்து போய்கிட்டு இருக்குற பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இல்ல?”

“ஆமாம்”

“பக்கத்து தெருல போற பொண்ணு இந்த பொண்ணை விட அழகு கம்மியா தெரியல?”

“மனிதா! அழகுங்குறது பாக்குற கண்ணுல”

“தத்துவம் எல்லாம் பேசாதீங்க கடவுளே. நீங்க என்ன பண்றீங்க உலகத்துல இருக்கிற எல்லா பொம்பளங்களையும் ஐஸ்வர்யாராய் மாதிரி அழகா மாத்திடுங்க. எல்லா ஆம்பளைங்களையும் அமெரிக்கால டாம் க்ரூஸ் அப்பிடின்னு ஒரு நடிகர் இருக்கார். அவரு மாதிரி மாத்திடுங்க”

“அப்போ ஒருத்தருக்கும் இன்னொருத்தருக்கும்  வித்தியாசம் தெரியாதே?”

“அட கடவுளே! அவங்கள மாதிரியே மாத்த சொல்லல. அவங்க மாதிரி அழகா மாத்திடுங்கன்னு சொன்னேன்.”

சொன்னதும் கடவுள் கை தட்டி கைகளை விரித்தார். ஆகா! உலகம்  முழுக்க  ஐஸ்வர்யாராய் மாதிரி பெண்கள். என்ன ஒரு கண் கொள்ளா காட்சி. ஆப்ரிக்காகாரனும், அமெரிக்காகாரனும் ஒரே நிறத்தில். இந்தியர்களும், வெள்ளைகாரர்களும் ஒரே மாதிரி அழகாக.

“அப்புறம் இன்னொன்னு நீங்க செய்யணும். இனிமே மனுஷனுக்கு பசிக்க கூடாது. நோய் எதுவும் வர கூடாது.”

“என்ன இது? முட்டாள்தனமா இருக்கு?”

“யோசிங்க கடவுளே. எல்லாருக்கும் ஒரே மாதிரி வீடு, சொத்து எல்லாம் கொடுத்தாச்சு. ஒரே மாதிரி புத்திசாலித்தனம் குடுத்தாச்சு. இனிமே யாரு எந்த வேலையை பாக்குறதுன்னு பிரச்சினை வரும். யாரும் வேலைக்கே போக மாட்டாங்க ஒரு கட்டத்துல. அப்போ பசியை எடுத்துட்டா எல்லாரும் இருக்குற வீட்ல சந்தோசமா அவங்களோட  ஐஸ்வர்யாராய் கூட வாழ்ந்துக்குவாங்களே.”

“சரிதான்! இனிமே யாருக்கும்  பசி, பிணி கிடையாது. போதுமா”

“செம கடவுளே! அப்புறம் எல்லாரையும் ஒரே மொழி பேச வச்சுடுங்க. எல்லாரையும் நீங்களே ஏதாவது ஒரு மதத்துக்கு மாத்தி விட்ருங்க. அப்புறம் பாருங்க.”

கடவுள் கைகளை தட்டினார்.

“இப்போ எல்லாரும் ஒரே மாதிரி பணக்காரங்க. எவனும் எவனையும் ஏமாத்த முடியாது. எல்லா பொம்பளைங்களும் அழகு. இனிமே யாரும் உங்க கிட்ட வந்து எதையும் கேட்க முடியாது. பசியும் கிடையாது. ஆசையும், பொறாமையும் இல்லாமலே போயிடும் இனிமே. சந்தோசம்தானே கடவுளே. இனிமே நீங்க நிம்மதியா தூங்கலாம்.”

“சந்தோசம்! இன்னும் ஏதாவது யோசனை இருந்தா என்னை கூப்பிட்டு சொல்லு. இன்னும் ரெண்டு நாள் டைம் எடுத்து நாம எந்த கரெக்சன் இருந்தாலும் செஞ்சுக்கலாம்”

கடவுள் மறைந்து விட்டார்.

டவுளுக்கு உலகை சீரமைக்க உதவிய திருப்தியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து  நடக்க தொடங்கினேன். நேராக என்னுடைய வீட்டுக்கு சென்றேன். உலகம் அமைதியாக இருந்தது. எல்லாரும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். அதனால் என்ன? யாருக்கும் எந்த குறையும் இல்லையே இப்போது. இதோ சமத்துவ உலகம். கடைகள் இல்லை. எந்த ஒரு போக்குவரத்தும் இல்லை. ஏதோ ஒரு டாம் க்ரூஸ் மட்டும்  தனது ஐஸ்வர்யாராயுடன்  என்னை கடந்து சென்றார். அவர்கள் எங்கே போகிறார்கள்? நேரம் போக்க  சிறிது உலாவிவிட்டு வருவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.  

ஏதோ ஒரு இனம் புரியாத கவலை என்னை கவ்வியது. வித்தியாசங்களே உலகை இயங்க வைப்பதாக தோன்றியது. பசி வேண்டும். கவலை வேண்டும். தேடல் வேண்டும். வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும். இப்படியே போனால் சிறிது நாட்களில் எல்லாருக்கும் பித்து பிடித்து விடும். உலகம் அதுவாகவே அழிந்து விடும். மீண்டும் கடவுளை கூப்பிட்டு பேச தொடங்கினேன். பின்னர் என்ன? சில நிமிடங்கள்  டாம் க்ரூஸ், ஐஸ்வர்யாராய் போல இருந்த நீங்களும் நானும் மீண்டும் பழைய உருவத்தையே அடைந்து விட்டோம். இதெல்லாம் எப்போது நடந்தது என்று யோசிக்க வேண்டாம். அதை கடவுள் அப்போதே  மறக்க வைத்து விட்டார். ஆனால் பாவம். அவரின் பிரச்சினைதான் இன்னும் தீர்ந்தபாடு இல்லை.

Tuesday, November 4, 2014

ஒரு சிறிய தடங்கல்

ந்த தளத்துக்கு நேரடியாக வருகை புரிபவர்கள் கவனத்துக்கு. சில சொந்த பிரச்சினைகளாலும், போதிய வரவேற்பு இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை. தங்களை  போன்றவர்களின் ஆதரவுடன் விரைவில் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என்று நம்புகிறேன்.


விரைவில் எழுதவும், மறு வருகையில் முன்பை விட சிறப்பான படைப்புகளை படைக்கவும் முயல்கிறேன். நன்றி.
 .

Monday, October 20, 2014

இது வாட்ஸ்அப் காலம்

மீப காலத்தைய தகவல்  தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பிரமிக்க வைக்கிறது. திருபாய் அம்பானியின் கனவு என்று ஆயிரம் ரூபாய்க்கு நேற்றுதான் செல்போன் கொடுத்தது போல உள்ளது. குறுகிய காலத்தில் அது  கிடுகிடுவென வளர்ந்து இன்று வாட்ஸ்அப்பில்  வந்து நிற்கிறது.

பேஸ்புக் கூட சிறிது நேரத்தில் போர் அடித்து விடும். ஆனால் வாட்ஸ்அப்பில் அந்த பிரச்சினை கிடையாது. பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் ஒரு உடன் பணி செய்பவர்கள், சொந்த பந்தங்கள் என்று அனைவருடனும் ஒரு குரூப் ஆரம்பித்து விட வேண்டியது. நேரம் காலம் தெரியாமல் என்று வாட்ஸ் அப்ப வேண்டியது. காதலிப்பவர்களுக்கு இன்னும் எளிது. யாருக்கும் சந்தேகம் வராமல் போர்வைக்குள் இரவு முழுக்க சாட் செய்யலாம்.

வாட்ஸ்அப்பின் இந்த அதீத வளர்ச்சி அனைத்து பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் ஒரு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. தியேட்டர்களிலும், டிவி முன்னரும் அமர்ந்து சாட் செய்யும் இந்த வசதி. வாசிக்கும் பழக்கமோ வெகு விரைவில்  முற்றிலும் அழிந்து விடும். ஏனென்றால் பேசுவதற்கு ஆள் இல்லாத நேரங்களில்தானே மற்ற பொழுதுபோக்குகள் நமக்கு தேவை.



இதெல்லாம் இருக்கட்டும். இந்த வாட்ஸ்அப், பேஸ்புக்கிலும் நம் ஆட்கள் செய்யும் தொல்லைதாங்கவில்லை. முன்பு மஞ்சள் நிறத்தில் ஒரு நோட்டிஸ் அடித்து கொடுப்பார்கள். ஏதாவது கடவுள் பெயரை குறிப்பிட்டு இதே போல் நீங்கள் நூறு பேருக்கு நோட்டீஸ் அடித்து கொடுத்தால் அந்த கடவுளின் நல்லாசி கிடைக்கும். தவறினால் பரிட்சையில் தேற மாட்டீர்கள், வேலை போய் விடும் என்று பகிரங்க மிரட்டல் விடுப்பார்கள். போதாக்குறைக்கு ஏதாவது ஒரு வட இந்திய சேட்டின் பெயரை குறிப்பிட்டு அவரின் கலெக்டர் வேலை இதை அலட்சியப்படுத்தியதால் பறிபோய்விட்டது என்று வேறு இருக்கும். இன்று மங்கல்யான் காலத்திலும் மஞ்சள் நோட்டீஸ் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. தமிழன் பழசை மறந்துட்டான்னு யாருய்யா சொன்னது?

இவர்கள் ஒரு வகை என்றால் இன்னொரு வகையினர் செய்தியை உருவாக்குபவர்கள். தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் டைப்பி அந்த செய்தியை பரப்பிவிட்டு விடுவார்கள். சில நாட்களுக்கும் முன் இப்படித்தான். மோடி அமெரிக்க பொருட்களை எல்லாம் புறக்கணித்து இந்திய பொருட்களை வாங்க சொல்கிறார் என்று. அவர்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ சரிதான். ஆனால் ஏன் மோடியை துணைக்கு அழைத்து கொள்கிறார்கள்? உண்மையில் மோடி அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க சொன்னால் எந்த விதமான பின்விளைவுகள் வரும் என்று கூட சிந்திக்காமல் அந்த தகவல் பலரால் தொடர்ந்து பரப்பப்பட்டது. இதை கூட விட்டு விடலாம். எதில் எதில் விளையாடுவது என்றே இல்லாமல் தென் தமிழகத்தின் ஒரு ஊரில் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிவிட்டது. குழந்தைகளுக்காக பிரார்த்தியுங்கள் என்று நடக்காத ஒரு விபத்தை பரப்பிவிட்டார்கள். இதே தகவல் சில ஆண்டுகளுக்கு முன் குறுஞ்செய்தியிலும் பரப்பப்பட்டதுதான் இதில் கவனிக்கத்தக்கது. அதே போல் சில ஆண்டுகளாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரப்பப்படும் ஒரு வதந்தி ஒரு குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் கலந்துவிட்டது. எனவே அதை வாங்காதீர்கள் என்பது. யாராவது அந்த பானத்தை குடித்து கொண்டிருக்கும்போது அந்த செய்தியை படித்து இருந்தால் பயத்திலேயே உயிர் போயிருக்கும்.

இது போன்ற தகவல்களை  வாட்ஸ்அப் மூலமோ அல்லது மற்ற எந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் மூலமோ மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தகவலை உருவாக்கியது நாமில்லை என்றாலும் நாம் அனுப்பிய தகவலுக்கு நாம்தான் பொறுப்பு.
  

Sunday, September 28, 2014

ஒரு அப்பாவி உளவாளி!!!

காலையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் எரிச்சலாக இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும். எரிச்சலுடன் கதவை திறந்தவன் அதிர்ந்தேன். நான்கு போலீஸ்காரர்கள் விரைப்பாக நின்று கொண்டிருந்தனர்.

“நாங்க போலீஸ். கொஞ்சம் விசாரிக்கணும்.” என்னிடம் சொல்லிய போலீஸ்காரருக்கு தொப்பை இல்லை. தினமும் உடற்பயிற்சி செய்பவர் எண்பது அவரின் உடலை பார்த்ததும் புரிந்தது. அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே உடன் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் தடதடவென்று வீட்டுக்குள் நுழைந்தனர். என்னை ஒரு போலீஸ்காரர் வீட்டுக்குள் தள்ளி கதவை மூடினார்.

“சார்! என்ன ஆச்சு?”

“நான் சொல்றேன். முதல்ல நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.” கொஞ்சமும் சலனம் இல்லாமல் சொன்னார் அந்த போலிஸ்காரர்.

“கேளுங்க சார்” சற்று பயம் வந்தது.

“உங்களை பத்தி சொல்லுங்க” நான் முழித்தேன். அதற்குள் மற்ற போலிஸ்காரர்கள் வீட்டை சோதனையிட தொடங்கி இருந்தனர். ஒருவர் என்னுடைய பெட்டியை எடுத்து உள்ளே இருந்த அனைத்தையும் கீழே கவிழ்த்து கொண்டிருந்தார். இன்னொருவர் என்னுடைய லேப்டாப்பை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

“சார்!  துவைச்சு தேச்சு வச்ச துணியை கலைக்கிறார் சார். வேண்டாம்னு சொல்லுங்க.” நான் சொல்லி முடிக்கும் முன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

“கேக்குற கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்க போதும். வேற எதுவும் பேசக் கூடாது. சொல்லுங்க நீங்க எந்த ஊரு. இங்க என்ன பண்றீங்க?”

“மதுரை பக்கம் சார். இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறேன்.”

“சார்! அவன் கிட்ட லேப்டாப் பாஸ்வேர்ட் கேளுங்க சார். என்ன வச்சு இருக்கான்னு பார்க்கணும்” இன்னொரு போலீஸ்காரர் கத்தினார்.ஒரு வேளை  புது படம் டவுன்லோட் செய்ததுதான் நான் செய்த குற்றமா?

“சொல்லுடா பாஸ்வேர்ட் என்ன?”

“பார்லிமென்ட்”

“பாத்தீங்களா சார். இதுலயே தெரிஞ்சு போச்சு. கொள்கை பிடிப்போட பாஸ்வேர்ட் வச்சு இருக்கான் பாருங்க”

என்ன கொள்கை. என்ன தெரிஞ்சு போச்சு. நான் என்ன தவறு செய்தேன்?

“சார். ப்ளீஸ் சொல்லுங்க. நான் என்ன தப்பு செஞ்சேன். நான் என்னோட லாயர் கூட பேசணும்” பயத்தில் உளற ஆரம்பித்தேன். எனக்கு எந்த  லாயரை தெரியும்!!!

“நடிக்காதடா. பர்வீன் சுல்தானா யாருன்னு சொல்லு.”

“அவ எனக்கு பேஸ்புக்ல பழக்கம். தினமும் சாட் செய்வோம். உங்களுக்கு எப்பிடி அவளை தெரியும்”

“என்ன கதை விடுற. ஒரு பாகிஸ்தான்காரியை பேஸ்புக்ல பிடிச்சு நட்பு ஆகிடீங்களா? நீ பாகிஸ்தான் உளவாளின்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு.”

“சார்! தெரியாம ஒரு பாகிஸ்தான் பொண்ணு கூட சாட் செஞ்சுட்டேன். அதுக்கு போய் உளவாளின்னு.”

“நடிக்காதடா. நீ சாட் செய்யுறது இந்திய உளவுத்துறைக்கு தெரியாதுன்னு நெனச்சயா?”

அதற்குள் உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரர்கள்  கையில் சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியே வந்தார். “சார்! நெறைய ஆதாரம் கிடைச்சு இருக்கு சார். பாருங்க சென்னை மேப்”

நான் சென்னையில் ரூட் பார்க்க பத்து ரூபாய்க்கு வாங்கிய மேப் எல்லாம் எனக்கு எதிரான ஆதாரமா?”

“நீங்க தப்பா...”. நான் முடிப்பதற்குள் மீண்டும் ஒரு அறை.

“இங்க பாருங்க சார் கேமரா. அதுல கப்பலை எல்லாம் படம் எடுத்து வச்சு இருக்கான்”

“நான் போன மாசம் திருச்செந்தூர் கோவிலுக்கு  போனப்ப தூத்துக்குடில எடுத்ததுங்க. அதெல்லாம் வச்சு நான் உளவாளின்னு. எனக்கு ஆதார் கார்ட் எல்லாம் இருக்குங்க.”

“சாரி மிஸ்டர்! மத்தெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசலாம்”

ர்வீன் சுல்தானா: ஹாய்

நான் சுய நினைவுக்கு திரும்பி பர்வீன் சுல்தானாவை நண்பர்கள் வட்டத்தில் இருந்து முதல் வேலையாக  நீக்கினேன். பின்னே பாகிஸ்தான்காரர்களுடன் பேசினால் என்ன நடக்கும் என்ற கற்பனையே பயங்கரமாக அல்லவா இருக்கிறது. 

Thursday, September 4, 2014

ஆப்பிரிக்காகாரரும், அன்னபூர்ணா ஹோட்டலும்

நேற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்தாலும் அவரின் அதீத கறுப்பு நிறம் அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் என்று உணர்த்தியது.அவருக்கு முப்பது வயதுக்குள் இருக்கலாம். இந்த ஏரியாவில் இவர்களுக்கு என்ன வேலை என்று யோசிக்க தொடங்கினேன். வந்தவர் நேராக வந்து எனக்கு எதிராக அமர்ந்தார்.

சப்ளையரோ பெரிதாக அலட்டி கொள்ளாமல்வழக்கப்படி  அசுவாரசியமாக வந்து தட்டை எடுத்து அவருக்கு முன் வைத்து விட்டு  தண்ணீர் எடுக்க சென்றார். சில  வினாடிகளில் ஆப்பிரிக்கர் பெருங்குரலில் கத்த தொடங்கினார்.

“வாட் இஸ் திஸ்?”

அவரின் சத்தத்தை கேட்டு ஓட்டலே ஒரு வினாடி அதிர்ந்து திரும்பி பார்த்தது. ஏதேனும் பெரிய தவறு நடந்து விட்டதா என்று அதிர்ந்து கல்லாவில் அமர்ந்து இருந்த  முதலாளி எண்ணி கொண்டு இருந்த பணத்தை விட்டு விட்டு நிமிர்ந்தார். நானும் நிமிர்ந்தேன்.

ஆப்பிரிக்காக்காரர் தட்டில் இருந்த வாழை இலையை கையில் எடுத்து கொண்டு கல்லாவில் இருந்த முதலாளியை வெறித்து கொண்டிருந்தார்.

“பனானா லீப்”

“திஸ் இஸ் நாட் கிளீன்.  டோன்ட் வான்ட்”

முதலாளி தலையில் அடித்து கொண்டு சப்ளையரை அழைத்தார்.

“மணி! பிளாஸ்டிக் பேப்பர் போட்டு குடு”

மணி என்று அழைக்கப்பட்டவர் எப்படி இருந்தார் என்றால் நீங்கள் கடைசியாக பார்த்த ஹோட்டல் சப்ளையரை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். அந்த மணியாகப்பட்டவர்  என்னை பார்த்து “இவனை எல்லாம் உள்ளே விட்டு நம்ம உயிரை எடுக்குறானுங்க! வாழை இலை சுத்தமா எப்பிடி இருக்கும். நம்ம ஊருக்கு வந்து நம்மளை மாதிரி சாப்பிட மாட்டானா” என்றார்.

“நல்ல வேளை சுத்தமா இருந்தா இலையை சாப்பிட்டு இருப்பான்! “ என்றேன்.

“அப்பிடி செஞ்சா கூட சந்தோசமா இருந்து இருப்பேனே ?” என்று அலுத்து கொண்டே  உள்ளே சென்று பிளாஸ்டிக் பேப்பரை தட்டில் விரித்து கொண்டு ஆப்பிரிக்கர்  முன் வைத்தார். மறு வினாடி ஆப்பிரிக்கர் அந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து மேஜையில்  விரித்து தட்டை அதன் மேல் வைத்தார்.

மணிக்கு இந்த முறை கோபம் சற்று அதிகமாகவே வந்து விட்டது.

“பாருங்க சார்! அநியாயம் பண்றான்” என்று முதலாளியிடம் முறையிட்டார்.

“நீங்க டென்சன் ஆகாதீங்க மணி! என்னமோ செஞ்சுட்டு போறான்” என்றார் முதலாளி.


“வாட் ஈடிங்?” மணி  தன்னுடைய ஆங்கில அறிவை பிரயோகித்தார் .

இப்போதுதான் ஆப்ரிக்கருக்கு என்ன சாப்பிடுவது என்று சந்தேகம் வந்து இருக்க வேண்டும். சில வினாடிகள் யோசித்து “சிக்கன்” என்றார்.

மணிக்கு ரத்த அழுத்தம் எகிறி இருக்க வேண்டும். கண்கள் சிவந்தது தெரிந்தது.

“ஒன்லி வெஜிடேரியன்! நோ சிக்கன்”

“ஓகே! கிவ் மீ திஸ் ஐடம்” ஆப்ரிக்கரின் கை நான் சாப்பிட்டு கொண்டு இருந்த தோசையை நோக்கி நீண்டது.

“வெயிட்.” மணி உள்ளே சென்று விட்டார்.

ஆப்ரிக்கர் ‘லோலோலோ’ என்று ஏதோ பாட தொடங்கினார். சில நிமிடங்களில் தோசை வந்தது.

“கிவ் மீ ஸ்பூன்”

“தோசைக்கு  ஸ்பூன் கேட்கிறான் சார்” என்றார் மணி.

“கேக்குறதை எல்லாம் கொடுங்க” என்றார் முதலாளி. மணி ஸ்பூன் எடுக்க திரும்பிய வினாடியில் என்ன நினைத்தாரோ ஆப்ரிக்கர். தோசையை நான்காக மடித்து வாய்க்குள் திணித்து விட்டார்.

“அண்ணே! இருங்க. நான் அப்போ வந்த தோசையையே இன்னும் சாப்பிடல. இவர் அதுக்குள்ள தோசையை முடிச்சுட்டார்" என்றேன் மணியை பார்த்து.


“இப்போ சாம்பாரை இவன் தலையிலதான் ஊத்தணும்” என்றார் மணி.

“கிவ் மீ எ கிளாஸ்”

“கிளாஸ் கேக்குறான் பாருங்க” என்றேன்

“இருடா தரேன் ” என்று தண்ணீர் வைக்கும் கிளாசை எடுத்து முன்னே வைத்தார் மணி. ஆப்ரிக்கர் யோசிக்காமல் சாம்பார் வாளியில் இருந்து ஒரு கரண்டி சாம்பாரை எடுத்து க்ளாஸில் ஊற்றி குடிக்க தொடங்கினார்.

மணி இப்போது சிரிக்க தொடங்கி இருந்தார்.

“என்னண்ணே! சிரிக்கிறீங்க?” என்றேன்.

“முடிச்சுட்டான்.எப்பிடியோ தொல்லை தீர்ந்தது” என்றார்.

அவர் சந்தோசம் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆப்ரிக்கரின் கை மீண்டும் பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவரின் தட்டை நோக்கி நீண்டது.

“கிவ் மீ திஸ் ஐடம்”

நான் மணியை பார்த்தேன். அதற்கு மேல் அங்கே இருந்தால் போலீஸ் கேசில் முக்கிய சாட்சியாக நிற்க வேண்டிய நிலை வரும் என்று தோன்றியது. கையை கழுவிவிட்டு நேராக முதலாளியிடம் சென்றேன்.

“ஏன் சார்? அதை கொண்டுவா, இதை கொண்டுவான்னு உயிரை வாங்குறான். நீங்க பேசாம இருக்குறீங்களே?” என்றேன்.

“விடுங்க தம்பி! ஒரு தடவை பாம்பே போய் எதை எப்பிடி சாப்பிடறதுன்னு தெரியாம மூணு நாளா சரியா சாப்பிடாம ஊரு வந்து சேர்ந்தேன். ஆனா அவனை பாருங்க. எங்க இருந்தோ வந்து எதை பத்தியும் கவலைப்படாம சாப்பிட்டுகிட்டு இருக்கான். அவனை பாராட்டணும்” என்றார்.

அதுவும் உண்மைதான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...