Friday, June 20, 2014

இந்தியர்களுக்கு ஏன் கால்பந்து மோகம் இல்லை?

லகம் முழுவதும் கால்பந்து ஜூரம் பிடித்து ஆட்டி கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்திய கால்பந்து அணி பெரிய அளவில் சோபிக்காமல் இருப்பதற்கும், இந்தியர்களுக்கு கால்பந்தின் மேல் மோகம் குறைவாக இருப்பதற்கும் காரணம் என்ன என்று சிந்திக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்  அத்தனை பேருக்கும் கால்பந்து  பிடிக்க வேண்டாம். ஆனால் அதில் சரி பாதி பேர் பார்த்தாலும் கால்பந்து இந்தியாவில் எங்கேயோ சென்று இருக்குமே? அது ஏன் நடக்கவில்லை?

கால்பந்து முரட்டு ஆட்டம் என்பதால் நமக்கு ஒத்து வரவில்லை என்று சொல்லிவிட முடியாது. ரேசன் கடைகளிலும், முதல் நாள் டிக்கெட் எடுப்பதற்கும் எத்தனை கூட்டத்தையும் நெட்டி தள்ளி இலக்கை அடையும் நம்மால் ஏன் ஒரு பந்தை உதைத்து இலக்கை அடைய வைக்க முடியவில்லை? பிரேசிலின்  மைதானங்களில்  எத்தனை கவர்ச்சியான பெண்கள் அமர்ந்து இருந்தாலும் நம்மால் ஏன் கால்பந்து போட்டிகளை IPL போட்டிகள் போல ரசிக்க முடியவில்லை? 


இதை பற்றி ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது இதற்கு காரணம் நம் பண்பாடும், கலாச்சாரமும் என்றே தோன்றுகிறது. சற்றே சிந்தித்து பாருங்கள். நீங்கள் சிறு வயதில் எதேனும் பொருளை காலால் உதைத்து இருந்தால் ‘என்ன திமிரு பாரு! எல்லாத்தையும் உதைச்சுகிட்டே திரியுது’ என்று வசை பாடியிருப்பார்கள். இல்லாவிடில் ‘எதையும் காலால உதைக்க கூடாதுப்பா. நல்ல பழக்கம் இல்லை’ என்று அறிவுரை வழங்கியிருப்பார்கள். சில நேரங்களில் உதைத்த பொருளை தொட்டு வணங்க வேண்டிய நிலையும்  வந்து  இருக்கலாம்.

இப்படி சிறு வயதில் விதைக்கப்பட்ட இந்த கருத்து நம் மனதில் ஆழமாக பதிந்து நாம்  வளர்ந்து  கால்பந்தை  உதைக்கும்போது தடுக்கிறது. ஆழ்மனம் நமக்கே  தெரியாமல் உள்ளிருந்து கூக்குரல் கொடுத்து நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று எச்சரிக்கிறது. பின்னே எங்கே இருந்து உடைத்து  விளையாடுவது? பந்தை எதிரணியினர் தட்டி செல்வதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். 

இந்த பதிவு முழுக்க முழுக்க பதிவரின் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டது. கால்பந்து இந்தியாவில் பிரபலம் அடையாமல் இருப்பதற்கும் இந்த பதிவுக்கும் ஏதேனும் தொடர்பிருந்தால் அது தற்செயலானது.


Sunday, June 15, 2014

நான் கடவுள் தேடிய கதை

டவுள் எதற்கு தேவையோ இல்லையோ குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவாவது அவர் கண்டிப்பாக தேவை. பின்னே உங்கள் குழந்தை “அரிசி எப்பிடி மண்ணுல இருந்து எப்படி முளைக்குது” என்று கேட்டால் “சாமி முளைக்க வைப்பாருடா” என்ற பதிலை தவிர்த்து வேறு எதை சொல்வது. அதே போன்ற ஒரு கேள்வியை நான் கேட்ட நேரத்தில்தான் கடவுள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே கடவுள் எனக்கு அறிமுகமான காலத்தை நினைவு தெரியாத காலம் என்று எடுத்து கொள்ளலாம். எல்லா இந்திய குழந்தைகளை போலவே தெய்வ நம்பிக்கை மனதில் விதைக்கப்பட்டது. புரியாத விஷயங்களுக்கு எல்லாம் விடையாக கடவுள் கிடைத்தார். அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்ட போதெல்லாம் அவர் வானத்தில் இருக்கிறார் என்று பதில் கூறிவிடுவார்கள். பெரியவர்கள் சொல்வது போல அவர் வானத்தில் இருக்கிறார் என்று நம்பி விட்டேன்.

அதிக ஆசைகள் இல்லாத பால பருவத்தை தாண்டி, ஆரம்ப பள்ளி காலத்தில் கடவுள் நமக்கு கேட்டதெல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரிடம் நிறைய கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்து விட்டேன். கோரிக்கைகள் என்றால் பெரிய கோரிக்கைகள் எல்லாம் கிடையாது. நானும்  ராம.நாராயணன் படத்தில் வரும் குழந்தைகள் போல தெய்வ சக்தியுடன் அற்புதங்களை புரிய வேண்டும் போன்ற எளிய கோரிக்கைகள் மட்டுமே. ஆனால் என்னதான் கடவுளை வேண்டினாலும் அவர் எனக்கு தரிசனம் தரவில்லை. அற்புத சக்திகளையும் தரவில்லை. என்னுடைய பக்தியில் ஏதோ குறை இருக்கிறது போலும் என்று சந்தேகம் கொள்ள தொடங்கினேன். வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது நான் கடவுளை சிந்தித்து கொண்டிருப்பேன். ஒரு நாள் பாட புத்தகத்தில்  சூரிய குடும்பத்தை படமாக பார்த்தபோது கடவுள் இருக்கிற இடத்தை இதில் குறிக்காமல் விட்டு விட்டார்களே என்று கோபம் வந்து அதன் பின் படிப்பிலேயே ஆர்வம் குறைந்து விட்டது.

இப்படி பக்தி மார்க்கத்தில் தீவிரமாக இருந்த காலத்தில்தான் அந்த வாசகங்கள் முதல்முறையாக  என்னுடைய கண்ணில் பட்டன. ‘கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி; கடவுளை பரப்பியவன் ஏமாற்றுக்காரன்’ என்ற ரீதியில் இருக்கும் அந்த வாசகங்கள். வாசகங்களுக்கு கீழே பெரியார் என்று எழுதியிருந்தது. கடவுளை கூட திட்டலாமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை பற்றி பெரியவர்களிடம் கேட்க முடியாது. கூட படித்த நண்பனிடம் ‘கடவுளை கும்பிடாம இருக்காங்களே? கடவுள் அவங்களை சந்தோசமா வச்சிருக்க மாட்டார்தானே?” என்று கேட்டேன். அவனோ ‘கமலஹாசன் கூட கடவுளை கும்பிட மாட்டாராம். அவர் கிட்ட பணம் இல்லையா என்ன? எல்லா நடிகைகளுக்கும் அவரைத்தான் பிடிக்கும் தெரியுமா?” என்றான். ‘அதுதான் அவர் படம் எல்லாம் ஓடாம போகுதா? ரஜினி மாதிரி சாமி கும்பிட்டால்ல படம் நல்லா ஓடும்” என்றேன். கடவுளை விட்டு கொடுக்காமல்.

இப்படி கடவுள் மேல் மிகுந்த பயபக்தியுடன் மேல்நிலை பள்ளியில் அடி எடுத்து வைத்தேன். வழக்கப்படி கடவுளிடம் வைத்த கோரிக்கைகளுக்கும் அளவில்லை. ஆனால் காமிக்ஸ் புத்தகம் வேண்டும், நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கைகள் சிறிது பகுத்தறிவுடன் மாறி விட்டிருந்தன. சில நேரங்களில் கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டும் விட்டன. ‘கடவுள் இருக்காரு குமாரு’ என்று அப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவேன். சில நேரங்களில் கோரிக்கைகள் தோல்வி அடையும்போது கடவுள் மேல் லேசாக சந்தேகம் எழும். இப்படியெல்லாம் யோசிக்க கூடாது. அதெல்லாம் தப்பு என்று அந்த எண்ணங்களை வளர விடாமல் பார்த்து கொள்வேன்.

கடவுளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த நேரத்தில்தான் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வந்தது. சில மாதங்களுக்கு பின் தேர்வு முடிவுகளும் வந்தது. மதிப்பெண்களை பார்த்ததும் எனக்கு பேரதிர்ச்சி. வழக்கமாக பள்ளி தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களை கூட பொது தேர்வில் எடுக்கவில்லை. ‘கடவுள் நமக்கு இப்படி செஞ்சுட்டாரே. இனிமே அவர் கூட பேச்சு வார்த்தை வச்சுக்க கூடாது’ என்று முடிவு செய்தேன். கவனியுங்கள். இப்போதும் அவர் மேல் முழுவதுமாக  நம்பிக்கை இழக்கவில்லை. என்னுடைய நோக்கம் கடவுளை குற்ற உணர்ச்சியில் தள்ளி அதன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவது.

அவ்வப்போது கடவுளை வணங்குவது  என்ற ரீதியில் அடுத்து வந்த நாட்கள் ஓடின. பனிரெண்டாம் வகுப்பில் வாய்த்த ஆங்கில ஆசிரியர் ஒரு ஆன்மீகவாதி. ‘பாபா’ படம் ஓடிய தியேட்டரில் அவரை பார்த்ததை சொன்னதும் படத்தில்  ஆன்மீகம் இருக்கிறது என்று சொன்னதாலேயே சென்றேன் என்றார். ஆனால் ஆன்மீகத்தை பற்றி படத்தில் சரியாக எதுவுமே சொல்லவில்லை என்றார். ‘எல்லாம் கடவுள்தான் என்று சொன்னவர்கள் அதை சரியாக விளக்கவில்லை’  என்றவர் பின்னர் ஒரு பென்சிலை கையில் எடுத்து கொண்டு ‘இந்த பென்சில் இங்க இருக்குதுன்னா அதுக்கு இடம் கொடுக்கிறது ஸ்பேஸ் அதாவது வெற்றிடம். எல்லா இடத்திலும் இருக்கிற வெற்றிடம்தான் கடவுள்’ என்றார். அவர் சொன்ன கருத்தை விட அவர் இந்து பெயரில் வாழும் முஸ்லீமோ என்றுதான் சிந்தித்தேன். இருந்தாலும் அவர் கருத்து மனதில் ஒரு சிறிய தூண்டுதலை ஏற்படுத்தியது. இடைக்காலத்தில் பெற்ற  அறிவியல் அறிவு  கடவுள் வானத்தில் இல்லை என்றால் வேறு எங்கே இருக்கிறார் என்று கேள்வி கேட்க தொடங்கியிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மிகப்  பெரிய சந்தோசம் தரவில்லை என்றாலும் அதிக அதிர்ச்சியும் தரவில்லை. ஒரு வேளை நாம் படித்ததால்தான் மதிப்பெண் பெற்றோமா? இல்லை கடவுள்தான் மதிப்பெண் பெற வைத்தாரா என்ற சந்தேகம் மீண்டும் தலை தூக்கியது.

பின்னர் தமிழனில் தலை எழுத்துக்கு விதிவிலக்காக மாறாமல் பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன். கடவுள் பற்றி முன்பிருந்த எண்ணங்கள்  மெதுவாக உடைய ஆரம்பித்த தருணம். அந்த நேரத்தில்தான் கடவுளை பற்றி முற்றிலும் சந்தேகம் கொள்ள வைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. எனக்கு அந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் கடவுளை பற்றி நிறைய யோசிக்க வைத்தது அந்த சம்பவம். அது கும்பகோணம் தீ விபத்து.


 தொடரும் 

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 


Saturday, June 7, 2014

வினோதினி, கணேஷ் மற்றும் ஜனா

வினோதினி! ஒரு முக்கியமான விஷயம் பேசணும். கதவு சாத்தி இருக்கா”

“என்ன சொல்லுங்க.”

“அதுக்கு முன்னாடி கொஞ்சம் மனசை தைரியமா வச்சுக்க”

“என்ன ஆச்சு உங்களுக்கு. வேலை போயிடிச்சா? விடுங்க.வேற வேலை தேடிக்கலாம்”

“அதை விட முக்கியம். ஜனான்னு என் கூட வேலை செய்யுற பொண்ணு. உனக்கு கூட தெரியுமே. நம்ம கல்யாணத்துக்கு வந்து இருந்தா”

“நியாபகம் இல்லை. அவளுக்கு என்ன?”

“அவ இப்ப கர்ப்பமா இருக்கா”

“சரி! இப்போ என்ன அதுக்கு. விஷயத்த சொல்லுங்க. ஏன் மென்னு முழுங்குறீங்க”

“அவ கர்ப்பத்துக்கு நான்தான் காரணம்.”

“என்ன விளையாடுறீங்களா?”

“இல்லை நிஜம்தான். கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க ரெண்டு பேருக்கும் பழக்கம். அதை காதல்னு சொல்ல முடியாது. ஒரு ஈர்ப்பு. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அவ கிட்ட நெருங்க கூடாதுன்னுதான் நெனச்சேன். ஆனா முடியல”

“கொஞ்சம் என்னை பார்த்து பேசுறீங்களா?”

“இல்லை என்னால முடியாது வினோ.”

“மேல சொல்லுங்க”

“இரண்டு மாசம் முன்னாடி கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டோம். இப்போ அவ கன்சீவ் ஆயிட்டா”

“பணம் கொடுத்து அபார்ட் பண்ண சொல்லலியா”

“அவ கேட்க மாட்டேங்குறா . குழந்தை செண்டிமெண்டாம்  அவளுக்கு. ரொம்ப வற்புறுத்தினா ஆபீஸ் மாடில இருந்து குதிப்பேன்னு மிரட்டுறா. நான் அவளை கல்யாணம் செஞ்சுக்கணுமாம்”

“என்ன செய்ய போறீங்க. அவளையும் கூட்டிகிட்டு வந்து குடும்பம் நடத்தப் போறீங்களா இந்த அந்தப்புரத்துல”

“வினோதினி! புரிஞ்சுக்கம்மா. கல்யாணம் ஆகி இந்த ரெண்டு மாசத்துல நாம ரொம்ப சந்தோசமா இருந்திருக்கோம். நீ என்னோட மனைவியா  வந்தது என்னோட அதிர்ஷ்டம்னு நான்  நெறைய நாள் நெனைச்சு இருக்கேன். ஆனா இப்போ என்னோட நிலைமைக்கு உன்னை டைவர்ஸ் செஞ்சுட்டு அவளோட வாழறதை தவிர எனக்கு வேற வழி இல்லை.”

“ஒரு வேளை நானும் கன்சீவா இருந்திருந்து மாடில இருந்து குதிக்க போறேன்னு மிரட்டுனா என்ன செய்வீங்க?”

“நீ அப்படி செய்ய மாட்டடா! நீ மெச்சூரான பொண்ணு. எதையும் யோசிப்ப. ஆனா அவ அப்பிடி இல்லை. அவ ஒரு பைத்தியம். உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் குடுக்குறேன். அடுத்து வேற பையனா பார்த்து  கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ டா.”

“கணேஷ்! எனக்கு நல்ல வேலை இருக்கு. உங்களை நம்பித்தான் வாழணும்னு எனக்கு அவசியம் இல்லை. இனி நீங்களே சொன்னாலும்  என்னை ஏமாத்துன உங்களோட என்னால சேர்ந்து வாழவும் முடியாது. என்ன முகத்துல லேசா சிரிப்பு வருது”

“இல்லடா! நீ எனக்கு கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம். என்னை எந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கே நீ”

“சரி! இப்போ தூங்குங்க! நாளைக்கு காலைல மத்ததை பத்தி  பேசலாம்”

“டாக்டர்! அந்த ஜனாவை  இவர் இன்னும் மறக்கல. அவளை பத்தி அடிக்கடி பேசுறார். என்னை அவரோட மனைவின்னு வேற நெனச்சுக்கிட்டு இருக்கார்”

“பொறுமையா இரு வினோதினி. அவர் உன்கிட்ட தப்பா எதுவும்"

"அதெல்லாம் இல்லை. ஜனா, ஜனான்னு புலம்பும்போது என்னை அவரோட மனைவியா கற்பனை செஞ்சுகிறார் அவ்வளவுதான்"

"அப்போ அவர் வழிலேயே போ. ஒரு நர்ஸா அவரை கவனமா பார்த்துக்கோ. அந்த ஜனா தற்கொலை செஞ்சதை உணர்ந்து சீக்கிரம் குணம் ஆகிடுவார்”

“நானும் அதைத்தான் எதிர்பாக்குறேன் டாக்டர்.”

சில நிமிடங்களுக்கு பின் வினோதினி தன்னுடைய தோழிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி.

“அந்த கணேஷ் ஜனாவை ஏமாத்தி கர்ப்பம் ஆக்கி சாக அடிச்சிட்டு தற்கொலைக்கு தூண்டுன கேசுல பைத்தியக்காரன் வேஷம் போட்டு இருக்கான். ஆனா அவன் கேட்ட நேரம் என்னோட ஹாஸ்பிடல்லயே வந்து அட்மிட் ஆகிட்டான். அவனை எப்பவுமே இங்க இருந்து வெளிய போக விட மாட்டேன். அவனை உண்மையிலேயே பைத்தியக்காரனா மாத்துவேன். இது நம்ம ஃப்ரண்ட் ஜனா மேல சத்தியம்” 

Wednesday, June 4, 2014

கோச்சடையான் – சில கருத்துகள் மட்டும்

கோச்சடையான் வெளிவந்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இரண்டாம் நாளே படம் பார்த்து விட்டேன். இதற்கு மேல் படத்தை பற்றி எழுத வேண்டுமா என்ற எண்ணம் தோன்றினாலும் படத்தின் ட்ரைலர், பாடல்கள் பற்றி எல்லாம்  எழுதிய பின்பு படத்தை பற்றி எழுதவில்லை என்றால் ஒரு குறையாகவே இருக்கும் என்பதால் எழுதுகிறேன்.

படம் சூப்பர்பா, ரஜினி குரல் மட்டுமே போதும், ரவிக்குமார் கதை சூப்பர், ரஹ்மான் மியூசிக் என்னமா இருக்கு, நாகேஷ் அருமை  என நல்ல விதமான விமர்சனங்களும் ஏன் நடக்கும்போது எல்லோரோட காலும் வளைஞ்சு இருக்கு, ரஜினி பல்லை நல்லா காட்டி இருக்கலாம், தீபிகா படுகோன் மூஞ்சி படு கோணையா இருக்கு, சரத்குமார் எந்த கேரக்டர்ல வராருன்னே கண்டுபிடிக்க முடியல, தொட்டதுக்கெல்லாம் பாட்டு, கார்ட்டூன் நெட்வொர்க்ல கூட இத விட நல்லா அனிமேஷன் படம் போடுவாங்க, இதை மட்டும் லைவ் ஆக்சன்ல எடுத்து இருந்தா பிச்சுகிட்டு ஓடி இருக்கும் இப்போ சுமார்தான்  என்று நெகடிவ் விமர்சனங்களும் இன்று வரை  வந்து கொண்டே இருக்கின்றன.  இப்படி ஒரு படம் வந்து இத்தனை நாளுக்கு பின்னும் நம்மால் விவாதிக்கப்படுகிறது என்றால் அது ரஜினி படமாக மட்டுமே இருக்க முடியும். பொம்மை படம் என்று யாராலும் எளிதில் ஒதுக்கித் தள்ளி விட்டு சென்று விட முடியவில்லை. அந்த வகையில் கோச்சடையான் சந்திரமுகி, எந்திரன் போல வெற்றி படமே.


படம் ஹாலிவுட் தரத்தில் இல்லை என்று சொன்னாலும் ஒரு சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். இந்த படத்தை கிட்டத்தட்ட ஒரு பரிசோதனை முயற்சி என்று கொள்ளலாம். காரணம் படத்தின் சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் உருவங்களும், அசைவுகளும் தத்ரூபமாகவும் சில காட்சிகளில் அமெச்சூர்தனமாகவும் இருப்பதுதான். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள், முதல் பாதியில் வரும் காட்சிகளை விட நன்றாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தீபிகாவின் முகம்  சில காட்சிகளில் நன்றாகவும், சில காட்சிகளில் மிக வித்தியாசமாகவும் இருப்பதை கவனித்தால் உணரலாம். அதே போல  இறுதிக்காட்சியில் வரும் சேனாவின் முகம் ராணா,கோச்சடையான் முகத்தை விட சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகம் எடுக்கும் பட்சத்தில் முதல் பாகத்தின்  தவறுகளை அவர்களின் அனுபவம் திருத்தி இருக்கும் என நம்பலாம். ஆனால் அப்போதும் தமிழ் சினிமா பட்ஜெட்டில் ஹாலிவுட் தரம் எல்லாம் சாத்தியம் இல்லை. சரி, பின்னர் எதற்கு இப்படி படம் எடுக்க வேண்டும் என்று யோசித்தால் கிடைக்கும் பதில், நம்ம ஊரில்தான் நாடகம் இருக்கிறதே பின்னர் எதற்கு சினிமா என்று ‘கீசக வதம்’ எடுக்கும்போது யோசித்து இருந்திருந்தால் இன்று தமிழ் சினிமாவே இருந்திருக்காது.

படம் பார்க்கும்போது தோன்றிய இன்னொரு விஷயம் ரஜினிக்கு படையப்பா பாணியில் பில்டப் காட்சிகள் வைத்து இருக்கலாம் என்பது. ஆனால் இத்தனை செலவு பிடிக்கும் முறையில் கதைக்கு தேவை இல்லாத காட்சிகளை திரைக்கதையில் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்று பின்னர் தோன்றியது. படம் தொடங்கியது முதல் இறுதிவரை கதையில் மட்டுமே பயணிப்பதால் மட்டுமே இது சிறந்த திரைக்கதை என்று பாராட்டப்படுகிறது. இந்த திரைக்கதை மற்ற தொழில்நுட்ப குறைபாடுகளை மறக்க செய்து விடுகிறது. நடிப்பு பதிவாக்க முறையில் இருக்கும் ஒரு பிரச்சினையே படத்துக்கு ஒரு வகையில் பலமாகிவிட்டது.


ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழுக்கு ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திவிட்டார்கள் நல்ல முன்னெடுப்பு என்று தோன்றினாலும் இன்றைய சூழ்நிலையில் ரஜினியை தவிர மற்ற யாரை வைத்தும் இந்த தொழில்நுட்பத்தில் படம் எடுத்து விட முடியாது. ஏனென்றால் ரஜினி தவிர வேறு யாரால் குரல்  மட்டும் கொடுத்து நூறு கோடிக்கு மேல் வசூலை  குவிக்க முடியும்? பின்னர் மற்றவர்களுக்கு இந்த புதிய தொழில் நுட்பத்தின் பயன்தான் என்ன? காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...