Sunday, September 28, 2014

ஒரு அப்பாவி உளவாளி!!!

காலையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் எரிச்சலாக இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும். எரிச்சலுடன் கதவை திறந்தவன் அதிர்ந்தேன். நான்கு போலீஸ்காரர்கள் விரைப்பாக நின்று கொண்டிருந்தனர்.

“நாங்க போலீஸ். கொஞ்சம் விசாரிக்கணும்.” என்னிடம் சொல்லிய போலீஸ்காரருக்கு தொப்பை இல்லை. தினமும் உடற்பயிற்சி செய்பவர் எண்பது அவரின் உடலை பார்த்ததும் புரிந்தது. அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே உடன் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் தடதடவென்று வீட்டுக்குள் நுழைந்தனர். என்னை ஒரு போலீஸ்காரர் வீட்டுக்குள் தள்ளி கதவை மூடினார்.

“சார்! என்ன ஆச்சு?”

“நான் சொல்றேன். முதல்ல நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.” கொஞ்சமும் சலனம் இல்லாமல் சொன்னார் அந்த போலிஸ்காரர்.

“கேளுங்க சார்” சற்று பயம் வந்தது.

“உங்களை பத்தி சொல்லுங்க” நான் முழித்தேன். அதற்குள் மற்ற போலிஸ்காரர்கள் வீட்டை சோதனையிட தொடங்கி இருந்தனர். ஒருவர் என்னுடைய பெட்டியை எடுத்து உள்ளே இருந்த அனைத்தையும் கீழே கவிழ்த்து கொண்டிருந்தார். இன்னொருவர் என்னுடைய லேப்டாப்பை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

“சார்!  துவைச்சு தேச்சு வச்ச துணியை கலைக்கிறார் சார். வேண்டாம்னு சொல்லுங்க.” நான் சொல்லி முடிக்கும் முன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

“கேக்குற கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்க போதும். வேற எதுவும் பேசக் கூடாது. சொல்லுங்க நீங்க எந்த ஊரு. இங்க என்ன பண்றீங்க?”

“மதுரை பக்கம் சார். இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறேன்.”

“சார்! அவன் கிட்ட லேப்டாப் பாஸ்வேர்ட் கேளுங்க சார். என்ன வச்சு இருக்கான்னு பார்க்கணும்” இன்னொரு போலீஸ்காரர் கத்தினார்.ஒரு வேளை  புது படம் டவுன்லோட் செய்ததுதான் நான் செய்த குற்றமா?

“சொல்லுடா பாஸ்வேர்ட் என்ன?”

“பார்லிமென்ட்”

“பாத்தீங்களா சார். இதுலயே தெரிஞ்சு போச்சு. கொள்கை பிடிப்போட பாஸ்வேர்ட் வச்சு இருக்கான் பாருங்க”

என்ன கொள்கை. என்ன தெரிஞ்சு போச்சு. நான் என்ன தவறு செய்தேன்?

“சார். ப்ளீஸ் சொல்லுங்க. நான் என்ன தப்பு செஞ்சேன். நான் என்னோட லாயர் கூட பேசணும்” பயத்தில் உளற ஆரம்பித்தேன். எனக்கு எந்த  லாயரை தெரியும்!!!

“நடிக்காதடா. பர்வீன் சுல்தானா யாருன்னு சொல்லு.”

“அவ எனக்கு பேஸ்புக்ல பழக்கம். தினமும் சாட் செய்வோம். உங்களுக்கு எப்பிடி அவளை தெரியும்”

“என்ன கதை விடுற. ஒரு பாகிஸ்தான்காரியை பேஸ்புக்ல பிடிச்சு நட்பு ஆகிடீங்களா? நீ பாகிஸ்தான் உளவாளின்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு.”

“சார்! தெரியாம ஒரு பாகிஸ்தான் பொண்ணு கூட சாட் செஞ்சுட்டேன். அதுக்கு போய் உளவாளின்னு.”

“நடிக்காதடா. நீ சாட் செய்யுறது இந்திய உளவுத்துறைக்கு தெரியாதுன்னு நெனச்சயா?”

அதற்குள் உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரர்கள்  கையில் சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியே வந்தார். “சார்! நெறைய ஆதாரம் கிடைச்சு இருக்கு சார். பாருங்க சென்னை மேப்”

நான் சென்னையில் ரூட் பார்க்க பத்து ரூபாய்க்கு வாங்கிய மேப் எல்லாம் எனக்கு எதிரான ஆதாரமா?”

“நீங்க தப்பா...”. நான் முடிப்பதற்குள் மீண்டும் ஒரு அறை.

“இங்க பாருங்க சார் கேமரா. அதுல கப்பலை எல்லாம் படம் எடுத்து வச்சு இருக்கான்”

“நான் போன மாசம் திருச்செந்தூர் கோவிலுக்கு  போனப்ப தூத்துக்குடில எடுத்ததுங்க. அதெல்லாம் வச்சு நான் உளவாளின்னு. எனக்கு ஆதார் கார்ட் எல்லாம் இருக்குங்க.”

“சாரி மிஸ்டர்! மத்தெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசலாம்”

ர்வீன் சுல்தானா: ஹாய்

நான் சுய நினைவுக்கு திரும்பி பர்வீன் சுல்தானாவை நண்பர்கள் வட்டத்தில் இருந்து முதல் வேலையாக  நீக்கினேன். பின்னே பாகிஸ்தான்காரர்களுடன் பேசினால் என்ன நடக்கும் என்ற கற்பனையே பயங்கரமாக அல்லவா இருக்கிறது. 

Thursday, September 4, 2014

ஆப்பிரிக்காகாரரும், அன்னபூர்ணா ஹோட்டலும்

நேற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்தாலும் அவரின் அதீத கறுப்பு நிறம் அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் என்று உணர்த்தியது.அவருக்கு முப்பது வயதுக்குள் இருக்கலாம். இந்த ஏரியாவில் இவர்களுக்கு என்ன வேலை என்று யோசிக்க தொடங்கினேன். வந்தவர் நேராக வந்து எனக்கு எதிராக அமர்ந்தார்.

சப்ளையரோ பெரிதாக அலட்டி கொள்ளாமல்வழக்கப்படி  அசுவாரசியமாக வந்து தட்டை எடுத்து அவருக்கு முன் வைத்து விட்டு  தண்ணீர் எடுக்க சென்றார். சில  வினாடிகளில் ஆப்பிரிக்கர் பெருங்குரலில் கத்த தொடங்கினார்.

“வாட் இஸ் திஸ்?”

அவரின் சத்தத்தை கேட்டு ஓட்டலே ஒரு வினாடி அதிர்ந்து திரும்பி பார்த்தது. ஏதேனும் பெரிய தவறு நடந்து விட்டதா என்று அதிர்ந்து கல்லாவில் அமர்ந்து இருந்த  முதலாளி எண்ணி கொண்டு இருந்த பணத்தை விட்டு விட்டு நிமிர்ந்தார். நானும் நிமிர்ந்தேன்.

ஆப்பிரிக்காக்காரர் தட்டில் இருந்த வாழை இலையை கையில் எடுத்து கொண்டு கல்லாவில் இருந்த முதலாளியை வெறித்து கொண்டிருந்தார்.

“பனானா லீப்”

“திஸ் இஸ் நாட் கிளீன்.  டோன்ட் வான்ட்”

முதலாளி தலையில் அடித்து கொண்டு சப்ளையரை அழைத்தார்.

“மணி! பிளாஸ்டிக் பேப்பர் போட்டு குடு”

மணி என்று அழைக்கப்பட்டவர் எப்படி இருந்தார் என்றால் நீங்கள் கடைசியாக பார்த்த ஹோட்டல் சப்ளையரை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். அந்த மணியாகப்பட்டவர்  என்னை பார்த்து “இவனை எல்லாம் உள்ளே விட்டு நம்ம உயிரை எடுக்குறானுங்க! வாழை இலை சுத்தமா எப்பிடி இருக்கும். நம்ம ஊருக்கு வந்து நம்மளை மாதிரி சாப்பிட மாட்டானா” என்றார்.

“நல்ல வேளை சுத்தமா இருந்தா இலையை சாப்பிட்டு இருப்பான்! “ என்றேன்.

“அப்பிடி செஞ்சா கூட சந்தோசமா இருந்து இருப்பேனே ?” என்று அலுத்து கொண்டே  உள்ளே சென்று பிளாஸ்டிக் பேப்பரை தட்டில் விரித்து கொண்டு ஆப்பிரிக்கர்  முன் வைத்தார். மறு வினாடி ஆப்பிரிக்கர் அந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து மேஜையில்  விரித்து தட்டை அதன் மேல் வைத்தார்.

மணிக்கு இந்த முறை கோபம் சற்று அதிகமாகவே வந்து விட்டது.

“பாருங்க சார்! அநியாயம் பண்றான்” என்று முதலாளியிடம் முறையிட்டார்.

“நீங்க டென்சன் ஆகாதீங்க மணி! என்னமோ செஞ்சுட்டு போறான்” என்றார் முதலாளி.


“வாட் ஈடிங்?” மணி  தன்னுடைய ஆங்கில அறிவை பிரயோகித்தார் .

இப்போதுதான் ஆப்ரிக்கருக்கு என்ன சாப்பிடுவது என்று சந்தேகம் வந்து இருக்க வேண்டும். சில வினாடிகள் யோசித்து “சிக்கன்” என்றார்.

மணிக்கு ரத்த அழுத்தம் எகிறி இருக்க வேண்டும். கண்கள் சிவந்தது தெரிந்தது.

“ஒன்லி வெஜிடேரியன்! நோ சிக்கன்”

“ஓகே! கிவ் மீ திஸ் ஐடம்” ஆப்ரிக்கரின் கை நான் சாப்பிட்டு கொண்டு இருந்த தோசையை நோக்கி நீண்டது.

“வெயிட்.” மணி உள்ளே சென்று விட்டார்.

ஆப்ரிக்கர் ‘லோலோலோ’ என்று ஏதோ பாட தொடங்கினார். சில நிமிடங்களில் தோசை வந்தது.

“கிவ் மீ ஸ்பூன்”

“தோசைக்கு  ஸ்பூன் கேட்கிறான் சார்” என்றார் மணி.

“கேக்குறதை எல்லாம் கொடுங்க” என்றார் முதலாளி. மணி ஸ்பூன் எடுக்க திரும்பிய வினாடியில் என்ன நினைத்தாரோ ஆப்ரிக்கர். தோசையை நான்காக மடித்து வாய்க்குள் திணித்து விட்டார்.

“அண்ணே! இருங்க. நான் அப்போ வந்த தோசையையே இன்னும் சாப்பிடல. இவர் அதுக்குள்ள தோசையை முடிச்சுட்டார்" என்றேன் மணியை பார்த்து.


“இப்போ சாம்பாரை இவன் தலையிலதான் ஊத்தணும்” என்றார் மணி.

“கிவ் மீ எ கிளாஸ்”

“கிளாஸ் கேக்குறான் பாருங்க” என்றேன்

“இருடா தரேன் ” என்று தண்ணீர் வைக்கும் கிளாசை எடுத்து முன்னே வைத்தார் மணி. ஆப்ரிக்கர் யோசிக்காமல் சாம்பார் வாளியில் இருந்து ஒரு கரண்டி சாம்பாரை எடுத்து க்ளாஸில் ஊற்றி குடிக்க தொடங்கினார்.

மணி இப்போது சிரிக்க தொடங்கி இருந்தார்.

“என்னண்ணே! சிரிக்கிறீங்க?” என்றேன்.

“முடிச்சுட்டான்.எப்பிடியோ தொல்லை தீர்ந்தது” என்றார்.

அவர் சந்தோசம் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆப்ரிக்கரின் கை மீண்டும் பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவரின் தட்டை நோக்கி நீண்டது.

“கிவ் மீ திஸ் ஐடம்”

நான் மணியை பார்த்தேன். அதற்கு மேல் அங்கே இருந்தால் போலீஸ் கேசில் முக்கிய சாட்சியாக நிற்க வேண்டிய நிலை வரும் என்று தோன்றியது. கையை கழுவிவிட்டு நேராக முதலாளியிடம் சென்றேன்.

“ஏன் சார்? அதை கொண்டுவா, இதை கொண்டுவான்னு உயிரை வாங்குறான். நீங்க பேசாம இருக்குறீங்களே?” என்றேன்.

“விடுங்க தம்பி! ஒரு தடவை பாம்பே போய் எதை எப்பிடி சாப்பிடறதுன்னு தெரியாம மூணு நாளா சரியா சாப்பிடாம ஊரு வந்து சேர்ந்தேன். ஆனா அவனை பாருங்க. எங்க இருந்தோ வந்து எதை பத்தியும் கவலைப்படாம சாப்பிட்டுகிட்டு இருக்கான். அவனை பாராட்டணும்” என்றார்.

அதுவும் உண்மைதான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...