Sunday, November 23, 2014

அரசியலுக்கு வர ரஜினிக்கு தயக்கம் ஏன்?

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விவாதங்கள் மீண்டும் சூடு பிடித்து விட்டது. ரஜினியோ அரசியலுக்கு வர தயங்குவதாக கூறி விட்டார் இருந்தபோதும் அவர் அரசியலுக்கு கட்டாயம் வருவார் என்பது  ரசிகர்களின்  நம்பிக்கை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது சில  அரசியல்வாதிகளின் விருப்பம். வந்து விடுவாரோ  என சில அரசியல்வாதிகளுக்கு பயம். வந்தால் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது என்பது சிலரின் கருத்து.  அவர் அரசியலை படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது  அதி மேதாவிகளின் சிந்தனை. ஆனால் என்னை பொறுத்தமட்டில் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. வரத் தேவையுமில்லை.

ரஜினி ஏன் அரசியல் பிரவேசம் செய்யக்கூடாது என்பதற்கு முதல் காரணம் அவர் உடல் நிலை. ஊர்ஊராக சென்று பிரசாரம் செய்ய அவரின் உடல்நிலை அனுமதிக்குமா என்பது சந்தேகமே.இதை ரஜினி நன்றாகவே அறிந்து வைத்து இருப்பார்.


அடுத்து கணக்கில் எடுத்து கொள்ள வேண்டிய விஷயம் ரஜினியின் இயல்பான குணம். ஆரம்ப காலங்களில் பத்திரிக்கையாளர்களிடம் சண்டையிடுவார். கோபம் வந்தால் அடித்து நொறுக்கி விடுவார் என்று நிறைய படித்து உள்ளேன். ஆனால் சமீப காலங்களில் தன்னால் யாருடைய மனமும் புண்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளார். யாரையும் பகைத்து கொள்ளவும் விரும்புவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் கண்டுகொள்வதும் இல்லை. அரசியலுக்கு வருவதென்றால் இந்த மனநிலையை அப்படியே மாற்றி கொள்ள வேண்டும். நல்லது செய்தாலும் எதிர் கட்சியினரை  விமர்சிக்க வேண்டும். நிறைய அரசியல் எதிரிகளை இயல்பாகவே சம்பாதிக்க வேண்டியது இருக்கும். கூடவே நிறைய மன உளைச்சலையும்.

அடுத்த விஷயம்  அவர் அரசியல் பிரவேசம் செய்ய வேண்டியது என்றால் திமுகவிலோ, அதிமுகவிலோ இணைந்து விட முடியாது அந்த இரண்டு கட்சி தலைமைகளும் அவர்  வெளியே இருந்து ஆதரவு அளிப்பதைத்தான் விரும்புமே தவிர அவர் தங்கள் கட்சிக்குள் வருவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவர்களை தவிர்த்து  தமிழக காங்கிரசில் அவர் இணைந்தால் வரும் விளைவுகளை  கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பாஜகவில் அவர் இணைய நினைத்தாலும் பாஜகவின் மத அடையாளம் ரஜினிக்கு மனத்தடையை ஏற்படுத்தும். இருக்கும் ஒரே வாய்ப்பு தனிக்கட்சி ஆரம்பிப்பதுதான். ஒரு வேளை அதை அவர் செய்து ஆட்சியை பிடிப்பதாகவே வைத்து கொண்டாலும் அமைச்சரவை அமைக்கும்போது  ரசிகர் மன்றங்களின் நிர்பந்தங்களுக்கு உட்பட்டே எதையும் செய்ய வேண்டியது இருக்கும். மற்ற கட்சியிலிருந்து சில தலைவர்களும், சில நடிகர்களும்  ரஜினியின் கட்சியில்  வந்து இணைவதாக  கொண்டாலும் மன்றங்களின் கையே இயல்பாக எதிலும் ஓங்கி இருக்கும். அது நல்லது என்று எளிதாக எடுத்து கொண்டுவிட முடியாது.

ரஜினி இது அனைத்தையும் மீறி அரசியலுக்கு வந்து முதல்வராகவே ஆனாலும் அவரால் தனியாக எந்த ஒரு மாயாஜாலத்தையும் நிகழ்த்தி விட முடியாது. அவர்  நல்லது செய்ய நினைத்தாலும் அரசியலில் அது அவ்வளவு எளிதில்லை. எது செய்தாலும் விமர்சிப்பார்கள். தடை போடுவார்கள். இதை ரஜினி நன்றாக உணர்ந்து வைத்து இருப்பதையே அவரின் ‘லிங்கா’ இசை வெளியீடு பேச்சு எதிரொலிக்கிறது.


இவை அனைத்தையும் மீறி ரஜினி அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கே நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே இருக்கும் . ஏனென்றால் அவர் பார்க்காத பணமும் இல்லை. இல்லாத புகழும் இல்லை. ஆட்சி அதிகாரத்தை விரும்புவரும் அவர் இல்லை. எனவே அவர் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கவேண்டியது நம் கடமை.


Saturday, November 22, 2014

'நாய்கள் ஜாக்கிரதை’ - ஜாக்கிரதை!!!

பிடித்த படங்களை பற்றி மட்டுமே எழுத வேண்டும். அப்படி எழுதும் படங்களின் கதையை எழுதக்கூடாது என்பது எனது கொள்கை. படம் பிடிக்காவிட்டால் அந்த படத்தை பற்றி எதுவும் எழுதாமல் தவிர்த்து விடுவேன். இருந்த போதும் 'நாய்கள் ஜாக்கிரதை’ என்னை  கொள்கை மீற வைத்து விட்டது.

நூறு ரூபாய் கொடுத்து படத்துக்கு வந்ததே தவறோ என்று சில படங்கள் சிந்திக்க வைக்கும். அது போன்ற படங்களில், விறுவிறுப்பே இல்லாமல் மந்த கதியில் சென்று பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ போன்ற படங்கள் ஒரு வகை. லாஜிக் எல்லாம் தேவையில்லை. படம் என்று ஏதோ ஒன்றை எடுத்து வைப்போம் என்ற ரீதியில் படம் எடுத்து பார்ப்பவர்களின் காதில் பூ வைக்க முயன்று தோற்கும்  ‘நாய்கள் ஜாக்கிரதை’ வகை படங்கள் இன்னொரு வகை.


படம் முதல் பாதியில் எல்லாம் நன்றாகத்தான் செல்கிறது. போலீஸ்காரர் சிபி பெண்களை கடத்தும் கும்பலுடன் மோதுகிறார். அந்த சண்டையில் தன்னுடைய போலீஸ் நண்பரை இழக்கிறார். அந்த சண்டையில் அவர் காலிலும் குண்டடிபட்டு விடுவதால் விடுப்பில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு நாயுடன் பழக்கம் ஏற்பட அந்த நாயை செல்லப்பிராணியாக்கி கொள்கிறார். இவை எல்லாம் நடந்து முடியும்போது சிபிராஜின் மனைவி அந்த பெண் கடத்தல் கும்பலால் கடத்தப்படுகிறார். இடைவேளை  விடுகின்றனர். இதுவரை படம் பரவாயில்லை ரகம்தான்.

இடைவேளைக்கு பின்னர்  கிளைமாக்ஸ் ஆரம்பித்து விடுகிறது. படமும் நொண்டியடிக்க ஆரம்பித்துவிடுகிறது. கடத்தல் கும்பல்  சிபிராஜின் மனைவியை சவப் பெட்டியில் வைத்து குழி தோண்டி புடைத்து விடுகின்றனர். பெட்டியில் அவரின் மனைவி படும் கஷ்டத்தை சிபிக்கு நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். இனி சிபிராஜ் அந்த நாயுடன் சேர்ந்து எப்படி தனது மனைவியை கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

கதை நன்றாக இருப்பது போல்தான் தெரியும். ஆனால் சிபி தன்னுடைய மனைவியை தேடும்  காட்சிகள் அபாரம்
  • மனைவி மண்ணுக்குள் இருக்கும்போது சிபிராஜ்  துளி பதட்டமும் சோகமும் இன்றி இருக்கிறார். அந்த ஹீரோயினுக்காக எல்லாம் சோகமாக இருக்க தேவையில்லை என்று நினைத்து விட்டாரோ என்னவோ.
  • மண்ணுக்குள் புதைத்து வைத்த பெட்டிக்குள் மழை நீர் இறங்குகிறது.
  • ஊட்டியில் மழை பெய்வது தெரிந்து சிபிராஜ்  ஊட்டியில் மனைவியை தேடி திரிகிறார். ஆனால் ஊட்டியில் மழை பெய்த அறிகுறியே எங்கும் இல்லை.  
  • நாய்க்கு வெறி பிடித்து விட்டது என்று மயக்க ஊசி போடுகின்றனர். ஆனால் மயங்கிய  நாயை பிடித்து அடைத்து வைக்காமல் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுகின்றனர்.
  • ஆறு மணிநேரம் பெட்டிக்குள் இருந்த கதாநாயகி ஏதோ தூங்கி விழிப்பதை போல எழுந்து நடந்து நடந்து செல்கிறார்.
  • சிபி நன்றாகத்தானே துள்ளி குதித்து நடக்கிறார். பின்னர் ஏன் காலில் கட்டு

மேலே சொன்னவை எல்லாம் சிறு துளிதான். லாஜிக் மீறாமல் எல்லாம் யதார்த்த படம் எடுக்க முடியாதுதான். இருந்தாலும் அதற்காக காட்சிக்கு காட்சியா லாஜிக் இல்லாமல் படம் எடுப்பது. நல்ல சினிமா விமர்சகர்கள் படத்தை பிரித்து எடுத்து விடுவார்கள். மகனுக்காக படம் எடுப்பது என்று முடிவு செய்த சத்தியராஜ் இன்னும்  நன்று அறிமுகமான நடிகர்களை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து இருக்கலாம். படம் முடிந்தபின்  ஹீரோ போல முன்னிறுத்தப்பட்ட அந்த நாயும் மனதில் பதியவில்லை. படமும் கூட.


Friday, November 14, 2014

இந்த கதையை நம்புறதும், நம்பாததும் உங்க இஷ்டம்!

தன் பின் வரும் எதையும் நீங்கள் நம்பப் போவதில்லை. உங்களை நம்ப வைப்பது எனது நோக்கமும் இல்லை. ஆனால் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதை ஒரு முறை படித்து விடுங்கள். கடந்த மாதம் கடவுள் என்னை சந்திக்க வந்திருந்தார். விடாத வேலைப்பளு அவரை சோர்வு கொள்ள செய்திருந்தது. வந்தவர் நேராக என்னை நோக்கி இந்த கேள்வியை வீசினார்.

இந்த மனுசங்களுக்கு என்னதான்பா வேணும். எப்ப பாரு அது இல்ல, இது இல்லன்னு வந்து புலம்பிகிட்டு. உங்களையெல்லாம் ஏன் படைச்சேன்னு இப்போ யோசிக்கிறேன்”

“டூ லேட் கடவுளே!”

“சரி இப்போ சொல்லு. நான் உலகத்தை எல்லாம் அழிக்க விரும்பல. ஆனா மனுஷங்களோட எல்லா பிரச்சினையையும் தீர்க்கணும்னு நினைக்கிறேன். எப்பிடி இருந்தா நீங்க சந்தோசமா இருப்பீங்க”

“கடவுளே! மனுசனோட முதல் பிரச்சினை ஆசை. அடுத்த பிரச்சினை பொறாமை. இது ரெண்டையும் தீர்த்து வச்சுடுங்க.”

“எப்பிடி சொல்லேன்?” கடவுள் ஆர்வமாக கேட்டார்.

“கொஞ்சம் பாருங்க. ஒருத்தன் பணக்காரனா இருக்கான். பெரிய வீட்ல இருக்கான். இன்னொருத்தன் ஏழையா இருக்கான். குடிசைல இருக்கான். எல்லாருக்கும் ஒரே மாதிரி சொந்த வீட்டையும், சொத்தையும் குடுங்க முதல்ல”

“இவ்வளவுதானா?” கடவுள் கேட்டுவிட்டு கைகளை தட்டினார். உலகம் எப்படி மாறிவிட்டது என்று என் கைகளில் பார் என்று உள்ளங்கையை விரித்து காட்டினார்.

ஆச்சரியம். அவர் உள்ளங்கைகளில் தெரிந்த உலகத்தில்  எல்லா வீடுகளும் ஒரே மாதிரி, எல்லா மனிதர்களும் விலை உயர்ந்த ஆடை அணிந்து. உலகமே மாறி விட்டது.

“சூப்பர் கடவுளே!“

“முடிந்ததா?”

“அது எப்பிடி முடியும் கடவுளே. கொஞ்ச நாள்ல மறுபடியும் புத்தி இருக்குறவன், மத்தவன் சொத்தை எல்லாம் ஏமாத்தி பிடிங்கிடுவான். அதனால எல்லாருக்கும் ஒரே மாதிரி புத்தியை குடுங்க.”

“இது முக்கியமா?”

“இதுதான் ரொம்ப முக்கியம்”

கடவுள் கைகளை தட்டினார். “இனிமே எல்லாரும் ஒரே மாதிரி புத்திசாலி” என்றார்.

“இனிமே மனுசங்க எல்லாரும் சந்தோசமா இருப்பாங்களா?”

“அதுக்குள்ள சந்தோசமா? உங்க கையை பாருங்க. அந்த பொண்ணு அந்த வடக்கு தெருல நடந்து போய்கிட்டு இருக்குற பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இல்ல?”

“ஆமாம்”

“பக்கத்து தெருல போற பொண்ணு இந்த பொண்ணை விட அழகு கம்மியா தெரியல?”

“மனிதா! அழகுங்குறது பாக்குற கண்ணுல”

“தத்துவம் எல்லாம் பேசாதீங்க கடவுளே. நீங்க என்ன பண்றீங்க உலகத்துல இருக்கிற எல்லா பொம்பளங்களையும் ஐஸ்வர்யாராய் மாதிரி அழகா மாத்திடுங்க. எல்லா ஆம்பளைங்களையும் அமெரிக்கால டாம் க்ரூஸ் அப்பிடின்னு ஒரு நடிகர் இருக்கார். அவரு மாதிரி மாத்திடுங்க”

“அப்போ ஒருத்தருக்கும் இன்னொருத்தருக்கும்  வித்தியாசம் தெரியாதே?”

“அட கடவுளே! அவங்கள மாதிரியே மாத்த சொல்லல. அவங்க மாதிரி அழகா மாத்திடுங்கன்னு சொன்னேன்.”

சொன்னதும் கடவுள் கை தட்டி கைகளை விரித்தார். ஆகா! உலகம்  முழுக்க  ஐஸ்வர்யாராய் மாதிரி பெண்கள். என்ன ஒரு கண் கொள்ளா காட்சி. ஆப்ரிக்காகாரனும், அமெரிக்காகாரனும் ஒரே நிறத்தில். இந்தியர்களும், வெள்ளைகாரர்களும் ஒரே மாதிரி அழகாக.

“அப்புறம் இன்னொன்னு நீங்க செய்யணும். இனிமே மனுஷனுக்கு பசிக்க கூடாது. நோய் எதுவும் வர கூடாது.”

“என்ன இது? முட்டாள்தனமா இருக்கு?”

“யோசிங்க கடவுளே. எல்லாருக்கும் ஒரே மாதிரி வீடு, சொத்து எல்லாம் கொடுத்தாச்சு. ஒரே மாதிரி புத்திசாலித்தனம் குடுத்தாச்சு. இனிமே யாரு எந்த வேலையை பாக்குறதுன்னு பிரச்சினை வரும். யாரும் வேலைக்கே போக மாட்டாங்க ஒரு கட்டத்துல. அப்போ பசியை எடுத்துட்டா எல்லாரும் இருக்குற வீட்ல சந்தோசமா அவங்களோட  ஐஸ்வர்யாராய் கூட வாழ்ந்துக்குவாங்களே.”

“சரிதான்! இனிமே யாருக்கும்  பசி, பிணி கிடையாது. போதுமா”

“செம கடவுளே! அப்புறம் எல்லாரையும் ஒரே மொழி பேச வச்சுடுங்க. எல்லாரையும் நீங்களே ஏதாவது ஒரு மதத்துக்கு மாத்தி விட்ருங்க. அப்புறம் பாருங்க.”

கடவுள் கைகளை தட்டினார்.

“இப்போ எல்லாரும் ஒரே மாதிரி பணக்காரங்க. எவனும் எவனையும் ஏமாத்த முடியாது. எல்லா பொம்பளைங்களும் அழகு. இனிமே யாரும் உங்க கிட்ட வந்து எதையும் கேட்க முடியாது. பசியும் கிடையாது. ஆசையும், பொறாமையும் இல்லாமலே போயிடும் இனிமே. சந்தோசம்தானே கடவுளே. இனிமே நீங்க நிம்மதியா தூங்கலாம்.”

“சந்தோசம்! இன்னும் ஏதாவது யோசனை இருந்தா என்னை கூப்பிட்டு சொல்லு. இன்னும் ரெண்டு நாள் டைம் எடுத்து நாம எந்த கரெக்சன் இருந்தாலும் செஞ்சுக்கலாம்”

கடவுள் மறைந்து விட்டார்.

டவுளுக்கு உலகை சீரமைக்க உதவிய திருப்தியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து  நடக்க தொடங்கினேன். நேராக என்னுடைய வீட்டுக்கு சென்றேன். உலகம் அமைதியாக இருந்தது. எல்லாரும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். அதனால் என்ன? யாருக்கும் எந்த குறையும் இல்லையே இப்போது. இதோ சமத்துவ உலகம். கடைகள் இல்லை. எந்த ஒரு போக்குவரத்தும் இல்லை. ஏதோ ஒரு டாம் க்ரூஸ் மட்டும்  தனது ஐஸ்வர்யாராயுடன்  என்னை கடந்து சென்றார். அவர்கள் எங்கே போகிறார்கள்? நேரம் போக்க  சிறிது உலாவிவிட்டு வருவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.  

ஏதோ ஒரு இனம் புரியாத கவலை என்னை கவ்வியது. வித்தியாசங்களே உலகை இயங்க வைப்பதாக தோன்றியது. பசி வேண்டும். கவலை வேண்டும். தேடல் வேண்டும். வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும். இப்படியே போனால் சிறிது நாட்களில் எல்லாருக்கும் பித்து பிடித்து விடும். உலகம் அதுவாகவே அழிந்து விடும். மீண்டும் கடவுளை கூப்பிட்டு பேச தொடங்கினேன். பின்னர் என்ன? சில நிமிடங்கள்  டாம் க்ரூஸ், ஐஸ்வர்யாராய் போல இருந்த நீங்களும் நானும் மீண்டும் பழைய உருவத்தையே அடைந்து விட்டோம். இதெல்லாம் எப்போது நடந்தது என்று யோசிக்க வேண்டாம். அதை கடவுள் அப்போதே  மறக்க வைத்து விட்டார். ஆனால் பாவம். அவரின் பிரச்சினைதான் இன்னும் தீர்ந்தபாடு இல்லை.

Tuesday, November 4, 2014

ஒரு சிறிய தடங்கல்

ந்த தளத்துக்கு நேரடியாக வருகை புரிபவர்கள் கவனத்துக்கு. சில சொந்த பிரச்சினைகளாலும், போதிய வரவேற்பு இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை. தங்களை  போன்றவர்களின் ஆதரவுடன் விரைவில் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என்று நம்புகிறேன்.


விரைவில் எழுதவும், மறு வருகையில் முன்பை விட சிறப்பான படைப்புகளை படைக்கவும் முயல்கிறேன். நன்றி.
 .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...