Wednesday, January 21, 2015

இன்டர்ஸ்டெல்லர்- inspired by தமிழ் சினிமா????

கொஞ்ச நாளா நம்ம ஊருல ஒரு பழக்கம் வேகமா பரவிட்டு வருதுக. அதுதாங்க ஒரு தமிழ் படம் வந்ததுன்னா அந்த படத்தை பார்த்து அது எந்த எந்த இங்கிலீஷ் படத்துல இருந்து உருவியிருக்காங்கன்னு ஆராய்ச்சி செஞ்சு நெட்ல போடறது. அப்புறம் வெள்ளைக்காரன்லாம் என்னமா படம் எடுக்குறான். நம்ம ஆளுங்க காப்பி அடிக்கத்தான் லாயக்குன்னு கமெண்ட் போடுறது.

ஆனா பாருங்க, வெள்ளைக்காரன் யோசிக்க முன்னாடியே நம்ம ஆளுங்க விதவிதமா யோசிச்சு படம் எடுத்துகிட்டுதான் இருக்காங்க. என்ன நம்ம ஆளுங்களுக்கு எல்லாமே புரிஞ்சுடும்னு நெனச்சு ரொம்ப விசயத்தை மேலோட்டமா சொல்லிட்டு விட்டுடுறாங்க.

இப்பிடிதாங்க யாரோ கிறிஸ்டோபர் நோலனாம். பெரிய டைரக்டராம். ‘இன்டெர்ஸ்டெல்லர்’ அப்பிடின்னு படம் எடுத்திருக்காராம்; அவர் படம் எடுத்தா யாருக்கும் புரியாதாமாம்; இப்படி எல்லாம் சிலர் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்பிடி என்னப்பா புரியாத மாதிரி படம்; கண்டிப்பா அதை பார்த்தே ஆகணுமேன்னு முடிவு செஞ்சு படத்துக்கும் போய்ட்டேன். படம் ஓடிகிட்டே இருந்தது. எப்படியாச்சும் புரிஞ்சுக்கணும் அப்பிடின்னு ஆர்வமா வச்ச கண்ணு வாங்காம திரையை பார்த்துக்கிட்டே இருந்தேன்.

என் பக்கத்துல உக்காந்து இருந்தவர் படத்தோட ஆரம்பத்துல இருந்தே   சீட்ல உக்கார முடியாம நெளிஞ்சுகிட்டே இருந்தாரு. திடீர்னு என்ன நெனச்சாரோ என்கிட்ட வந்து “ஏன் சார்? ஏதோ வார்ம் ஹோல் அப்பிடின்னு சொல்றானே அப்பிடின்னா என்ன?” அப்பிடின்னார்.

ஆஹா! நம்ம புத்திசாலித்தனத்தை காமிக்க சிக்குனாண்டா ஒருத்தன்னு நெனச்சுக்கிட்டு ஐன்ஸ்டீன் அவதாரம் எடுத்தேன். “அதாவது சார், நாம இப்போ சென்னைல இருக்கோம். நாம இப்போ மதுரை போகணும்னா ஐநூறு கிலோமீட்டர் போகணும். அப்பிடி ஐநூறு கிலோமீட்டர் போகணும்னா நாம பஸ்ல போறோமா? ட்ரைன்ல போறோமா? இல்ல பிளைட்டா? அப்பிடிங்குறதை பொறுத்து ரெண்டு மணி நேரத்துல இருந்து, பனிரெண்டு மணி நேரம் வரை ஆகலாம். அப்பிடின்னா என்ன அர்த்தம்னா மதுரைக்கும் சென்னைக்கும் நடுவுல தூரம் மட்டும் இல்ல. நேரமும் இருக்கு. இது வரைக்கும் சொன்னது புரிஞ்சதா?” அப்படின்னேன். உண்மைல நான் சொன்னது எனக்கே புரியல. அந்த ஆளுக்கும் புரியாதுன்னு நம்பிக்கை. ஆனா அந்த ஆளு வயித்து கடுப்பு வந்த மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு தலையை ஆட்டுனார்.

“ரைட்! இப்போ இந்த வார்ம் ஹோல் என்ன செய்யும்னா நம்ம பிரபஞ்சத்துல இருக்குற ரெண்டு இடத்துக்கு நடுவுல ஒரு ஷார்ட் கட் கிரியேட் செய்யும். நீங்க அந்த ஷார்ட் கட்டை பிடிச்சுட்டா தூரத்தை பத்தி கவலைப்பட தேவை இல்லை. பிரபஞ்சத்தோட ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு நேர விரயம் ஏதும் இல்லாம போயிடலாம். இதுதான் வார்ம் ஹோல்” அப்பிடின்னேன்.

அவர் தலையை ஆட்டிகிட்டே தியேட்டரோட விட்டத்தை பார்த்தார். ச்சே! மனுசன்  என்னமா யோசிக்கிறார் அப்பிடின்னு நெனச்சுகிட்டேன். திடீர்னு சத்தமா சிரிச்சார். கொஞ்ச நேரம் கழிச்சு “இந்த இரண்டாம் உலகம் படத்துல ஆர்யா ஒரு மலைல ஏறி இன்னொரு கிரகத்துக்கு போய் அனுஷ்காவை பார்ப்பாரே. அதுவும் வார்ம் ஹோல்தான?” அப்பிடின்னார்.

அப்போதான் நானும் யோசிச்சேன். நோலன் ‘இரண்டாம் உலகம்’ பார்த்துதான்  ‘இண்டரஸ்டெல்லர்’ எடுத்துட்டாரோன்னு. செல்வராகவனுக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலையே அப்பிடின்னு நான் அதிர்ச்சில உறைஞ்சு போனப்பதான்  பின் சீட்ல இருந்து இன்னொருத்தர் என்ட்ரி ஆனார்.

“என்ன சார் இரண்டாம் உலகம்? ‘பாபா’ படம் பார்த்தீங்களே? தலைவர் கொத்தவால் சாவடில இருந்து இமயமலைக்கு ஷார்ட் கட் எடுப்பார் பாருங்க. பத்து வருஷம் முன்னாடியே தமிழ் சினிமால இதெல்லாம் வந்தாச்சு சார். ஹாலிவுட்காரனுக்கு இதெல்லாம் இப்போதான் புரிஞ்சிருக்கு” அப்பிடின்னார்.


அவங்க பேசுனதும் எனக்கு கிரிஸ்டோபர்  நோலன் மேலேயே சந்தேகம் வந்துடுச்சு. ஒரு வேளை அவர் தமிழ் சினிமா பார்த்துதான் ‘இன்டர்ஸ்டெல்லர்’ எடுத்தாரா? நீங்களும் யோசிச்சு பார்த்து சொல்லுங்களேன். 

Friday, January 16, 2015

‘ஐ’ – மெர்சல் ஆக்கவில்லை

 ‘ரட்சகன்’ என்றொரு படம் வந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அந்த படத்தின் இயக்குனர் பெயர் பிரவீன்காந்த் என்று நினைவு. அந்த படம் கிட்டத்தட்ட அந்த ஷங்கர் படங்களை அடியொற்றி பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். இருந்தபோதும் வலுவான கதை இல்லாததால் படம் பெரிய வெற்றியை ஈட்ட முடியவில்லை. படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு  மிகப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியது. சில வருடங்களுக்கு முன் அதே போல் பிரமாண்டமாக பணத்தை கொட்டி சுசி.கணேசன் ‘கந்தசாமி’ என்றொரு படம் எடுத்தார். பொறுமையை சோதிக்கும் திரைக்கதை. பெரிய அளவில் மார்கெட்டிங் செய்தும் படம் தேறவில்லை. படத்தின் இயக்குனர் அதன் பின் படம் எடுத்தது போல தெரியவல்லை.

பிரமாண்டம் மட்டுமே ஷங்கரின் வெற்றி சூத்திரம் என்பதாக வைத்து கொண்டால் மேலே கூறிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் பிரமாண்டம் என்பது மட்டுமே ஷங்கரின் வெற்றிக்கு காரணம் இல்லை. அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதையே அவரின் படங்களின் வெற்றிக்கு காரணம். பிரமாண்டம் ஷங்கரின் அடையாளம் மட்டுமே. ஆனால் அதை அவர் வெற்றிக்கு காரணமாக புரிந்து கொண்டதால் ‘கந்தசாமி’யும், ‘ரட்சகன்’ னும் பெரிய அளவு பணத்தை விழுங்கி முதலுக்கு மோசம் விளைவித்தன.

‘ஐ’யை பொருத்தமட்டில்  இந்த முறை ஷங்கரே தன்னுடைய வெற்றியை தவறாக  புரிந்து கொண்டாரோ என்று சந்தேகம் எழுகிறது. கலர் கலராக காட்சிகளும், பிரமிக்க வைக்கும் விசுவல் எபக்ட்சம் இருந்தால் போதும் படம் ஓடி விடும் என்று நினைத்து விட்டாரோ என்னவோ. மிக சாதாரண கதையை எடுத்து கொண்டு படம் காட்டியுள்ளார். படத்தின் நீளம் வேறு பொறுமையை சோதிக்கிறது. படத்தின் கதை அப்படி ஒன்றும் மறைத்து வைக்க வேண்டிய கதை இல்லை. தன் உருவத்தை சிதைப்பவர்களின் உருவத்தை கதாநாயகன் சிதைத்து அவர்களை பழி வாங்குகிறார். கதை அவ்வளவுதான்.

விக்ரம் உழைப்பை கொட்டியுள்ளார்.  உடலை ஏற்றி, இறக்கி, உருமாற்றி அர்ப்பணிப்பு உணர்வு என்றால் என்ன என்று காட்டுகிறார். வேறு எந்த நடிகராலும் அந்த கதாபாத்திரத்தை செய்து விட முடியாது. உண்மையில் படம் பார்த்து கொண்டிருப்பவர்களுக்கே ஒரு பயம் வருகிறது. இப்படி எல்லாம் உடலை வருத்தி எதாவது ஆகி விடப் போகிறது என்று. வருடத்துக்கு மூன்று படம் நடித்து பணம் பார்ப்பதை விட்டுவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் என்று நடித்து கஷ்டப்பட்டு தன்னை வித்தியாசப்படுத்தி காட்டி கொள்ளும் விக்ரம் ஒரு ஆச்சரியம்.

எமி தமிழ் பெண் போலவே தெரிகிறார். வெள்ளைத்தோல் துருத்தி கொண்டு தெரியாமல் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறை இல்லை. சந்தானத்திற்கு சிரிக்க வைக்க அதிக வாய்ப்புகள் இல்லை. கிடைத்த வாய்ப்புகளில் தன்னுடைய  காமெடி செய்கிறார். ஆனாலும் பெரும்பாலான இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையிலேயே காமெடி இருக்கிறது. இவர்களை தவிர வரும் ஐந்து வழக்கமான வில்லன்கள். நன்றாகவே வில்லத்தனம் செய்திருக்கிறார்கள்

அது எப்படி ஷங்கர் படங்களில் மட்டும் காட்சிகள் இத்தனை  அழகாக இருக்கிறது என்று தெரியவில்லை. சென்னை நகரின் அழுக்கு தெருக்களையும் அழகாக காட்டியுள்ளனர். சண்டை காட்சிகள் வித்தியாசம். ஆனால் மிக நீளம். பாடல் காட்சிகளில் வழக்கம் போல ஷங்கர் முத்திரை. ஆனால் பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். சில நேரங்களில்  சலிப்பை வர வைக்கின்றன. படத்திலேயே சில விளம்பரங்களையும் எடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தியது ஒரு புதுமை

ஷங்கர் ‘நண்பன்’ படத்தை ரீமேக் செய்ய கதை இல்லாததுதான் காரணமோ என்று இந்த படத்தை பார்த்தும் தோன்றியது. ட்விஸ்ட் என்று அமைத்த காட்சிகளும் எடுபடவில்லை. எல்லா ட்விஸ்ட்களும் எதிர்பார்த்ததுதான். வழக்கமாக ஷங்கர் படம் ஏற்படுத்தும் எந்த பாதிப்பையும் இந்த படம் ஏற்படுத்தவில்லை. பளபள காட்சிகளுக்காகவும், விக்ரமுக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். இரண்டாம் முறை பார்ப்பது கடினம். பொறுமை இழந்து விடுவோம்.

‘நாயக்’ ‘பாய்ஸ்’ என்று இரண்டு படங்கள் தோல்வி அடைந்த பின் ‘அந்நியன்’ எடுத்தார் ஷங்கர். படம் வெளிவந்த பின் ஒரு பேட்டியில் ‘அந்நியன்’ படத்துக்குத்தான் ஸ்க்ரிப்டுக்காக அதிகம் உழைத்தோம் என்று கூறி இருந்தார். அந்த படம் பார்க்கும்போது அது உண்மை என்றும் தோன்றியது. இப்போது சுஜாதாவும் இல்லாததால், அதை விட அதிக உழைப்பை அடுத்த படத்துக்கு ஷங்கர் கொட்டியே ஆக வேண்டும்.

இது விமர்சனம் இல்லை. இதை எழுதியவர் சினிமா மேதையும் இல்லை. படத்தை பார்க்கும்போது தோன்றிய எண்ணங்களின் தொகுப்பே இந்த கட்டுரை.
  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...