Saturday, November 22, 2014

'நாய்கள் ஜாக்கிரதை’ - ஜாக்கிரதை!!!

பிடித்த படங்களை பற்றி மட்டுமே எழுத வேண்டும். அப்படி எழுதும் படங்களின் கதையை எழுதக்கூடாது என்பது எனது கொள்கை. படம் பிடிக்காவிட்டால் அந்த படத்தை பற்றி எதுவும் எழுதாமல் தவிர்த்து விடுவேன். இருந்த போதும் 'நாய்கள் ஜாக்கிரதை’ என்னை  கொள்கை மீற வைத்து விட்டது.

நூறு ரூபாய் கொடுத்து படத்துக்கு வந்ததே தவறோ என்று சில படங்கள் சிந்திக்க வைக்கும். அது போன்ற படங்களில், விறுவிறுப்பே இல்லாமல் மந்த கதியில் சென்று பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ போன்ற படங்கள் ஒரு வகை. லாஜிக் எல்லாம் தேவையில்லை. படம் என்று ஏதோ ஒன்றை எடுத்து வைப்போம் என்ற ரீதியில் படம் எடுத்து பார்ப்பவர்களின் காதில் பூ வைக்க முயன்று தோற்கும்  ‘நாய்கள் ஜாக்கிரதை’ வகை படங்கள் இன்னொரு வகை.


படம் முதல் பாதியில் எல்லாம் நன்றாகத்தான் செல்கிறது. போலீஸ்காரர் சிபி பெண்களை கடத்தும் கும்பலுடன் மோதுகிறார். அந்த சண்டையில் தன்னுடைய போலீஸ் நண்பரை இழக்கிறார். அந்த சண்டையில் அவர் காலிலும் குண்டடிபட்டு விடுவதால் விடுப்பில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு நாயுடன் பழக்கம் ஏற்பட அந்த நாயை செல்லப்பிராணியாக்கி கொள்கிறார். இவை எல்லாம் நடந்து முடியும்போது சிபிராஜின் மனைவி அந்த பெண் கடத்தல் கும்பலால் கடத்தப்படுகிறார். இடைவேளை  விடுகின்றனர். இதுவரை படம் பரவாயில்லை ரகம்தான்.

இடைவேளைக்கு பின்னர்  கிளைமாக்ஸ் ஆரம்பித்து விடுகிறது. படமும் நொண்டியடிக்க ஆரம்பித்துவிடுகிறது. கடத்தல் கும்பல்  சிபிராஜின் மனைவியை சவப் பெட்டியில் வைத்து குழி தோண்டி புடைத்து விடுகின்றனர். பெட்டியில் அவரின் மனைவி படும் கஷ்டத்தை சிபிக்கு நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். இனி சிபிராஜ் அந்த நாயுடன் சேர்ந்து எப்படி தனது மனைவியை கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

கதை நன்றாக இருப்பது போல்தான் தெரியும். ஆனால் சிபி தன்னுடைய மனைவியை தேடும்  காட்சிகள் அபாரம்
  • மனைவி மண்ணுக்குள் இருக்கும்போது சிபிராஜ்  துளி பதட்டமும் சோகமும் இன்றி இருக்கிறார். அந்த ஹீரோயினுக்காக எல்லாம் சோகமாக இருக்க தேவையில்லை என்று நினைத்து விட்டாரோ என்னவோ.
  • மண்ணுக்குள் புதைத்து வைத்த பெட்டிக்குள் மழை நீர் இறங்குகிறது.
  • ஊட்டியில் மழை பெய்வது தெரிந்து சிபிராஜ்  ஊட்டியில் மனைவியை தேடி திரிகிறார். ஆனால் ஊட்டியில் மழை பெய்த அறிகுறியே எங்கும் இல்லை.  
  • நாய்க்கு வெறி பிடித்து விட்டது என்று மயக்க ஊசி போடுகின்றனர். ஆனால் மயங்கிய  நாயை பிடித்து அடைத்து வைக்காமல் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுகின்றனர்.
  • ஆறு மணிநேரம் பெட்டிக்குள் இருந்த கதாநாயகி ஏதோ தூங்கி விழிப்பதை போல எழுந்து நடந்து நடந்து செல்கிறார்.
  • சிபி நன்றாகத்தானே துள்ளி குதித்து நடக்கிறார். பின்னர் ஏன் காலில் கட்டு

மேலே சொன்னவை எல்லாம் சிறு துளிதான். லாஜிக் மீறாமல் எல்லாம் யதார்த்த படம் எடுக்க முடியாதுதான். இருந்தாலும் அதற்காக காட்சிக்கு காட்சியா லாஜிக் இல்லாமல் படம் எடுப்பது. நல்ல சினிமா விமர்சகர்கள் படத்தை பிரித்து எடுத்து விடுவார்கள். மகனுக்காக படம் எடுப்பது என்று முடிவு செய்த சத்தியராஜ் இன்னும்  நன்று அறிமுகமான நடிகர்களை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து இருக்கலாம். படம் முடிந்தபின்  ஹீரோ போல முன்னிறுத்தப்பட்ட அந்த நாயும் மனதில் பதியவில்லை. படமும் கூட.


2 comments:

  1. http://www.muthusiva.in/2014/11/blog-post_23.html

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லையே..இருவரும் ஒரே மாதிரி எழுதி இருக்கிறோம். நானும் நேற்று படத்தை பற்றி மிகவும் விளக்கி எழுதவே நினைத்தேன்..இருந்தாலும் இந்த படத்துக்காக 2 மணி நேரம் செலவளித்ததே போதும். இன்னும் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்று சுறுக்கி விட்டேன்.

      Delete