தொன்னூறுகளில் காதல் தோல்வி என்று ஒரு கான்செப்ட்
இருந்தது. தினத்தந்தியில் அடிக்கடி காதல்
தோல்வியால் வாலிபர் தற்கொலை, காதல் ஜோடி தற்கொலை என்று செய்திகளை பார்க்கலாம். அதில்
பாதிக்கும் மேலான தற்கொலைகளின் காரணம் ஒரு
தலை காதல் என்பது இன்னும் கொடுமை. .இப்படி காதல் தோல்வி அடைந்தவர்களில் சிலர் தேவதாஸ் பாணியில் தாடி வளர்த்து சுற்றுவார்கள். இன்னும் சிலர் மரணதேவனை நாடி செய்திகளில் வருவார்கள். இப்போது அந்த மாதிரியான செய்திகளை பார்ப்பதே
அபூர்வமாகிவிட்டது. இப்போது வரும் செய்திகள் கள்ளக்காதல் காரணமாக நடக்கும் கொலைகளை
பற்றியவை.
இப்படி குறைந்து விட்ட காதல் தற்கொலைகள் எதை காட்டுகின்றன? காதலிப்பவர்கள் குறைந்து
விட்டார்கள் என்பதையா? அப்படி இருக்க முடியாது. காதலர்கள் உண்மையில் அதிகரித்தே
உள்ளனர். காதலர்கள் அதிகரித்த பின்னர் காதல் தற்கொலைகள் குறைந்தது விசித்திரம்தான்.
ஆனால் இது நமது சிந்தனை, பொருளாதாரம்,
சமூகம் என பல விஷயங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை அடைந்து
இருப்பதையே காட்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இளம் ஆணும்,
பெண்ணும் பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தாலே வித்தியாசமாக பார்ப்பார்கள்.
ஆனால் இன்றோ ஆண்கள் பெண்களுடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்று விட்டதால் ஒரே பெண்ணுடன்
வாழ்க்கை முடிந்து விடும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. காதல் ஒரு முறைதான் பூக்கும் என்று நினைக்காமல் அடுத்த காதலை தேடிப் போகும் பக்குவத்தை இந்த தலைமுறையினர் பெற்று
விட்டனர். ஒரு பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அடுத்த பெண்ணை தேடுவது
அவர்களுக்கு கடினமாக இல்லை. ஒருதலை காதலால் வாழ்க்கையை முடித்து கொள்ளுவது பைத்தியக்காரத்தனம் என்பதை அவர்கள் புரிந்து
கொண்டார்கள்.
காதலில் வரும் அடுத்த பிரச்சினை பெற்றோர்
எதிர்ப்பு. யார் தடுத்தாலும் , எதிர்த்தாலும் காவல் நிலையம் சென்று தாங்கள் விரும்பியவர்களையே திருமணம் செய்து
கொள்ளும் துணிச்சல் காதலர்களுக்கு வந்து
விட்டது. அவர்களுக்கு கிடைத்து இருக்கும் பொருளாதார வசதிகளும் இதற்கு துணை
புரிகிறது. பெற்றோர்கள் துணை இல்லாமல்
தங்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்ட பின்னர் அவர்கள் எதை பற்றியும்
கவலைப்படுவது இல்லை. பள்ளி , கல்லூரி வயதில் காதலிப்பவர்கள் கூட தெளிவாக சிந்திக்கின்றனர். தங்கள் நிலை என்ன
என்பதை தெளிவாக உணர்ந்துள்ளனர். தங்களுக்கு
வேலை கிடைக்கும்வரை காதல் வீட்டுக்கு
தெரியாமல் பார்த்து கொண்டு சரியான நேரத்தில்
திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்த மாற்றத்திற்கு இன்னொரு முக்கிய காரணம்
இந்த தலைமுறை பெற்றோர்கள் பொதுவாக அதிக
கெளரவம் பார்க்கும் நடுத்தட்டு
பெற்றோர்கள் இப்போது காதலை எல்லாம் அதிகம் எதிர்ப்பது இல்லை. தங்கள் பிள்ளைகளின்
சந்தோசமே முக்கியம் என்ற ரீதியில்தான் பெரும்பாலானோர் சிந்திக்கின்றனர். ஒரு வேளை
தங்கள் பெண் செட்டில் ஆகாத பையனை காதலித்தாலும் அவனுக்கும் ஒரு வேலை தேடி கொடுத்து
தங்கள் பெண்ணுடன் சேர்த்து வைக்கும் பெற்றோர்கள் எல்லாம் இருக்கின்றனர்.
எந்த காரணத்தை கொண்டு பார்த்தாலும் காதல் தற்கொலைகள்
குறைந்ததன் காரணம் ஆண்கள் பெண்களுடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்று விட்டதாகவே
தோண்டுகிறது. சிலர் உண்மையான காதல் குறைந்து விட்டதுதான் இதற்கு காரணம் என சொல்லலாம். அப்படி சொன்னால் உண்மையான காதல்
என்றால் என்ன? காதல் என்பது முற்றிலும் உடல் சார்ந்த ஹார்மோன்கள் செய்யும் லீலை
என்கிறது அறிவியல். காதல் என்பதை மனம் சார்ந்து புனிதப்படுத்த நினைக்கின்றனர் சிலர்.
உடலில் தொடங்கி மனதில் முடிவது காதல் என்போர் சிலர். ஆனால் காதலை எந்த ஒரு அறிவுப்
பூர்வமான எந்த வரையறைக்குள்ளும் கொண்டு
வந்து விட முடியாது. அப்படி கொண்டு வந்து விட்டால் காதல் தனது கவர்ச்சியை இழந்து
விடும். இப்படி காதலையே வரையறுக்க முடியாதபோது உண்மையான காதலை எப்படி வரையறுப்பது.
ஆக முன்பு உண்மையான காதல் இருந்தது, இப்போது இல்லை என்று சொல்ல முடியாது.
இந்த மாற்றத்தை நம்முடைய திரைப்படங்களில் கூட
அப்பட்டமாக காண முடிகிறது. ‘புன்னகை மன்னன்’ தொடக்க காட்சி போல இப்போது எந்த
படத்திலும் காட்சி இல்லை. காதலை எதிர்க்கும் ‘அலைகள் ஓய்வதில்லை’ பாணி வில்லன்கள்
எந்த படத்திலும் வருவதில்லை. இப்போது
காதல் படம் எடுத்தால் கூட காதலர்களுக்கு இடையே ஈகோ பிரச்சினை வருவதாகவே
காட்டுகின்றனர். இப்படியான மாற்றம் ஆரோக்கியமானதுதான். ஆனால் அடுத்த சில
ஆண்டுகளில் காதல் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியை அடைந்துவிடாமலும் பார்த்து
கொள்ள வேண்டும்.
