முன்பு தமிழகத்தில் காலம் ஒன்று இருந்தது. அந்த காலத்தில் மக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி ஒருவர் சினிமாவில் பேசிய வசனங்களை தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்தனர். மக்கள் மட்டுமில்லை. சில நேரங்களில் சினிமாகாரர்களே இவர் பேசிய வசனங்களை தமது படங்களில் பயன்படுத்தி கொண்டனர். இவ்வளவுக்கும் இவர் ஹீரோவெல்லாம் கிடையாது. யாரென்று உங்களுக்கே தெரிந்திருக்குமே. அவர்தான் வடிவேலு. (அதான் தலைப்புலயே பேரை சொல்லியாச்சே.அப்புறம் ஏன் இந்த சஸ்பெண்சுன்னு கேக்காதீங்க. எதாச்சும் முன்னுரை வேணும்ல)
வடிவேலுவுக்கு கட்டாய ஒய்வு கொடுத்த பின் சினிமா உலகம் சந்தானத்தை சரணடைந்தது. அவர் வடிவேலு போல எல்லா தரப்பினரையும் கவர்ந்தாரா என்று தெரியாது. ஆனாலும் அவர் நகைச்சுவையில் பெரிய அளவில் குறை ஒன்றும் வைக்கவில்லை. இளைஞர்களை குறி வைத்து அவர்கள் ரசிக்குமாறு நகைச்சுவைகளை கொடுத்து வருகிறார். பெரும்பாலும் வசனங்களை வைத்தே நகைச்சுவை செய்வது இவர் பாணி. வடிவேலு அளவுக்கு பாடி லாங்குவேஜை பயன்படுத்தி நகைச்சுவை செய்வது இல்லை. அடுத்தவரை கலாய்த்து செய்யும் நகைச்சுவையே சந்தானத்தின் முக்கிய ஆயுதம்.
இப்படி சந்தானம், வடிவேலுவின் இடத்தை ஓரளவு நிரப்பியது போல தோன்றினாலும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அது போதவில்லையோ என தோன்றுகிறது. காரணம், தமிழ் சினிமாவில் பெருகி வரும் நகைச்சுவை படங்கள். இப்போது வரும் படங்களில் நகைச்சுவை படங்களே அதிகம் உள்ளன. அவையே வெற்றி பெறவும் செய்கின்றன. போதுமான அளவு உணவு கிடைக்காமல் தவிக்கும் ஒருவனுக்கு விருந்துக்கு அழைப்பு வைத்தால் அவன் எவ்வளவு ஆர்வமாக விருந்துக்கு வருவான்? அதே போல் போதுமான நகைச்சுவை கிடைக்காமல் அல்லாடும் மக்கள் நகைச்சுவை படங்களை விரும்புகிறார்களோ என தோன்றுகிறது.
இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், வடிவேலு நிஜ வாழ்வில் ரோசக்காரராக இருந்தாலும் படங்களில் தன்னைத்தானே கேலி செய்து கொண்டு நம்மை சிரிக்க வைத்தார். எனவே இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி சீரியசான தருணங்களையும் நகைச்சுவையாக்கி கொண்டனர்.ஆனால் சந்தானத்தின் கலாய்ப்பு வசனங்களை வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தினால், பேசியவர் சீரியஸ் கண்டிஷனில் மருத்துவமனையில் சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே மக்களின் வாழ்வில் இருந்த நகைச்சுவை குறைந்துவிட்டது.
ஆக வெளியே தெரியாவிட்டாலும் வடிவேலு கொடுத்து வந்த நகைச்சுவை வடை போனதால் மக்கள் தவியாய் தவிக்கின்றனர் என்பதே எனது ஆராய்ச்சி முடிவு. இப்படி நகைச்சுவை குறைபாடு நோயால் தவித்து வரும் மக்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்றால் வடிவேலு மீண்டும் நடிக்க வந்தால்தான் உண்டு. இப்போது வடிவேலு ஒரு படம் நடித்து வருவதாக கேள்விப்பட்டேன். விரைவில் அந்த படம் வெளி வந்து சந்தானத்துக்கும், இவருக்கும் ஆரோக்கியமான போட்டி உருவாகட்டும். போட்டி இருந்தால்தானே நமக்கும் சிறப்பான நகைச்சுவை கிடைக்கும்.
