Showing posts with label செமி பிஃக்சன். Show all posts
Showing posts with label செமி பிஃக்சன். Show all posts

Wednesday, January 21, 2015

இன்டர்ஸ்டெல்லர்- inspired by தமிழ் சினிமா????

கொஞ்ச நாளா நம்ம ஊருல ஒரு பழக்கம் வேகமா பரவிட்டு வருதுக. அதுதாங்க ஒரு தமிழ் படம் வந்ததுன்னா அந்த படத்தை பார்த்து அது எந்த எந்த இங்கிலீஷ் படத்துல இருந்து உருவியிருக்காங்கன்னு ஆராய்ச்சி செஞ்சு நெட்ல போடறது. அப்புறம் வெள்ளைக்காரன்லாம் என்னமா படம் எடுக்குறான். நம்ம ஆளுங்க காப்பி அடிக்கத்தான் லாயக்குன்னு கமெண்ட் போடுறது.

ஆனா பாருங்க, வெள்ளைக்காரன் யோசிக்க முன்னாடியே நம்ம ஆளுங்க விதவிதமா யோசிச்சு படம் எடுத்துகிட்டுதான் இருக்காங்க. என்ன நம்ம ஆளுங்களுக்கு எல்லாமே புரிஞ்சுடும்னு நெனச்சு ரொம்ப விசயத்தை மேலோட்டமா சொல்லிட்டு விட்டுடுறாங்க.

இப்பிடிதாங்க யாரோ கிறிஸ்டோபர் நோலனாம். பெரிய டைரக்டராம். ‘இன்டெர்ஸ்டெல்லர்’ அப்பிடின்னு படம் எடுத்திருக்காராம்; அவர் படம் எடுத்தா யாருக்கும் புரியாதாமாம்; இப்படி எல்லாம் சிலர் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்பிடி என்னப்பா புரியாத மாதிரி படம்; கண்டிப்பா அதை பார்த்தே ஆகணுமேன்னு முடிவு செஞ்சு படத்துக்கும் போய்ட்டேன். படம் ஓடிகிட்டே இருந்தது. எப்படியாச்சும் புரிஞ்சுக்கணும் அப்பிடின்னு ஆர்வமா வச்ச கண்ணு வாங்காம திரையை பார்த்துக்கிட்டே இருந்தேன்.

என் பக்கத்துல உக்காந்து இருந்தவர் படத்தோட ஆரம்பத்துல இருந்தே   சீட்ல உக்கார முடியாம நெளிஞ்சுகிட்டே இருந்தாரு. திடீர்னு என்ன நெனச்சாரோ என்கிட்ட வந்து “ஏன் சார்? ஏதோ வார்ம் ஹோல் அப்பிடின்னு சொல்றானே அப்பிடின்னா என்ன?” அப்பிடின்னார்.

ஆஹா! நம்ம புத்திசாலித்தனத்தை காமிக்க சிக்குனாண்டா ஒருத்தன்னு நெனச்சுக்கிட்டு ஐன்ஸ்டீன் அவதாரம் எடுத்தேன். “அதாவது சார், நாம இப்போ சென்னைல இருக்கோம். நாம இப்போ மதுரை போகணும்னா ஐநூறு கிலோமீட்டர் போகணும். அப்பிடி ஐநூறு கிலோமீட்டர் போகணும்னா நாம பஸ்ல போறோமா? ட்ரைன்ல போறோமா? இல்ல பிளைட்டா? அப்பிடிங்குறதை பொறுத்து ரெண்டு மணி நேரத்துல இருந்து, பனிரெண்டு மணி நேரம் வரை ஆகலாம். அப்பிடின்னா என்ன அர்த்தம்னா மதுரைக்கும் சென்னைக்கும் நடுவுல தூரம் மட்டும் இல்ல. நேரமும் இருக்கு. இது வரைக்கும் சொன்னது புரிஞ்சதா?” அப்படின்னேன். உண்மைல நான் சொன்னது எனக்கே புரியல. அந்த ஆளுக்கும் புரியாதுன்னு நம்பிக்கை. ஆனா அந்த ஆளு வயித்து கடுப்பு வந்த மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு தலையை ஆட்டுனார்.

“ரைட்! இப்போ இந்த வார்ம் ஹோல் என்ன செய்யும்னா நம்ம பிரபஞ்சத்துல இருக்குற ரெண்டு இடத்துக்கு நடுவுல ஒரு ஷார்ட் கட் கிரியேட் செய்யும். நீங்க அந்த ஷார்ட் கட்டை பிடிச்சுட்டா தூரத்தை பத்தி கவலைப்பட தேவை இல்லை. பிரபஞ்சத்தோட ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு நேர விரயம் ஏதும் இல்லாம போயிடலாம். இதுதான் வார்ம் ஹோல்” அப்பிடின்னேன்.

அவர் தலையை ஆட்டிகிட்டே தியேட்டரோட விட்டத்தை பார்த்தார். ச்சே! மனுசன்  என்னமா யோசிக்கிறார் அப்பிடின்னு நெனச்சுகிட்டேன். திடீர்னு சத்தமா சிரிச்சார். கொஞ்ச நேரம் கழிச்சு “இந்த இரண்டாம் உலகம் படத்துல ஆர்யா ஒரு மலைல ஏறி இன்னொரு கிரகத்துக்கு போய் அனுஷ்காவை பார்ப்பாரே. அதுவும் வார்ம் ஹோல்தான?” அப்பிடின்னார்.

அப்போதான் நானும் யோசிச்சேன். நோலன் ‘இரண்டாம் உலகம்’ பார்த்துதான்  ‘இண்டரஸ்டெல்லர்’ எடுத்துட்டாரோன்னு. செல்வராகவனுக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலையே அப்பிடின்னு நான் அதிர்ச்சில உறைஞ்சு போனப்பதான்  பின் சீட்ல இருந்து இன்னொருத்தர் என்ட்ரி ஆனார்.

“என்ன சார் இரண்டாம் உலகம்? ‘பாபா’ படம் பார்த்தீங்களே? தலைவர் கொத்தவால் சாவடில இருந்து இமயமலைக்கு ஷார்ட் கட் எடுப்பார் பாருங்க. பத்து வருஷம் முன்னாடியே தமிழ் சினிமால இதெல்லாம் வந்தாச்சு சார். ஹாலிவுட்காரனுக்கு இதெல்லாம் இப்போதான் புரிஞ்சிருக்கு” அப்பிடின்னார்.


அவங்க பேசுனதும் எனக்கு கிரிஸ்டோபர்  நோலன் மேலேயே சந்தேகம் வந்துடுச்சு. ஒரு வேளை அவர் தமிழ் சினிமா பார்த்துதான் ‘இன்டர்ஸ்டெல்லர்’ எடுத்தாரா? நீங்களும் யோசிச்சு பார்த்து சொல்லுங்களேன். 

Tuesday, December 9, 2014

டாஸ்மாக்கை தேடியவர்!!!

“குடி குடியை கெடுக்கும்” என்று கேள்விபட்டு இருப்பீர்கள். கேள்விப்படாதவர்கள் யாராவது இருந்தால்  மீண்டும் முந்திய வரியை படித்து கேள்விப்பட்டு கொள்ளுங்கள். மது குடிப்பவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில்லை. மது குடிப்பவர்களுக்கு உதவ நினைத்தாலும் பாதிப்புதான். அப்படி உதவி செய்யப்போய் நஷ்டம் அடைந்த ஒரு அப்பாவியின் கதை இது.


அன்று ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை. மதுரைக்கு ட்ராவல்சில் டிக்கெட் எடுத்து வைத்து இருந்தேன். எதிர்பாராத தாமதம் காரணமாக  நான் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்த  நிறுத்தத்துக்கு செல்ல முடியாத நிலை. ட்ராவல்சுக்கு மீண்டும் போன் செய்து பேருந்தை என்னுடைய  வீட்டுக்கு அருகிலேயே  இருக்கும் நிறுத்தத்தில் நிறுத்த  கேட்டு கொண்டேன். முதலில் அதெல்லாம் முடியாது என்று மறுத்தவர்கள் பத்து மணிக்கு பேருந்து வரும். ஒரு சில வினாடி மட்டுமே நிறுத்துவோம், அதற்குள் நிறுத்தத்துக்கு வந்து பேருந்தில் ஏறவில்லை என்றால் கிளம்பிவிடுவோம் என்ற  நிபந்தனையுடன் என் கோரிக்கையை ஏற்று கொண்டனர். நானும் ஒப்பு கொண்டேன்.

பத்து நிமிடங்கள் முன்பே பேருந்து நிறுத்தத்துக்கு கிளம்பி  விட்டேன். பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போதுதான்  அவரை கவனித்தேன். எனக்கு எதிர் திசையில் பரபரப்பாக நடந்து வந்த அந்த நபர்தான் இந்த கதையின் திருப்புமுனை ஏற்படுத்தப் போகிறார் என்று அப்போது உணரவில்லை. அவர்  ஒரு வட இந்தியர். ஜீன்ஸ்,டீ சர்ட் என்று உடை உடுத்தி இருந்தவருக்கு நாற்பது வயது இருக்கும். அவர் நடந்து வந்த வேகத்தில் அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்று உணர முடிந்தது. வேகமாக வந்தவர் என்னை நெருங்கியதும் பிரேக் அடித்து நின்றார்.

இங்க எங்க ஒயின்ஷாப் இருக்குஎன்று கேட்டார் ஆங்கிலத்தில்.

தெரியாது என்று ஒரே வார்த்தையில் முடித்து இருக்கலாம். இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் சரக்கு கிடைக்காமல் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவுவது நம் கடமையல்லவா? அவருக்கு உதவ முடிவு செய்து என்னுடைய நினைவை தூசி தட்டி  யோசித்தேன். எங்கேயெல்லாம் கூட்டம் நிரம்ப நிரம்ப நிற்கும்.

சார்! நீங்க வந்த வழியே போங்க. அங்க ஒரு கடை இருக்கு.

அங்க இருந்துதான் வரேன். அதை மூடிட்டாங்க என்றார். பதட்டம் கூடி இருந்தார்.

9:50 தான ஆகுது. இந்த அரசு ஊழியர்களே  இப்படிதான். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாதவங்க

"ஆமாங்க. சரக்கு இல்லைன்னு காரணம் சொல்றாங்க. நம்புற மாதிரியா இருக்கு?"

“சரி விடுங்க. அப்படியே நேரா போனா  ஒரு கடை வரும். அங்க ட்ரை செஞ்சு பாருங்க.”

“அங்க அந்த கடையே இல்லங்க. மூடிட்டாங்க” குரலில் வருத்தம் காண்பித்தார். நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளை இடம் மாற்றியது எனக்கு  நினைவுக்கு வந்தது.

“சரி. கவலையை விடுங்க. அந்த கடையை பக்கத்துல  இருக்குற தெருல  கொண்டு வச்சு இருப்பாங்க. பார்த்தீங்களா?”

“அதெல்லாம் நேத்தே நல்லா தேடி பார்த்துட்டேன்”

“அரசாங்கத்துக்கு பொறுப்பே இல்லீங்க. இடம் மாத்துனா, எங்கே மாத்துறாங்கன்னு பழைய இடத்துல  ஒரு மேப் வைக்கணும். கஸ்டமர் மேலே அக்கறையே இல்ல. அமெரிக்கால எல்லாம் இப்பிடி செஞ்சா கோர்ட், கேசுன்னு போய் நஷ்டஈடு கேட்கலாம் தெரியுமா ”

அவர் நான் சொன்னதை கேட்கும் மன நிலையில் இல்லை. தன்னுடைய கடிகாரத்தை பார்த்துக் கொண்டார்.

“டென்சன் ஆகாதீங்க சார். இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. நீங்க அந்த பழைய கடைக்கு வலது பக்கம் இருந்த சந்துல போய் பார்த்து இருக்கமாட்டீங்க. சரிதானே”

“ஆமாம். அது சின்ன சந்துன்னு”

“தப்பு செஞ்சுடீங்களே சார். இடது பக்கம் இருந்த ரோட்ல பள்ளிக்கூடம் இருக்கு. அங்க கடையை வச்சு இருக்க மாட்டாங்க அந்த சந்துல போய் பாருங்க”

அவர் சந்தேகத்தோடு இடத்து விட்டு அகன்றார். நான் மணியை பார்த்தேன். 9:55 ஆகி இருந்தது. சற்று முன்னதாகவே கிளம்பியது நல்லதே. இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது பேருந்துக்கு. நிறுத்தத்தை நோக்கி நடந்து காத்திருக்க தொடங்கினேன். 10 மணி ஆகியும் பேருந்து வரவில்லை.

ஒரு பத்து நிமிடம் கடந்தது. பேருந்து வரவில்லை. எதற்கும் போன் செய்து விடலாம் என்று மொபைலை எடுத்தேன். 1 மிஸ்ட் கால் என்று கூறியது. ட்ராபிக் சத்தத்தில் போன் வந்ததே கேட்கவில்லை. அவசரமாக அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டேன்.

“எங்க இருக்கீங்க”

“நாங்க செங்கல்பட்டு தாண்டிட்டோம்.”

“நான் நிக்கிறேன்னு சொன்னேன்லங்க”

“எங்க நின்னீங்க. நாங்க நின்னு பார்த்தோம். போன் செஞ்சும் பார்த்தோம். அதையும் எடுக்கலை”


போன் வந்த நேரத்தை பார்த்தேன். 9:55

“10 மணிக்கு வரேன்னு சொல்லிட்டு முன்னாடியே வந்துட்டீங்க?”

“சார். நீங்க என்ன பஸ் ஸ்டாண்ட்லயா நிக்குறீங்க. நாங்க சொன்ன நேரத்துல வரலன்னு சொல்ல. வழில நிக்குறவரு ஒரு பத்து நிமிஷம் முன்னாடிதான் வரணும்”

தொடர்பை துண்டித்தேன். அவர் சொல்வதும் நியாயம். இனி பேசி பயனில்லை. டிக்கெட் பணம் 600 ரூபாய் காந்தி கணக்குதான். வீட்டுக்கு போய் தூங்க வேண்டியதுதான். அந்த ஆள் பேச்சு குடுக்காமல் இருந்திருந்தால் பேருந்தை தவற விட்டிருக்க மாட்டேன்.

அப்போதுதான் கவனித்தேன். அந்த வட இந்தியர் சந்தோசமாக கையில் புட்டியுடன் வந்து கொண்டிருந்தார். என்னை பார்த்து சிரித்து நன்றி கூறினார். அரசாங்கத்தின் வருவாய்க்கு உதவிய சிறு திருப்தியுடன் ஒரு விரக்தி சிரிப்பில் அந்த நன்றியை ஏற்று கொண்டேன்.

  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...