Showing posts with label செல்வராகவன். Show all posts
Showing posts with label செல்வராகவன். Show all posts

Wednesday, November 13, 2013

நான், செல்வராகவன்

"காதல் கொண்டேன்" படம் பார்த்தபோது செல்வராகவன்  மேல் பெரிதாக அபிப்பிராயம் ஏதும் வரவில்லை.அதற்கு அந்த படம் ஏற்கனவே வெளிவந்த சில படங்களின் சாயலில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கஸ்தூரிராஜா மகன் என்ற அளவில் மட்டுமே அவர் நினைவில் இருந்தார்.அவரின் அடுத்த படத்தை பார்த்து அவரின் ரசிகனாக மாற போகிறேன் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

அதன் பின் சில நாட்கள் கழித்து அவரின் '7G ரெயின்போ காலனி' படம் வெளிவந்தது.  படத்தை பற்றிய விமர்சனங்கள் நேர்மறையாக இருந்ததால் அந்த படத்தை சென்று பார்த்தேன். அந்த படத்தின் இறுதி காட்சி ஏற்படுத்திய பாதிப்பு மறைய இரண்டு நாள் ஆனது. அதுவும் நான் பார்த்தது திரைப்படம்;   உண்மை இல்லை என்று எனக்குள் நானே திரும்ப திரும்ப சொல்லி கொண்டதாலேயே  அத்தனை விரைவாக என்னால் மீள முடிந்தது. இத்தனைக்கும் அந்த படத்தின் கதை படம் பார்க்கும் முன்பே எனக்கு தெரியும். ஒருவேளை கதை தெரியாமல் படம் பார்த்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை.

இப்படி '7G ரெயின்போ காலனி'  செல்வராகவன் மேல் எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி விட்டு இருந்தது. படம் நெடுக கதாபாத்திரங்கள் உடனேயே பயணிக்க வைத்து, திரையில் நடக்கும் காட்சிகளை உண்மை என நினைக்க வைத்து, இறுதியில் நம்மையே படத்தின் கதாபாத்திரங்களாக உணர வைத்த அவரின் திறமை அவரை ஒரு ஜீனியசாக என்னை நினைக்க வைத்தது.  மனித உணர்வுகளை இத்தனை நுணுக்கமாக புரிந்து வைத்து இருக்கும் இவரின் எந்த படத்தையும் தவற விட கூடாது என முடிவு செய்தேன்.


அடுத்து செல்வராகவன் எடுத்த படம் 'புதுப்பேட்டை'. படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே படத்தை மிகவும் எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டேன். படம் வெளிவந்த முதல் நாளே அடித்து பிடித்து டிக்கெட் எடுத்து திரை அரங்கினுள் உற்சாகமாக சென்று அமர்ந்தேன். தனுஷ் ' தொண்டையில ஆப்ரேசன்' என்ற வசனத்தை பேசியதும் உற்சாகம் மேலும் அதிகரித்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாய் வடிய தொடங்கி படம் முடியும்போது சுத்தமாக இல்லாமல் போனது. இருந்தபோதும் 'படம் எப்படி?' என்று கேட்டவர்களிடம் 'நல்லாத்தான் இருக்கு. என்ன கொஞ்சம் மெதுவா போகுது' என்றே பதில் கூறினேன். செல்வராகவன் எங்கேயோ தவற விட்டுவிட்டார். அடுத்த படத்தில் சரி செய்து விடுவார் என எனக்கு நானே சமாதானம் சொல்லி கொண்டேன்.

'புதுப்பேட்டை' படத்தின் விமர்சனங்கள் நல்ல விதமாக இல்லாமல் போனதும் செல்வராகவன் தெலுங்கு படம் எடுக்க போய் விட்டார். இவர் திரும்ப வராமல் போனால் தமிழ் சினிமா ஒரு நல்ல இயக்குனரை இழந்து விடும் என்று எண்ணி வருத்தம் கொண்டேன். நல்ல வேளையாக(?) அவர் தமிழுக்கு திரும்பி விட்டார். 'ஆயிரத்தில் ஒருவன்' என்று ஒரு படம் அறிவித்தார். இதற்கு இடையில் அவர் இயக்கிய தெலுங்கு படம் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. சாதாரண கதை என்றாலும் நன்றாகவே இருந்தது.

அதிக நாட்கள் தயாரிப்பில் இருந்த பின் 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியானது. படம் எனக்கு பிடித்தே இருந்தது. இது வரை பார்க்காத ஒரு களம்; புதுமையான காட்சிகள் என்று சிறப்பாகவே செய்து இருந்தார். ஓரளவு திருப்தியுடன் திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது 'குப்பை மாதிரி படம் எடுத்து இருக்கான்' என்று ஒரு பெண் விமர்சித்ததை கேட்டேன். அந்த பெண்ணின் கருத்து அன்றைக்கு பெரும்பாலான தமிழர்களின் கருத்தோடு ஒத்து போனது. படம் இரண்டாம் பாகம் சரி இல்லை என்று பெரும்பாலோனோர் விமர்சித்து இருந்தனர். படத்தின் கதை பெரிய அளவில் சர்ச்சைகளையும் கிளப்பியது.

அதன் பின் 'ஆயிரத்தில் ஒருவன்- இரண்டாம் பாகம்' எடுக்க செல்வராகவன் கிளம்பியயதாக நினைவு. ஆனால்அந்த முயற்சியை அவர் கை விட்டு விட்டார். ஒரு பேட்டியில் அந்த படம் தற்போதைய சூழலில் ஓடாது என்று எண்ணியதாலேயே கை விட்டு விட்டதாக கூறி இருந்தார். அவர் எண்ணியதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. நிச்சயம் முதல் பாகம் பார்த்தவர்களில் பாதி பேர் இரண்டாம் பாகம் பார்க்க வந்து இருக்க மாட்டார்கள். இருந்தபோதிலும் முதல் பாகம் பாதியில் நின்றதால் அந்த கதையின் முடிவு என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் என்னை விட்டு போகவில்லை. யாரேனும் செல்வராகவனின் நண்பர்கள் இதை படித்தால் அவரிடம் கதையை கேட்டு சொல்லுங்கள்.

'மயக்கம் என்ன' செல்வராகவனின் அடுத்த படம். வழக்கமான செல்வராகவன் படங்களை போலவே இதிலும் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை  இருந்தாலும்   படம் பார்க்கும்போது   எதையோ எடுக்க நினைத்து அவசர கோலத்தில் எதையோ எடுத்தது போல எண்ணம் வருவதை தடுக்க இயலவில்லை. இதில் மிக மெதுவாக செல்லும் காட்சிகள் வேறு. இருந்த போதும் சில காட்சிகளில் வழக்கமான செல்வராகவன் டச் காண கிடைத்தது. இருந்த போதிலும் பழைய '7G' செல்வராகனை இனி காணவே முடியாதோ என எனக்குள் சந்தேகம் வர தொடங்கியது இந்த படத்திற்கு பின்தான்.

இப்போது 'இரண்டாம் உலகம்' அடுத்த வாரம் வெளியாக போகிறது. பாடல்கள், இரண்டு டீசர்கள் வெளியாகி விட்டன. டீசர்களை பார்த்தால் ஹாலிவுட் படம் போல் முயன்று இருப்பார் என தோன்றுகிறது. அனிருதின் பின்னணி இசையில் இரண்டாவதாக வந்த டீசர் முதல் டீசரை விட சிறப்பாக இருக்கிறது. பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன. '7G' யில் நான் பார்த்து வியந்த செல்வராகவன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு ஜீனியஸ் என்று நிரூபிப்பார் என நம்புகிறேன். பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Friday, August 23, 2013

ஒன்றை இரண்டாக்கி, இரண்டாவதை '3' ஆக தந்த கஸ்தூரிராஜா குடும்பம்

மிழில் ஒரு ஆண்டுக்கு எத்தனையோ படங்கள் வருகின்றன. அவ்வளவு படத்துக்கும் கதை எப்படி பிடிக்கிறார்கள் என்று எப்போதேனும் யோசித்ததுண்டா? 'தலைவா' மாதிரியான படங்களை விட்டு விடவும். ரீ மேக் படங்களையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம். இவை தவிர்த்து வரும் படங்களுக்கு யார் மூல கதை எழுதுகிறார்கள்? திரைக்கதை எழுதுவது யார்? டைட்டிலில் போடுவது போல உண்மையிலேயே படத்தின் டைரக்டர்தான் கதை எழுதுகிறாரா? இல்லை என்ற பதில் நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் இங்கே நான் கூறப்போகும் விஷயம் என்னை மிக ஆச்சரியபடுத்திய விஷயம். 

பொதுவாக ஆங்கில படங்கள் நான் அவ்வளவாக பார்ப்பதில்லை. பார்த்த சில படங்களும் ஸ்பைடர் மேன், ஜாக்கிசான், அனகோண்டா வகையறா டப் செய்யப்பட்ட படங்கள். சமீபத்தில் ஒரு பொழுது போகாத தருணத்தில் ஒரு ஆங்கில படம் பார்க்க நேர்ந்தது. படத்தின் பெயர் 'A  beautiful mind'. சிறந்த படம் என்று சிலர் பரிந்துரைத்ததால் அந்த படத்தை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை அந்த படத்தை ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போலவே தோன்றியது. சிறிது சிரமப்பட்டு யோசித்ததும் சில தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகள் அந்த படத்திலிருந்து உருவப்பட்டிருப்பது புரிந்தது.

'A  beautiful mind' படத்தின் கதை இதுதான். படத்தின் கதாநாயகன் ஒரு கணித மேதை. படிக்கும் காலத்திலிருந்தே அதிகம் தனிமை விரும்புபவனாகவும், பெரும்பாலான நேரத்தை கணித சிக்கல்களை தீர்ப்பதிலேயும் செலவிடுகிறான். படிப்பிற்கு பின் கணித பேராசிரியராக பணியில் சேர்கிறான். தன்னுடைய மாணவியை காதலித்து மணந்தும் கொள்கிறான். திருமணத்திற்கு பின் அவனுடைய மனைவி அவன் மன நோயால் பாதிக்கபட்டிருப்பதை கண்டு பிடிக்கிறாள். அவனுடைய மனம் சில உருவங்களையும் சம்பவங்களையும் கற்பனை செய்து கொண்டு, அவற்றை உண்மை என்று நம்பி வருவது அவளுக்கு தெரிய வருகிறது. இந்த மனநிலை பாதிப்பிலிருந்து எப்படி கதாநாயகன் மீண்டு வந்து சாதிக்கிறான்? அவனுடைய மனைவி அவனுக்கு எந்த அளவு ஆறுதல் அளித்து அவனை மிக பெரிய சாதனைகள் செய்ய வைக்கிறாள் என்பது மீதி கதை.

இந்த படத்தின்  கதையை படித்ததும் உங்களுக்கு இரண்டு தமிழ் படங்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஒன்று மயக்கம் என்ன, மற்றொன்று 3. 'மயக்கம் என்ன' படத்திற்கு கதை எழுதிய செல்வராகவன் மனைவியும், 3 படத்திற்கு கதை எழுதிய ஐஸ்வர்யா தனுஷும் தங்கள் வீட்டில் சேர்ந்து அமர்ந்து 'A  beautiful mind' படம் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒரே படத்தை இரண்டாக்கி தனுஷை வைத்து எடுத்து முடித்து விட்டனர்.


 'மயக்கம் என்ன' பல இடங்களில் ஆங்கில படத்தோடு ஒத்து போகிறது. அந்த படத்தின் இடைவேளைக்கு பின் வரும் கதை அப்படியே ஆங்கில படத்தின் தழுவல். அதிலும் படத்தின் இறுதி காட்சி அப்படியே ஆங்கில படத்தின் அட்ட காப்பி. ஆங்கில படத்துக்கும், தமிழ் படத்துக்கும் இருக்கும் ஒரு  வித்தியாசம்   ஆங்கில பட நாயகன் மனநிலை பாதிப்பு அடைந்த  பின்னும் மென்மையானவனாக  இருக்கிறான். அவன் கண்களுக்கு தெரியும் உருவங்கள் மட்டுமே அவனின் பிரச்சினை. ஆனால் தனுஷோ மனநிலை பாதித்தவுடன் பார்ப்பவர்களை எல்லாம் அடித்து துவைக்கிறார்.


தனது அக்கா தன்னுடைய கதையில் பயன்படுத்த தவறிய மனதில் தோன்றும் பிம்பங்கள் (hallucination) விஷயத்தை தன்னுடைய கதையில் பயன்படுத்திக்கொண்டு விட்டார் ஐஸ்வர்யா. இந்த கதைக்கும் ஒரிஜினல் ஆங்கில படத்துக்கும் உள்ள வித்தியாசம் தனுஷின் பிரச்சினை கடைசி வரை அவர் மனைவிக்கு தெரியாது. தனுஷ் தானாகவே இந்த மனநோயில் இருந்து விடுபட போராடி முடியாமல் கடைசியில் தற்கொலையும் செய்து கொள்கிறார். 'A  beautiful mind' படத்தின் பெரும்பகுதியை 'மயக்கம் என்ன' படம் எடுத்து  கொண்டதால் ஐஸ்வர்யா தன்னுடைய கதையில் ஏற்படுத்தி கொண்ட மாற்றம் இது.

பெரும்பாலான தமிழ் படங்கள், ஆங்கில படத்தில் இருந்து காப்பி அடிக்கப்படுபவை என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரே படத்தை இரண்டாக பிரித்து எடுத்து, இரண்டு படத்திலும் ஒரே நடிகரை நடிக்க வைத்து, அந்த படங்களையும் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிடுவார்கள் என்ற விஷயம் எல்லாம் இதுவரை நான் அறியாதது மட்டும் இல்லை; கற்பனை செய்தும் பார்க்காதது. எனக்கு மிகவும்  பிடித்த இயக்குனர் செல்வராகவன்தான் இதில் ஒரு படத்தின் இயக்குனர் என்பது எனக்கு இன்னும் அதிர்ச்சியான விஷயம். எது எப்படியோ ஒரு கதையை தங்கள் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு இல்லாமல் பாக பிரிவினை செய்து கொண்டு விட்டனர்.

தமிழ்நாட்டிலேயே கூறாத கதைகள் நிறைய இருக்கும்போது ஏன் இந்த அளவுக்கு இறங்கி காப்பி அடிக்கிறார்கள் என்பது புரியவில்லை. தமிழில் சிறந்த படங்கள் உருவாக வேண்டுமென்றால் இயக்குனர்கள் படம் இயக்குவதை மட்டும் பார்த்து கொண்டு கதை, வசனம் போன்ற சமாசாரங்களை எழுத்தாளர்களிடம் விட்டு விடுவதே சிறந்த வழி. அந்த மாற்றம் வரும் வரை ஆங்கில படங்கள் பார்க்காமல் இருப்பதே நாம்  தமிழ் படங்களை ரசிப்பதற்கு  ஒரே வழி.

பின்குறிப்பு: 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய் தனது வகுப்பறைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருப்பவர்களை சிறிது நேரம் சத்தம் எழுப்பாமல்  இருக்க சொல்வது போல ஒரு காட்சி வரும்.  இது  'A  beautiful mind' படத்தின் கதாநாயகி அறிமுக காட்சியின் காப்பி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...