Showing posts with label ஜாதி. Show all posts
Showing posts with label ஜாதி. Show all posts

Friday, August 30, 2013

ஜாதிப் பேய்கள்

பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் தெளிவாக கேட்டது . இந்த வழியில் நடந்து வந்தது தவறோ என்று தோன்றியது. துணைக்கு யாரும் இல்லாமல் சுடுகாட்டு வழியில் எவனாவது வருவானா? பகல்தானே என்ற அசட்டு துணிச்சலில் இப்படி வந்து சிக்கி கொண்டேனே.நாம் பயப்பட்டால் பேய்கள் நம்மை எளிதில் தாக்கி விடும் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. சற்று துணிவை வரவழைத்து கொண்டு திரும்பி பார்க்காமலேயே குரல் கொடுத்தேன் 

" நீ யாரு? நீ ஏன் என் பின்னாடியே வர்ற?"

"நான் உங்களோட நண்பன்தான். பயப்படாம திரும்பி என்னோட பேசுங்க". பதில் கூறியது ஒரு ஆண் குரல். திரும்பியவுடன் என்னை அடிக்க இந்த பேய் திட்டம் தீட்டுகிறதோ.

"நீ மனுசனா?"

"இல்லை. ஆனா மனுசங்களை விட நாங்க ரொம்ப நல்லவங்க. எனக்கு உதவுங்க ப்ளீஸ்"

"என்ன நான் உதவணுமா? உனக்கு என்ன பிரச்சனை?"

"காதல்தான் என்னோட பிரச்சனை. எங்க காதலை இந்த சுடுகாட்டுல இருக்கிற யாரும் ஏத்துகிற மாட்டேங்குறாங்க" என்றது அது. அட பாவமே. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டவன் போலும். நிச்சயம் மூர்க்கமான பேயாக இருப்பான். நிச்சயம் திரும்ப கூடாது.

"இங்க பாரு. நீ இறந்ததும் உன்னோட காதல் முடிஞ்சு போச்சு. உன்னோட காதலி இப்ப வேற யாரையோ கல்யாணம் செஞ்சுகிட்டு சந்தோசமா இருப்பா. இப்போ நான் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. என்னை விட்டுடு."

"இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. தயவு செய்து திரும்பி பாருங்க.  உங்களுக்கு எல்லாமே புரியும்" இப்போது அது கெஞ்சும் குரலில் கேட்டது. பகலில் பேய்களுக்கு சக்தி இல்லை என்று யாரோ சொல்லி கேட்டிருந்தேன். அந்த நம்பிக்கையில் ஆனது ஆகட்டும்   என்று திரும்பினேன். அங்கே வெள்ளை உடையில் ஒரு இளம் வயது ஆணும், பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள். பெண் தனது கூந்தலை முகத்தின் முன் போட்டு முகத்தை மறைத்து வைத்திருந்தாள். எனக்கு இப்போது பயம் சற்று  குறைந்து இருந்தது.

"யாருப்பா நீங்க" சற்று குழைவாகவே கேட்டேன்

"தயவு செஞ்சு எங்களுக்கு உதவுங்க. நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம். நாங்க ரெண்டு பேரும் வேற வேற ஜாதிங்கறதால இந்த சுடுகாட்டுல்ல எங்க காதலை ஒத்துக்க மாட்டேங்குறாங்க."

"என்னது. செத்த அப்புறமுமா ஜாதி பாக்குறாங்க?"

"சாவு மனுசங்களுக்கு மட்டும்தான். ஜாதி எப்பவுமே சாகுறது இல்ல "

"சரி இதுல நான் எப்படி உங்களுக்கு உதவி பண்ண முடியும்"

" பகல்ல சுடுகாடுல்ல எல்லா பேயும் தூங்கிகிட்டு இருக்கும்போது நாங்க எங்க கல்லறையை விட்டு ஓடி வந்துட்டோம். ஆனா இந்த நேரத்துல்ல எங்களால இந்த சுடுகாட்டு எல்லையை தாண்டி போக முடியாது.  என்ன செய்றதுன்னு நாங்க முழிச்சுகிட்டு இருக்கும்போது நீங்க வந்தீங்க. நீங்க எங்களை கூட்டிகிட்டு பக்கத்துக்கு ஊரு சுடுகாட்ல விட்டுட்டா நாங்க பிழைச்சுக்குவோம். ப்ளீஸ்"

எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. யோசித்தேன். இவர்களை நம்பலாமா? என்  இரத்தம்  குடிக்க இது தீட்டும் சதி திட்டமா? இருக்காது. என்னை ஏதாவது செய்வதாக இருந்தால் இது நேரடியாகவே செய்து விடலாமே? நான் அந்த ஆண் பேயின் கண்களை பார்த்தேன். பாவம்! பேய் முழி முழித்து கொண்டிருந்தான்.

"சரி நான் உங்களுக்கு உதவி செய்றேன். உங்களை நான் எப்படி வெளிய கூட்டிகிட்டு போறது"

"அங்க ஒரு பாட்டில் இருக்கு பாருங்க. நாங்க ஆவி வடிவம் எடுத்து அதுக்குள்ள நாங்க போய்க்கிறோம். எங்களை அப்பிடியே நீங்க தூக்கிகிட்டு கொண்டு போய்டுங்க"

"சரி பக்கத்துக்கு ஊரு சுடுகாடுல்ல உங்களுக்கு கல்லறை இருக்காதே. எங்க தங்குவீங்க."

"அங்கே ஏதாவது ஒரு மர பொந்துல வச்சாவது இவளை காப்பாத்துவேன் சார்". அவன் சொன்ன பதிலில் சற்று உருகிவிட்டேன்.

"சரி சீக்கிரம் உள்ள போங்க"

அவர்கள் உள்ளே போய் விட்டார்கள். எடுத்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். சுடுகாட்டை விட்டு சற்று தூரம் வெளியே வந்த பின்தான் எனக்கு உரைத்தது.

"ரெண்டு  பேரும் வெளியே வாங்க". மூடியை திறந்து விட்டு அவற்றை அழைத்தேன். அவை வெளியே வந்தன.

"என்ன ஆச்சு"

"ரெண்டு பேரும் ஒரே பாட்டிலுக்குள்ள போய்டீங்க. எதாச்சும் தப்பு தண்டா செஞ்சுடீங்கன்னா?" நான் சொன்னவுடன் அந்த பெண் பேய் வெக்கப்பட்டது அவளின் அடர்ந்த கூந்தலை தாண்டியும் வெளியே தெரிந்தது.

"நீ ஏன் முடியை முன்னாடி போட்டு இருக்க?" அந்த பெண் பேயிடம் கேட்டேன்.

"சுடுகாட்ல இதான் லேட்டஸ்ட் ஃபேசன்." 

"சரி! நீங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து கல்லறையா?"

"அது எப்பிடி? நாங்க வேற வேற ஜாதி ஆச்சே. அவ  சுடுகாட்டு வடக்கு பக்கம். நான் தெற்கு பக்கம். நான் தினமும்  இவ ஏரியா பக்கம் போய் இவளை டாவடிப்பேன். ஆரம்பத்துல்ல ஓவரா அலட்டிகிட்டா " அவன் இதை சொன்னதும் அந்த பெண் பேய் அவனை குத்துவது போல் பாசாங்கு செய்தாள். சுடுகாட்டு எல்லையை தாண்டியதும் இருவரும் உற்சாக மூடுக்கு வந்து விட்டார்கள் போலும். அது சரி. அவன் சுடுகாட்டு தெற்கு பக்கம் அவன் ஏரியா என்றானே. அப்படியானால் இவன் அந்த ஜாதியா?அதிர்ச்சியாக இருந்தது.

"ஒன்னு கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க என்ன ஜாதி"

"நான் *********, அவ ********" 

"சரி நேரமாச்சு. நீ இந்த பாட்டிலுக்குள்ள போ. அவ இந்த பாட்டிலுக்குள்ள போகட்டும்." அவர்கள் உள்ளே போனதும் இறுக்கமாக பாட்டில்களை மூடி திரும்பி சுடுகாட்டை நடக்க ஆரம்பித்தேன்

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

Wednesday, July 31, 2013

பிரியுமா தமிழகம்?

நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தெலுங்கானா பிறக்கப் போகிறது. இதை முன்னுதாரணமாக கொண்டு இன்னும் பல மாநில பிரிப்பு கோரிக்கைகள் வலுவடையலாம். தமிழகத்தை பிரிக்க கோரும் கோரிக்கைகள் மீண்டும் ஒலிக்க தொடங்கலாம். அப்படி தமிழகத்தை பிரிப்பது சாத்தியமா? அப்படி தமிழகத்தை பிரித்தால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன என்று என் சிற்றறிவுக்கு எட்டியவை பற்றி கூற முயல்கிறேன்.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் 'செந்தமிழ் நாடு' என்னும் சிறிய நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. தமிழகத்தை வடக்கு, தெற்கு என்ற அடிப்படையில் பிரித்து 'செந்தமிழ் நாடு' என்னும் பெயரில் ஒரு புது மாநிலம் உருவாக்குவது பற்றி மிக அழகாக விளக்கியிருப்பார்   ஆசிரியர்.மொழிவாரி மாநிலங்கள் பிரித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது இருந்ததை விட மக்கள் தொகை மிகவும் பெருகிவிட்ட நிலையில் நிர்வாக வசதிக்காக மதுரையை தலை நகராக கொண்டு ஒரு புதிய மாநிலத்தை பிரிப்பது  தென் தமிழக மக்களுக்கு மிகவும் நலம் தரும் என்பது அந்த நூலாசிரியரின் வாதமாக இருக்கும்.


அந்த புத்தகத்தை படித்த பின் தமிழகத்தை பிரிப்பது சென்னைக்கும் நல்லது; தென் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்று எண்ணி கொண்டிருந்தேன்.  பாமகவின் மாநில பிரிப்பு கோரிக்கை பற்றி அறிந்த பின்னரே தமிழகத்தை பிரிப்பதில் இருந்த மிகப்  பெரிய . சிக்கல் எனக்கு உரைத்தது. ஒரு வேளை அந்த நூலில் கூறியபடி தமிழ்நாடு இரண்டாகவோ, அல்லது மூன்றாகவோ பிரிக்கப்பட்டால் ஜாதி அரசியல் முக்கியத்துவம் பெறும். வட பகுதி மாநிலத்தில் வன்னியர்களும், தென் பகுதி மாநிலத்தில் தேவர், நாடார்  சமூகத்தவரும் ஆட்சியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இன்னும் சொல்ல போனால் ஜாதி கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது எந்த வகையிலும் நாட்டுக்கு நல்லதல்ல.

ஜாதி அரசியலை தாண்டி கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் தமிழன் சந்திக்கும் பிரச்சினைகள். இன்றைய சூழலில் பல பிரச்சனைகளுக்காக தமிழகம் மத்திய அரசுடனோ, அண்டை மாநிலங்களுடனோ அடிக்கடி போராட வேண்டியது உள்ளது. ஒரு வேளை தமிழகம் பிரிக்கப்பட்டால் அது தமிழனின் குரலை மேலும் பலவீனமாக்கும்.  தமிழ் பேசும் மாநிலங்களே அரசியல் காரணங்களால் தூண்டப்பட்டு தங்களுக்குள்ளேயே  மோதிக்  கொள்ளவும் வாய்ப்புள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால் அது ஒட்டு மொத்த தமிழர்களையும் பாதிக்கும்.

எது எப்படியோ இன்றைய தேதிக்கு தமிழகத்தை பிரிக்க சொல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சில ஜாதி கட்சிகள் மட்டுமே இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன. குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காண திமுகவும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கக்  கூடும். இருப்பினும் சாதாரண மக்களின்  ஆதரவு இந்த கோரிக்கைக்கு கிடைப்பது மிக கடினம்.தெலுங்கானா போல ஒரு சாதாரண குடிமகன் இந்த கோரிக்கைக்காக தெருவில் இறங்கி போராட வாய்ப்பே இல்லை. எனவே மத்திய அரசே பிரித்தாலொழிய தமிழகம் பிரிய சாத்தியம் மிக குறைவு. எனவே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ள தேவை இல்லை. ஆனாலும் தென் தமிழகத்தை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருப்பது உண்மையே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...