Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, July 31, 2013

பிரியுமா தமிழகம்?

நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தெலுங்கானா பிறக்கப் போகிறது. இதை முன்னுதாரணமாக கொண்டு இன்னும் பல மாநில பிரிப்பு கோரிக்கைகள் வலுவடையலாம். தமிழகத்தை பிரிக்க கோரும் கோரிக்கைகள் மீண்டும் ஒலிக்க தொடங்கலாம். அப்படி தமிழகத்தை பிரிப்பது சாத்தியமா? அப்படி தமிழகத்தை பிரித்தால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன என்று என் சிற்றறிவுக்கு எட்டியவை பற்றி கூற முயல்கிறேன்.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் 'செந்தமிழ் நாடு' என்னும் சிறிய நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. தமிழகத்தை வடக்கு, தெற்கு என்ற அடிப்படையில் பிரித்து 'செந்தமிழ் நாடு' என்னும் பெயரில் ஒரு புது மாநிலம் உருவாக்குவது பற்றி மிக அழகாக விளக்கியிருப்பார்   ஆசிரியர்.மொழிவாரி மாநிலங்கள் பிரித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது இருந்ததை விட மக்கள் தொகை மிகவும் பெருகிவிட்ட நிலையில் நிர்வாக வசதிக்காக மதுரையை தலை நகராக கொண்டு ஒரு புதிய மாநிலத்தை பிரிப்பது  தென் தமிழக மக்களுக்கு மிகவும் நலம் தரும் என்பது அந்த நூலாசிரியரின் வாதமாக இருக்கும்.


அந்த புத்தகத்தை படித்த பின் தமிழகத்தை பிரிப்பது சென்னைக்கும் நல்லது; தென் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்று எண்ணி கொண்டிருந்தேன்.  பாமகவின் மாநில பிரிப்பு கோரிக்கை பற்றி அறிந்த பின்னரே தமிழகத்தை பிரிப்பதில் இருந்த மிகப்  பெரிய . சிக்கல் எனக்கு உரைத்தது. ஒரு வேளை அந்த நூலில் கூறியபடி தமிழ்நாடு இரண்டாகவோ, அல்லது மூன்றாகவோ பிரிக்கப்பட்டால் ஜாதி அரசியல் முக்கியத்துவம் பெறும். வட பகுதி மாநிலத்தில் வன்னியர்களும், தென் பகுதி மாநிலத்தில் தேவர், நாடார்  சமூகத்தவரும் ஆட்சியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இன்னும் சொல்ல போனால் ஜாதி கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது எந்த வகையிலும் நாட்டுக்கு நல்லதல்ல.

ஜாதி அரசியலை தாண்டி கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் தமிழன் சந்திக்கும் பிரச்சினைகள். இன்றைய சூழலில் பல பிரச்சனைகளுக்காக தமிழகம் மத்திய அரசுடனோ, அண்டை மாநிலங்களுடனோ அடிக்கடி போராட வேண்டியது உள்ளது. ஒரு வேளை தமிழகம் பிரிக்கப்பட்டால் அது தமிழனின் குரலை மேலும் பலவீனமாக்கும்.  தமிழ் பேசும் மாநிலங்களே அரசியல் காரணங்களால் தூண்டப்பட்டு தங்களுக்குள்ளேயே  மோதிக்  கொள்ளவும் வாய்ப்புள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால் அது ஒட்டு மொத்த தமிழர்களையும் பாதிக்கும்.

எது எப்படியோ இன்றைய தேதிக்கு தமிழகத்தை பிரிக்க சொல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சில ஜாதி கட்சிகள் மட்டுமே இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன. குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காண திமுகவும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கக்  கூடும். இருப்பினும் சாதாரண மக்களின்  ஆதரவு இந்த கோரிக்கைக்கு கிடைப்பது மிக கடினம்.தெலுங்கானா போல ஒரு சாதாரண குடிமகன் இந்த கோரிக்கைக்காக தெருவில் இறங்கி போராட வாய்ப்பே இல்லை. எனவே மத்திய அரசே பிரித்தாலொழிய தமிழகம் பிரிய சாத்தியம் மிக குறைவு. எனவே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ள தேவை இல்லை. ஆனாலும் தென் தமிழகத்தை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருப்பது உண்மையே.

Saturday, June 15, 2013

ஹிந்தியர்களின் மன நிலையும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டமும்

"வேற்றுமையில் ஒற்றுமை  காணும் நாடு பாரதம்" என்று பள்ளியில் நமக்கு  கொடுத்து இருப்பார்கள். நானும் பல ஆண்டுகள் வரை நம்பி கொண்டிருந்தேன். ஆனால் சமீப காலங்களில் சில வட இந்தியர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததும் என் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இந்த  கட்டுரையில் நான் வட இந்தியர்கள் என்று குறிப்பிடுவது பெரும்பாலும் டெல்லி, உபி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் பல வட இந்தியர்கள் தங்கள் பணி  நிமித்தம் வந்து தங்கியுள்ளனர். என்னை சலனப்படுத்துவது அவர்களின் மன நிலை. அவர்களின் கருத்து என்னவென்றால் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டியது கட்டாயமாம். தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் இருப்பது பெரிய பிழையாம். வந்து வாழும் இடத்தின் மொழியை அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சி கூட செய்ய மாட்டார்களாம். ஆனால் தன் வாழ்நாளில் தமிழ்நாட்டை தாண்டி எங்கேயும் செல்ல வாய்ப்பில்லாத நம் தமிழ் மக்களும் ஹிந்தி படித்து அவர்களுடன் ஹிந்தியிலேயே போலோ செய்ய வேண்டுமாம்.

தமிழ்நாட்டில் ஹிந்தி தெரிந்தவர்களும் உள்ளனர்; உங்கள் மொழியை தேவைப்படும்போது நாங்கள்  கற்று கொள்கிறோம். அனைத்து தமிழர்களும் ஹிந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கேட்பதில்லை. ஹிந்தி கற்று கொள்ளாமல் நாம் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி உள்ளோமாம். இது ஒரு சிலரின் கருத்தாக இருந்தால் கூட விட்டு விடலாம். ஆனால் நான் சந்திக்கும் பெரும்பாலான ஹிந்தியர்கள் இதே எண்ணத்தை  கொண்டவர்களாகவே இருக்கின்றனர். 


இவ்வளவுக்கும்  வட இந்தியர் ஒருவர் தமிழ் நாட்டில் மொழி தெரியாமல் தடுமாறினால், தமிழர்கள் அவர்களுக்கு பொறுமையாக உதவவே செய்கின்றனர். இருப்பினும் நம் மேல் வட  இந்தியர்கள்  ஆளுமை செலுத்தவே முயல்கின்றனர். அதுவே அவர்களை நம்மை ஹிந்தி கற்று கொள்ள சொல்ல வைக்கிறது. அவர்கள் வைக்கும் இன்னொரு வாதம் ஹிந்தி தேசிய மொழி. எனவே அனைவரும் ஹிந்தி தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பது.

சுதந்திரம் அடைந்த பின் ஒரு முறை பாராளுமன்றத்தில் ஒரு முறை தேசிய மொழியாக எதை அறிவிப்பது என்று விவாதம் நடந்ததாம். இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழியாததால் ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றாராம் ஒரு வட இந்திய பிரமுகர். உடனே எழுந்த ஒரு தமிழர் அப்படியானால் இந்தியாவில் அதிகமாக இருக்கும் காக்கையை தேசிய பறவையாக அறிவிக்கலாமே? ஏன் மயிலை அறிவிக்க வேண்டும்? என கேட்டாராம். அதன் பின் தேசிய மொழியாக ஹிந்தியை அறிவிக்கும் திட்டத்தை அரசு கை விட்டதாம். இந்த சம்பவத்தை வட இந்தியர்கள் ஒருவரும் அறிந்திருக்க மாட்டார்கள் போலும்.

முன்பு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் எல்லாம் இல்லை. வற்புறுத்தி ஹிந்தி கற்று கொள்ள செய்வதை எதிர்த்த நியாயமான போராட்டம் என்ற அளவிலேயே அதை புரிந்து வைத்து கொண்டிருந்தேன்.  ஆனால் இப்போது ஹிந்தியர்களின் பேச்சுகளை கேட்கும்போது அந்த போராட்டத்தின் மேல் இருந்த மரியாதை அதிகரிக்கிறது. அந்த போராட்டம் மொழி திணிப்பை  எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்பதை விட, வட இந்தியர்களின் குணம் கண்டு எரிச்சல் அடைந்து நடந்த போராட்டமாகவே தோணுகிறது. அவர்களின்  வசதிக்காக நாம்  ஹிந்தி  மொழியை கற்று கொள்ள ஆரம்பித்து இருந்தால் அதை விட  அடிமைத்தனமான செயல் எதுவும் இருந்திருக்க முடியாது. 

நல்ல வேளையாக ராஜபக்சே போன்ற தலைவர்கள் அப்போது ஆட்சியில்  இல்லை. போராட்டத்தின் நியாயத்தை புரிந்து கொண்டனர். அது போன்ற மன பக்குவத்தை எல்லா வட இந்தியர்களும் எப்போது பெற போகின்றனர் என தெரியவில்லை. எது எப்படியோ, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மிக தாமதமாக ஒரு சல்யூட்.

 குறிப்பு: எப்போதோ படித்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட்டுள்ளேன். பாராளுமன்றத்தில் பேசிய அந்த தமிழ் பிரமுகரின் பெயர் நினைவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...