Showing posts with label சமூகம் கதை. Show all posts
Showing posts with label சமூகம் கதை. Show all posts

Thursday, October 17, 2013

ஒரு கார்ப்பரேட் நீதி கதை

ரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை  கொண்டு   சென்று  பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு  நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன்  வண்டியில்  சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.

 புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான். கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம்.  இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம்  சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால்  குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை.  சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த  வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.

வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது. அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி:  நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.



Wednesday, October 9, 2013

அவசரமாய் சில காதல்கள்

ப்படி இரவு முழுக்க ஆஃபீசில் அமர வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய தளம் முழுவதும் காலியாக இருந்தது. இன்று இரவு யாராவது இருக்க வேண்டியது இருக்கும் என்று எங்கள் டீம் லீட் சொன்னதுதான் தாமதம். சுதா முதல் ஆளாக என்னை நோக்கி ஓடி வந்தாள்.

"ஜே! உனக்கே தெரியும் எனக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கு. நான் எப்படி நைட் முழுக்க இங்க ஸ்டே பண்ண முடியும்?"

"ஆமா. நீங்க இருக்க முடியாதுதான்" என்றேன். வேறு என்ன சொல்ல முடியும். ஆனால் அவள் ஏன் அதை என்னிடம் சொன்னாள் என்று எனக்கு சில நிமிடங்கள் பின்புதான் புரிந்தது. இப்போது என்னை நோக்கி வந்தவன் ஆண்டனி.

"ஜே! எனக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாள்தான் ஆகுது. அதுக்குள்ள ராத்திரி வீட்டுக்கு போகாட்டி பொண்டாட்டி சாமி ஆடிடுவா." என்றான்.

"சரி. நீ வீட்ல போய் வேலை பாரு" என்று பதில் சொன்னதற்கு முறைத்து விட்டு பின்னர் நன்றி சொன்னான். ஆக இன்று இரவு பலி கடா ஆக போவது நான்தான் என்பது உறுதி ஆகிவிட்டது.

உண்மையில் இப்போது எனக்கு   செய்ய வேண்டிய வேலை என்று ஏதும் பெரிதாக இல்லை. நாங்கள் உருவாக்கிய மென்பொருளை அமெரிக்காக்காரன் இப்போது சோதித்து பார்க்க போகிறான். ஏதேனும் பிரச்சினை என்றால் மெயில் அனுப்புவான். அப்படி அவன் ஏதேனும் அனுப்பினால் அந்த பிரச்சினையை சரி  செய்து தர வேண்டும். அவ்வளவுதான். இப்படி வேலை ஏதும் இல்லாமலே தனிமையில் அமர்ந்திருப்பது மனதை மேலும் சோர்வாக்கியது. இணையத்திலேயே இரவு முழுவதும் கழிக்க வேண்டுமே என்ற வெறுப்புடன் அமர்ந்திருந்த போதுதான் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.

மெதுவாக தலையை தூக்கி பார்த்தேன். ஒட்டு மொத்த மன சோர்வும் ஒரு நொடியில் காணமல் போனது. அங்கே வந்து கொண்டிருந்தவள் ஒரு பெண் என்று சொன்னால் அது மிக சாதாரண வார்த்தை. வந்து கொண்டிருந்தவள் ஒரு பேரழகி. கட்டான உடல். உடல் அமைப்பை எடுத்து சொல்லும் உடை. பளிச்சென்ற களையான முகம். அவள் நடந்து வந்த விதம் 'F' டிவியில் பார்த்த மாடல்களை நியாபகப்படுத்தியது. இதுவரை அவளை ஆபீசில் பார்த்ததே இல்லை. நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவள் போலும். வந்தவள் எனக்கு இரண்டு நான்கு சீட் தள்ளி அமர்ந்து தன்னுடைய கணினியை ஆன் செய்தாள்.

திருட்டுத்தனமாக பார்வையை திருப்பி அவளையே பார்க்க தொடங்கினேன். இறைவன் நமக்கு கஷ்டங்களை அளிப்பது போல வாய்ப்பையே அளிக்கிறான் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.  இன்று இரவுக்குள் எப்படியும் இவளிடம் பேசி இவள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும்  விட வேண்டும். நானும் எத்தனை ஞாயிற்றுகிழமைகளைதான்  தூங்கியே கழிப்பது? எனக்கும் ஒரு அழகிய பெண்ணை கூட்டி கொண்டு சினிமாவுக்கும், பீச்சுக்கும் போக வேண்டும் என்று ஆசை இருக்காதா?ஆசை தீர காதலித்த பின் இவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டேன். இப்பொழுதே போய் பேசி விடலாமா? வேண்டாம். வந்த உடன் பேசினால் தவறாக நினைப்பாள். ஒரு அரை மணி நேரம் போகட்டும்.

நான் மணியையே பார்த்து கொண்டிருந்த இருபதாவது நிமிடம் ஒரு குரல் கேட்டது.

"ஹாய்! ஐ ஆம் சந்தியா" பேசியது அவளேதான்.

"ஹாய்" குழறிய நாக்கை கட்டுப்படுத்தி கொண்டு அவளுக்கு பதில் சொன்னேன். இவளுடன் பேசும்போதே இதயம் இப்படி வேகமாக துடிக்கிறதே. 

"நீங்க இன்னைக்கு நைட் ஷிப்ட்டா?"

"ஆமா"

"தேங்க் காட். இன்னைக்கு என்னோட டீம் மேட் அமலா லீவ். தனியா இருக்கணுமேன்னு பயந்துகிட்டே வந்தேன். நல்ல வேளை நீங்க கம்பெனிக்கு இருக்கீங்க." சொல்லிவிட்டு அழகாக சிரித்தாள். பழம் நழுவி  பாலில் விழுவது என்றால் என்ன என்று புரிந்தது.

"நானும் தனியா இருக்கணும்னுதான் நினைச்சேன்". பொத்தாம் பொதுவாக ஒரு பதிலை சொல்லி வைத்தேன்.

"நான் கீழ காஃபி சாப்பிட போகணும். நீங்க என் கூட வர முடியுமா?"

"கட்டாயம் வரேங்க."

கேன்டீன் இருக்கும் முதல் தளத்தை அடைய இருவரும் நடந்து சென்று லிப்டில் ஏறினோம். இரவு நேரம் ஒரு அழகிய பெண்ணுடன் தனியாக லிப்டில் போவது மனதுக்கு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது.

"நீங்க எந்த ஊரு?" என்றாள்.

"மதுரை பக்கம். நீங்க"

"நான் கோயம்புத்தூர். ஆனால் வளர்ந்தது, படிச்சது எல்லாம் பாம்பே."

"எப்படி நைட் ஷிப்ட் பார்க்க ஒத்துக்கிடீங்க"

"நான்  ஈவ்னிங் மாடலிங்  செய்ய போய்டுவேன். எனக்கு நைட் ஷிப்ட்தான் சரி." அவள் சொல்லி முடிக்கவும் முதல் தளம் வரவும் சரியாக இருந்தது. கேன்டீன் சென்று இருவரும் காஃபி வாங்கி கொண்டோம். காஃபி குடித்து முடிக்கும் முன் காதலை மறைமுகமாகவாவது சொல்லி விட வேண்டும் என முடிவு செய்தேன்.

"பாம்பேல இருந்தேன்னு சொன்னீங்களே. குடும்பத்தோட இங்க வந்தாச்சா?" என கேட்டேன். அவள் சொல்லும் பதிலை வைத்து அவள் குடும்பத்தில் ஒருவனாக நான் விரும்புவதை எப்படியாவது உணர்த்தி விடுவது ஏன் திட்டம்.

"இல்லை. நான் மட்டும்தான் இங்க" சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தி விட்டு தன் கையில் இருந்த காபி கோப்பையை கீழே வைத்து விட்டு எழுந்து ஓட தொடங்கினாள். எங்கே போகிறாள் என நானும் எழுந்து வேகமா பின்னே சென்றேன். அவள் வாஷ் பேசினை நெருங்கி சென்று வாந்தி எடுக்க தொடங்கினாள். வாந்தி எடுத்து முடித்த பின் தன் முகத்தை கழுவி கொண்டாள். பின் நிதானமாக என்னை நோக்கி வந்தாள்.

"உடம்பு சரி இல்லையா?" என்றேன்.

"ஆமா"

"மாத்திரை போட்டுக்க வேண்டியதுதானே"

"மாத்திரை போட மறந்ததுதான் சிக்கலே." சொல்லிவிட்டு கண் சிமிட்டினாள்

"ஒண்ணுமே புரியல"

"எனக்கு ஒன்னும் இல்ல. வீக் எண்ட் ஹாஸ்பிடல் போய் கிளீன் செஞ்சுகிட்டா சரி ஆகிடும்"அவள் சொன்ன பதிலில்  எனக்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க?"

"லிவிங் டு கெதர்ல இதெல்லாம் சாதாரணம்தான். எப்பவாச்சும் கேர்லெஸ்ஸா இருந்திட்டா இப்படி ஆகிடும்." அடுத்த குண்டை சாதாரணமாய் வீசினாள்.

"அப்போ உங்க குடும்பம்"

"அவங்க பாம்பேல. நான் இங்க சுதீப் கூட லிவிங் டு கெதர்ல."

"ஆனா நேத்துதான் சுதீப்பும் நானும் செட் ஆகாது, பிரிஞ்சுடலாம்னு முடிவு எடுத்தோம். நான் இப்போ  வேற ஆளை தேடிகிட்டு இருக்கேன்."

"ஓ!"

"நாம சீட்டுக்கு போகலாமா?"

"ம்"

சீட்டுக்கு திரும்பினோம். இரவு முழுவதும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விடிந்ததும் அவளை  திரும்பி கூட பார்க்காமல் நடையை கட்டினேன்.

Friday, August 30, 2013

ஜாதிப் பேய்கள்

பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் தெளிவாக கேட்டது . இந்த வழியில் நடந்து வந்தது தவறோ என்று தோன்றியது. துணைக்கு யாரும் இல்லாமல் சுடுகாட்டு வழியில் எவனாவது வருவானா? பகல்தானே என்ற அசட்டு துணிச்சலில் இப்படி வந்து சிக்கி கொண்டேனே.நாம் பயப்பட்டால் பேய்கள் நம்மை எளிதில் தாக்கி விடும் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. சற்று துணிவை வரவழைத்து கொண்டு திரும்பி பார்க்காமலேயே குரல் கொடுத்தேன் 

" நீ யாரு? நீ ஏன் என் பின்னாடியே வர்ற?"

"நான் உங்களோட நண்பன்தான். பயப்படாம திரும்பி என்னோட பேசுங்க". பதில் கூறியது ஒரு ஆண் குரல். திரும்பியவுடன் என்னை அடிக்க இந்த பேய் திட்டம் தீட்டுகிறதோ.

"நீ மனுசனா?"

"இல்லை. ஆனா மனுசங்களை விட நாங்க ரொம்ப நல்லவங்க. எனக்கு உதவுங்க ப்ளீஸ்"

"என்ன நான் உதவணுமா? உனக்கு என்ன பிரச்சனை?"

"காதல்தான் என்னோட பிரச்சனை. எங்க காதலை இந்த சுடுகாட்டுல இருக்கிற யாரும் ஏத்துகிற மாட்டேங்குறாங்க" என்றது அது. அட பாவமே. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டவன் போலும். நிச்சயம் மூர்க்கமான பேயாக இருப்பான். நிச்சயம் திரும்ப கூடாது.

"இங்க பாரு. நீ இறந்ததும் உன்னோட காதல் முடிஞ்சு போச்சு. உன்னோட காதலி இப்ப வேற யாரையோ கல்யாணம் செஞ்சுகிட்டு சந்தோசமா இருப்பா. இப்போ நான் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. என்னை விட்டுடு."

"இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. தயவு செய்து திரும்பி பாருங்க.  உங்களுக்கு எல்லாமே புரியும்" இப்போது அது கெஞ்சும் குரலில் கேட்டது. பகலில் பேய்களுக்கு சக்தி இல்லை என்று யாரோ சொல்லி கேட்டிருந்தேன். அந்த நம்பிக்கையில் ஆனது ஆகட்டும்   என்று திரும்பினேன். அங்கே வெள்ளை உடையில் ஒரு இளம் வயது ஆணும், பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள். பெண் தனது கூந்தலை முகத்தின் முன் போட்டு முகத்தை மறைத்து வைத்திருந்தாள். எனக்கு இப்போது பயம் சற்று  குறைந்து இருந்தது.

"யாருப்பா நீங்க" சற்று குழைவாகவே கேட்டேன்

"தயவு செஞ்சு எங்களுக்கு உதவுங்க. நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம். நாங்க ரெண்டு பேரும் வேற வேற ஜாதிங்கறதால இந்த சுடுகாட்டுல்ல எங்க காதலை ஒத்துக்க மாட்டேங்குறாங்க."

"என்னது. செத்த அப்புறமுமா ஜாதி பாக்குறாங்க?"

"சாவு மனுசங்களுக்கு மட்டும்தான். ஜாதி எப்பவுமே சாகுறது இல்ல "

"சரி இதுல நான் எப்படி உங்களுக்கு உதவி பண்ண முடியும்"

" பகல்ல சுடுகாடுல்ல எல்லா பேயும் தூங்கிகிட்டு இருக்கும்போது நாங்க எங்க கல்லறையை விட்டு ஓடி வந்துட்டோம். ஆனா இந்த நேரத்துல்ல எங்களால இந்த சுடுகாட்டு எல்லையை தாண்டி போக முடியாது.  என்ன செய்றதுன்னு நாங்க முழிச்சுகிட்டு இருக்கும்போது நீங்க வந்தீங்க. நீங்க எங்களை கூட்டிகிட்டு பக்கத்துக்கு ஊரு சுடுகாட்ல விட்டுட்டா நாங்க பிழைச்சுக்குவோம். ப்ளீஸ்"

எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. யோசித்தேன். இவர்களை நம்பலாமா? என்  இரத்தம்  குடிக்க இது தீட்டும் சதி திட்டமா? இருக்காது. என்னை ஏதாவது செய்வதாக இருந்தால் இது நேரடியாகவே செய்து விடலாமே? நான் அந்த ஆண் பேயின் கண்களை பார்த்தேன். பாவம்! பேய் முழி முழித்து கொண்டிருந்தான்.

"சரி நான் உங்களுக்கு உதவி செய்றேன். உங்களை நான் எப்படி வெளிய கூட்டிகிட்டு போறது"

"அங்க ஒரு பாட்டில் இருக்கு பாருங்க. நாங்க ஆவி வடிவம் எடுத்து அதுக்குள்ள நாங்க போய்க்கிறோம். எங்களை அப்பிடியே நீங்க தூக்கிகிட்டு கொண்டு போய்டுங்க"

"சரி பக்கத்துக்கு ஊரு சுடுகாடுல்ல உங்களுக்கு கல்லறை இருக்காதே. எங்க தங்குவீங்க."

"அங்கே ஏதாவது ஒரு மர பொந்துல வச்சாவது இவளை காப்பாத்துவேன் சார்". அவன் சொன்ன பதிலில் சற்று உருகிவிட்டேன்.

"சரி சீக்கிரம் உள்ள போங்க"

அவர்கள் உள்ளே போய் விட்டார்கள். எடுத்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். சுடுகாட்டை விட்டு சற்று தூரம் வெளியே வந்த பின்தான் எனக்கு உரைத்தது.

"ரெண்டு  பேரும் வெளியே வாங்க". மூடியை திறந்து விட்டு அவற்றை அழைத்தேன். அவை வெளியே வந்தன.

"என்ன ஆச்சு"

"ரெண்டு பேரும் ஒரே பாட்டிலுக்குள்ள போய்டீங்க. எதாச்சும் தப்பு தண்டா செஞ்சுடீங்கன்னா?" நான் சொன்னவுடன் அந்த பெண் பேய் வெக்கப்பட்டது அவளின் அடர்ந்த கூந்தலை தாண்டியும் வெளியே தெரிந்தது.

"நீ ஏன் முடியை முன்னாடி போட்டு இருக்க?" அந்த பெண் பேயிடம் கேட்டேன்.

"சுடுகாட்ல இதான் லேட்டஸ்ட் ஃபேசன்." 

"சரி! நீங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து கல்லறையா?"

"அது எப்பிடி? நாங்க வேற வேற ஜாதி ஆச்சே. அவ  சுடுகாட்டு வடக்கு பக்கம். நான் தெற்கு பக்கம். நான் தினமும்  இவ ஏரியா பக்கம் போய் இவளை டாவடிப்பேன். ஆரம்பத்துல்ல ஓவரா அலட்டிகிட்டா " அவன் இதை சொன்னதும் அந்த பெண் பேய் அவனை குத்துவது போல் பாசாங்கு செய்தாள். சுடுகாட்டு எல்லையை தாண்டியதும் இருவரும் உற்சாக மூடுக்கு வந்து விட்டார்கள் போலும். அது சரி. அவன் சுடுகாட்டு தெற்கு பக்கம் அவன் ஏரியா என்றானே. அப்படியானால் இவன் அந்த ஜாதியா?அதிர்ச்சியாக இருந்தது.

"ஒன்னு கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க என்ன ஜாதி"

"நான் *********, அவ ********" 

"சரி நேரமாச்சு. நீ இந்த பாட்டிலுக்குள்ள போ. அவ இந்த பாட்டிலுக்குள்ள போகட்டும்." அவர்கள் உள்ளே போனதும் இறுக்கமாக பாட்டில்களை மூடி திரும்பி சுடுகாட்டை நடக்க ஆரம்பித்தேன்

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...