Showing posts with label IPL. Show all posts
Showing posts with label IPL. Show all posts

Thursday, July 18, 2013

மேட்ச் பிக்சிங் செய்வது சுலபமா?

ன்னுடைய பெயர் ஸ்ரீகோந்து. வேக பந்து வீச்சாளர் .நம் நாட்டுக்காக பல கிரிக்கெட் போட்டிகள் ஆடியுள்ளேன். நீங்கள் என்னை நிச்சயம் உங்கள் வீட்டு டிவியில் பார்த்து இருப்பீர்கள். நீங்கள் பார்த்த பொழுது நான் பெரும்பாலும் எதிரணி வீரர்களுடன் சண்டையிட்டு கொண்டு இருந்திருப்பேன். அல்லது யாரிடமாவது அடி வாங்கி அழுது கொண்டிருந்திருப்பேன். இல்லை அபூர்வமாக  பந்து வீசிக்கொண்டும் இருந்திருக்கலாம். இப்போது நான் யாரென்று சற்று  தெரிந்து  விட்டதா?

இப்போது நான் சொல்ல போகும் கதை உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். மனதை திடப் படுத்தி கொள்ளுங்கள் . நான் உங்களுக்கு சொல்ல போவது நான் ஸ்பாட் பிக்சிங் செய்த கதை. "அடப்பாவி! பிக்சிங் செய்து விட்டாயா? உன்னை நாங்கள் எத்தனை நம்பினோம்? என்று கேட்காதீர்கள். அதை நான் ஆண்டவன் சன்னதியிலோ அல்லது சிக்கி கொண்டால் கோர்ட்டிலோ சொல்லி கொள்கிறேன். இப்போது நான் சொல்லும் கதையை மட்டும் கேளுங்கள்.

 நான் சொல்ல போகும் போட்டியை நீங்கள் பார்த்திருக்கலாம். நான் ஆடிய அணிக்கு அந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி. எங்களை எதிர்த்து ஆடிய அணிக்கோ அது இன்னும் முக்கியமான போட்டி. எனக்கோ அந்த போட்டி மிக மிக முக்கியமான மறக்கமுடியாத போட்டி. ஏனென்றால் நான் முதல் முதலில் பிக்சிங் செய்த போட்டி அதுதான். அந்த போட்டியில் என்னுடைய புக்கி எனக்கு அளித்த பணி மிக சுலபம். பத்தாவது ஓவருக்கு பின் நான் வீசும் முதல் ஓவரில் 15 ரன்கள் தர வேண்டும். சாதாரணமாகவே என்னுடைய ஓவரில் 12 ரன்கள் அடிக்கலாம். எனவே மூன்று ரன்களை அதிகமாக விட்டு தருவது எனக்கு பெரிய வேலையே இல்லை.

 
அந்த போட்டி தொடங்கியது. எங்கள் அணி முதலில் பந்து வீசியது. நான் என்னுடைய வாய்ப்பிற்காக காத்து இருக்க தொடங்கினேன். நான் எதிர்பார்த்த அந்த தருணம் வந்தது. ஆட்டத்தின் 14வது ஓவரை கேப்டன் டேவிட் எனக்கு கொடுத்தார். அப்போது எதிரணியின் ஸ்கோர் 103 ரன்களுக்கு 3 விக்கெட். அந்த ஓவரில் நான் 15 ரன்கள் கொடுத்தால் போதும்  பெருந்தொகையை சில நிமிடங்களில் அடைந்து விடலாம். கூடவே இலவச இணைப்பாக அழகழகான பெண்கள். தெய்வத்தை வேண்டி கொண்டு முதல் பந்தை வீசுவதற்கு தயாரானேன். எச்சிலை என்னுடைய இரண்டு பக்கமும் காறி துப்பி புக்கிக்கு சிக்னல் கொடுத்தேன்.

முதல் பந்து - எனக்கு என்ன ஆனது என்று  எனக்கே தெரியவில்லை. என்னுடைய வாழ்நாளில் நான் அந்த மாதிரி ஒரு நல்ல பந்தை வீசியதே இல்லை. என்னையும் அறியாமல் புயலாக வெளியேறிய அந்த பந்து ஸ்டம்புகளை தகர்த்தது. அதிர்ந்து போய் நின்றேன். கேப்டன் டேவிட் துள்ளி குதித்து கொண்டு என்னை நெருங்கினார். சமாளித்து கொண்டு முகத்தை சந்தோசமாக வைத்து கொண்டேன். என்னுடைய அற்புத நடிப்பில் ஏமாந்தார் டேவிட். "ஸ்ரீகோந்து! நீ நடிகன்டா!" என மனதுக்குள் நினைத்து கொண்டேன்.

இரண்டாம் பந்து: இந்த பந்தில் 4 அல்லது ஆறு போனால்தான் என் மேல் உள்ள அழுத்தம் சற்று குறையும். ஆடுவதோ புதிதாக உள்ளே வந்த பேட்ஸ்மேன். படபடப்போடு பந்தை பேட்ஸ்மேனின் உடலுக்கு வீசினேன். தட்டி விட்டு அவன் ஒரு ரன் எடுத்தான்.

மூன்றாம் பந்து: இப்போது எனக்கு சற்று நிம்மதியானது. ஏனென்றால் இப்போது என் பந்தை எதிர்கொள்ள போவது டிராவோ. நிச்சயம் இவன் நான்கு பந்துகளில் 14 ரன்கள் அடித்து விடுவான். நான் எப்போதும் போல பந்து வீசினாலே போதும்என நினைத்து கொண்டு நான் வீசியது புல் டாஸ். எளிதாக அதை நான்கு ஆக்கினான் டிராவோ

நான்காம் பந்து: திட்டமிட்டபடி துல்லியமாக புல் டாஸ் வீசினேன். அதை சிச்சருக்கு விரட்டினான் டிராவோ.

ஐந்தாம் பந்து: பந்தை ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லுமாறு வீசினேன். நிச்சயம் அந்த பந்து நான்கு ரன்களுக்கு விரட்டகூடிய பந்து. ஆனால் பாவி பயல் டிராவோ அந்த பந்தை மட்டை வைத்து விட்டான்.

ஆறாம் பந்து: இன்னும் நான் குடுக்க வேண்டியது நான்கு ரன்கள். இருப்பதோ ஒரே பந்து. சிக்னல் குடுத்த பின் சொதப்பினால் புக்கி கொன்று விடுவான். இப்போது நோ பால் வீசுவதை தவிர வேறு வழி இல்லை. அதி வேகத்தில் ஓடி வந்து ஒரு நோ பாலையும் வீசி விட்டேன். டிராவோ அதை தூக்கி அடிக்க அது பௌண்டரி லைனில் கேட்ச் ஆனது. அதற்குள் இரண்டு ரன்கள் ஓடி விட்டான் டிராவோ.

மீண்டும்  ஆறாம் பந்து: எடுக்க வேண்டியது ஒரே ரன். இந்த பந்தில் விக்கெட் வீழ்த்த முடியாது. என்னுடைய திட்டம் நிறைவேற போகிற மகிழ்ச்சியோடு பந்தை வீசினேன். அந்த பந்தை நேராக பீல்டரிடம் அடித்த டிராவோ ரன் எடுக்க தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். எனக்கு ஒரு ரன் எடுக்க போகிறான் என்ற சந்தோசம் ஒரு பக்கம் . ரன் அவுட் ஆகிவிடுவானோ என்ற பயம் ஒரு பக்கம்.  பதட்டமான அந்த நொடியில் நான் பயந்தபடி ரன் அவுட் ஆகிவிட்டான் டிராவோ.

ந்த ஆட்டம் முடிந்த பின் புக்கி என்னை கழுவி கழுவி ஊற்றினான். தனக்கு பாம்பே தாதாக்களுடன் தொடர்பு உண்டு என்று கூறி மிரட்டல் வேறு. நான் எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது என்று அவனுக்கு புரிய வைக்க மிகவும் கஷ்டப்பட்டேன். கடைசியில் அவனுடைய நஷ்டத்தை சரிகட்ட அடுத்த இரண்டு போட்டிகளில் இலவசமாக பிக்சிங் செய்து தருகிறேன் என்றதும் சமாதானம் அடைந்தான்.

இது நடந்து 5 நாட்களுக்கு பின் பேப்பரில் வந்த செய்தி. " பிரபல வீரர் டிராவோ ஸ்பாட் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் நடந்த போட்டியில் இவர்  15வது ஓவருக்குள் ஆட்டமிழக்க புக்கிகளுடன் இவர் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அதனாலேயே ஸ்ரீகோந்து வீசிய ஓவரின் கடைசி பந்தில் வேண்டுமென்றே ஓடி ரன் அவுட் ஆனதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "

பாருங்கள். பிக்சிங் செய்வது கூட சுலபமாக இல்லை இந்த காலத்தில். 

Wednesday, April 17, 2013

IPLலா? மசாலா படமா?

IPL வந்தாலே நாட்டில் அனைவருக்கும் கிரிக்கெட் ஆர்வம் எங்கிருந்தோ பீறிட்டு கொண்டு வந்து விடுகிறது. இந்திய அணி விளையாடும் போட்டியை கூட பார்க்காதவர்கள்  தங்கள் மாநிலத்தில் உள்ள ஒரு ஊரின் பேரில் விளையாடும் அணியை தங்கள் அணியாக எண்ணி கொண்டு டிவியின் முன் ஒன்றி விடுகிறார்கள்.

மக்கள் தங்கள் மாநிலத்தின் மேல் கொண்ட பற்றுதான் IPLலின்  வெற்றிக்கு காரணமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் ரஞ்சி கோப்பையில் 11 வீரர்களும் ஒரே மாநிலத்தில் இருந்து விளையாடுகிறார்கள். ஆனால் IPLலில்  நான்கு வெளிநாட்டு வீரர்கள், 4 வேற்று மாநில வீரர்கள் விளையாடுகிறார்கள். இருந்தும் IPL மேல் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட யாரும் ரஞ்சி கோப்பையில் காட்டுவதில்லை. 

IPL மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு காரணம்தான் என்ன? அது ஒன்றும்  பெரிய ரகசியம் இல்லை. IPL போட்டிகள் கிட்டத்தட்ட ஒரு சினிமா போல தயாரிக்கப்படுகிறது. ஆக்சன், செண்டிமெண்ட், கவர்ச்சி என அனைத்தும் கலந்து தயாரிக்கப்படும் ஒரு படத்தை மக்கள் விரும்புவது மிகவும் இயல்பே. அந்த படத்தின் ஒரு சில காட்சிகள் கீழே கொடுத்துள்ளேன்.

கிளாமர்  

IPLலின்  வெற்றியில் அதிக பங்கு வகிப்பது கவர்ச்சி. நடிகைகளில் இருந்து அரைகுறை உடையில் ஆடும் வெளிநாட்டு மங்கைகள் வரை கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை IPLலில்.



 ஆக்சன்   

ஆக்சன்  காட்சிகள் இல்லாத  மசாலா படமா? எல்லா வகையான ஆக்சனும் உண்டு இந்த படத்தில்.


செண்டிமெண்ட் 

ஸ்ரீசாந்த்தின் அழுகையை பார்த்து பரிதாபப்பட்டவர்களும் உண்டு. ப்ரீதி ஜிந்தா, ஷில்பா ஷெட்டியின் கண்ணோரம் வழியும் ஒரு துளி கண்ணீரை பார்த்து உள்ளம் உடைந்தவர்களும் உண்டு. நம்ம ஆளுங்களுக்கு செண்டிமெண்டும் வேணும்ல.

 ப்ரீதி ஜிந்தா வெற்றி பெற்றதும் தம் அணி வீரர்களை கட்டி பிடிப்பதும் உணர்ச்சிபூர்வமான காட்சிதான். இங்கே அவருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தோற்ற அணியினரையும் கட்டி பிடித்து தோற்ற உள்ளங்களுக்கு ஒரு சிறிய  மன நிம்மதி தாருங்கள் ப்ளீஸ்.


ரொமான்ஸ்  

காதல் ஜோடிகளின் முத்த காட்சிகள்  பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும். வீரர்களின் காதலிகளும், மனைவிகளும் மைதானத்துக்குள் இருக்கும் தம் காதலர்களுக்கு கண்களாலேயே தம் காதலை தெரிவிப்பார்கள்.


காமெடி 

IPL சினிமாவில் காமெடி கொஞ்சம் கம்மிதான். ஆனால் சில நேரங்களில் நடக்கும் காமெடிகள் ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடும். ஒரு முறை முரளி விஜய் கேட்ச் பிடித்து விட்டு ஆனந்தத்தில் மைதானம் முழுவதும் சுற்றி ஓடினார். அவர் தன்னிலைக்கு வந்து அம்பயரை பார்த்ததும்  அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. இந்த முறை கோஹ்லிக்கு நடந்ததும் இதேதான்.


ட்விஸ்ட்  

அனைத்துக்கும் மேல் பரபரப்பான ட்விஸ்ட்களும் , எதிர்பாராத முடிவுகளும் IPLலின் மிக பெரிய பலம். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலேயும் கணித்துவிட முடியாது. அதிர்ச்சி தரும் முடிவுகளும் இதில் அடக்கம்.


இப்படி எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் உங்களுக்கும் IPL ஒரு மசாலா படமாக தெரிகிறதுதானே? IPLலின் வெற்றிக்கு இவையே காரணம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...