Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, February 14, 2015

ஸ்மிருதியின் காதல் கதை(கள்) !

ஸ்மிருதி. தமிழ் பெண்ணுக்கு இது புதுமையான பெயர்தான். பெயர் மட்டும் அல்ல அவளும் எனக்கு ஒரு புதிராகவே தெரிந்தாள்.அவள் இந்த அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. இது வரை என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. பெண்கள் தேடி வந்து பேச நீ பேரழகனா? என்று கேட்க வேண்டாம். சொந்த நாட்டை விட்டு நீங்கள் ஸ்வீடன் வந்து இருந்தீர்கள் என்றால், வந்து  இடத்தில் ஒரு தமிழனை பார்த்ததும்  இயல்பாக உங்களுக்கு  ஒரு நட்புணர்வு வருமே. அப்படி எதுவும் அந்த  பெண்ணிற்கு வந்தது போலவே தெரியவில்லை. என்னுடன் மட்டும் இல்லை. மற்ற வெள்ளைக்காரர்களுடனும் அந்த பெண் அதிகம் பேசுவதில்லை. தொழில் நிமித்தம் பேசுவதோடு சரி.

அந்த பெண்ணின் மேல் எனக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்று கேட்காதீர்கள். தமிழ் பேச ஒரு துணை கிடைத்தது என்ற ரீதியிலேயே அந்த பெண் மேலான என்னுடைய அக்கறை தொடங்கியது .எங்கேயோ மதுரையில் பிறந்து மென்பொருள் படித்து பின்னர் விருப்பமே இல்லாமல் கரன்சி நோட்டுகளுக்காக  ஸ்வீடன் கிளம்பினேன். கிளம்பினேன்  என்பதை விட என் கம்பெனி வலுக்கட்டாயமாக என்னை அனுப்பி வைத்தார்கள் என்பதே உண்மை. இந்த ஊர்காரர்களிடம் பேசி மென்பொருள் எழுதி தருகிறோம் என்று மூளைசலவை செய்து  காசு பிடுங்க நான்தான் அவர்களின் முதல் தேர்வு. இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்து திக்கி திணறி ஒரு பின்னர் சமாளித்து விட்டேன். தமிழ் பேச ஆள் இல்லாமல் உப்பு சப்பில்லாமல் சாப்பிட்டு அலுத்து இருந்த நேரத்தில் இன்னொரு பெண்ணும் சென்னையில் இருந்து இங்கே வருகிறாள் என்றதும் எனக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.

ஸ்மிருதியை முதல் நாள் அலுவலகத்தில் பார்த்ததும் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது. பெரிய அழகி என்று சொல்ல முடியாது. இருந்தாலும் களையான முகம். அழகான பெரிய கண்கள். கண்களை வைத்தே பெரிய நடிகை ஆகி விடலாம். அப்படி எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்கும் கண்கள். இருந்தாலும் அந்த  கண்களில் சோகம் மட்டுமே இருந்ததாக உணர்ந்தேன். புதிய இடம் தந்த பயமாக இருக்கலாம். ஆனாலும் அவள் நடவடிக்கைகளில் எந்த பயமும் இல்லை. சோகம் மட்டுமே அப்பட்டமாக தெரிந்தது. எப்படியும் இந்த அலுவலகத்தில் தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சென்னையிலேயே விசாரித்திருப்பாள். எப்படியும் என்னை தேடி வருவாள் என்று எதிர்பார்த்து அவளையே கவனித்து கொண்டிருந்தேன். இறுதியில் ஏமாந்தேன்.

இரண்டாம் நாள் நானே முதல் அடி எடுக்க தீர்மானித்தேன். மதிய நேரத்தில் அவளின் இடத்தை  நோக்கி சென்று “ஹலோ!” என்றேன். அவளும் செயற்கையான புன்சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து கொண்டே “ஹலோ” என்றாள்.

“நானும் சென்னைதான். ஸ்வீடன் வந்து இரண்டு வருசமாச்சு”. பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்தாள். அந்த செயற்கையான சிரிப்பு முகத்தில் அறைவது போல இருந்தது. “செட்டில் ஆகுற வரைக்கும் ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க” என்றேன். “தேங்க்ஸ்” என்று ஒரே வார்த்தையில் பதில் வந்தது. எனக்கு சற்று எரிச்சல் வந்தது. தரையில் எதையோ தேடுவது போல பாவனை செய்தேன். “என்ன ஆச்சு?” என்றாள். “இல்ல நீங்க பேசும்போது முத்து எதாவது உதிர்ந்திருக்கான்னு பார்த்தேன்” என்றேன். சிரிப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றினாள். தோல்வியுடன் வீட்டுக்கு திரும்பினேன்.

நாட்கள் உருண்டு ஓடின. அந்த பெண்ணுடன் திரும்ப பேச முயலவில்லை. அந்த பெண் என்னுடன் மட்டும் இல்லை, அனைவரிடமும் அப்படிதான் இருக்கிறாள் என்பதில் ஏதோ ஒரு குரூர சந்தோசம். இருந்தாலும் எதற்காக எப்பொழுதும் சோகமாக இருக்கிறாள் என்ற கேள்வி மனதை குடைந்து கொண்டே இருந்தது. வெளியே பனி கொட்டும் நேரங்களில் அவளின் சோக முகத்தை பார்ப்பது மனச்சோர்வு அளிப்பதாக இருந்தது. ஒரு நாள் சென்னை அலுவலகத்து நண்பர்களை  தொலைபேசியில் அழைத்து அந்த பெண்ணை பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். வேலை சுமையில் அதையும் செய்ய முடியவில்லை.

இப்படி ஸ்மிருதியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது இரண்டு நாட்கள் அவள் காணாமல் போனாள். அலுவலகம் திரும்பியபோது மணிக்கட்டுக்கு சற்று மேல் பெரிய கட்டு. அதே அழுது வடிந்த முகம். பாவம், எப்படியோ காயம் பட்டுவிட்டது போலும். தனியாக வேறு இருக்கிறாள். பொதுவாக விசாரித்துவிட்டு வரலாம் என்று தேடி போனேன்.

“என்னங்க கைல கட்டு” என்றேன்.

“காய் நறுக்கும்போது வெட்டிகிட்டேன்”

“பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க. காய் வெட்டும்போது விரலை வெட்டலாம். மணிக்கட்டுக்கு மேல எப்படி வெட்டிக்குவீங்க” இந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு எனக்கு அவளிடத்தில் உரிமை இல்லை. ஒரே நாட்டில்  இருந்து வந்து இங்கே வேலை செய்கிறோம் என்பதை தவிர அவளுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இருந்தபோதும் அவள் என்னிடம் பொய் சொல்ல முயல்கிறாள் என்பதே எனக்கு அந்த கேள்வியை கேட்க போதுமானதாக இருந்தது. எப்படியும் கத்தி அவமானப்படுத்த போகிறாள். குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் கத்தி தொலையட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். இல்லையென்றால் வெள்ளைக்காரன் எதையாவது புரிந்து கொண்டு வேலைக்கே ஆப்படித்து விடுவான்.

“தற்கொலை செஞ்சுக்கலாம்னு பார்த்தேன். ஆனா சரியா வெட்டிக்கலை போல. கொஞ்சமா ரத்தம் வந்து நின்னு போச்சு. அப்புறம் வலி பொறுக்காம ஹாஸ்பிடல் போய்டேன்” என்றாள். சற்றும் அலட்டிக் கொள்ளாமல்.

“என்னங்க சொல்றீங்க. தற்கொலை முயற்சி செஞ்சேன்னு சாதாரணமா சொல்றீங்க?”

“வேற எப்படி சொல்றது?”

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. வந்த இடத்தில வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் தெரியாமல் இவளிடம் மாட்டி கொண்டேனோ? இந்த மாதிரி நேரத்தில் என்ன சொல்லுவது என்று கூட தெரியவில்லையே. ஆங். இப்படி சொல்லலாம். “வாழ்க்கைல ஆயிரம் பிரச்சினை இருக்கும்ங்க. அதுக்காக தற்கொலை ஒரு தீர்வே இல்லை”

“பின்ன வேற எதுதான் தீர்வு?”

“உங்களுக்கு ஒரு இருவத்தஞ்சு வயசு இருக்குமா. இன்னும் எவ்வளவோ இருக்கும் வாழ்க்கைல. இப்படி கடவுள் தந்த வாழ்க்கைய கோழைத்த...”

“கொஞ்சம் நிறுத்துறீங்களா ப்ளீஸ். எப்பவாச்சும் தற்கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்கீங்களா? அப்போ தெரியும் அதுக்கு எத்தனை தைரியம் வேணும்னு. ரொம்ப நாளா பயந்து பயந்து ரெண்டு நாள் முன்னாடிதான் எனக்கே தைரியம் வந்துச்சு”

“சரிங்க. அதுக்காக நீங்க செய்யுறது சொல்யூசன் இல்ல” என்றேன்.

“ஒரு உதவி செய்ங்க கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரலாமா. யாரு கூடவாச்சும்  பேசணும் போல இருக்கு ப்ளீஸ்” என்றாள். மூளை வேண்டாம், மாட்டி கொள்ளாதே என்றது. இறுதியில் இதயமே ஜெயித்தது.

ருகில் இருந்த ஒரு பூங்காவுக்கு என்னை அழைத்து சென்றாள். எதுவுமே பேசவில்லை. “என்னங்க. ஏதோ பேசணும்னு சொன்னீங்க?” என்றேன்.

“நான் ஸ்வீடன் வந்தது பெரிய தப்புங்க. என்னோட பாய் பிரெண்ட் என் கூட சண்டை போட்டான். நான் போக கூடாதுன்னு. நான்தான் கேக்கல. எப்படியும் சமாதானம் ஆகிடுவான்னு நெனச்சேன். ஆனா இந்த மூணு மாசத்துல ஒரு நாள் கூட என் கூட பேசல.”

“அடச்சே. இதுக்கு போய் தற்கொலையா? என்னங்க நீங்க. ஒயர் காதல் கான்செப்ட் எல்லாம் பூவே உனக்காக காலத்திலேயே எக்ஸ்பைரி  ஆகிடிச்சு. இப்போ போய் லவ் பெயிலியர் பத்தி எல்லாம் பேசிக்கிட்டு”

“இல்லங்க அவன் எப்படி என்னை லவ் செஞ்சான்னு தெரியாது. ஆனா நான் அவனை ரொம்ப லவ் பண்ணேன். நாங்க ரெண்டு பெரும் ஒரே நேரத்தில நம்ம கம்பெனில வேலைக்கு சேர்ந்தோம். ஒரே டீம். முதல் நாளே எவ்ளோ அழகா ப்ரோபோஸ் செஞ்சான் தெரியுமா?”

“சொல்லுங்க”

“உங்க பேரு என்னங்கன்னு கேட்டான்?”. “ஸ்மிருதி” அப்படின்னேன். “உங்க அப்பா புத்திசாலி போல. என்ன அழகா பேரு வச்சு இருக்காரு” அப்படின்னான். “அப்போ நீங்களும் உங்க பொண்ணுக்கு அதே பேரை வச்சுடுங்க”ன்னு சொன்னதும் “அது முடியாதுங்க. எப்படி அம்மாவுக்கும், பொண்ணுக்கும் ஒரே பேரை வைக்க முடியும்” அப்படின்னு கேட்டான்.

“புரியலையே”

“எனக்கும் அப்போ புரியல. கொஞ்சம் யோசிச்சு பாருங்க புரியும்”

 தொடரும்


Monday, July 14, 2014

கொஞ்சம் மறந்துடுங்க!!!

பொதுவாக நான் தண்டவாளத்தை அப்படி கடப்பவனில்லை. ஆனால் அந்த நள்ளிரவில்  லெவல் கிராசிங் வரை சென்று திரும்ப சோம்பேறித்தனம்.  இந்த வழியில் சென்றால் சில நிமிடங்களில் வீட்டை அடைந்து விடலாம் .அந்த சோம்பல் ஒரு மறக்க முடியாத இரவை தரப்போகிறது என்று நான் உணரவில்லை.

இருட்டில் கவனமாக அடி எடுத்து வைத்து தண்டவாளத்தில் நடக்க தொடங்கினேன். எதையாவது மிதித்து தொலைத்து விடக் கூடாது. அப்போதுதான் தண்டவாளத்தில் அந்த மூட்டையை  அதை பார்த்தேன். மூட்டை போல இலை அது. லேசாக அசைவது போல தெரிந்தது. யார் அது? அடப்பாவமே. யாரோ தற்கொலை செய்ய முயல்கிறார்கள். விரைவாக அவரை நோக்கி ஓடி அவரை தூக்கி விட்டேன்.

“எழுந்திருங்கள்.”

அவர் அதிகம் சிரமப்படுத்தவில்லை. கையை பிடித்து இழுத்ததும் அவரே எழுந்து விட்டார்.  இருட்டில் முகம் தெரியவில்லை. அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கக் கூடும். தயங்கி நின்ற அவரிடம் பேசத் தொடங்கினேன்

“என்ன பிரச்சினை உங்களுக்கு. வாழ வழியா இல்லை?”

“நான் படும் கஷ்டத்தை நீங்கள்பட்டால் தெரியும் உங்களுக்கு”

“யாருக்குதான் கஷ்டம் இல்லை. என்னையே எடுத்து கொள்ளுங்கள். கை நிறைய சம்பளம். ஆனால் ஊரெல்லாம் கடன். வீட்டுக்கு, காருக்கு என்று கட்டி தீர்த்த பிறகு கையில் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடத்துவது எத்தனை கஷ்டமாக உள்ளது தெரியுமா? ஆமாம் உங்களுக்கு என்ன பிரச்சினை? இந்த வயதில் காதல் தோல்வி காரணமாக இருக்காது. ஒருவேளை நீங்களும் கடன் வாங்கி மாட்டி கொண்டீர்களா?”

“பணமெல்லாம் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. வீடெல்லாம் பணம்தான். ஒரு உண்மை சொல்லவா. என் அப்பா அந்த காலத்திலேயே கறுப்பு பணம் சேர்த்து வைத்தவர்”

“வேறு என்ன பிரச்சினை. நீங்கள் விரும்பினால் சொல்லலாம். இல்லையென்றால் ரயில் இன்னும் சிறிது நேரத்தில் வரும்.”


அவர் சிறிது யோசித்தார்.

“நீ கேட்பதால் சொல்கிறேன். எனக்கு மன பாரம் சற்று குறையலாம். என்னுடைய பிரச்சினையே என்னுடைய நியாபக சக்தி”

“என்ன? இது ஒரு பிரச்சினையா? நியாபக மறதியில் திண்டாடுகிறார்கள் ஒவ்வொருவரும். நீங்கள் நியாபக சக்திதான் பிரச்சினை என்கிறீர்கள்”

“இந்த கொடுமையை அனுபவித்தால்தான் உனக்கு புரியும். எனக்கு எதுவுமே மறக்காது. முப்பது வருடம் முன்பு நடந்த விஷயம் போல நேற்று போல நியாபகம் இருக்கும். உன்னுடைய முதல் காதல் உனக்கு நியாபகம் இருக்கிறதா?”

சற்றே யோசித்தேன். இந்த மனிதரை பேசாமல் விட்டு இருக்கலாமோ? வலிய சென்று மாட்டி கொண்டேனே. சரி பேச்சு கொடுப்போம். ஒரு வேளை அவர் மனம் மாறினால் சந்தோசம்தானே.

“அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். என் வகுப்பில்  பெண். பெரிய அழகி. பெயர் ஆயிஷா என்று நியாபகம்”

“நிறுத்து. காதலி பெயர் கூட நினைவில்லை பார் உனக்கு”

“ஆம், நாள் ஆகிவிட்டதே”

“இப்போது என்னுடைய கதையை கேள். நேற்றுதான் நடந்தது போல் உள்ளது. என்னுடைய கீதா என்னை விட்டுவிட்டு வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டு...”

முடிக்காமல் அழ ஆரம்பித்தார்.

“நான் உங்களுடைய முதல் காதலை பற்றி கேட்டேன். நீங்கள் எதையோ..”

“இது என்னுடைய முதல் காதல்தான். நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது அவளை காதலித்தேன்”

“புரிகிறது. சிறு வயதிலேயே காதலிக்க ஆரம்பித்து பின்னர்  பிரிந்தால் கஷ்டம்தான். ஆமாம் உங்கள் காதல் ஏன் பிரிந்தது?”

“சொல்ல தெரியவில்லை எனக்கு. கீதா நான் வளர்ந்து பெரியவன் ஆகும்வரை காத்து இருப்பாள் என்று நினைத்தேன். அவளிடம் காதலை சொல்ல சரியான நேரம் பார்த்திருந்தேன். ஆனால் சற்று தாமதித்து விட்டேன். கீதாவோ அவசரப்பட்டு விட்டாள்.”

“என்ன? இரண்டாம் வகுப்பில் காதலித்த பெண்ணிடம் அவளுக்கு திருமணம் ஆகும்வரை காதல் சொல்ல நேரம் வரவில்லையா?”

“எனக்கு தைரியம் இல்லை. கீதா கையில் இருந்த குச்சி என்னை என் காதலை சொல்ல விடாமல் தடுத்து விட்டது. அந்த குச்சியை கண்டாலே எனக்கு பயம்”

“எனக்கு புரியவில்லை. கீதா உங்கள் உடன் படித்த பெண்தானே?”

“இல்லை இல்லை. அவள்தான் என் இரண்டாம் வகுப்பு ஆசிரியை. இப்போது நினைத்தாலும்......”

எனக்கு எரிச்சலாக  வந்தது. பைத்தியகாரன்.

“எப்போதே நடந்த கதையை நினைத்தா அழுகிறீர்கள்? இப்போது கீதா டீச்சரின் பிள்ளைகளுக்கே திருமணம் ஆகியிருக்குமே?”

“ஆகிவிட்டது. ஆனால் கீதா டீச்சரின் திருமணம் நேற்று நடந்தது போலவே உள்ளது”

எனக்கு இப்போது அவரின் பிரச்சினை புரிந்து விட்டது. அவரை எப்படி திசை திருப்பலாம். பொதுவாக ஏதாவது பேசலாம்.

“சரி அழுகையை நிறுத்துங்கள். உங்களுக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் சொல்லுங்கள்”

“கிரிக்கெட்”

அவர் முகத்தில் பிரகாசம். அவரை சமாளித்து விடலாம் என தோன்றியது. மெதுவாக திசை திருப்பிவிட வேண்டியதுதான்.

“சொல்லுங்கள் 2011ல் இந்தியா உலக கோப்பையை ஜெயித்தது நினைத்து பாருங்கள். அப்போது எத்தனை சந்தோசத்தில் இருந்திருப்பீர்கள்”

“நான் அதை பார்க்கவில்லை. 96 உலகக்கோப்பையில் இந்தியா ஈடன் கார்டனில் மோசமாக தோற்றது நினைவிருக்கிறதா? அதன் பின் என்னால் கிரிக்கெட் பார்க்கவே முடியவில்லை. அன்று நான் எப்படி அழுதேன் தெரியுமா? அன்றே நான் தற்கொலை செய்திருக்க வேண்டும். என்ன ஒரு தோல்வி அது”

மீண்டும் அழுகை. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. காம்ப்ளியும், அசாருதீனுக்குமே அந்த தோல்வி நினைவில் இருக்காது. ஆனால் அவரை பார்க்கவும் பாவமாக இருந்தது. மறதியும் ஒரு வகையில் வரம்தான் போல. இன்னும் பேசினால் ஏதாவது ஒன்றை சொல்லி அழுது கொண்டே இருப்பார். சந்தோசத்தை விட சோகம்தானே மனத்தை அதிகம் பாதிக்கும்.

“ நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டி இருக்கிறீர்களா?”

“நிறைய பேரிடம். பயன் இல்லை. இது நோய் இல்லை என்கிறார்கள்”

“ஒன்று செய்யுங்கள். எனக்கு தூக்கம் வருகிறது. என்னுடைய வீடு பக்கத்து தெருவில் இரண்டாம் வீடு. நாளை காலை வாருங்கள். கூகிளில்  தேடி  என்ன செய்வது என்று பார்க்கலாம்”

சொல்லிவிட்டு நகர முயன்றேன்.

“சரி நிச்சயம் வருகிறேன். எனக்கு ஏதோ உங்களால் நன்மை நடக்கும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை . என் மேல் அக்கறை  கொண்ட உங்கள் முகத்தை பார்க்க வேண்டும். வெளிச்சத்துக்கு வாருங்கள்”

சற்று நடந்து வெளிச்சத்திற்கு வந்தோம். என்னுடைய முகத்தை கூர்ந்து பார்த்தார்.

“டேய் நீயா?”

“என்னை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியுமாவா? மூன்று வருடம் முன் தியேட்டரில் என் காலை மிதித்து விட்டு மன்னிப்பு கூட கேட்காமல் சென்றவன்தானே நீ. எனக்கு எத்தனை வலித்தது தெரியுமா?”

அவரின் முகம் சிவந்தது. அருகில் வேறு யாரும் இல்லை . கொலை ஏதும் செய்து விடுவானோ? என் முகத்தை முறைத்து  பார்க்க தொடங்கினான். எந்த தியேட்டரில்  இவன் காலை மிதித்தேன். யோசித்து...........

“ஆ........”


என்னுடைய காலை ஓங்கி மிதித்து விட்டு  அவர் ஓடி கொண்டிருந்தார்.


Monday, April 7, 2014

பிரபஞ்சத் தேடல்

“நீங்கள் அந்த கிரகத்தில் இறங்கி விட்டீர்களா?” பூமியிலிருந்து நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அந்த தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நான் எதிர் பார்த்தது போல் பூமியுடன்   தொடர்பு துண்டிக்கப்படவில்லை.

“இன்னும் சில வினாடிகளில் இறங்கி விடுவோம்  சார்” குரலில் உற்சாகத்தை ஏற்றி சொன்னேன்.

“நல்லது. நீங்கள் செய்யப்போகும் காரியம்  மிகப் பெரியது. இதுவரை பிரபஞ்சத்தில் யாருமே செய்யாதது. மிகப் பெரிய பொருட்செலவில் இதை செயல்படுத்துகிறோம்  என்பதை உணர்ந்து கவனமாக செயல்படுங்கள்.”

“உத்தரவு சார்.”

“நியாபகம் வைத்து கொள்ளுங்கள். அதை கண்டறிய  வேண்டுமானால் நீங்கள் நம்முடைய விசேச கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.”

“நீங்கள் அதை பார்த்து விட்டீர்கள்தானே?”

“பார்த்து விட்டோம்”

“நேரில் பார்க்க எப்படி இருக்கிறது அது?”

“வர்ணிக்க தெரியவில்லை. ஒளி போல தெரிகிறது. கருப்பா, வெள்ளையா? உயரமா, குட்டையா? சொல்லத் தெரியவில்லை. எதையுமே  வர்ணிக்கத்  தெரியவில்லை.”

“ஆனால்  அது தெரிகிறதுதானே?”

“ஆமாம் சார்”

“அப்போது உன் குழுவிற்கு ஆணை பிறப்பிக்கலாம்”

“உத்தரவு”

சொல்லி விட்டு ஏன் அணியினருக்கு கட்டளைகளை அளிக்க தொடங்கினேன்

“எல்லாரும் தயாராகுங்கள். அதை பிடித்த மறு நிமிடம் நம் விண்கலத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். அதன் பதில் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எச்சரிக்கை.”

நான் கட்டளைகளை அளிக்கும் முன்னரே என்னுடைய அணியினர் தயார் நிலையில் இருந்தனர். முன்னர் வகுத்து இருந்த திட்டப்படி அதை நோக்கி முன்னேற தொடங்கினோம். அது நாங்கள் வருவதை அது கண்டுகொண்டதாகவே தெரியவில்லை

நான் என் கையில் இருந்த அந்த கதிர்வீச்சு துப்பாக்கியை தயாராக வைத்து கொண்டேன். இன்னும் சில அடிகளில் அதன் மேல் பிரயோகித்து விடலாம். அது இதற்கு கட்டுப்படுமா? கோபத்தில் எங்களையும் பூமியையும் அழித்து விடுமா? மனதில் நின்ற கேள்விகளை  தவிர்த்து வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

“கேப்டன்! பிரயோகித்து விடுங்கள் கேப்டன்! நாங்கள் எங்கள்  ஆயுதங்களை தயாராகவே வைத்துள்ளோம். ஏதேனும் சிக்கலென்றால் பார்த்து கொள்கிறோம்” என்னுடைய டெபுடி எனக்கு ஊக்கம் அளித்தான்.

“இதே பிரயோகித்து விடலாம்”

தயக்கத்துடன் என் துப்பாக்கியில் மாயக்கதிர் உருவாக வேண்டிய ஆரத்தை குறிப்பிட்டு ட்ரிக்கரை இழுத்தேன். எதிர்பார்த்தது போலவே கச்சிதமாக  அந்த மாய உருவத்தை எங்கள் கதிர்வீச்சு சிறை பிடித்தது. அந்த துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டு இருந்த  எங்கள் கம்ப்யூட்டர்கள் அந்த மாய வட்டத்தை அந்த உருவத்துடன் விண்கலத்தை நோக்கி இழுக்கத் தொடங்கின. சில நொடிகள்தான். அந்த உருவம் எங்கள் விண்கலத்தில் தனியாக வடிவமைக்கப்பட்ட அறையில் சிறைபிடிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அதை பிடித்து விட்டோம்.


“யாஹ்ஹூ” எங்கள் அணியினர் உற்சாக கூக்குரல் எழுப்ப தொடங்கினர்.

“கேப்டன்! எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இத்தனை சுலபமாக சாதித்து விட்டோம். அது துளி எதிர்ப்பு கூட காட்டவில்லையே?”

“எல்லாம் கடவுளின் கருணை.” என்னை அறியாமல் நான் சொன்ன பதிலை கேட்டு எங்கள் அணியினர் சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்
.
“என்ன கேப்டன் நீங்கள்? பிரபஞ்சத்தில் கடவுளையே தேடி கண்டுபிடித்து விட்டோம்; சிறையும் பிடித்து விட்டோம். இன்னமும் கடவுளின் கருணை என்கிறீர்களே?”

“உண்மைதான். ஆனால் இது என்னுடைய பழக்கம். ஆனால் நண்பர்களே. நான் இதை பூமிக்கு கொண்டு சென்று சேர்க்கும்வரை நம்முடைய மிசன் முடியவில்லை. பயணத்திற்கு தயாராகுங்கள்.”

சில நிமிடங்களில் பூமியை நோக்கி விண்கலத்தை செலுத்த தொடங்கினோம்.

“ஆரே!” என் பெயரை சொல்லி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தேன்.

விண்கலத்தில்  எல்லாரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். சத்தம் எங்கே இருந்து வந்தது. அதுவும் ஏன் பெயரை சொல்லி என்னை அழைக்கும் தைரியம் யாருக்கு வந்தது. ஒரு வேளை கடவுள்தான் பேசுகிறாரோ?

“ஆமாம்! நீ நினைப்பது சரி. கடவுள்தான் பேசுகிறேன்”

“நினைத்தேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

“நான் உன்னுடன் பேசலாமா?”

“விதிப்படி நான் உங்களிடம் கேள்விகள் கேட்கக்  கூடாது. ஆனால் உங்களுக்கு கேள்வி கேட்க  உரிமை உண்டு. ஆனால் எங்களிடம் இருந்து விடுதலை மட்டும் பெற்று விடலாம் என்று நினைக்காதீர்கள்”

“நான் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடித்தீர்கள்?”

“அதை விளக்குவது எளிது அல்ல. பல கோடிகள் செலவு செய்து பிரபஞ்சம் முழுவதும்  அலசி உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தோம்."

“என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”

“பூமிக்கு”

“அங்கே என்னை கொண்டு சென்று என்ன செய்யப் போகிறீர்கள்”

“உங்களை ஆராய்ச்சி செய்யப்போகிறோம். உங்களிடமிருந்து கடவுள் கூறு என்ன என்று ஆராய்ந்து மனிதர்களை கடவுளாக்க போகிறோம்.”

“நல்லது. அதன் பின்”

“அதன் பின் எல்லாரும் கடவுள். யாருக்கும் மரணமில்லை. ஆளுக்கு ஒரு பிரபஞ்சம் படைப்பார்கள். தனியாக ஒரு சொர்க்கம் படைத்தது அதில் வாழ்வார்கள். வாழ்க்கையின் ரகசியம் அனைத்தும் உங்களை கொண்டு அறிவோம். கவலையில்லா வாழ்வு வாழ்வோம்”

“என்னை பூமிக்கு கொண்டு சென்றால் என்ன ஆகும் என்று யோசித்தாயா? உங்கள் பூமியில் உள்ள அத்தனை மதத்தினரும் என்னை சொந்தம் கொண்டாடுவார்கள். மத மோதல்கள் அதிகமாகும். நாத்திகர்கள் நான் கடவுளே இல்லை என்பார்கள். என்ன செய்வீர்கள்?”

“அது  எங்கள் கவலை. உங்களுக்கு எதற்கு? மேலும் நீங்கள் பூமிக்கு சென்ற பின் மக்கள் உண்மையில்  மதங்களையே மறந்து விடுவார்கள்

“மனிதா! நான் சொல்வதை கேள். நீ  என்னை பூமிக்கு கொண்டு சென்றால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.”

“நான் இதை பற்றி எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. என்னுடைய பணி உங்களை பூமிக்கு கொண்டு செல்வது.”

கடவுளிடமிருந்து பதில் இல்லை. சில நொடி மௌனத்திற்கு பின் கடவுளிடம் கேட்டேன். 

“கடவுளே! என்னிடம் மட்டும் சொல்லுங்கள். எங்கள் மதத்தினர் வழிபாடுதானே உங்களை அடைய சரியான வழி?”

எது சரியான வழி என்று இப்போது அறிந்து கொள்வாய்

சொல்லிவிட்டு கடவுள் இடியென சிரித்தார்.  எங்கள் விண்கலம் கட்டுப்பாடு இழந்து  ஒரு பெரும் குலுங்கலுடன் திசை மாறியது. மிகப்பெரிய விண்கல் ஒன்று எங்கள் விண்கலத்தை  நோக்கி வந்து கொண்டிருப்பதை என்னால் விண்கலத்தின்  ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...