Showing posts with label தோனி. Show all posts
Showing posts with label தோனி. Show all posts

Saturday, June 1, 2013

தோனி - ஒரு அதிசயம் - நிறைவு பகுதி

T-20 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி ஓவரை தோனி  ஜோகிந்தர் சர்மாவுக்கு கொடுத்தது பலரை ஆச்சர்யப்பட வைத்தது. அந்த தொடரில் தோனியின்  வெற்றிக்கு காரணம் அவரின் துணிச்சல் என்று சிலரும், அதிர்ஷ்டம் என்று சிலரும் பேச தொடங்கினார்கள். இருந்தும் எனக்கு அவரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டம் என்று தோணவில்லை. காரணம், இறுதி போட்டியில் தோற்ற பின் பாகிஸ்தான் அணி தலைவர் சோயப் மாலிக் கூறிய கருத்து. இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வேறுபாடு நெருக்கடியை கையாளும் விதம் என்றார் அவர். அனுபவம் மிகுந்த பாகிஸ்தான் அணியை விட இளம் இந்திய அணி சிறப்பாக நெருக்கடியை கையாண்டால் அதற்கு நிச்சயம் தோனிதான் காரணம் என்று நம்பினேன்.

அந்த T-20 உலக கோப்பை வெற்றிக்கு பின் தோனியின் மேல் நம்பிக்கை அதிகரித்தது . கால ஓட்டத்தில் டிராவிட் அணியில் இருந்து நீக்கப்பட ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாகவும், கும்ப்ளே ஓய்வுக்கு பின் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாகவும் நியமிக்கபட்டார். அணியில் டிராவிட் இல்லாத நிலையில் தனது ஆட்ட முறையையே மாற்றி டிராவிட் போல பொறுமையாக ஆடி அணியின் இளம் வீரர்களுக்கு தங்களின் விருப்பம் போல் ஆடும் சுதந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 

2008ம்  ஆண்டு காமன் வெல்த் பேங்க் முத்தரப்பு  தொடர். அத் தொடர் மூன்று பைனல்களை கொண்டது. இந்தியாவும் வலிமையான ஆஸ்திரேலியாவும்  பைனலுக்கு முன்னேறின.  இறுதி போட்டிகளுக்கு  முன் பேட்டி அளித்த பாண்டிங் தன் வழக்கமான திமிருடன்,   2 பைனல்களுக்கு மேல் இந்த தொடர் நடக்காது; ஆஸ்திரேலியா முதல் 2 போட்டிகளிலேயே வென்று விடும் என்றார். அவர் கணித்தபடி  2 பைனல்களே அந்த தொடரில் நடந்தன. ஆனால் வென்றதோ இந்திய அணி. பாண்டிங் சொன்னதை, தோனி செய்து காட்டினார். ஆஸ்திரேலியாவின் ஆணவத்திற்கு சவுக்கடி கொடுத்தார். இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரை வென்றது.

 அதன் பின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் அவரும் இணைந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார்கள். கூடவே அணியை 2011 உலக கோப்பைக்கும் தயார் செய்தார்கள். இந்திய அணியின் 2011 உலக கோப்பை வெற்றிக்கு இவர்களின் முன் திட்டமிடலே காரணம்.

 
2011  உலக கோப்பை இறுதி போட்டி. தோனி சிக்ஸர் அடித்து அணியை ஜெயிக்க வைத்தார். நாடே வெற்றி களிப்பில் மிதந்தது .  ஆனால் தோனியோ அப்போதும் அதனை பெரிதாக கொண்டாடவில்லை  அத்தனை பெரிய வெற்றிக்கு பின்னும், 2007ல் ரன் எடுக்காமல் வெளியேறிய போது பார்த்த அதே சலனமற்ற முகம் . 'இதுவும் கடந்து போகும்; எப்போதும் சம நிலையை இழக்காதே' என்று எப்போதோ படித்த போதனை கதை நினைவுக்கு வந்தது. கோப்பை வாங்கிய பின்னர் அணியினரின் கொண்டாட்டத்தில் கூட பெரிய அளவில் பங்கேற்கவில்லை. வெற்றிக்கு தன் அணியினரை பொறுப்பாக்கி தான் எதுவுமே செய்யாதது போல இருந்தார் கேப்டன் கூல். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கு பாடம் எடுத்தார்.

2007ல் தோனியிடம் இருந்த கூல், 2011ல் இல்லை என்பது உண்மையே. அதற்க்கு காரணம் என நான் நினைப்பது 2007ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. 2011ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. வென்று காட்டிய பின் அதை தொடர வேண்டிய கட்டாயம் சில நேரங்களில் அவரை மிக சிறிதளவு நிதானம் தவற செய்தது. இருப்பினும் அவர் ஒரு போதும் மைதானத்தில் கத்தியோ, முகம் சுளித்தோ பார்த்ததில்லை.

இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கபட்டதும் தனி பட்ட முறையில் கங்குலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டது. சச்சின், அசாருக்கும் கூட அப்படியே. ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்டும் தோனியின் பேட்டிங்கில் பெரிய அளவு பாதிப்பு ஏதும் இல்லை. ஒரு நாள் போட்டிகளில் இன்னும்  சிறப்பான சராசரியை கொண்டுள்ளார். இத்தனைக்கும்  விக்கெட் கீப்பர் பணி வேறு . அனைத்தையும் அருமையாக கையாள்கிறார்.

 அதீத நம்பிக்கை, தோல்வியையும் வெற்றியையும் ஒரே போல் எடுத்து கொள்ளும் பக்குவம், துணிச்சல் என  ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தோனி எனக்கு ஒரு அதிசயமே. உங்களுக்கு?


Friday, May 24, 2013

தோனி - ஒரு அதிசயம் - 3

2007ம் ஆண்டு உலக கோப்பை ஆட சென்ற இந்திய அணியின் மேல் யாருக்கும் பெரிய நம்பிக்கை எல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை.இருந்தாலும் அப்படி ஒரு தோல்வியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.வீரர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கண்ணீர் விட வைத்த தொடர் அது. அந்த தொடரின் முதல் சுற்றிலேயே படு தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய அணி.

இந்திய அணிக்கு தொடரின் முதல் போட்டி பங்களாதேஷ் அணியுடன். அந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி. மீதமிருந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை. தனது இரண்டாவது போட்டியில் பெர்முடாவை நசுக்கிய இந்தியா, மூன்றாவது போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இலங்கையை சந்தித்தது. 

அந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 254 ரன்களை சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின. 120 ரன்களை சேர்க்கும் முன் 5 விக்கெட்டுகளை இழந்த  இந்திய அணிக்கும், இருந்த கடைசி நம்பிக்கை தோனி மட்டுமே.  நானும் தோனி இருக்கும்வரை கவலை பட தேவை இல்லை. சற்று நேரம் ஆடினால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார் என்ற நினைப்பில் இருந்தேன். 

ஆட வந்த தோனி தனது முதல் பந்தை  எதிர் கொண்டது முரளிதரனிடமிருந்து. அதீதமாக திசை திரும்பிய அந்த பந்து தோனியின் கால் காப்பில் பட்டது. நடுவர் விரலை தூக்கி விட ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் தோனி. தோனியை கண்டு நான் அதிசயித்த நேரங்களில் இதுவும் ஒன்று. ஏன் என்று கேட்கிறீர்களா? அந்த  அவுட் ஆனதும் மற்ற வீரர்களின் முகத்தில் தென்பட்ட சோகமோ, விரக்தியோ தோனியின் முகத்தில் சிறிதும் இல்லை. ஏதோ ஒரு கண்காட்சி போட்டியில் ஆட்டம் இழந்த வீரர் போல வழக்கமான  உணர்ச்சியற்ற முகத்துடன் வெளியேறினார்.

 
எதற்கும் பயமும் இல்லை, கவலையும் இல்லை என்ன மாதிரியான மனிதன் இவன் என அந்த சோகமான நேரத்திலும் ஆச்சரியமடைந்தேன். கீதை குறிப்பிடும் கர்ம யோகியா இவர்? எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டாரா? இவர் போல நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என யோசிக்க தொடங்கினேன்.

இந்திய அணி அந்த போட்டியில்  தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. அந்த தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்களின் வீட்டில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. தோனியின் வீடும் தப்பவில்லை. அதன் பின் அணிக்குள்ளே புகைந்து கொண்டிருந்த சாப்பல் பிரச்சினை வெளியே வந்தது. இந்திய அணிக்கு கடும் சோதனையான காலகட்டம் அது. அந்த பிரச்சினைகளில் இருந்து சிறிது, சிறிதாக வெளியே வந்த இந்திய அணி இங்கிலாந்தில்  டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. அப்போதுதான் வந்தது T-20 உலக கோப்பை.

T-20 உலக கோப்பை அணியிலிருந்து இளைஞர்களுக்கு வழி விட்டு விலகுவதாக அப்போதைய கேப்டன் டிராவிட், சச்சின், கங்குலி போன்ற   சீனியர் வீரர்கள் அறிவித்தனர். இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த பிரச்சினை இவர்களுக்கு மாற்று வீரர்களை தேடுவது. அதை விட பெரிய பிரச்சினை ஒரு புதிய கேப்டனை நியமிப்பது.  சச்சினின் யோசனைப்படி தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தோனி கேப்டனாக சரியான ஆள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஒரு விக்கெட் கீப்பரை கேப்டனாக அறிவிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எப்படியோ தோனி கேப்டனாகி விட்டார். அந்த தொடரையும் வென்று கொடுத்தார். அந்த தொடரை பார்த்த அனைவரும் அவர் சிக்கலான சூழலையும்  மிக கூலாக கையாண்டதாக பாராட்டினார். ஆனால் எனக்கு ஒன்றும் அதில் வியப்பில்லை. அவர் அது போன்ற சூழ்நிலைகளில் பதட்டப்பட்டு செயல்பட்டிருந்தால்தான் எனக்கு அது ஆச்சரியம் அளித்திருக்கும்.

-  ஆச்சரியங்கள் தொடரும் 

Monday, May 20, 2013

தோனி - ஒரு அதிசயம் - 2

தோனியின் அந்த ஆட்டத்தை பார்த்த பின் எனக்கு அவர் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்தது. இந்திய அணிக்கு ஒரு அதிரடி ஆட்டக்காரர் கிடைத்துவிட்டார் என முடிவு செய்து விட்டேன். இந்த நிலையில் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த பயணத்தில்தான் தோனியின் இன்னொரு முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரின் ஒரு போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 250 ரன்களை சேர்த்தது. 250 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு  100 ரன்களை சேர்க்கும் முன் ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆறாவது விக்கெட்டுக்கு களம் இறங்கினார் தோனி. அவரால் அதிரடி ஆட்டம் மட்டுமே ஆட முடியும் என்று நம்பி கொண்டு இருந்தேன். ஆட்டத்தின் போக்கை உணராமல் அவசரப்பட்டு ரன் எடுக்க முயன்று அவுட்டாகிவிடுவார் என்று கணித்தேன். இந்திய அணியின் தோல்வி உறுதி என்று முடிவு செய்தே விட்டேன். இந்த முறை தோனி மீண்டும் நான் கணித்தது தவறு என்று முடிவு செய்தார். யுவராஜுடன் இணைந்து மிக கவனமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். அதிரடி ஆட்டம் மட்டுமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப அணிக்கு தனது பங்களிப்பை வழங்க முடியும் என்று நிரூபித்தார்.

இந்த தொடரில் அவரின் அசுர வேக ஸ்டம்பிங்களையும் கவனித்தேன். அவரின்  கைகள், காரணமே இல்லாமல் ஸ்டம்ப்களை தட்டி விடுவது போல் இருக்கும். ஆனால் ரீப்ளே செய்து பார்க்கும்போது பேட்ஸ்மேன் கால்களை மிக சிறிய அளவு கிரீசை விட்டு வெளியே எடுத்து இருப்பது தெரியும். தோனி தனது  மின்னல் வேகத்தால் அந்த இடைவெளியை சரியாக பயன்படுத்தி இருப்பார்.

அதன் பின் நடந்த பாகிஸ்தான் தொடர் தோனியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. முஷாரப் தோனியின் ஹேர் ஸ்டைலை பாராட்ட, இந்திய ரசிகர்கள் அவரை போன்றே தங்கள் ஹேர் ஸ்டைலை அமைத்து கொண்டனர். தோனி ஒரு தேசிய ஹீரோவாக இந்த தொடரின் முடிவில் மாறி போனார். இதற்கு இடையில் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பும் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து தோனியை வந்து சேர்ந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டிகளிலும் சாதித்து காட்டினார் தோனி.


இப்படி தோனி தன்னை அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாற்றி கொண்டு இருந்தார். ஒரு நாள் போட்டிகளில் தன் பேட்டிங் சராசரியை 50க்கு மேலும், ஸ்ட்ரைக் ரேட்டை 100க்கு மேலும் வைத்து இருந்தார். அவரை அணியின் கேப்டனாக கூட நியமிக்கலாம் என என்ன தொடங்கினேன். அப்போது ஒரு ஆட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் என் எண்ணத்தை வலுவாக்கியது. ஒரு போட்டியின்போது தோனி பந்தை பௌலரிடமே திருப்பி அடித்தார். பந்தை பிடித்த பௌலர் அதை தோனியை நோக்கி எறிவது போல பாவ்லா காண்பித்தார். பேட்ஸ்மேன்களை எரிச்சலூட்டி அவர்களின் கவனம் சிதற செய்ய பௌலர்கள் கையாளும் யுக்தி இது. பொதுவாக இது போன்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் பயத்தில் ஸ்டம்பை விட்டு விலகி ஓடுவர். அல்லது பௌலரை முறைப்பார்கள். ஆனால் தோனி என்ன செய்தார் தெரியுமா? நின்ற இடத்திலே சிறிதும் அசைவற்று நின்று கொண்டார். பின் பௌலரை பார்த்து ஒரு தனது  வழக்கமான புன்னகையை உதிர்த்தார். "அட பாவி! நீ எதுக்குமே பயப்பட மாட்டியா" என நினைத்து கொண்டேன். அந்த சம்பவத்திற்கு பின் இவர் கேப்டனாக தகுதியானவர் என்ற என் எண்ணம் வலுப்பட்டது. 

இப்படி தோனிக்கு எல்லாம் உச்சத்தில் சென்று கொண்டு இருக்கும்போதுதான் 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடர் வந்தது. எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் எளிதில் மறக்க முடியாத தொடர் அது.

- தொடரும் 

Thursday, May 9, 2013

தோனி - ஒரு அதிசயம்

ங்குலி தலைமையில் பல வெற்றிகளை இந்திய அணி குவித்து வந்த காலம். அந்த அணிக்கு இருந்த மிக பெரிய பிரச்சனை சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாதது. பார்த்திவ், தினேஷ் கார்த்திக் என சில வீரர்களை முயன்றபோதும் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே ராகுல் டிராவிட் வேண்டா வெறுப்பாக விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருந்தார். கங்குலியோ, "இந்தியாவில் ஒரு கில்க்ரிஸ்டோ, மார்க் பவுச்சரோ இல்லை; எனவே டிராவிடே விக்கெட் கீப்பிங் செய்வார்"  என பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால் டிராவிட்டின்  விக்கெட் கீப்பிங் சொல்லி கொள்ளும்படி இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணி வங்கதேசம் சென்றது. வழக்கமாக சிறிய அணிகளுடன் மோதும்போது புதிய வீரர்கள் அதிக அளவில் வாய்ப்பு பெறுவார்கள். அப்பொழுதும் அதே போல் அணியில் சில  புதுமுக வீரர்கள் வாய்ப்பு பெற்றார்கள். அப்பொழுது இந்திய A அணியில் அசத்தி கொண்டு இருந்த தோனியும் வாய்ப்பு பெற்றார். 

2004 ஆம் ஆண்டு தோனியின் முதல் போட்டி.  நீளமான முடி; இந்திய வீரர்கள் யாருக்கும் இல்லாத கட்டுமஸ்தான உருவம். பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார்.  முதல் போட்டியில் ஒரு ரன்னும் எடுக்காமல் அவுட்.  அடுத்த போட்டியில் அவரின் பேட்டிங்கை பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது. அந்த போட்டியில் சர்வ சாதாரணமாக ஒரு சிக்ஸர் அடித்தார். பின் சிங்க பல் தெரிய ஒரு சிரிப்பு. அவரின் உடல்  வலிமை கவனிக்க வைத்தது. ஆனால்  அவரின் பேட்டிங் ஸ்டைல் மிக மோசம் . சர்வதேச கிரிக்கெட் வீரர் போலவே இல்லை. இந்த பேட்டிங்  ஸ்டைலில் ஆடி சாதிப்பது சாத்தியமே இல்லை. அதிரடியாக ஆடினால் சில போட்டிகளில்  அதிக பட்சம் 30 அல்லது 40 ரன்கள் எடுக்கலாம்.  ஆனால் பெரிய ஸ்கோர், நம்பகமான ஆட்டம் எல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைத்தேன். நினைத்தது போலவே அந்த தொடரில் சுமாராகவே ஆடினார். டிராவிட்டின் தலைவலி எப்போதும் தீராது போலும் என்று எண்ணி கொண்டேன். 


அடுத்த தொடர் பாகிஸ்தானுடன். இந்த தொடருக்கு  அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என  கொண்டேன். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்க பட்டது. இளைஞர்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்த சாப்பல் ஒரு போட்டியில்  தோனிக்கு மூன்றாவது வீரராக களம் இறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் வரலாறு எழுதப்பட்டது அந்த போட்டியில்தான். அந்த போட்டியில் நான்கும், ஆறுமாக அடித்து  அவர் அடித்த ரன்கள் 148. அந்த ஆட்டத்தை பார்த்த டிவி வர்ணனையாளர்களோ  தாங்கள் பார்ப்பது தோனியையா, இல்லை விவியன் ரிச்சர்ட்சின் புயல் வேக ஆட்டத்தையா என வியந்தனர். நானோ இது எத்தனை நாட்களுக்கு என பார்க்கலாம் என எண்ணி கொண்டேன். இந்த ஒரு போட்டியில் ஆடியதால் இன்னும் ஒரு ஆண்டுக்கு அணியில் இருப்பார் என்று எண்ணினேன். . ஆனால் அந்த ஆட்டத்தை முழுவதுமாகவும் என்னால் ஒதுக்கி விட முடியவில்லை. காரணம், அந்த போட்டியில் தோனி காட்டிய அட்டிடியுட். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று எல்லா வீர்களுக்கும் இருக்கும் பயமோ, பதட்டமோ அவரிடம் சுத்தமாக இல்லை. சதம் எடுத்த பின்னும்  முதல் சதம் எடுத்த வீரரின் முகத்தில் இருக்கும் பூரிப்பு அவரின் முகத்தில் இல்லை. தான் எதுவுமே செய்யாதது போல சலனமற்ற முகத்தோடு அவ்வளவு இயல்பாக பந்துகளை நொறுக்கினார்.  

அதற்கு பின் இலங்கை தொடரில் அவர் அடித்த சதமோ அவரின் புகழை இன்னும் உயர்த்தியது. மின்னல் வேகத்தில் 183 ரன்களை குவித்து அந்த போட்டியில் பல  சாதனைகள் படைத்தார். எனக்கு  அந்த ஆட்டத்தை முழுவதும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவரின் ஓடி ரன் சேர்க்கும் வேகம், அசாத்திய பலம் இது எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. தோனியை நான்  முதல்முதலில் வியந்து பார்த்தது அன்றுதான்.

                                                                                                                                            தொடரும் 

 உங்களின் வரவேற்பை பொறுத்தே அடுத்த பகுதி எழுதுவது பற்றி முடிவு செய்வேன்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...