Friday, November 14, 2014

இந்த கதையை நம்புறதும், நம்பாததும் உங்க இஷ்டம்!

தன் பின் வரும் எதையும் நீங்கள் நம்பப் போவதில்லை. உங்களை நம்ப வைப்பது எனது நோக்கமும் இல்லை. ஆனால் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதை ஒரு முறை படித்து விடுங்கள். கடந்த மாதம் கடவுள் என்னை சந்திக்க வந்திருந்தார். விடாத வேலைப்பளு அவரை சோர்வு கொள்ள செய்திருந்தது. வந்தவர் நேராக என்னை நோக்கி இந்த கேள்வியை வீசினார்.

இந்த மனுசங்களுக்கு என்னதான்பா வேணும். எப்ப பாரு அது இல்ல, இது இல்லன்னு வந்து புலம்பிகிட்டு. உங்களையெல்லாம் ஏன் படைச்சேன்னு இப்போ யோசிக்கிறேன்”

“டூ லேட் கடவுளே!”

“சரி இப்போ சொல்லு. நான் உலகத்தை எல்லாம் அழிக்க விரும்பல. ஆனா மனுஷங்களோட எல்லா பிரச்சினையையும் தீர்க்கணும்னு நினைக்கிறேன். எப்பிடி இருந்தா நீங்க சந்தோசமா இருப்பீங்க”

“கடவுளே! மனுசனோட முதல் பிரச்சினை ஆசை. அடுத்த பிரச்சினை பொறாமை. இது ரெண்டையும் தீர்த்து வச்சுடுங்க.”

“எப்பிடி சொல்லேன்?” கடவுள் ஆர்வமாக கேட்டார்.

“கொஞ்சம் பாருங்க. ஒருத்தன் பணக்காரனா இருக்கான். பெரிய வீட்ல இருக்கான். இன்னொருத்தன் ஏழையா இருக்கான். குடிசைல இருக்கான். எல்லாருக்கும் ஒரே மாதிரி சொந்த வீட்டையும், சொத்தையும் குடுங்க முதல்ல”

“இவ்வளவுதானா?” கடவுள் கேட்டுவிட்டு கைகளை தட்டினார். உலகம் எப்படி மாறிவிட்டது என்று என் கைகளில் பார் என்று உள்ளங்கையை விரித்து காட்டினார்.

ஆச்சரியம். அவர் உள்ளங்கைகளில் தெரிந்த உலகத்தில்  எல்லா வீடுகளும் ஒரே மாதிரி, எல்லா மனிதர்களும் விலை உயர்ந்த ஆடை அணிந்து. உலகமே மாறி விட்டது.

“சூப்பர் கடவுளே!“

“முடிந்ததா?”

“அது எப்பிடி முடியும் கடவுளே. கொஞ்ச நாள்ல மறுபடியும் புத்தி இருக்குறவன், மத்தவன் சொத்தை எல்லாம் ஏமாத்தி பிடிங்கிடுவான். அதனால எல்லாருக்கும் ஒரே மாதிரி புத்தியை குடுங்க.”

“இது முக்கியமா?”

“இதுதான் ரொம்ப முக்கியம்”

கடவுள் கைகளை தட்டினார். “இனிமே எல்லாரும் ஒரே மாதிரி புத்திசாலி” என்றார்.

“இனிமே மனுசங்க எல்லாரும் சந்தோசமா இருப்பாங்களா?”

“அதுக்குள்ள சந்தோசமா? உங்க கையை பாருங்க. அந்த பொண்ணு அந்த வடக்கு தெருல நடந்து போய்கிட்டு இருக்குற பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இல்ல?”

“ஆமாம்”

“பக்கத்து தெருல போற பொண்ணு இந்த பொண்ணை விட அழகு கம்மியா தெரியல?”

“மனிதா! அழகுங்குறது பாக்குற கண்ணுல”

“தத்துவம் எல்லாம் பேசாதீங்க கடவுளே. நீங்க என்ன பண்றீங்க உலகத்துல இருக்கிற எல்லா பொம்பளங்களையும் ஐஸ்வர்யாராய் மாதிரி அழகா மாத்திடுங்க. எல்லா ஆம்பளைங்களையும் அமெரிக்கால டாம் க்ரூஸ் அப்பிடின்னு ஒரு நடிகர் இருக்கார். அவரு மாதிரி மாத்திடுங்க”

“அப்போ ஒருத்தருக்கும் இன்னொருத்தருக்கும்  வித்தியாசம் தெரியாதே?”

“அட கடவுளே! அவங்கள மாதிரியே மாத்த சொல்லல. அவங்க மாதிரி அழகா மாத்திடுங்கன்னு சொன்னேன்.”

சொன்னதும் கடவுள் கை தட்டி கைகளை விரித்தார். ஆகா! உலகம்  முழுக்க  ஐஸ்வர்யாராய் மாதிரி பெண்கள். என்ன ஒரு கண் கொள்ளா காட்சி. ஆப்ரிக்காகாரனும், அமெரிக்காகாரனும் ஒரே நிறத்தில். இந்தியர்களும், வெள்ளைகாரர்களும் ஒரே மாதிரி அழகாக.

“அப்புறம் இன்னொன்னு நீங்க செய்யணும். இனிமே மனுஷனுக்கு பசிக்க கூடாது. நோய் எதுவும் வர கூடாது.”

“என்ன இது? முட்டாள்தனமா இருக்கு?”

“யோசிங்க கடவுளே. எல்லாருக்கும் ஒரே மாதிரி வீடு, சொத்து எல்லாம் கொடுத்தாச்சு. ஒரே மாதிரி புத்திசாலித்தனம் குடுத்தாச்சு. இனிமே யாரு எந்த வேலையை பாக்குறதுன்னு பிரச்சினை வரும். யாரும் வேலைக்கே போக மாட்டாங்க ஒரு கட்டத்துல. அப்போ பசியை எடுத்துட்டா எல்லாரும் இருக்குற வீட்ல சந்தோசமா அவங்களோட  ஐஸ்வர்யாராய் கூட வாழ்ந்துக்குவாங்களே.”

“சரிதான்! இனிமே யாருக்கும்  பசி, பிணி கிடையாது. போதுமா”

“செம கடவுளே! அப்புறம் எல்லாரையும் ஒரே மொழி பேச வச்சுடுங்க. எல்லாரையும் நீங்களே ஏதாவது ஒரு மதத்துக்கு மாத்தி விட்ருங்க. அப்புறம் பாருங்க.”

கடவுள் கைகளை தட்டினார்.

“இப்போ எல்லாரும் ஒரே மாதிரி பணக்காரங்க. எவனும் எவனையும் ஏமாத்த முடியாது. எல்லா பொம்பளைங்களும் அழகு. இனிமே யாரும் உங்க கிட்ட வந்து எதையும் கேட்க முடியாது. பசியும் கிடையாது. ஆசையும், பொறாமையும் இல்லாமலே போயிடும் இனிமே. சந்தோசம்தானே கடவுளே. இனிமே நீங்க நிம்மதியா தூங்கலாம்.”

“சந்தோசம்! இன்னும் ஏதாவது யோசனை இருந்தா என்னை கூப்பிட்டு சொல்லு. இன்னும் ரெண்டு நாள் டைம் எடுத்து நாம எந்த கரெக்சன் இருந்தாலும் செஞ்சுக்கலாம்”

கடவுள் மறைந்து விட்டார்.

டவுளுக்கு உலகை சீரமைக்க உதவிய திருப்தியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து  நடக்க தொடங்கினேன். நேராக என்னுடைய வீட்டுக்கு சென்றேன். உலகம் அமைதியாக இருந்தது. எல்லாரும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். அதனால் என்ன? யாருக்கும் எந்த குறையும் இல்லையே இப்போது. இதோ சமத்துவ உலகம். கடைகள் இல்லை. எந்த ஒரு போக்குவரத்தும் இல்லை. ஏதோ ஒரு டாம் க்ரூஸ் மட்டும்  தனது ஐஸ்வர்யாராயுடன்  என்னை கடந்து சென்றார். அவர்கள் எங்கே போகிறார்கள்? நேரம் போக்க  சிறிது உலாவிவிட்டு வருவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.  

ஏதோ ஒரு இனம் புரியாத கவலை என்னை கவ்வியது. வித்தியாசங்களே உலகை இயங்க வைப்பதாக தோன்றியது. பசி வேண்டும். கவலை வேண்டும். தேடல் வேண்டும். வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும். இப்படியே போனால் சிறிது நாட்களில் எல்லாருக்கும் பித்து பிடித்து விடும். உலகம் அதுவாகவே அழிந்து விடும். மீண்டும் கடவுளை கூப்பிட்டு பேச தொடங்கினேன். பின்னர் என்ன? சில நிமிடங்கள்  டாம் க்ரூஸ், ஐஸ்வர்யாராய் போல இருந்த நீங்களும் நானும் மீண்டும் பழைய உருவத்தையே அடைந்து விட்டோம். இதெல்லாம் எப்போது நடந்தது என்று யோசிக்க வேண்டாம். அதை கடவுள் அப்போதே  மறக்க வைத்து விட்டார். ஆனால் பாவம். அவரின் பிரச்சினைதான் இன்னும் தீர்ந்தபாடு இல்லை.

Tuesday, November 4, 2014

ஒரு சிறிய தடங்கல்

ந்த தளத்துக்கு நேரடியாக வருகை புரிபவர்கள் கவனத்துக்கு. சில சொந்த பிரச்சினைகளாலும், போதிய வரவேற்பு இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை. தங்களை  போன்றவர்களின் ஆதரவுடன் விரைவில் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என்று நம்புகிறேன்.


விரைவில் எழுதவும், மறு வருகையில் முன்பை விட சிறப்பான படைப்புகளை படைக்கவும் முயல்கிறேன். நன்றி.
 .

Monday, October 20, 2014

இது வாட்ஸ்அப் காலம்

மீப காலத்தைய தகவல்  தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பிரமிக்க வைக்கிறது. திருபாய் அம்பானியின் கனவு என்று ஆயிரம் ரூபாய்க்கு நேற்றுதான் செல்போன் கொடுத்தது போல உள்ளது. குறுகிய காலத்தில் அது  கிடுகிடுவென வளர்ந்து இன்று வாட்ஸ்அப்பில்  வந்து நிற்கிறது.

பேஸ்புக் கூட சிறிது நேரத்தில் போர் அடித்து விடும். ஆனால் வாட்ஸ்அப்பில் அந்த பிரச்சினை கிடையாது. பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் ஒரு உடன் பணி செய்பவர்கள், சொந்த பந்தங்கள் என்று அனைவருடனும் ஒரு குரூப் ஆரம்பித்து விட வேண்டியது. நேரம் காலம் தெரியாமல் என்று வாட்ஸ் அப்ப வேண்டியது. காதலிப்பவர்களுக்கு இன்னும் எளிது. யாருக்கும் சந்தேகம் வராமல் போர்வைக்குள் இரவு முழுக்க சாட் செய்யலாம்.

வாட்ஸ்அப்பின் இந்த அதீத வளர்ச்சி அனைத்து பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் ஒரு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. தியேட்டர்களிலும், டிவி முன்னரும் அமர்ந்து சாட் செய்யும் இந்த வசதி. வாசிக்கும் பழக்கமோ வெகு விரைவில்  முற்றிலும் அழிந்து விடும். ஏனென்றால் பேசுவதற்கு ஆள் இல்லாத நேரங்களில்தானே மற்ற பொழுதுபோக்குகள் நமக்கு தேவை.



இதெல்லாம் இருக்கட்டும். இந்த வாட்ஸ்அப், பேஸ்புக்கிலும் நம் ஆட்கள் செய்யும் தொல்லைதாங்கவில்லை. முன்பு மஞ்சள் நிறத்தில் ஒரு நோட்டிஸ் அடித்து கொடுப்பார்கள். ஏதாவது கடவுள் பெயரை குறிப்பிட்டு இதே போல் நீங்கள் நூறு பேருக்கு நோட்டீஸ் அடித்து கொடுத்தால் அந்த கடவுளின் நல்லாசி கிடைக்கும். தவறினால் பரிட்சையில் தேற மாட்டீர்கள், வேலை போய் விடும் என்று பகிரங்க மிரட்டல் விடுப்பார்கள். போதாக்குறைக்கு ஏதாவது ஒரு வட இந்திய சேட்டின் பெயரை குறிப்பிட்டு அவரின் கலெக்டர் வேலை இதை அலட்சியப்படுத்தியதால் பறிபோய்விட்டது என்று வேறு இருக்கும். இன்று மங்கல்யான் காலத்திலும் மஞ்சள் நோட்டீஸ் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. தமிழன் பழசை மறந்துட்டான்னு யாருய்யா சொன்னது?

இவர்கள் ஒரு வகை என்றால் இன்னொரு வகையினர் செய்தியை உருவாக்குபவர்கள். தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் டைப்பி அந்த செய்தியை பரப்பிவிட்டு விடுவார்கள். சில நாட்களுக்கும் முன் இப்படித்தான். மோடி அமெரிக்க பொருட்களை எல்லாம் புறக்கணித்து இந்திய பொருட்களை வாங்க சொல்கிறார் என்று. அவர்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ சரிதான். ஆனால் ஏன் மோடியை துணைக்கு அழைத்து கொள்கிறார்கள்? உண்மையில் மோடி அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க சொன்னால் எந்த விதமான பின்விளைவுகள் வரும் என்று கூட சிந்திக்காமல் அந்த தகவல் பலரால் தொடர்ந்து பரப்பப்பட்டது. இதை கூட விட்டு விடலாம். எதில் எதில் விளையாடுவது என்றே இல்லாமல் தென் தமிழகத்தின் ஒரு ஊரில் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிவிட்டது. குழந்தைகளுக்காக பிரார்த்தியுங்கள் என்று நடக்காத ஒரு விபத்தை பரப்பிவிட்டார்கள். இதே தகவல் சில ஆண்டுகளுக்கு முன் குறுஞ்செய்தியிலும் பரப்பப்பட்டதுதான் இதில் கவனிக்கத்தக்கது. அதே போல் சில ஆண்டுகளாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரப்பப்படும் ஒரு வதந்தி ஒரு குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் கலந்துவிட்டது. எனவே அதை வாங்காதீர்கள் என்பது. யாராவது அந்த பானத்தை குடித்து கொண்டிருக்கும்போது அந்த செய்தியை படித்து இருந்தால் பயத்திலேயே உயிர் போயிருக்கும்.

இது போன்ற தகவல்களை  வாட்ஸ்அப் மூலமோ அல்லது மற்ற எந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் மூலமோ மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தகவலை உருவாக்கியது நாமில்லை என்றாலும் நாம் அனுப்பிய தகவலுக்கு நாம்தான் பொறுப்பு.
  

Sunday, September 28, 2014

ஒரு அப்பாவி உளவாளி!!!

காலையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் எரிச்சலாக இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும். எரிச்சலுடன் கதவை திறந்தவன் அதிர்ந்தேன். நான்கு போலீஸ்காரர்கள் விரைப்பாக நின்று கொண்டிருந்தனர்.

“நாங்க போலீஸ். கொஞ்சம் விசாரிக்கணும்.” என்னிடம் சொல்லிய போலீஸ்காரருக்கு தொப்பை இல்லை. தினமும் உடற்பயிற்சி செய்பவர் எண்பது அவரின் உடலை பார்த்ததும் புரிந்தது. அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே உடன் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் தடதடவென்று வீட்டுக்குள் நுழைந்தனர். என்னை ஒரு போலீஸ்காரர் வீட்டுக்குள் தள்ளி கதவை மூடினார்.

“சார்! என்ன ஆச்சு?”

“நான் சொல்றேன். முதல்ல நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.” கொஞ்சமும் சலனம் இல்லாமல் சொன்னார் அந்த போலிஸ்காரர்.

“கேளுங்க சார்” சற்று பயம் வந்தது.

“உங்களை பத்தி சொல்லுங்க” நான் முழித்தேன். அதற்குள் மற்ற போலிஸ்காரர்கள் வீட்டை சோதனையிட தொடங்கி இருந்தனர். ஒருவர் என்னுடைய பெட்டியை எடுத்து உள்ளே இருந்த அனைத்தையும் கீழே கவிழ்த்து கொண்டிருந்தார். இன்னொருவர் என்னுடைய லேப்டாப்பை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

“சார்!  துவைச்சு தேச்சு வச்ச துணியை கலைக்கிறார் சார். வேண்டாம்னு சொல்லுங்க.” நான் சொல்லி முடிக்கும் முன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

“கேக்குற கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்க போதும். வேற எதுவும் பேசக் கூடாது. சொல்லுங்க நீங்க எந்த ஊரு. இங்க என்ன பண்றீங்க?”

“மதுரை பக்கம் சார். இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறேன்.”

“சார்! அவன் கிட்ட லேப்டாப் பாஸ்வேர்ட் கேளுங்க சார். என்ன வச்சு இருக்கான்னு பார்க்கணும்” இன்னொரு போலீஸ்காரர் கத்தினார்.ஒரு வேளை  புது படம் டவுன்லோட் செய்ததுதான் நான் செய்த குற்றமா?

“சொல்லுடா பாஸ்வேர்ட் என்ன?”

“பார்லிமென்ட்”

“பாத்தீங்களா சார். இதுலயே தெரிஞ்சு போச்சு. கொள்கை பிடிப்போட பாஸ்வேர்ட் வச்சு இருக்கான் பாருங்க”

என்ன கொள்கை. என்ன தெரிஞ்சு போச்சு. நான் என்ன தவறு செய்தேன்?

“சார். ப்ளீஸ் சொல்லுங்க. நான் என்ன தப்பு செஞ்சேன். நான் என்னோட லாயர் கூட பேசணும்” பயத்தில் உளற ஆரம்பித்தேன். எனக்கு எந்த  லாயரை தெரியும்!!!

“நடிக்காதடா. பர்வீன் சுல்தானா யாருன்னு சொல்லு.”

“அவ எனக்கு பேஸ்புக்ல பழக்கம். தினமும் சாட் செய்வோம். உங்களுக்கு எப்பிடி அவளை தெரியும்”

“என்ன கதை விடுற. ஒரு பாகிஸ்தான்காரியை பேஸ்புக்ல பிடிச்சு நட்பு ஆகிடீங்களா? நீ பாகிஸ்தான் உளவாளின்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு.”

“சார்! தெரியாம ஒரு பாகிஸ்தான் பொண்ணு கூட சாட் செஞ்சுட்டேன். அதுக்கு போய் உளவாளின்னு.”

“நடிக்காதடா. நீ சாட் செய்யுறது இந்திய உளவுத்துறைக்கு தெரியாதுன்னு நெனச்சயா?”

அதற்குள் உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரர்கள்  கையில் சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியே வந்தார். “சார்! நெறைய ஆதாரம் கிடைச்சு இருக்கு சார். பாருங்க சென்னை மேப்”

நான் சென்னையில் ரூட் பார்க்க பத்து ரூபாய்க்கு வாங்கிய மேப் எல்லாம் எனக்கு எதிரான ஆதாரமா?”

“நீங்க தப்பா...”. நான் முடிப்பதற்குள் மீண்டும் ஒரு அறை.

“இங்க பாருங்க சார் கேமரா. அதுல கப்பலை எல்லாம் படம் எடுத்து வச்சு இருக்கான்”

“நான் போன மாசம் திருச்செந்தூர் கோவிலுக்கு  போனப்ப தூத்துக்குடில எடுத்ததுங்க. அதெல்லாம் வச்சு நான் உளவாளின்னு. எனக்கு ஆதார் கார்ட் எல்லாம் இருக்குங்க.”

“சாரி மிஸ்டர்! மத்தெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசலாம்”

ர்வீன் சுல்தானா: ஹாய்

நான் சுய நினைவுக்கு திரும்பி பர்வீன் சுல்தானாவை நண்பர்கள் வட்டத்தில் இருந்து முதல் வேலையாக  நீக்கினேன். பின்னே பாகிஸ்தான்காரர்களுடன் பேசினால் என்ன நடக்கும் என்ற கற்பனையே பயங்கரமாக அல்லவா இருக்கிறது. 

Thursday, September 4, 2014

ஆப்பிரிக்காகாரரும், அன்னபூர்ணா ஹோட்டலும்

நேற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்தாலும் அவரின் அதீத கறுப்பு நிறம் அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் என்று உணர்த்தியது.அவருக்கு முப்பது வயதுக்குள் இருக்கலாம். இந்த ஏரியாவில் இவர்களுக்கு என்ன வேலை என்று யோசிக்க தொடங்கினேன். வந்தவர் நேராக வந்து எனக்கு எதிராக அமர்ந்தார்.

சப்ளையரோ பெரிதாக அலட்டி கொள்ளாமல்வழக்கப்படி  அசுவாரசியமாக வந்து தட்டை எடுத்து அவருக்கு முன் வைத்து விட்டு  தண்ணீர் எடுக்க சென்றார். சில  வினாடிகளில் ஆப்பிரிக்கர் பெருங்குரலில் கத்த தொடங்கினார்.

“வாட் இஸ் திஸ்?”

அவரின் சத்தத்தை கேட்டு ஓட்டலே ஒரு வினாடி அதிர்ந்து திரும்பி பார்த்தது. ஏதேனும் பெரிய தவறு நடந்து விட்டதா என்று அதிர்ந்து கல்லாவில் அமர்ந்து இருந்த  முதலாளி எண்ணி கொண்டு இருந்த பணத்தை விட்டு விட்டு நிமிர்ந்தார். நானும் நிமிர்ந்தேன்.

ஆப்பிரிக்காக்காரர் தட்டில் இருந்த வாழை இலையை கையில் எடுத்து கொண்டு கல்லாவில் இருந்த முதலாளியை வெறித்து கொண்டிருந்தார்.

“பனானா லீப்”

“திஸ் இஸ் நாட் கிளீன்.  டோன்ட் வான்ட்”

முதலாளி தலையில் அடித்து கொண்டு சப்ளையரை அழைத்தார்.

“மணி! பிளாஸ்டிக் பேப்பர் போட்டு குடு”

மணி என்று அழைக்கப்பட்டவர் எப்படி இருந்தார் என்றால் நீங்கள் கடைசியாக பார்த்த ஹோட்டல் சப்ளையரை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். அந்த மணியாகப்பட்டவர்  என்னை பார்த்து “இவனை எல்லாம் உள்ளே விட்டு நம்ம உயிரை எடுக்குறானுங்க! வாழை இலை சுத்தமா எப்பிடி இருக்கும். நம்ம ஊருக்கு வந்து நம்மளை மாதிரி சாப்பிட மாட்டானா” என்றார்.

“நல்ல வேளை சுத்தமா இருந்தா இலையை சாப்பிட்டு இருப்பான்! “ என்றேன்.

“அப்பிடி செஞ்சா கூட சந்தோசமா இருந்து இருப்பேனே ?” என்று அலுத்து கொண்டே  உள்ளே சென்று பிளாஸ்டிக் பேப்பரை தட்டில் விரித்து கொண்டு ஆப்பிரிக்கர்  முன் வைத்தார். மறு வினாடி ஆப்பிரிக்கர் அந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து மேஜையில்  விரித்து தட்டை அதன் மேல் வைத்தார்.

மணிக்கு இந்த முறை கோபம் சற்று அதிகமாகவே வந்து விட்டது.

“பாருங்க சார்! அநியாயம் பண்றான்” என்று முதலாளியிடம் முறையிட்டார்.

“நீங்க டென்சன் ஆகாதீங்க மணி! என்னமோ செஞ்சுட்டு போறான்” என்றார் முதலாளி.


“வாட் ஈடிங்?” மணி  தன்னுடைய ஆங்கில அறிவை பிரயோகித்தார் .

இப்போதுதான் ஆப்ரிக்கருக்கு என்ன சாப்பிடுவது என்று சந்தேகம் வந்து இருக்க வேண்டும். சில வினாடிகள் யோசித்து “சிக்கன்” என்றார்.

மணிக்கு ரத்த அழுத்தம் எகிறி இருக்க வேண்டும். கண்கள் சிவந்தது தெரிந்தது.

“ஒன்லி வெஜிடேரியன்! நோ சிக்கன்”

“ஓகே! கிவ் மீ திஸ் ஐடம்” ஆப்ரிக்கரின் கை நான் சாப்பிட்டு கொண்டு இருந்த தோசையை நோக்கி நீண்டது.

“வெயிட்.” மணி உள்ளே சென்று விட்டார்.

ஆப்ரிக்கர் ‘லோலோலோ’ என்று ஏதோ பாட தொடங்கினார். சில நிமிடங்களில் தோசை வந்தது.

“கிவ் மீ ஸ்பூன்”

“தோசைக்கு  ஸ்பூன் கேட்கிறான் சார்” என்றார் மணி.

“கேக்குறதை எல்லாம் கொடுங்க” என்றார் முதலாளி. மணி ஸ்பூன் எடுக்க திரும்பிய வினாடியில் என்ன நினைத்தாரோ ஆப்ரிக்கர். தோசையை நான்காக மடித்து வாய்க்குள் திணித்து விட்டார்.

“அண்ணே! இருங்க. நான் அப்போ வந்த தோசையையே இன்னும் சாப்பிடல. இவர் அதுக்குள்ள தோசையை முடிச்சுட்டார்" என்றேன் மணியை பார்த்து.


“இப்போ சாம்பாரை இவன் தலையிலதான் ஊத்தணும்” என்றார் மணி.

“கிவ் மீ எ கிளாஸ்”

“கிளாஸ் கேக்குறான் பாருங்க” என்றேன்

“இருடா தரேன் ” என்று தண்ணீர் வைக்கும் கிளாசை எடுத்து முன்னே வைத்தார் மணி. ஆப்ரிக்கர் யோசிக்காமல் சாம்பார் வாளியில் இருந்து ஒரு கரண்டி சாம்பாரை எடுத்து க்ளாஸில் ஊற்றி குடிக்க தொடங்கினார்.

மணி இப்போது சிரிக்க தொடங்கி இருந்தார்.

“என்னண்ணே! சிரிக்கிறீங்க?” என்றேன்.

“முடிச்சுட்டான்.எப்பிடியோ தொல்லை தீர்ந்தது” என்றார்.

அவர் சந்தோசம் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆப்ரிக்கரின் கை மீண்டும் பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவரின் தட்டை நோக்கி நீண்டது.

“கிவ் மீ திஸ் ஐடம்”

நான் மணியை பார்த்தேன். அதற்கு மேல் அங்கே இருந்தால் போலீஸ் கேசில் முக்கிய சாட்சியாக நிற்க வேண்டிய நிலை வரும் என்று தோன்றியது. கையை கழுவிவிட்டு நேராக முதலாளியிடம் சென்றேன்.

“ஏன் சார்? அதை கொண்டுவா, இதை கொண்டுவான்னு உயிரை வாங்குறான். நீங்க பேசாம இருக்குறீங்களே?” என்றேன்.

“விடுங்க தம்பி! ஒரு தடவை பாம்பே போய் எதை எப்பிடி சாப்பிடறதுன்னு தெரியாம மூணு நாளா சரியா சாப்பிடாம ஊரு வந்து சேர்ந்தேன். ஆனா அவனை பாருங்க. எங்க இருந்தோ வந்து எதை பத்தியும் கவலைப்படாம சாப்பிட்டுகிட்டு இருக்கான். அவனை பாராட்டணும்” என்றார்.

அதுவும் உண்மைதான்.

Thursday, August 21, 2014

மனசுக்குள்ள பேய் இருக்கு!

ம்முடைய பிரச்சினைகள் நம்முடைய வாயிலிருந்தே தொடங்குகிறது என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. உண்மைதான். எங்கள் பழைய வீட்டில் பேய் இருக்கிறது, நாங்கள் வீட்டையே காலி செய்ய அந்த பேய்தான் காரணம் என்று நண்பன் சொன்னதை சொன்னதை கேட்டு கொண்டு பேசாமல் போய் இருக்கலாம். ‘பேய் எல்லாம் மனசுலதான் இருக்கு’ என்று வீர வசனம் பேசி அவனிடம் சவால் விட்டு அந்த வீட்டில் ஒரு இரவு தனியாக தங்க ஒப்புக்கொண்டு. இப்போது கூட ஒன்றும் கெட்டு போய்விடவில்லை வெளியே போய் விடலாம். ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது. எனது தைரியத்தையும், பேய் இல்லையென்பதையும் நிரூபிக்க ஒரே வாய்ப்பாக கிடைத்து இருக்கிறது. விட்டுவிடக் கூடாது

அந்த வீடு சற்று பெரிய வீடுதான். மாடி அறையில் பேய் இருக்கிறது என்று அவன் தெளிவாக கூறியிருந்தான். ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த அறையிலிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டேன். பத்து மணிக்கே பயமாக இருந்தது. பழைய வீடு என்றால் மின்சாரத்தை கூடவா பிடுங்கிவிடுவான் பாவி. மெழுகுவர்த்தி முடியும் முன் தூங்கி  விட வேண்டும். காற்று இல்லாமல் வியர்த்தது. எழுந்து சென்று ஜன்னலை திறந்தேன். கண்ணுக்கு எட்டிய வரை ஆள் நடமாட்டமே இல்லை. இப்படி ஒரு அத்துவான காட்டில் வீடு இருந்தால் யாருக்குதான் பயம் வராது.

கட்டிலுக்கு வந்து தூங்க முயற்சித்தேன். யாரையும் பயமுறுத்தும் சூழ்நிலைதான். இந்த நிலையில் தூக்கம் பிடித்தால்தான் ஆச்சரியம். நண்பன் கூறிய பேய்க்கதை நியாபகம் வந்து தொலைத்தது. வேண்டாம் வேறு எதையாவது யோசி; நஸ்ரியாவுக்கு திருமணம் முடிந்ததாமே, இந்திய அணி இங்கிலாந்தில் தோற்றதற்கு யார் காரணம்? அஞ்சான் சுறாவை மிஞ்சிவிட்டதாமே? இப்படி எதையாவது யோசி. அதையே நினைத்தால் அதுதான் தெரியும். மனதை திசை திருப்ப முயற்சி செய்தேன். அவன் சொன்னதை நினைக்காதே. நினைக்காதே. நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய

பேய் இல்லைன்னு சொல்றியே? அன்னைக்கு எனக்கு என்ன நடந்தது தெரியுமா? எனக்கு மட்டும் இல்ல. எங்க குடும்பத்துல எல்லாருக்கும். நடு ராத்திரில யாரோ அழுகுற சத்தம் கேக்கும். கண்ணை திறந்து பார்த்தா மூலைல குத்துகால் போட்டு உக்காந்து ஒரு உருவம் அழுதுகிட்டு இருக்கும். அப்போ நாம அசைஞ்சா அந்த உருவம் எந்திரிச்சு நம்ம கிட்ட ஓடி வரும். அப்பிடியே அலறி அடிச்சு எழுந்து உக்காந்தா அது மறைஞ்சுடும். நல்ல வேலையா தனியா யாரும் அது கிட்ட மாட்டுனது இல்ல.

அவன் சொன்னது வார்த்தைகள்  கற்பனையில் உருப்பெற தொடங்கின. நினைக்காதே! நினைக்காதே! வேறு நினை. எம்.ஜி.ஆர் பாட்டு, ரஜினி ஸ்டைல் இப்படி எதையாவது நினை. என்ன முயன்றாலும் மீண்டும் மீண்டும் அவன் சொன்ன கதையிலேயே மனது சென்று நின்றது. பயப்படாதே! பேய் என்று ஒன்று இருந்தால்தானே அது வரும். எல்லாம் கற்பனை. நிழலை பார்த்து பயந்த அவனை நினைத்து சிரி. ஒன்று, இரண்டு, மூன்று நூறு வரை சொல்லி தூங்கி விடு.

1, 2, 3,.........,572 யாரோ அழுவது போல் இருக்கிறதே. கண்ணை திறந்து பார்த்து விடலாமா? வேண்டாம் இது பிரம்மை.

பிரம்மை என்றால் என்ன? கண்ணை திறந்து பார்த்து உறுதி செய்து விடலாம். எப்படியும் எதுவும் இருக்கப்போவதில்லை.

கண்ணை திறந்தால் பேயை நம்பியது போல் ஆகிவிடும். கண்ணை திறக்காதே. புரண்டு படுக்க முயன்றேன். புரண்டால் அது அருகே ஓடி வருமாமே. அழுகுரல் வேறு இப்போது தெளிவாக கேட்கிறது. கண்ணை திறக்காதே. புரண்டும் படுக்காதே. நாளை காலை வரை சமாளித்தாலே போதும். நாம் ஜெயித்து விடலாம்.

ச்சே! ஏன்ன இது? இப்படி பயப்படவா இங்கே வந்து படுத்தோம். கண்ணை திற. ஒன்றுமே இருக்காது. எல்லாம் பிரம்மை.

திற! திறக்காதே!  

திற! திறக்காதே! 

மெதுவாக கண்களை திறந்தேன். அங்கே யாரோ அமர்ந்து . பதறி அடித்து எழுந்து ஓடத் தொடங்கினேன்.

“ஏதோ சொன்ன? மனசுதான் பேய்ன்னு. பின்ன ஏன் எழுந்து ஓடி வந்த?” 
அவன் குரலில் நக்கல் தெரிந்தது. எதிர்பார்த்ததுதான்.


“இப்பவும் சொல்றேன். மனசுதான் பேய்” மிக உறுதியான குரலில் சொன்னேன்.

Thursday, July 31, 2014

நாம் கவனிக்கத் தவறிய கேப்டனின் யுனிவர்சல் மூவி!

லகப்படம்(universal movie) பற்றி பலர் சொல்லியும் எழுதியும் கேட்டு இருக்கிறேன். பொதுவாக உலகப்படம் என்பது கலாச்சார வேறுபாடுகளை தாண்டி  உலகத்தில் உள்ள அனைத்து மக்களாலும் ரசிக்கப்படக் கூடிய  படம் அல்லது உலக மக்கள் அனைவராலும் ஏற்று கொள்ளப்படக் கூடிய  பொதுவான கருத்துகளை கொண்டிருக்க கூடிய படம்  என்று எங்கேயோ யாரோ எழுதி இருந்ததே உலகப் படத்துக்கான சிறந்த வரையறை என்பது என் கருத்து.

பொதுவாக தமிழில் இது போன்ற உலகப்படங்கள் சமீப காலமாகத்தான் வருகின்றது என்று கூறுகிறார்கள். ஆனால் கலைக்கண்கள் கொண்டு கவனித்துப்  பார்க்கும்போது  தமிழில் நிறைய உலகப் படங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. சமீபத்தில் நான் கண்டு ரசித்த அப்படிப்பட்ட ஒரு படத்தின் ஒரு காட்சியை இங்கே கூறுகிறேன். 

படத்தின் இறுதி காட்சி. தீவிரவாதிகள் விமானியை சுட்டு விடுகின்றனர். உயிருக்கு போராடும் விமானியால் விமானத்தை இயக்க முடியவில்லை. தீவிரவாதிகளை வீழ்த்தி விடும் கேப்டன் விஜயகாந்த் விமானியின் அறைக்கு வருகிறார். விமானியின் வழிகாட்டுதல்படி விமானத்தை ஒரு குடியிருப்பு பகுதியில் மரங்களுக்கு இடையே  பத்திரமாக லேன்ட் செய்கிறார்.


இதில் என்ன உலகத்தரம் என்று கேட்க வேண்டாம். மேலோட்டமாக பார்க்காமல் அந்த காட்சியை கூர்ந்து கவனியுங்கள். கேப்டன் உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல கருத்துகளை இந்த ஒரே  காட்சியில் எடுத்து சொல்கிறார் என்பது தெரியும். விமானி அவரை விமானத்தை இயக்க சொல்லும்போது ‘எனக்கு ஒன்னும் தெரியாதே’ என்கிறார். என்ன ஒரு நுட்பமான, ஆழமான வசனம் பாருங்கள். ஒரு விஷயம் உனக்கு தெரியாதென்றால் அதை ஒத்து கொள்ளத் தயங்காதே என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார் கேப்டன். இன்று எத்தனை பேர் அப்படி ஒத்து கொள்கிறார்கள். ஒன்றுமே தெரியாவிட்டாலும் எல்லாமே தெரிந்தது போல பேசுபவர்கள்தானே அதிகம். அதை தன்னுடைய வசனம் மூலம் தவறு என்று புரிய வைக்கிறார் கேப்டன்.

“நான் சொல்லித்தரேன்! நீங்க உட்காருங்க” என்று விமானி பதில் அளித்ததும் தயங்காமல் விமானியின் இருக்கையில் அமர்கிறார் கேப்டன். தெரியாத விஷயத்தை கற்று கொள்ள தயங்கக் கூடாது என்பதுதான் கேப்டன் உலகுக்கு இதில் எடுத்துக் கூறும் கருத்து. மறு வினாடி விமானியின் வழிகாட்டுதல்படி அங்கே இருக்கும் ஒரு குச்சியை பிடித்து இழுக்கிறார். ஒரு வேளை விமானத்தின் பிரேக்காக இருக்க வேண்டும். உடனே விமானம் மரங்களுக்கு இடையே தரை இறங்குகிறது. வழவழப்பான ரன்வேயிலேயே விமானம் தரை இறங்குவது கஷ்டம். அப்படியிருக்க  இந்த மாதிரி இடத்தில் எல்லாம் விமானத்தை தரை இறக்க முடியாது என்று கேப்டன் நினைக்கவில்லை. விமானியை பார்த்து “என்னய்யா! விளையாடுறியா?” என்று பல்லை கடிக்கவில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். பிரேக்கை வலு கொண்ட மட்டும் இழுத்து மரங்களுக்கு நடுவில்  விமானத்தை சேதாரமின்றி தரை இறக்குகிறார்.

இந்த காட்சியை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்தவர் “என்னயா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” என்றார். இப்படி நம் படங்கள்  சிறந்தவை இல்லை  என்ற எண்ணம் கொண்டவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. தமிழ் சினிமா உலகளவில் கவனம் பெறாமல் போனதற்கு இவர்கள் போன்றவர்கள்தான் காரணம். சேதுபதி ஐ.பி.எஸ் என்ற அந்த படத்தின் ஒரே காட்சியிலேயே இத்தனை உலகத்தரம் வாய்ந்த கருத்துகள் இருக்கும்போது மொத்த படமும் எத்தனை கருத்து குவியலாக இருக்க வேண்டும். கவனித்து பார்த்த்தால் உங்களுக்கே புரியும். கேப்டன் உணர்த்தி  இருக்கும் கருத்துகள் மொத்த  உலகத்துக்கும்  பொதுவானது என்று யாரேனும் மறுக்க முடியுமா? அரசாங்கம் இதை பரிசீலித்து அந்த படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்து விருது வழங்கும் விழாக்களுக்கும், திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப வேண்டும்.

ஒரே காட்சியிலேயே இத்தனை விஷயங்கள் இருந்தால் தமிழ் சினிமாவின் ஓட்டு மொத்த வரலாற்றில் இது போன்ற எத்தனை படங்கள் கண்டுக்கொள்ளப்படாமல்  போயிருக்ககூடும். எனவே நாம்  தொடர்ந்து பழைய உலக  படங்களை பார்த்து அரசாங்கத்துக்கு பரிந்துரைக்க தயாராக வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...