Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

Sunday, July 7, 2013

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்வி இது. 'சாமி' பட விழாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தனக்கு மட்டுமே நிரந்தரமானது இல்லை என்றதும் அனைத்து இளம் நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் கனவு காண தொடங்கினர். அந்த நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் தலைவர்களை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்க்கும் நோக்கத்தில் தீவிரமாக களம் இறங்கினர்.10 ஆண்டுகளுக்கு பின் அவர்களின் கனவு எந்த அளவு நிறைவேறியுள்ளது என பார்க்கலாம்.

முதலில் யாரை சூப்பர் ஸ்டார் எனலாம்?  அதை இப்படி வரையறுத்து கொள்வோம்.  இப்படி எடுத்து அனைத்து தரப்பு மக்களையும் வயது வித்தியாசமின்றி கவர வேண்டும். இவர் படங்கள் வரும்போது தமிழ்நாட்டில்   75% மக்கள் ஒரு முறையாவது படத்தை பார்க்க என்ன வேண்டும். தயாரிப்பாளர் முதல் தியேட்டரில் முறுக்கு விற்பவர் வரை இவர் படம் அனைவருக்கும் லாபத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதாக இருக்க வேண்டும்.இதுவே நாம் எடுத்து கொள்ள போகும் சூப்பர் ஸ்டாருக்கான எளிய வரைமுறை.

 'சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும்' என்று முதல்முதலில் முழங்கியவர் அஜித். தான் நடிக்க போகும் 'ஆஞ்சநேயா' படம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கி தான் வைக்கும் முதல் அடி என்று பேட்டி கொடுத்தார். ஆனால் அந்த படமோ படு தோல்வி. தொடர்ந்து நடித்த படங்களும் சரியாக போகவில்லை. மிக பெரிய ஓபனிங்,உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருந்தும் கதை தேர்வில் தவற விட்டதாலும், பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் கவர முடியாமல் போனதாலும் 'சூப்பர் ஸ்டார்' என்ற இடத்தை இன்னும் நெருங்க முடியவில்லை. கால போக்கில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டமே தனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார் அஜித். 

விஜய்- முதலில் சூப்பர் ஸ்டாராக ஆசைபட்டவர் இப்போது புரட்சி தலைவராக முயற்சி எடுக்கிறார். ஆனால் இன்னும் தான் ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை. ஆரம்பத்தில் இவர் சூப்பர் ஸ்டார் கனவுடன் நடித்த சில படங்கள் ஹிட். ஆனால் பின்னர் வந்த படங்கள் படு தோல்வி.இவரின் அதிரடி ஆக்சன் படங்களை காமெடி படங்களாக மாற்றி   SMS, Facebook என வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம்  ஊரே கேலி செய்து கை கொட்டி சிரிக்க தொடங்கியதும் தற்போது பாதையை சிறிது மாற்றி விட்டார். குழந்தைகள் விரும்பும் நடிகராக இருப்பதும், 'C' சென்டர் ரசிகர்களை அதிகம் கொண்டிருப்பதும் இவரின் பலம். ஆனால் இவரின் முந்தைய படங்களால் படித்தவர்களிடமும், மேல் தட்டு மக்களிடமும் இவரை பற்றி நல்ல விதமான அபிப்பிராயம் ஏதும் இல்லை. அந்த எண்ணத்தை மாற்றுவதே இப்போது  இவருக்குள்ள சவால். ஆழம் தெரியாமல் அரசியலில் வேறு காலை விட்டு விட்டார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். ஆக இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய இன்னும் சில ஆண்டுகளாவது வேண்டும்.

 விக்ரமை பற்றி இங்கு கூறாமல் இருக்க முடியாது. ரஜினி 'சாமி' விழாவில் பேசியபோது 'தூள்', 'சாமி' என அடுத்தடுத்த ஹிட்டுகள் கொடுத்து உச்சத்தில் இருந்தார். ஆனால் பின் இவர் நடித்த படங்கள் பெரிய பலன் ஏதும் தராமல் இவரின் உழைப்பையும், காலத்தையும் அதிகம் சாப்பிட்டு விட்டன. இப்போது வயது அதிகம் ஆகி விட்டதால் இவர் 'சூப்பர் ஸ்டார்' ஆவது இனி கிட்டத்தட்ட சாத்தியம்  இல்லை. அந்த இடத்தின் மேலும் இவர் ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை.

ஆரம்பத்தில் விஜய், விக்ரம், அஜித்திடம் மட்டுமே போட்டி இருந்தது. பின்னர் அதிரடியாக களத்தில் குதித்தவர் சூர்யா.  வெற்றி படங்கள் , பெண்கள், குழந்தைகளிடம் நல்ல பெயர் என்று மெதுவாக முன்னேறி கொண்டுள்ளார். இருப்பினும் மற்ற நடிகர்களிடம் ஒப்பிடும்போது தீவிர ரசிகர்கள் இவருக்கு குறைவே. அத்தகைய தீவிர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சில ஆண்டுகளில் இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடையலாம்.

மேலே கூறிய நடிகர்கள் அனைவரும் நடிக்க வந்து ஏறத்தாழ  20 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நெருங்க முடியவில்லை. ஆனால் ரஜினியோ அவர் நடிக்க வந்த 20 ஆண்டுகளுக்கு பின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார். முதல்வர் பதவியையே அவருக்கு  கொடுக்க தயாராக இருந்தனர் மக்கள். ஆனால் அடுத்த தலை முறை நடிகர்கள் இன்னும் அந்த உயரத்தில் பாதி கூட அடையவில்லை. இப்போது அதர்வா, விக்ரம் பிரபு என மூன்றாம் தலை முறை நடிகர்களும் நடிக்க வந்து விட்டனர்.

ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் சூப்பர் ஸ்டார் ஆக முயன்று வரும் விஜயும், அஜித்தும் எங்கே தவற விட்டனர்? கால மாற்றம், ரஜினிக்கு இருந்த வசீகரம் என அனைத்தையும் விட்டு விடலாம்.  இவற்றை மீறி அவர்கள் செய்த தவறு ரஜினி போல் பறந்து பறந்து அடித்து பஞ்ச் வசனம் பேசினால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என கணித்தது. இவற்றை செய்தால் மக்கள் சூப்பர் ஸ்டார் ஆக்கி விடுவார்கள் எனில் விஜயகாந்த் தானே பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க வேண்டும்? ரஜினி போல் அனைவருக்கும் ஏற்ற கதைகளில் நடிக்காமல் அதிரடி நாயகர்களாவே நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என்று எண்ணியதே அவர்கள் செய்த தவறு. எது எப்படியோ இன்னும் சில ஆண்டுகள் பொறுத்து பார்க்கலாம். யார்தான் சூப்பர் ஸ்டார் ஆகிறார்கள் என்று.

Saturday, July 6, 2013

சிங்கம் II - itz சிங்கம் டான்ஸ்

கதை முன்னுரை :

 உங்களில் சிலருக்கு 'சிங்கம்' முதல் பாகத்தின் இறுதி காட்சி நினைவில் இருக்கலாம். அதில் காட்டியபடி வேலையை விடுவது போல நாடகமாடி தூத்துக்குடியில் நடக்கும் ஆயுத கடத்தலை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் சூர்யா. ஆனால் தன் பழைய வாழ்வை மறந்து வாழும் வழக்கமான ஹீரோக்கள் போல ஆட்டோ ஒட்டுநர் தொழிலிலோ, காய்கறி விற்கும் தொழிலிலோ இறங்காமல் ஒரு பள்ளியில் நேர்மையான  NCC ஆசிரியராக பணியில் சேர்கிறார். இது துரை சிங்கத்துக்கு முன்னுரை.


 இப்போது கதையில் ஒரு சின்ன  ட்விஸ்ட். 'சிங்கம்' முதல் பாகத்தில் சொல்லியது போல  சூர்யா-அனுஷ்கா திருமணம் முன்பே நடந்திருக்கவில்லை.  திருமணமான பின் அனுஷ்கா கவர்ச்சியாக டூயட் ஆடினால் ரசிகர்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள் என இயக்குனர் ஹரி அவர்களின் திருமணத்தை இந்த படத்தில் ரத்து செய்து விடுகிறார். இதனை அனுஷ்கா நன்கு பயன்படுத்தி கொண்டு அவ்வப்போது வந்து சூர்யாவுடன் காதல் செய்து விட்டு போகிறார். கூடவே சூர்யா வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் ஹன்சிகாவும் சூர்யா மேல் காதல் கொள்கிறார். இது துரை சிங்கத்தின்  காதல் வாழ்க்கைக்கு முன்னுரை

இப்போது கதை

கதை ஒன்றும் புதிதோ, வித்தியாசமானதோ இல்லை. ஆசிரியர் வேலை செய்து கொண்டே ஆயுத கடத்தல் பற்றி  ரகசியமாக புலனாய்வு செய்கிறார் சூர்யா. ஆனால் இயக்குனர் ஹரியோ ஆயுத கடத்தலை காட்டினால் விடுதலை புலிகள், நக்சலைட்டுகள் என சர்ச்சை கிளப்புவார்கள் என்று முன்னெச்சரிக்கையாக ஆயுத கடத்தல் கும்பலை போதை மருந்து கடத்த செய்து விடுகிறார்.அதையும் திறமையாக கண்டு பிடித்து விடுகிறார் சூர்யா. பின்னர் அந்த கும்பலை வேட்டையாடுகிறார். 

திரைக்கதை

விறுவிறுப்பான திரைக்கதை என்பார்களே. விறுவிறுப்பு அதிகமானால் என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். படம் முழுக்க சூர்யா யாரையாவது துரத்தி கொண்டே இருக்கிறார் அல்லது அடித்து கொண்டே இருக்கிறார். நகரம், கடல், காடு, மலை என ஐந்து வகை நிலங்களிலும் சேசிங் செய்து ஒரு புது சாதனையே படைத்துள்ளார்

படம் ஆரம்பித்ததும் ஒரு  பாடல் , சண்டை காட்சி . பின்னர் ஒரு காதல் காட்சி, பின்னர் ஒரு சேசிங் காட்சி, பின்னர் சந்தானம் காமெடி, அதன் பின் மீண்டும் ஒரு சண்டை காட்சி, ஒரு டூயட் பாடல், பின் மீண்டும் ஒரு சேசிங், அதன் பின் ஒரு சண்டை, பின்னர் காமெடி, அதன் பின் ...... என்ன தலை சுற்றுகிறதா. விறுவிறுப்பாக படம் எடுக்கிறேன் என்று சூர்யாவை அரை மணி நேரம் ஓடவும், ஒரு மணி நேரம் சண்டை போடவும், அரை மணி நேரம் ஆக்ரோஷமாக வசனம் பேசவும் வைத்துள்ளார் ஹரி.

சூர்யா:

வழக்கப்படி தன் வேலையை கட்சிதமாக செய்துள்ளார்.  அதிரடி போலீசுக்கு தேவையான சிறந்த உடல் மொழி. ஆனால் அமைச்சர் முதல் அடியாள் வரை வரை முறை இல்லாமல் எல்லாரிடமும் ஆக்ரோஷ வசனம் பேசுவது ஓவர். என்ன செய்வது? சிங்கம் வேஷம் போட்டால் சீறித்தானே ஆக வேண்டும்.

மற்ற நட்சத்திரங்கள்:

2 கதாநாயகிகள், நான்கு வில்லன்கள், 2 காமெடியன்கள், நிறைய குண சித்திர நடிகர்கள் என நிறைய பேர் உள்ளனர்.  ஆனால் யாருமே மனதில் பதியவில்லை. யாரையுமே முழுமையாக பயன்படுத்தவில்லை.

இசை, கேமரா, எடிட்டிங் மற்ற தொழில் நுட்ப விஷயங்கள்:

பாடல் இசையோ, பின்னணிஇசையோ  சொல்லி கொள்ளும்படி இல்லை.

மற்ற தொழில் நுட்ப விஷயங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. காரணம் அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

சர்ச்சை கிளம்ப  வாய்ப்புள்ள இடங்கள்:

1. ஆப்ரிக்க வில்லனை குரங்கு, அனிமல் என கண்டபடி இன வெறியோடு திட்டுகிறார் சூர்யா. எனவே ஆப்ரிக்காவில் இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது.
2. போலீஸ் துறையில் நேர்மையற்றவர்களே அதிகம் உள்ளது போல் காட்டுகிறார்கள்.
3. ஹன்சிகாவுக்கு ஏற்படும் சோக முடிவும் தங்கள் மனதை புண்படுத்துவதாக அவரின் ரசிகர்கள் போராட்டம் நடத்தலாம்.

முடிவுரை:

முதல் பாகத்தை விட சிறப்பாக எடுக்க வேண்டும் என ஹரிக்கு நெருக்கடி. எனவே  சிங்கத்தின் வேகத்தையும், சீற்றத்தையும் அதிகமாக்க முயன்றுள்ளார். கடைசியில் சிங்கம் ரசிகர்கள் மேலே பாய்ந்து குதறி விட்டது. முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் இந்த படம் மிக சுமார். ஆனால் என்னதான் கால்கள் பழுதுபட்டாலும் சிங்கம் சிங்கம்தானே. அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் நிச்சயம் ஒரு முறை பார்க்க கூடிய படம்தான் இந்த சிங்கம் II

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...