Wednesday, March 12, 2014

பெண் பார்க்கும் படலம்

ரு மதியப் பொழுதில் என் நண்பனிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் இருந்து இந்த கதை தொடங்குகிறது.

“என்னடா மச்சான்? எப்பிடி இருக்க? ரொம்ப நாளா பேசவே இல்ல”

“அமெரிக்கால இருந்து ISD செஞ்சு பேசுற அளவு ஒரு விஷயமும் இல்ல. அதான் பேசல”

கல்லூரி நாட்களில் இருந்த நக்கல் அவனுக்கு துளியும் குறையவில்லை.

“சரி! இப்போ என்ன விஷயம் சொல்லு.” குரலில் சற்று கோபத்தை சேர்த்து கொண்டேன்.

“எனக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்க. உங்க ஊருல இருந்து ஒரு பொண்ணு வந்து இருக்கு. அந்த பொண்ணு பத்தி கொஞ்சம் தகவல் வேணும்”

“சரி! பொண்ணு எந்த தெரு, அப்பா பேரு என்ன சொல்லு”

கூறினான்.

“சூப்பர் மச்சான். இது போதும். நான் குடும்பத்தை பத்தி விசாரிச்சு நாளைக்கு சொல்லிடுறேன்”

“குடும்பம் பத்தி எல்லாம் நாங்க விசாரிச்சுக்கிறோம். நீங்க அந்த பொண்ணு எப்பிடின்னு பார்த்து சொல்லுங்க.”

“பொண்ணு கேரக்டர் எப்பிடின்னும் விசாரிச்சுடலாம்.”

“டேய்! நான் அதெல்லாம் கேக்கல. அந்த பொண்ணு ஜாதகம் மட்டும்தான் எங்க வீட்டுக்கு அனுப்பி இருக்காங்க. போட்டோ எதுவும் குடுக்கல. கல்யாண பேச்சு ஆரம்பிச்ச பின்னாடிதான் ப்ரோக்கர் போட்டோ தருவாராம். ஜாதகம் பொருந்தவும்  எங்க வீட்டுலயும் அந்த பொண்ணு வீட்ல பேசலாம்னு இருக்காங்க”

“அப்புறம் என்ன? பேசி முடிச்சுடுங்க”

“அது எனக்கு தெரியாதா? கல்யாண பேச்சை ஆரம்பிக்க முன்னாடியே ஒரு முறை அந்த பொண்ணு வெள்ளையா? கருப்பா? குண்டா? ஒல்லியா? அப்பிடின்னு நீ பார்த்து சொன்னா நான் எங்க வீட்ல சொல்லி பேச சொல்லிடுவேன். ஒரு வேளை கல்யாண பேச்சு எடுத்த பின்னாடி நான் போட்டோ  பாக்கும்போது பொண்ணு பிடிக்காட்டி சங்கடம் பாரு”

“நீ சொல்றது சரிதான். ஆனா அந்த பொண்ணை நான் எங்க போய் எப்பிடி பார்க்கிறது”

“அதான் அட்ரஸ் சொல்லி இருக்கேனே?”

“வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாகிங்? நான் அந்த பொண்ணு வீட்டு முன்னாடி போய் நிக்கணுமா.”

“டேய் நண்பனுக்காக கொஞ்சம் கஷ்டப்படு. நீயும் நானும் படிக்கிற காலத்துல கோவில், பஸ் ஸ்டாண்ட்னு எத்தனை பொண்ணுங்க பின்னாடி சுத்தி இருக்கிறோம்”

“சரி! என்னோட நண்பனுக்காக நான் இதுக்கு ஒத்துக்குறேன்”

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்”

“சொல்லு”

“அது எனக்கு பாத்து இருக்குற பொண்ணு. அதனால வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டு நிக்காம லேசா ஒரு பார்வை பாத்துட்டு வந்தா போதும்”

டுத்த சனிக்கிழமை அவன் சொன்ன தெருவுக்குள் என் சைக்கிளில்  நுழைந்தேன். மிக அமைதியான தெருவாக இருந்தது. பெரிய பெரிய வீடுகள். அவன் சொன்ன வீட்டு எண்ணை தேடி நடக்க தொடங்கினேன். நான்கு வீடுகள் தாண்டிய பின் அந்த வீடு தெரிந்தது. வீட்டின் முன்னால் சைக்கிளை நிறுத்தி செயினை மாட்டுவது போல பாவ்லா செய்தேன்.

நடுத்தர குடும்பம் என்பது வீட்டை பார்த்ததும் தெரிந்தது, அந்த பெண் தட்டுப்படுகிறாளா என்று பார்க்க வேண்டும். சைக்கிள் வீட்டின் அருகில் டீ கடையோ, பெட்டிக்கடையோ தட்டுப்படுகிறதா என்று தேடினேன். என் துரதிர்ஷ்டம். எதுவும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தேன். எத்தனை நேரம்தான் செயினை கழட்டி கழட்டி மாட்டி கொண்டு இருப்பது.

நான் முழித்து கொண்டு இருந்தபோது அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார். கர்சீப் எடுத்து முகத்தை மறைத்து கொண்டேன். சே! நட்புக்காக  என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது. விதியை நொந்து கொண்டேன்

அந்த பெரியவர் விலகியதும் கர்சீப்பை விலக்கி முகத்தை வெளியே காட்டினேன். அட! ஜன்னல் அருகில் ஒரு நைட்டி தெரிகிறதே. அதுதான் பெண்ணா. எழுந்து நின்று முகத்தை பார்க்க முயன்றேன். சரியாக தெரியவில்லை. இன்னும் அருகில் சென்றால் தெரியும். வேக வேகமாக ஜன்னலை நோக்கி நகர்ந்தேன். அவள் நகர்ந்து விட்டாள். வாசலை நோக்கி போகிறாள். இரண்டே அடிதான். வாசல் நேராக போனால் பார்த்து விடலாம். பாய்ந்தேன். அவள் வாசலுக்கு முதுகை காட்டி வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தாள். திரும்பு! திரும்பு! ஒரே வினாடி போதும்.

“யாரு அது! வெளியே?” என்றது ஒரு  ஆண் குரல்.

ஆர்வத்தில் வீட்டு வாசலுக்கு மிக அருகே வந்து நின்று விட்டதை உணர்ந்து பதித்தேன். ஊருக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போகப் போகிறது. ஒரே ஓட்டமாக ஓடி விடலாமா? வேண்டாம். அந்த ஆள் என் முகத்தை பார்த்து இருப்பார். ஓடினால் திருடன் என்று முடிவே செய்து விடுவார்கள்.

“யாரு? கேக்குறேன்ல?” இப்போது குரலோடு ஒரு உருவமும் வாசலை நோக்கி வந்தது. அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஆனாலும் கட்டான உடல். இப்போது நான் ஓடினால் கூட துரத்தி பிடித்து விடுவார்.

வசமாக மாட்டி கொண்டேன். என்ன செய்வது?

“அட நீங்களா தம்பி! ஏன் தயங்கி தயங்கி நிக்குறீங்க? உள்ளே வாங்க”

என்ன இது? இவர் ஏன் என்னை உள்ளே அழைக்கிறார். உள்ளே செல்வது தவிர வேறு வழி இல்லை.

“காலைலயே வருவீங்கன்னு சொன்னாங்க. கல்யாண விஷயமாத்தான வந்து இருக்கீங்க?”

“ஆமாங்க” என்றேன். தவறாக சொல்லிவிட்டேனா?

“பானு! கொஞ்சம் தண்ணி கொண்டு வா”

பானு! பானு! காதில் தேன் வந்து பாய்ந்தது. அவளே வந்து ஏன் முன்னால் நிற்க்கபோகிறாள். ஆனால் என்ன இந்த ஆள். என்ன என்னவோ பேசுகிறார்?  ஒரு வேளை என்னுடைய மாப்பிள்ளை போட்டோ இவர்கள் வீட்டில் கிடைத்து நான் பெண் பார்க்க வந்திருக்கிறேன் என்று நினைத்து இவர். என் நண்பனுக்கு நானே துரோகம் செய்யப்போகிறேனா?

அந்த பெண் கையில் தண்ணீர் செம்புடன் வந்து கொண்டிருந்தாள். அப்படி ஒரு அழகு. இவளுக்காக நண்பனுக்கு துரோகம் செய்தால் கூட தப்பில்லை. அவள் விரலில் என் கைபட்டுவிடாமல் கவனமாக செம்பை வாங்கினேன். என் கண்ணியம் கண்டு வியந்து இருப்பாள் என்று தோன்றியது.அப்படியே பேச்சு கொடுத்து குரலும் எப்படி என்று பார்த்து விடலாமா? அவள் உள்ளே சென்று விட்டாள்.

“இதான் தம்பி என் பொண்ணு! இது அவளோட போட்டோ”

“போட்டோ எல்லாம் எதுக்குங்க? நேருல பார்த்தாச்சே. அதுவும் நைட்டில”

“நீங்க பார்த்தா போதுமா. மாப்பிள்ளைங்க கேட்டா தர வேண்டாமா? பாருங்க. போட்டோல புடவைல இருக்கா. சரி உங்ககிட்ட வேற ஜாதகம் இருக்கா? உங்ககிட்ட நெறைய ஜாதகம் இருக்கும்னு சொன்னாங்கன்னுதான் ராஜாராம் கிட்ட சொல்லி உங்களை வர சொன்னேன்.”

அடப்பாவி. என்னை புரோக்கர் என்று நினைத்தா பேசிக்கொண்டு இருக்கிறார்.

“இப்போ ஜாதகம் கொண்டு வரல. நாளைக்கு கொண்டு வரேன்.”

“இன்னொரு முக்கியமான விஷயம். பொண்ணு போட்டோவை ஜாதகம் பொருந்தி கல்யாண பேச்சு ஆரம்பிச்ச பின்னாடிதான் மாப்பிள்ளை வீட்டுக்கு குடுக்கணும். இருங்க நீங்க வந்ததை ராஜாராம்கிட்ட   போன்ல சொல்லிடுறேன்.”

“நீங்க சொல்லுங்க! எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு. நான் கிளம்புறேன்”

சொல்லிவிட்டு பதிலுக்கு காத்து இருக்காமல் வீட்டிலிருந்து வெளியேறினேன்.

டேய்! பொண்ணு போட்டோவை வாட்ஸ்அப்ல அனுப்பி இருக்கேன். பார்த்தியா”

“கிரேட் டா நீ! பாத்துட்டு வர சொன்னா போட்டோவே அனுப்பிட்ட”

“சரி சரி! உங்க வீட்ல சொல்லி சீக்கிரம் பேசி முடிக்க சொல்லு. இல்ல அவங்க அப்பா வேற பையனை பாத்திடுவாரு”

“பொண்ணு பிடிச்சாச்சுல. அதெல்லாம் பேசிடலாம்.”

“அதுக்கு முன்னாடி ரெண்டு விஷயம். உன் கல்யாணத்துக்கு நான் வர மாட்டேன்.”

“ரொம்ப நல்லது மச்சி. அடுத்தது?”

“கல்யாணம்  முடிஞ்சதும் பொண்ணை கூட்டிகிட்டு போறயோ இல்லியோ  பொண்ணோட அப்பாவை அமெரிக்கா கூட்டிகிட்டு போயிடணும்.”

"!!!!!"

வாசகர்களுக்கு - இந்த வலைப்பூவில் எழுதப்படுபவை ஒருவேளை உங்களுக்கு பிடித்து இருந்தால் அதை எனக்கு ஏதாவது ஒரு வழியில் தெரியப்படுத்தவும்.


Sunday, March 9, 2014

கோச்சடையான் ட்ரைலர் மற்றும் பாடல்கள் – ஒரு பார்வை

சில  நாட்களுக்கு முன் வெளிவந்த கோச்சடையான் டீசரை பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது. இத்தனை செலவு செய்து இத்தனை சாதாரணமாக படத்தை எடுத்து விட்டார்களே என்று. அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கி விட்டது இப்போது வெளிவந்துள்ள ட்ரெய்லர்.

ட்ரெய்லரின்  ஒவ்வொரு ப்ரேமிலும் படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. அனிமேஷன் ரஜினியின் உடல்மொழி தத்ரூபமாக இல்லாவிட்டாலும் திருப்திகரமாகவே உள்ளது. ஆனால் பெரிய குறை ரஜினியின் முகவெட்டு. ரஜினியின் முகத்தை வடிவமைக்க இன்னும் சற்று மெனக்கெட்டு இருக்கலாம். அதே போலதான் ட்ரெய்லரில் வரும் மற்ற ஆண்களின் முகங்களும். சற்று சிரமப்பட்டுதான் நாசரை அடையாளம் காண முடிகிறது. ஆனால் ஆது என்ன மாயமோ பெண்களின் முகங்கள் அத்தனை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபிகா, ஷோபனா, ருக்மிணி என்று அத்தனை அனைவரின் தோற்றமும் அத்தனை இயல்பாக வழக்கமான படங்களில் பார்ப்பது போல. மனிதர்களை போலவே கழுதைப்புலிகள், டால்பின்கள், குதிரைகள் என்று மற்ற விலங்குகளையும் நன்றாகவே காட்சிப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம். 

அதே நேரத்தில்  ஒவ்வொரு காட்சியிலும் முன்னணி கதாபாத்திரங்களை காண்பிப்பதில் எடுத்த சிரத்தையில் சிறிதளவு துணை கதாபாத்திரங்களை காண்பிப்பதிலும் எடுத்து இருக்கலாம். ஒரு காட்சியில் ரஜினியின் பின் நிற்கும் பணிப்பெண்கள் performance capturing செய்யப்பட்டவர்கள் போல இல்லாமல் பொம்மை போல தெரிகின்றனர். ரஜினியின் தாண்டவ காட்சியில் பின்னால் நிற்கும் மக்கள் வட இந்தியர்களை போல உடை அணிந்து இருப்பதன் காரணம் கதையா? அல்லது  கவனப்பிசகாக செய்ததா என்பது படம் பார்த்தால் தெரிய வரலாம். இது போன்ற விஷயங்கள் சிறியது போல தெரிந்தாலும் இவைதான் ‘டின்டின்’ போன்ற படங்களையும் இந்த படத்தையும் வேறுபடுத்து காண்பிப்பவை. ‘டின்டின்’ படத்தில் கதாபாத்திரங்களின் நிழல் தலைமுடி காற்றில் அசைவது போன்றவை கூட மிகுந்த சிரத்தை எடுத்து காண்பிக்கப்பட்டு இருக்கும். இருந்தாலும் நமக்கு  இருக்கும் பட்ஜெட்டுக்கு இத்தனை செய்து இருப்பதே பெரிய விஷயம்.



பாடல்களை பொறுத்தவரை A.R,ரஹ்மான் எந்த குறையும் வைக்கவில்லை. அதே போல வைரமுத்துவும். உண்மையை சொன்னால் தன்னுடைய பாடல் வரிகளில் ரஹ்மானின் இசையையே மிஞ்சி விடுகிறார். வைரமுத்துவின் வார்த்தைகளை அமுக்காமல் இசை அமைத்த ரஹ்மானுக்கு நன்றி. அத்தனை பாடல்களும் கால இயந்திரத்தில் பின்னோக்கி இழுத்து சென்று விடுகின்றன.

‘காதல் கணவா’ பாடலில் லதா ரஜினியின் குரலில் அத்தனை வசீகரம்.

ரஜினி வரிகளை வாசிக்கும்  ‘’மாற்றம் ஒன்றுதான்’ பாடல்  அருமை.

‘எங்கள் கோச்சடையான்’ பாடல் இசையில்  பிரமாண்டம்.

‘மெதுவாகத்தான்’, ‘இதயம்’ பாடல்கள்  மெல்லிசையில் ஈர்க்கின்றன.

‘கர்ம வீரன்’ பாடலும் கேட்க நன்றாகவே உள்ளது.

ட்ரெய்லரில் பார்த்தவரை K.S.ரவிக்குமாரின் திரைக்கதையும், ரஹ்மானின் இசையும்  ரசிகர்களை கவர்ந்து விடும் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் இந்த புது முயற்சியை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? படத்தில் வரும் உருவத்தை ரஜினியாக ஒத்து கொள்வார்களா என்பதை மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அந்த உருவத்தை ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் ரஜினியின் குரலுக்காகவே படத்தை குறைந்தது மூன்று முறை பார்ப்பார்கள் . ஏனென்றால் அவர்கள்தான் ரஜினி ரசிகர்கள்.

Saturday, March 8, 2014

தர்மமில்லா கூட்டணிகள்

வீட்டை கட்டிப்பார். கல்யாணத்தை செய்து பார்” என்று சொல்வார்கள். இன்றைய தேதிக்கு அதை “கூட்டணி அமைத்து பார். கூட்டணி பேச்சு வார்த்தை அமைத்து பார்” என்று மாற்றி கொள்ளலாம் போல. எத்தனை பேரங்கள், எத்தனை மணி நேர பேச்சு வார்த்தை. தேர்தலில் வெற்றி பெறுவதை விட வெற்றிகரமான கூட்டணி அமைப்பதே பெரும்பாடாக உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த கூத்துகளை நினைத்து பார்த்தாலே பிரமிப்பாக உள்ளது. கூடவே இருந்த தோழர்களை அதிமுக கழட்டி விட்டுவிட்டது. திருமாவுக்கு தொகுதிகள் பற்றவில்லை என்று தொண்டர்கள் உருவ பொம்மையை எரிக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்கு யாருடன் சேருவது என்றே தெரியவில்லை. மூழ்கும் கப்பல் என்று நினைத்து கொண்டு அவர்களுடன் சேர தயங்குகிறார்கள். இன்னும் சில கட்சிகள் யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

சொப்பன சுந்தரியை வைத்து இருப்பது யார் என்று கூட கண்டுபிடித்து விடலாம் போல. ஆனால் எந்த கூட்டணியில் எந்த கட்சியை  யார் வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் முன் மண்டை காய்கிறது. சில நாட்களுக்கு முன் கட்டி தழுவி கொண்டவர்கள் இப்போது கட்டி உருள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி என்றால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிலைமை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

இதில் கேப்டன் வழி தனி வழி. கூட்டணி பேச்சு வார்த்தைக்காக மற்ற கட்சிகள் ஏங்கும் மோஸ்ட் வான்டட் தலைவர். தொண்டர்களிடம் கூட்டணி வேண்டுமா என்று கேட்டு கொண்டார். யாருடனும் கூட்டணி இல்லை என்றார். கூட்டணிக்காக ஒட்டு மொத்த தமிழ்நாடும் அவரை தேடி கொண்டிருக்கும் நேரத்தில் வெளிநாடு சென்று விட்டார். எதற்கு என்று கேட்டால் மகனுக்கு லொகேஷன் பார்க்க சென்றேன் என்கிறார். ஆனால் சும்மா சொல்ல கூடாது. அரசியல் வியூகங்களில் தமிழ்நாட்டையே கலங்கடிக்கிறார். அவருடைய  ராஜதந்திரங்கள் எல்லாம் அவருடைய பேச்சை விட மிரட்டலாக உள்ளன.


இன்றைய தேதியில்  கூட்டணிகள்  ஓரளவு முடிவு செய்யப்பட்டு விட்டன. அரசியல்வாதிகளுக்கு பிரசாரத்தின்போது யாரை திட்டுவது என்று தெளிவாக  தெரிந்து விட்டது.  அவர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டது. ஆனால் மக்களின் பிரச்சினை? தேர்தலுக்கான கூட்டணி இப்போது முடிவாகி விட்டது என்று தெளிவாக ஓட்டு போட முடியாது. ஏனென்றால் தேர்தலுக்கு பின் பதவிக்கான கூட்டணி எப்படி அமையும் என்று யாருக்கும் தெரியாது. யாரோ ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்து நாம் ஓட்டு போட்டால் ஓட்டு வாங்கிய கூட்டணி கட்சி தேர்தலுக்கு பின்  வேறு யாருக்கோ ஆதரவு கொடுத்து விடுவார்கள். கட்சி தாவல் தடை சட்டம் போல கூட்டணி தாவல் தடை சட்டம் கொண்டு வந்தால்தான் இது போல வாக்கு அளித்தவர்கள் ஏமாறுவது தடுக்கப்படும்.


எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் பதவியை மட்டும் நோக்கமாக கொண்டு அமைக்கப்படும் கூட்டணிகள் நாட்டுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்காது. இருந்தாலும் என்ன செய்ய? துரோகம் இல்லாத அரசியலையும், கூட்டணி இல்லாத தேர்தலையும் நம்மால் எப்போதும்  கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.


Wednesday, March 5, 2014

தேவதை பெண்

மீண்டும் நேர்முகத் தேர்வில் தவறிய விரக்தியில் எரிச்சலுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். பழைய நிறுவனம் என்னை வேலையில் இருந்து  எடுத்த  பின் நான் கலந்து கொண்ட எட்டாவது நேர்முக தேர்வு இது.

கதவை மூடி விட்டு கண்ணாடி முன் நின்று என்னை நானே பார்த்து கொண்டேன். இனி எனக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால் யாராவது வரம் கொடுத்தால்தான் உண்டு என்று தோன்றியது.

“ஆண்டவா! காப்பாத்து” மேலே பார்த்து கொண்டு கத்தினேன். மனம் சற்று லேசானது.

“மானுடா!” யாரோ அழைப்பது போல இருந்தது.

என்ன இது? பூட்டிய வீட்டுக்குள் பெண் குரல். குரல் வந்த திசையில் திரும்பினேன். ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். என்ன கனவு காண்கிறேனா?

மீண்டும் அந்த பெண்ணை நன்றாக பார்த்தேன். ஜீன்ஸ்,டீ ஷர்ட்டில் மிக அழகாக இருந்தாள். ஒட்டு மொத்த உடலும் கச்சிதமாக அளவெடுத்து செய்தது போல இருந்தது.

“யார் நீங்க? இங்க எப்பிடி வந்தீங்க”

“நானொரு தேவதை. சிறிய வயதில் தேவதை கதைகளில் படித்தது இல்லையா? கஷ்டப்படுபவர்களுக்கு தேவதை வந்து உதவும் என்று.” சொல்லிவிட்டு பளிச்சென்று ஒரு சிரிப்பு சிரித்தாள் அந்த பெண் . மனதுக்குள் மின்னல் அடிப்பது போல இருந்தது.

“நம்பவே முடியலையே”

“என்னை நன்றாக பார். நீயே நம்புவாய்” என்றாள். நான் கண்களை அகல திறந்து கொண்டேன். அந்த பெண் புன் சிரிப்பு மாறாமல் என்னை பார்த்து கொண்டிருந்தாள். அவள் முதுகின் பின்னால் இருந்து எதுவோ விரிவது போல தெரிந்தது. அட அது இறக்கை. இத்தனை நேரம் இதை மடக்கி வைத்து இருந்தாளா? நான் யோசித்து  கொண்டிருக்கும்போதே அவள் தன் இறக்கைகளை பட படவென அடித்து கொண்டு மேலே எழும்ப தொடங்கினாள். சரியாக என் தலைக்கு நேராக அவள் பாதங்கள் வரும் உயரம் எழும்பி சென்று என்னை பார்த்து சிரித்தாள்.

“என்ன நம்புகிறாயா?”

“நம்புறேன் மேடம். கீழ வாங்க. கழுத்து வலிக்குது”

மெதுவாக கீழே இறங்கினாள்.

“தேவதை ஜீன்ஸ்ல வருமா?”

“தேவதைகள் காலத்துக்கு ஏற்ப மாறக் கூடாதா?”

“மாறலாம்தான். சொல்லப்போனால் தேவதை அணிந்தால்தான் ஜீன்சுக்கே மரியாதை”

“சரி சொல் மானிடனே. உனக்கு என்ன வரம் வேண்டும்?”

“வரமா?”

“ஆம். அதற்குதானே வந்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு வரம்தான். அதற்கு மேல் கேட்கக்கூடாது”

“போதும் போதும். ஒன்றுக்கு மேலே வேண்டாம் என்று அரசாங்கமே  பிரசாரம் செஞ்சு  இருக்கு ”

“சரி மானுடா! வரத்தை கேள்.”

“கேட்கிறேன் மேடம். அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம். ரொம்ப காலமா உங்கள மாதிரி தேவதைங்க பூமிக்கு வந்து யாருக்கும் வரம் கொடுக்கலியே.ஏன்?”

“மனிதர்கள் சுய நலவாதிகள். அவர்களுக்கு உதவ கூடாது என்று நாங்கள் முடிவு செய்து இருந்தோம். அதனால்தான்.”

“இப்போது எனக்கு மட்டும் உதவ காரணம்?”

“இத்தனை காலத்தில் மனிதர்கள் பண்பட்டிருப்பார்கள் என்பதுஎன் நம்பிக்கை. அதனால்தான் மீண்டும் கஷ்டப்படும் மனிதர்களுக்கு  உதவி செய்ய முடிவு செய்து முதல் ஆளாக உன்னை தேர்வு செய்தேன்.”

“சந்தோஷம்”

“சரி வரம் கேள் சீக்கிரம்.”

தேவதை அவசரப்படுத்த ஆரம்பித்தாள். என்ன கேட்பது என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“மேடம். தப்பா நினைக்காதீங்க. என்ன கேக்குறதுன்னு எனக்கு தெரியல”

“செல்வம்தானே  வழக்கமாக கேட்பீர்கள்?”

“நீங்க வேற. அது ராஜா காலத்துல. இப்போ திடீர்னு பணம் வந்தா அரசாங்கம் கணக்கு கேட்கும். பணம் இருந்தும் செலவழிக்க முடியாது. சிக்கல்”

“அப்படியென்றால் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுக்கவா?”

“நீங்க இன்னைக்கு  வேலை வாங்கி குடுப்பீங்க. நாளைக்கே அவன் என்னை வேலைல இருந்து தூக்கிடுவான் தேவையா இது?”

“அரசாங்க வேலை?”

“கிடைக்காம கிடைச்ச  வரத்தை வச்சு வேலை வாங்குறது எனக்கு புத்திசாலிதனமாப்படல ”

“இந்த நாட்டுக்கு பிரதமர் ஆக்கவா?”

“அது தொல்லை பிடிச்ச வேலைங்க. சுதந்திரமா இருக்க முடியாது. யார் யாரோ சொல்றதை கேட்டு ஆடணும்.”

“அமெரிக்க அதிபர்?”

“எனக்கு இங்கிலீஷ் வராதே. அமெரிக்கா போனா கஷ்டப்படுவேன்”

“என்ன மானிடா? வரம் கேட்க கூட இப்படி யோசிக்கிறாய்.”

தேவதை சலித்து கொண்டாள். அவளுக்கென்ன? ஒரு வரம் தந்துவிட்டு போய் விடுவாள். பின் வரத்தை வைத்து கொண்டு நான்தானே வாழ வேண்டும்.

“மேடம்! ஒரு வேண்டுகோள். நான் சற்று யோசிக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். நாளைக்கு  காலைல நான் கேட்குறேன்.”

“அது கடினம். நான் இப்போது சென்றால் மீண்டும் உன்னை சந்திக்க வர முடியாது.”

“சென்றால்தானே? இன்னைக்கு ராத்திரி இங்கயே இருங்க. நாளைக்கு வரம் குடுங்க”

“இல்லை. முடியாது.”

“ப்ளீஸ் மேடம். எனக்கு வரம் கிடைக்காம போனா நான் ரொம்ப ஏமாந்து போயிடுவேன்”

தேவதை யோசித்தாள்.

“சரி இருக்கிறேன். ஆனால் நாளை காலை எழுந்ததும் வரம் கேட்டு விட வேண்டும். தாமதம் ஆனால் நான் பறந்து சென்று விடுவேன்.”

“சரி”

தேவதை அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“மேடம்! நீங்க இந்த கட்டில்ல படுத்துகோங்க. நான் கீழ படுத்துக்குறேன். எதாச்சும் சாப்பிடுறீங்களா?”

“பசும்பால் இருக்கிறதா? எனக்கு மிகவும் பிடிக்கும். சாப்பிட்டுதான் அதிக நாட்கள் ஆகிவிட்டது.”

“இருக்கு. இதோ கொண்டு வரேன்.”

சமையல் அறைக்கு சென்று பாலை காய்ச்ச ஆரம்பித்தேன். உள்ளே நின்று கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்தேன். நாற்காலியில் இருந்து எழுந்து சென்று கட்டிலில் சென்று படுத்தாள். பின் உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்தாள். பறந்து வந்த களைப்பு போலும். நான் கண் இமைக்காமல் பார்த்தேன். இப்படி ஒரு அழகா? அப்போதுதான் எனக்கு அந்த எண்ணம்  தோன்றியது. அந்த பொடியை எடுத்து பாலில் கலக்கினேன். பால் கோப்பையோடு அவளை நெருங்கினேன்.

“எடுத்து கொள்ளுங்கள்”

“நன்றி”

சற்று நேரத்தில் அவள் மயங்கினாள். நான் அவளை நெருங்கினேன்.

திகாலையில் விசும்பல் ஒலி கேட்டது. எதிர்பார்த்ததுதான். கண்களை திறந்து பார்த்தேன். தேவதை அழுது கொண்டிருந்தாள்.

“மானிடா! என்ன காரியம் செய்தாய்”

“எல்லாம் நல்ல காரியம்தான்”

“என்னுடைய புனிதமே போய் விட்டது. இனி என்னால் என்னுடைய உலகம்  போகவே முடியாது.”

“அதற்குதானே செய்தேன்.”

தேவதையின் விசும்பல் அதிகரித்தது.

“ஏன் இப்படி  அழுற? உன் இறக்கையைதான வெட்டினேன். பொண்ணுங்களுக்கு  இறக்கை எல்லாம் இருக்க கூடாது”

“உனக்கு வரம் கொடுக்கத்தானே வந்தேன்.”

“என்ன வரம் கொடுத்துட போற. மிஞ்சி போனா பணம் குடுப்ப. ஆனா உன்னை மாதிரி அழகி எங்க கிடைப்பா. பேசாம என்னை கல்யாணம் செஞ்சுகிட்டு இங்கயே இரு.”

“நீங்கள் மாறவே மாட்டீர்களா?”

“நாங்கள் எத்தனை மாறினாலும், நீங்கள் எப்போதும் நாங்கள் சொல்வதை கேட்டு அடங்கியே இருக்க வேண்டும்.”


தேவதை பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். நேரம் ஆக ஆக அவளின் குரல் குறைந்து கொண்டே சென்றது. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...