Showing posts with label குறும்பட கதைகள். Show all posts
Showing posts with label குறும்பட கதைகள். Show all posts

Thursday, December 31, 2015

அவனா? ஆவியா?

ந்த பேருந்துகாரன் நடுராத்திரி இரண்டு மணிக்கு கொண்டு  வந்து இறக்கி விடுவான் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனது  கிராமத்துக்கு செல்ல மணல் சாலையில் இரண்டு மைல் நடக்க வேண்டும். இறக்கிவிட்ட கண்டக்டர் பேசாமலாவது சென்று இருக்கலாம். “பேய் நடமாட்டம் இருக்குற ரோடு சார். பத்திரம்” என்று பயமுறுத்தி விட்டான்.

நிலா வெளிச்சத்தில் பாதை தெளிவாக தெரிந்தது. இருந்தபோதும் பயம். சின்ன வயதில் இருந்து எத்தனை கதைகள் இந்த பாதையைப் பற்றி. பேய் அடித்தது எனவும், துரத்தியது எனவும். வேகமாக நடக்கத் தொடங்கினேன். திடீரென பின்னால் வந்த குரல் கேட்டு திரும்பினேன்.

“தம்பி எங்க போறீங்க?” என்றவாறே முண்டாசு கட்டிய முதியவர் ஒருவர் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். நடையில் வயதுக்கு மீறிய வேகம். எங்கிருந்து முளைத்தார் அவர்?

“சனலூருக்கு” என்றேன்.

“உங்கள ஊருல பார்த்தது இல்லையே ஊருல. யாரு மகன் நீங்க?”

“அருணாசலம் பையன். சின்ன வயசுல இருந்தே வெளியூர்ல படிச்சவன். நீங்களும் சனலூருக்குதான் போறீங்களா?”

“ஆமாம். டவுன்ல வாத்தியார் படம் படம் பாத்துட்டு வந்துட்டு இருந்தேன். நல்ல வேள. ஊரு வரைக்கும் துணை  நீங்க கிடைச்சுடுச்சு” என்று சொல்லிக்கொண்டே என்னோடு நடக்கத் தொடங்கினார். அவர் மேல் இருந்து வர்ணிக்க முடியாத ஒரு விதமான நெடி அடித்தது. இவரை நம்பலாமா என்ற சந்தேகம் மனதில் பரவியது.

“இந்த வழியா பேய் நடமாட்டம் இருக்குதாமே. நீங்க எப்பிடி படத்துக்கு போயிட்டு வறீங்க”

“அதெல்லாம் சும்மா தம்பி. போன வருஷம் எவனோ ஒருத்தன் இங்க நெஞ்சு வலி வந்து செத்து போய்ட்டான். நம்ம ஆளுங்க உடனே அவனை பேய் அடிச்சதுன்னு சொல்லிட்டாங்க”

“இங்க அப்போ பேய் இல்லையா?”

“பேய் இல்லன்னு நான் எங்க சொன்னேன். பேய் அந்த ஆளை அடிக்கலைன்னுதான் சொன்னேன்”

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்வது எனக்கு சற்று சிரமமாக இருந்தது. கேள்வியை சற்று மாற்றி கேட்கலாம் என்று முடிவு  செய்தேன்

“அப்போ உங்களுக்கு பேய் மேல பயம் இல்லையா?”

“எதுக்குங்க பயப்படணும். நமக்கு பேய பார்த்தா பயம். பேய்க்கு நம்மள பார்த்தா பயம். ”

எனக்கு ஏதோ உறுத்தியது. இவரின் கால்களை அவருக்கு தெரியாமல் பார்த்து விட வேண்டும்.

“என்ன தம்பி யோசிக்கிறீங்க” என்று சொல்லி எனது சிந்தனையை கலைத்தார்.

“ஒன்னும் இல்லங்க”

“நான் சொல்லட்டா”

“சொல்லுங்க”

“இப்போ பேய் வந்தா உங்களை என்ன செய்யும்னு யோசிக்கிறீங்க. சரியா? இதுல என்ன யோசனை. பேய் வந்து மூஞ்சிய காமிச்சாலே பயத்துல இரத்தக் குழாய் எல்லாம் வெடிச்சுடும். அவ்ளோதான்” என்று சொல்லி சிரித்தார். எங்கிருந்தோ ஒரு நாய் வேறு அசர்ந்தப்பமாக ஊளையிட்டு தொலைத்தது.

எனக்கு திடுக் என்றது. இப்போது தனது டிராகுலா பல்லைக் காட்டி சிரிப்பாரோ.

“வேண்டாங்க வேண்டாம்” என்றேன்

“என்னாச்சு தம்பி? என்ன வேண்டாம்?”

“காளியாத்தா, மாரியாத்தா, காளியாத்தா, மாரியாத்தா” என்று ஜெபிக்கத் தொடங்கினேன். என்னை அறியாமல்.

“என்ன ஆச்சு தம்பி. துணைக்கு ஆள்  இருக்கும்போதே எதுக்கு இத்தனை பயப்படுறீங்க?”

“ஒன்னும் இல்லைங்க. கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கவா” என்றேன்.

“குடிங்க”

தண்ணீர் எடுக்க முயல்வது போல வேண்டுமென்றே கைப்பையை கீழே போட்டேன்.

“தவறிடிச்சு சார்” சொல்லிக் கொண்டே குனிந்து அவரின் கால்களை தேடினேன். சரியாக இருந்தது.

“தம்பிக்கு நடக்க முடியாட்டி நான் தூக்கி தோள்ல வச்சுக்குறேன். 

ஹாஹா”

இவர் நிச்சயம் மனிதன் இல்லை. ஏதோ தவறாகத் தெரிகிறது. செருப்பை எடுத்து கைகளில் பிடித்துக் கொண்டேன்.

“என்கிட்ட வராத” அவரை விட்டு விலகி வேகமாக ஓடத் தொடங்கினேன்.

பொழுது விடிந்தது. சிரமத்துடன் கண்களை திறந்தேன். அந்த முதியவர் என் கட்டிலின் அருகில் நின்று கொண்டிருந்தார். பார்க்க மருத்துவர் போல இருந்தார். அவரின் பக்கத்தில் ஒரு பெண். அவள் பார்க்க நர்ஸ் போல இருந்தாள்.

“இவரை பத்திரமா பார்த்துக்கோமா”

“சின்ன வயசுல இருந்து பேய் கதையா கேட்டு கேட்டு பேயை பத்தியே நினைச்சு பயந்து பயந்து இப்போ இவரே பேயை பத்தி நெறையா கற்பனை பண்ணிக்கிறார். இவருக்கு பேய் மேலேயே ஒரு obsession, hallucination .. நேத்து ராத்திரி என் கிட்டயே என்னென்னமோ பேசி இவரை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு”

அந்த பெண் என்னை பார்த்து  சிநேகமாக சிரித்தாள். “நான்  பார்த்துக்குறேன் டாக்டர்” என்றார். 

அந்த டாக்டர் என்னை பார்த்து “டேக் கேர்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். நான் நர்சை பார்த்தேன். கொஞ்சம் கிட்ட வாங்க என்றேன்.

“என்னங்க”

“நேத்து ராத்திரி ஏதோ ஒரு சின்ன குழப்பம். மத்தபடி எனக்கு சரி ஆயிடிச்சு. அந்த டாக்டர் கிட்ட சொல்லுங்க ப்ளீஸ். நான் வீட்டுக்கு போகணும்.”

“சரிங்க நான் சொல்றேன்”

“தேங்க்ஸ். எனக்கு பிரச்சினை ஏதும் இல்லைன்னு உங்களுக்கு புரியுதுல” என்றேன்

நர்ஸ் தனது சிவந்த நாக்கை வயிறு வரை நீட்டி “நல்லா புரியுது” என்றாள்.


Monday, November 18, 2013

நாட்டாமை கைய வச்சா


“தம்பி! சீக்கிரம் வாங்க. நாட்டாமை இனிமே பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாராம்” பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்னிடம் சொல்லிவிட்டு ஓடினார்.


“என்னங்க ஆச்சு?” குரலால் அவரை விரட்டி பிடிக்க முயன்றேன்.


“நாட்டாமையை பத்தி ஒரு பொண்ணு தப்பா ஊரு முழுக்க சொல்லிட்டு திரியுதாம். அதனாலதான்.”


இந்த ஊருக்கு அரசாங்க வேலை கிடைத்து வந்ததிலிருந்தே இந்த ஊர் ஒரு புதுமையாக இருக்கிறது. என்ன என்னவோ பேசி கொள்கிறார்கள். செய்கிறார்கள். இப்போது நாட்டாமையே பஞ்சாயத்துக்கு வர மறுக்கிறார். பக்கத்துக்கு வீட்டுக்காரரை தொடர்ந்தேன்.

லமரத்திற்கு கீழே ஊரே கூடி இருந்தது.


அந்த கூட்டத்தின் நடுவில் இருந்தவர்தான் நாட்டாமையாக இருக்க வேண்டும். அந்த வெண்ணிற முறுக்கிய மீசையையும், முக சுருக்கங்களையும் வைத்து  அறுபது மதிக்கலாம். ஆனால் உடல் மிகவும் திடகாத்திரமாக இருந்தது.  பார்த்தவுடன் மரியாதை தர தூண்டும் கம்பீரம்.


உங்க குடும்பம் பஞ்சாயத்து  பண்றதுதான் காலகாலமா நடக்கிறது. நீங்க இப்பிடி பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்ன்னு சொன்னா எப்பிடியா?” கூட்டத்திலிருந்து  ஒரு பெரியவர்  நாட்டாமையை பார்த்து கேட்டார்.


ஊருக்கார பயலுக நாக்கு மேல பல்லை போட்டு  என்னை பத்தி இப்பிடி பேச ஆரம்பிச்ச பின்னாடி நான் எப்பிடிடா பஞ்சாயத்து பண்றது?” அவர் குரலில் கடுமையான கோபம் தெரிந்தது.


ஐயா! ஏதோ ஒரு கிறுக்கு பிடிச்ச கழுதை உங்களை பத்தி தப்பா சொன்னா நாங்க நம்பிடுவோமாயா? இப்போ பாருங்க. நான் அவளையே கூப்பிட்டு உங்க கிட்ட மன்னிப்பு கேக்க வைக்கிறேன்.அந்த பெரியவர் நாட்டாமைக்கு பதிலளித்த கையோடு கூட்டத்தை நோக்கி திரும்பி செல்வி! எங்கடி இருக்க? உன்னாலதாண்டி அத்தனை பிரச்சினையும். முன்னாடி வாடிஎன்றார். மெதுவாக கூட்டம் பிளந்து வழிவிட தொடங்கியது. நான் ஆர்வமாக பார்க்க தொடங்கினேன்.


பயந்து கொண்டே மெதுவாக செல்வி என அழைக்கப்பட்ட அந்த பெண் முன்னால் வர தொடங்கினாள். அவளுக்கு பதினாறு வயது இருக்கலாம். இவள்தான் இந்த  கிராமத்தின் பேரழகி  என்று யோசிக்காமல் பட்டம் தரலாம். அப்படி ஒரு அழகு. மிரட்சி நிரம்பிய அந்த கண்கள் அவள் மேல் எனக்கு ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது.


சொல்லுடி! ஐயா மேல எந்த தப்பும் இல்லன்னு சொல்லு” அந்த பெரியவர் அவளை மிரட்டினார்.


அவள் இப்போது கிட்டத்தட்ட  அழுது விட்டு இருந்தாள். 


“வாய்ல என்ன வச்சு இருக்க. பேசுடி.” அவள் பின்னால் நின்றிருந்த பெண் அவள் முதுகில் ஒரு அடி கொடுத்தாள்.


அட பாவிகளா. ஒரு பெண்ணை இப்படியா நடத்துவது. நான் செல்வியையே பார்த்தேன். அவள் குனிந்து அழுது கொண்டு இருந்தாள்.


“ஐயா! என்ன மன்னிச்சிடுங்க ஐயா. நீங்க வெளிய சொல்ல கூடாதுன்னு சொல்லியும் நான் சொல்லிட்டேன்” அவள் திடீரென பெருங்குரல் எடுத்து கத்தினாள். நான் அங்கே இருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தேன். அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.


“விளையாடாம உண்மையை சொல்லுடி.” அந்த பெரியவர் அந்த பெண்ணை பார்த்து முறைத்தார்.


“நான் உண்மையாத்தான் சொல்றேன். அன்னைக்கு எப்பவும் போல நாட்டமை வீட்டுக்கு வேலைக்கு போய் இருந்தேன். நாட்டாமை வீட்ல எல்லாரும் வெளியூருக்கு போய் இருந்தாங்க. நாட்டாமை மட்டும் தனியா இருந்தார்”


அவள் சொல்ல சொல்ல எனக்கு ரத்தஅழுத்தம்  ஏற ஆரம்பித்தது. இந்த நாட்டாமை நல்லவர் போல இருந்து கொண்டு என்ன வேலை செய்து இருக்கிறார். தனியாக இருந்த பெண்ணிடம். அதுவும் சின்ன பெண்ணிடம். இவரை போலீசில் பிடித்து கொடுக்காமல் இவர் ஆடும் நாடகத்தை இந்த ஊர்க்காரர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . செல்வி! நீ கவலைபடாதே. இந்த ஊரே எதிர்த்தாலும் உனக்கு நியாயம் வாங்கி தருவேன். நான் அரசாங்க ஊழியன். என் மனதுக்குள்ளேயே செல்வியிடம் பேசி கொண்டிருந்தேன்.


“நிறுத்துடி!” நாட்டமையின் கோப குரல் என் சிந்தனையை கலைத்தது. நான் அவர் பக்கம் திரும்பினேன். எழுந்து நின்றிருந்தார். கோபத்தில் மீசை துடித்து கொண்டிருந்தது.


“இனிமே என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன். இந்த பொண்ணு எப்பவும் வீட்டுக்கு வேலைக்கு வர பொண்ணுதான்.. ஆனா அதை சரியா பார்த்தது கூட இல்லை அன்னைக்கு வீட்டுக்கு வந்தது. சமையல்கட்டுக்குள்ள நின்னு சத்தமா பாட்டு பாடிகிட்டு இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்துல நான் சமையல்கட்டுக்குள்ள எட்டி பார்த்தேன். அப்போதான் முதல் தடவையா அதை பார்த்தேன். நல்லா பளபளன்னு மின்னிச்சு. எனக்கு அதை  பார்த்ததும்  ஆசையை அடக்க முடியல. ரொம்ப நாளா  காஞ்சு போய் இருந்த மனசு அதை பார்த்ததும் சபலப்பட ஆரம்பிச்சது. தப்புன்னு புத்தி சொல்லியும் மனசு கேக்கல.” நாட்டாமை நிறுத்திவிட்டு அருகில் இருந்த செம்பில் இருந்து நீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தார். ஊரே உறைந்து போய் நின்று இருந்தது.


“முதல்ல நேரா அவ கிட்ட கேட்டுடலாம்னு நெனச்சேன். ஆனா அவ மறுத்துட்டா? இந்த வயசுல நான் இதை எங்க போய் கேப்பேன். இந்த சந்தர்ப்பம் தவறகூடதுன்னா பலவந்தம்தான் ஒரே வழின்னு முடிவு எடுத்தேன். மெதுவா உள்ளே போனேன். கொஞ்சம் தண்ணி இருந்தா குடு புள்ள அப்பிடின்னு கேட்டேன். சத்தம் கெட்டு அவ திரும்பினதும் அவ கைய பிடிச்சு.” சொல்லிவிட்டு கீழே குனிந்து கொண்டார். என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. என்ன ஊர் இது? இவர்களை எல்லாம் நடுரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்.


இப்போது நாட்டாமை மீண்டும் தொடர்ந்தார். “அவ கைய பிடிச்சு அவ கைல இருந்த லாலிபாப்பை பிடுங்கி என்னோட வாய்ல போட்டுகிட்டேன். அவ அப்பிடியே என்னை பார்த்துகிட்டே நின்னா. நான் என்னோட பைல இருந்து நூறு ரூபாயை எடுத்து இதை வெளிய சொல்லிடாதன்னு சொல்லி அனுப்பினேன். ஆனா இவ இதை ஊரெல்லாம் சொல்லி என்னோட மானத்தை வாங்குவான்னு நினைக்கவே இல்லை”


நாட்டாமை முடித்ததும் எனக்கு சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை. அட பாவிகளா! ஒரு லாலிபாப்புக்கா இத்தனை களேபரம். வரும்போதே சொல்லி இருந்தால் நான் கண்டதையும் கற்பனை செய்து கொண்டிருக்க மாட்டேனே.


“ஐயா! இதுக்காக எல்லாம் நீங்க பஞ்சாயத்துக்கு வராம..”


அவர்கள் பேசி கொண்டு இருந்தனர். நான் மெதுவாக நழுவ ஆரம்பித்தேன்.



Monday, October 21, 2013

மாட்டிகிட்டேண்டா மாப்பிள்ளை! ( சிரிப்பு கதை)

ணமக்கள் யாரையும் தெரியாத ஒரு திருமணத்தில் கலந்து கொள்வது சற்று சங்கடமான விஷயம். இருந்தாலும் மணமகன் எனக்கு மிகவும் பழக்கம் என்பதால் அந்த திருமணத்திற்கு சென்றிருந்தேன். நான்காம் வரிசையில் ஒரு ஓரமாக இடம் பார்த்து அமர்ந்தேன். சில நிமிடங்களுக்கு பின் என்னருகில் ஒரு பருமனான நடுத்தர வயது நபர் வந்து அமர்ந்தார்.

"வணக்கம் தம்பி!" பேச்சு கொடுக்கிறார். அப்படியே கிளம்பும்வரை இவரை பிடித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆடு திருட வந்தவன் போல தனியாக முழித்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

"வணக்கம் சார். எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன். தம்பி யாருன்னு தெரியலயே"

"நான் மாப்பிள்ளையோட நண்பன்"

"நான் மாப்பிளைக்கு ஒன்னு விட்ட மாமா முறை. அங்க கல்யாண மேடையில பச்சை புடவை கட்டி இருக்கிறது என்னோட சம்சாரம்." மேடையில் பார்த்தேன். அங்கே இவரை விட பருமனான ஒரு பெண் பச்சை புடவையில் இருந்தார்.

"ஆனா பாருங்க. இத்தனை செலவு செஞ்சு கல்யாணம் வச்சாலும் கல்யாண பொண்ணுக்கு போட்ட மேக்-அப்பே சரியில்ல. என்னோட பொண்டாட்டி கூட பொண்ணை விட அழகா தெரியுறா." நான் கல்யாண பெண்ணின் மேக்-அப்பை கவனித்தேன். அப்படி ஒன்றும் மோசமில்லை. இருந்தாலும் அவர் கூறியதற்கு பதில் சொல்ல வேண்டுமே. ஏதாவது நகைச்சுவையாக பதில் அளித்தால்தானே  என்னை கலகலப்பானவன் என எண்ணி தொடர்ந்து பேசுவார்

"ஆமா சார்! நானும் அதையேதான் நெனச்சேன். கொண்டையா இது. உள்ள போய் குருவி கூடு கட்டினாலும் தெரியாது போல"

இதை நான் சொல்லி முடித்ததும் அவர் இடியென சிரிக்க தொடங்கினார். நான் அவ்வளவு பெரிய காமெடி செய்து விட்டேனா? என யோசித்து கொண்டே இருக்கும்போது அவர் சிரிப்பு சத்தம் மேலும் அதிகரித்தது. 

"ஹஹஹஹாஹா." மண்டபத்தில் இருக்கும் பேச்சு குரல்களையும் மீறி அவர் சிரிப்பு ஒலிக்க தொடங்கியது.

"சார்! நார்மல் ஆகுங்க சார். எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க பாருங்க"

நான் சொன்னதையே அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இப்போது வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க தொடங்கியிருந்தார். அவர் சிரிப்பு இப்போது எனக்கு பயத்தை உண்டாக்கியிருந்தது. அந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு அவர் மனைவி மண மேடையிலிருந்து இறங்கி எங்களை நோக்கி ஓடி வர தொடங்கினார். அவரின் சிரிப்பு இன்னும் நிற்கவில்லை. திடீரென தரையில் விழுந்து உருண்டு உருண்டு சிரிக்க தொடங்கினார். 

"என்னங்க!" மூச்சு இரைக்க ஓடி வந்த அவரது மனைவி அவரை நெருங்கி அவரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார்.

"என்னங்க ஆச்சு இவருக்கு?" மிக மெல்லிய குரலில் அவர் மனைவியிடம் கேட்டேன்.

"நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க." அவர் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

"இல்லைங்க சும்மா தமாஷ் பண்ணேன். கேட்டதும் சிரிக்க ஆரம்பிச்சுட்டார்" வார்த்தைகளை விழுங்கி விழுங்கி ஒருவாறாக சொல்லி முடித்தேன்.

"என்னது  தமாஷ் பண்ணீங்களா? எங்க உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? அவருக்கே சிரிக்கிற வியாதி இருக்கு. அவர் கிட்ட போய் தமாஷ் செஞ்சேன்னு சொல்றீங்களே"

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதென்ன புதிதாக சிரிக்கிற வியாதி. அந்த நபரோ இது எதையும் கண்டு கொள்ளாமல்  சிரித்து கொண்டே தரையில் உருண்டு கொண்டிருந்தார். . அவர் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இதற்குள் எங்களை சுற்றி திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சிலர் சூழ்ந்து விட்டனர்.

"என்னங்க இங்க தாலி கட்டுற நேரத்தில" என்றார் அதில் ஒரு பெரியவர்.

"இவன் என்னமோ சொல்லி இவரை சிரிக்க வச்சுட்டாங்க."  அந்த பெண்ணின் வார்த்தைகளில் மரியாதை மிகவும் குறைந்து விட்டது. கண்ணில் நீர் அணைகட்டாக தேங்கி எப்போதும் உடைந்து விடும் நிலையில் இருந்தது.

"சரி! இப்போ என்னம்மா செய்றது?" என்றார் அந்த பெரியவர்.

"இவரை இப்போவே ஹாஸ்பிடல் தூக்கிட்டு போகாட்டி இப்படி சிரிச்சு சிரிச்சே செத்துடுவார்."

அந்த பெண் சொல்லியதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படி ஏதாவது நடந்தால் இந்த பெண் நிச்சயம் போலீசில் கம்ப்ளைன்ட் செய்து என்னை கொலை வழக்கில் உள்ளே தள்ளாமல் விட மாட்டாள். புது விதமான சோதனையில் அல்லவா சிக்கி கொண்டேன்.

"என்னம்மா கல்யாண வீட்ல அப சகுனமா பேசிக்கிட்டு. யப்பா சிரிக்க வச்ச தம்பி. இவரை ஹாஸ்பிடலுக்கு தூக்கிகிட்டு போப்பா." அந்த பெரியவர் கூறிய பதிலில் அக்கறையை விட எங்கள் மூவரையும் வெளியில் அனுப்பிவிடும் ஆர்வமே தெரிந்தது. எப்படியாவது இங்கிருந்து  நழுவி விடலாம் என பார்த்தால் கிழம் நன்றாக மாட்டி விட்டு விட்டது. 

"சரிங்க. கூட்டிகிட்டு போறேன். ஆனா யாராவது கூட கை கொடுத்து இவரை ஆட்டோ வரைக்கும் கூட்டிகிட்டு வந்து விடுங்க."

ரு வழியாக மூன்று பேர் சேர்ந்து சிரமப்பட்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றினோம். நான் அவரின் ஒரு புறம் ஒடுங்கி கொண்டேன். அவர் மனைவி ஒரு புறம் அமர்ந்து கொண்டார். பாவி. அந்த ஆசாமி சிரிப்பதை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.

"இவருக்கு அடிக்கடி இப்படி வருமா"

நான் கேட்ட கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது. ஆட்டோவில் ஏற்றியதற்கு பதில் ஆம்புலன்சில் ஏற்றி இருக்கலாம். கடைசியில் மருத்துவமனையில் அவரை சேர்ப்பித்து அந்த பெண்ணிடம் சிறிது பணம் கொடுத்து விட்டு ஊர் திரும்பினேன்.

து  நடந்து சில நாட்களுக்கு பின் என்னுடைய நண்பனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நிச்சயம் அந்த ஆசாமி தன்னுடைய சிரிப்புக்கான காரணத்தை இவனிடம் சொல்லி இருப்பார். இவனின் மனைவி கொண்டையை பற்றி பேசியதற்காக என்னை நாக்கை பிடுங்கும்படி நான்கு கேள்வி கேட்க போகிறான். தயக்கத்துடன் மொபைலை எடுத்தேன்.

"மச்சி!  சாரிடா என்னால மேடைய விட்டு இறங்க முடியல"

"அது பரவாயில்லைடா.  அப்புறம் என்ன ஆச்சு அவருக்கு"

"அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சுடாங்க. எந்திரிச்சதும் சரி ஆகிட்டார்"

"என்ன வியாதி அவருக்கு?"

"சிரிக்கிற வியாதின்னு கேள்விப்பட்டு இருக்கியா? சிரிக்க மாட்டாங்க. சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்க. பத்து கோடி பேருல ஒருத்தருக்கு அந்த வியாதி இருக்குமாம்."

"அந்த பத்து கோடில ஒருத்தன் ஏன் கிட்டவா வந்து உக்காரணும்." நான் சொல்லியதும் அவன் சிரிக்க தொடங்கினான்.

"சிரிக்காதே. யாரு சிரிச்சாலும் பயமா இருக்கு."

"டேய்! அதை பத்தி பேசாத விடுடா." சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான். இப்போது எனக்கு பயம் சற்று குறைந்து இருந்தது.அவன் மனைவியின் கொண்டை பற்றி ஜோக் அடித்ததற்கு அவனிடம் மன்னிப்பு கேட்க முடிவு செய்தேன். என்னதான் அவன் பெருந்தன்மையாக அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறினாலும் மன்னிப்பு கேட்பதுதானே முறை.

"மாப்பிள்ளை! உங்க மாமா எதுக்கு சிரிச்சார்ன்னு உன்கிட்ட சொல்லிட்டாரா." தயக்கத்தோடு கேட்டேன்.

"அவர் எப்படி சொல்லுவாரு. அவர்தான் சிரிக்க ஆரம்பிக்கும்போதே எதுக்கு சிரிக்கிறோம்னு மறந்துடுவாராச்சே." அவன் சொல்லி முடித்ததும் நான் தொடர்பை துண்டித்து விட்டு தரையில் விழுந்து உருண்டு உருண்டு சிரிக்க தொடங்கினேன்.


Saturday, August 31, 2013

ஒரு 'பிட்டு' காதல் கதை (U)

"அண்ணே! நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே"

"கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்."

"சரி சொல்லுங்க"

"இது என்னோட  காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்."

"என்னது படிச்சீங்களா?"

"சரி +2   க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு  புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா."

"அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே."

"டேய்! மூடிகிட்டு கதையை கேளு."

"சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா"

"புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்கா என்ன?"

"இப்பிடி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் பள்ளிகூடத்தில ரிவிசன் டெஸ்ட் வந்துச்சு. பரீட்சை எழுதலாமுன்னு போனவனுக்கு பெரிய அதிர்ச்சி"

என்ன ஆச்சு

"புதுசா வந்த பொண்ணு பேரு என்னோட பேருக்கு அடுத்து வரதால அவளை என்னோட டெஸ்க்ல உக்கார வச்சுட்டாங்க"

"அது அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சின்னு சொல்லுங்க"

மண்ணாங்கட்டி. வழக்கமா என் கிட்ட ஒரு பையன் உக்காந்து இருப்பான். நானும் அவனும்தான் பிட் ஷேர் செஞ்சுக்குவோம். இப்போ இவ கிட்ட இருந்தா "நான் எப்பிடி பாஸ் ஆகுறது."

"ஐயோ பாவம்!"

"கஷ்டம்தான்"

"ஒரு வழியா நானே கை வலிக்க பிட் எழுதி எல்லா பரீட்சையையும் சமாளிச்சிட்டேன். ஆனா கடைசி பரீட்சை பிசிக்ஸ். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டாங்க"

"ம்"

"நான் எழுதிட்டு போன பிட்டை வச்சு என்னால அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியல. லேசா  திரும்பி அவளை பார்த்தேன். அவ கடகடன்னு எழுதிகிட்டே இருக்கா."

"ஆமா! பொண்ணுங்க எப்பவுமே நல்லா படிக்கும்ல."

"அப்படிதான் நானும் நெனச்சேன். இப்போ நான் எழுதி இருந்த பதிலை வச்சு கட்டாயம் பாஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. சூப்பர்வைசர் அசந்த நேரமா பாத்து லேசா பெஞ்சை தட்டி அவளை திரும்பி பாக்க வச்சேன்."

"ஆகா! அண்ணல் நோக்கியதை அண்ணியும் நோக்குறாங்க போல"

"அவ திரும்பினதும் அவ கிட்ட லேசா பேப்பரை காட்டேன்னு சிக்னல் பண்ணேன்."

"பேப்பரை காட்டேன்னுதான சிக்னல் பண்ணீங்க"

"ஆமா!  பேப்பரைதான்"

"காட்டுனாங்கள"

"காட்டுனா"

"அப்போ அவங்க புண்ணியத்துல பாஸ் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க"

"கிழிச்சேன். பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்னு மட்டும்தான் அவ எழுதி இருந்தா"

"ஹா ஹா! அப்புறம் என்ன செஞ்சீங்க"

"என்ன செய்றது? ஏதோ பத்து,பதினஞ்சு மார்க்காச்சும் அவ எடுக்கட்டும்னு என் கைல இருந்த பிட்டை அவளுக்கு பாஸ் செஞ்சேன்."

"அவங்க வேணாமுன்னு சொல்லலியா"

"அவளா? அவ ஏதோ பிட் அடிக்கறதுல எக்ஸ்பெர்ட் மாதிரி அதை வாங்கி அவ்வளவு நேக்கா பிட் அடிச்சா. அவ மூஞ்சியை பாத்தா அவ பிட் அடிக்கிறான்னு எவனும் சொல்ல மாட்டான்."

"சரி! இதுல எங்க காதல்"

"இரு!  அவ என் கிட்ட பிட் வாங்குனதும்தான் எனக்கு அப்போதான் எனக்கு இவ கிட்ட லவ் சொல்ல இதுதான் சரியான நேரமுன்னு. ஒரு பேப்பரை எடுத்தேன். பென்சிலால ஒரு இதயத்தை வரைஞ்சு அதுல அம்பு விட்டேன். எழுதுன பேப்பரை அவ கிட்ட பாஸ் பண்ணேன்."

"பரீட்சை ஹால்லயா? ஏன் அவ்வளவு அவசரம்."

"இப்போ லெட்டர்  குடுத்தாதான் அவளால கத்தி ஊரை கூட்ட முடியாது. குடுத்த பேப்பரை வெளியே எடுத்துட்டு போய் அவங்க அப்பா கிட்ட போட்டு தரவும் முடியாது. திரும்ப என் கிட்டதான் குடுத்து ஆகணும். அதை நான் அழிச்சுட்டு ஏதாவது எழுதிட்டு கட்டி கொடுத்துடுவேன். ரிஸ்க் இல்லாம லவ்வை சொல்லிடலாம்."

"அபார மூளைண்ணே உங்களுக்கு. இந்த மூளையை படிப்புல காட்டி இருந்தா நீங்க பெரிய ராக்கெட் எஞ்சினியர்  ஆகி இருப்பீங்க. சரி அதை படிச்சுட்டு என்ன சொன்னாங்க"

 "நான் பேப்பரை குடுத்துட்டு அவ படிக்கிறாளான்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ அதை பாத்த உடனே இன்னொரு பேப்பரை எடுத்து பென்சிலால ஏதோ எழுதுனா. என் கிட்ட அந்த பேப்பரை பாஸ் செஞ்சா"

"என்ன எழுதி இருந்துச்சு அந்த பேப்பர்ல? லவ் ஓகே ஆயிடுச்சா"

"நானும் ஓகே சொல்லிதான் எழுதுறான்னு நெனச்சேன். ஆனா  இங்கதாண்டா ட்விஸ்ட். அவ அந்த பேப்பர்ல எனக்கு படம் வரைய சரியா வராது. நீங்க குடுத்த படத்தையே நான் கட்டி குடுத்துடறேன். நீங்க உங்களுக்கு வேற படம் வரைஞ்சுகுங்க அப்பிடின்னு எழுதி இருந்தா. அவளுக்கு எப்பிடி புரிய வச்சு அந்த பேப்பரை வாங்குறதுன்னு தெரியல. கடைசில கட்டியே குடுத்துட்டா"

"அடி பாவி! அவளுக்கு பிசிக்ஸ்க்கும், பயாலஜிகுமா வித்தியாசம் தெரியாது?"

"அந்த கூமுட்டைக்கு அதுவே தெரியலையே".

"அப்புறம் என்ன ஆச்சு? பேப்பர் திருத்தும்போது நீங்க ரெண்டு பேருமே கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா?"

"அது நடந்து இருந்தா கூட பரவாயில்லயே"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"பரீட்சை ரிசல்ட் வரும்போது நான் ஃபெயில். அவ பாஸ் ஆகி இருந்தா. இப்போ அவ அந்த பிசிக்ஸ் வாத்தியாரை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கா"

"அட பாவமே! பாவம்னே நீங்க. நீங்க குடுத்த லவ் லெட்டரால அந்த பொண்ணு ப்ரீத்தி பிசிக்ஸ் வாத்தியார் கூட சேந்து லைப்ல செட்டில் ஆகிடிச்சு. ரொம்ப சோகமான கதைதான்."

"ஆமாடா! இந்த மாதிரி ஒரு சோகம் யாரு வாழ்க்கையிலயும் வந்திடவே கூடாது."

Sunday, August 25, 2013

ஆறு ஆண்கள் - ஒரு பெண்

"என்னடா! இந்த இடத்துல வேற கட்டடமே இல்ல?" என்று கேட்டேன்

"அந்த தைரியத்தில்தான் இங்க வந்து எல்லா வேலையும் செய்றானுங்க. வா உள்ள போகலாம்".

இருவரும் மெதுவாக அந்த கைவிடப்பட்ட பழைய ஃபாக்டரி உள்ளே சென்றோம். மிக மெல்லிய சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் ஆட்கள் எங்கேயும் தட்டுப்படுகின்றனரா என தேட தொடங்கினேன். இந்த 22 வயதில் என்னை நம்பி இது போன்ற வேலைகளை என்னுடைய எடிட்டர் கொடுக்கிறார் என்றால் அதற்கு காரணம் என்னுடைய திறமை. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மனதிற்குள் உறுதி எடுத்து கொண்டேன்.

"ரேஷ்மா! உன் செருப்பு ஜாஸ்தி சத்தம் குடுக்குது பார். அதை கழட்டி போடு"

அவன் சொல்வதும் சரிதான். இந்த ஹை-ஹீலில் இருந்து வரும் சத்தமே எங்களை காட்டி கொடுத்துவிடும். செருப்பை கழட்டி விட்டு நடக்க தொடங்கினேன். 

"மொபைலை சைலன்ட்ல போட்டுட்டியா?"

"அதான் இங்க சிக்னலே இல்லியே"

"நிஜம்மாவே இங்க போதை மருந்து எல்லாம் விக்கிற மாதிரி உனக்கு தெரியுதா?"

"நமக்கு வந்த இன்பர்ஃமேசன் அதுதான்."

"யாரோ தந்த இன்பர்ஃமேசனை நம்பி இங்க வந்து நிக்கிறோம்னு தோணுது . எனக்கு என்னமோ இங்க அப்படி ஏதும் நடக்குற மாதிரி தெரியல"

"ரேஷ்மா! அங்க பாரு"

அவன் காட்டிய திசையில் பார்த்தேன். ஐந்து பேர் அமர்ந்து இருப்பது தெரிந்தது.  ஒருவன் எதையோ புகைத்து கொண்டிருந்தான். மீதி நால்வரும் தங்களுக்குள் எதையோ விவாதித்து கொண்டிருந்தனர்.

"எல்லாம் காலேஜ் பசங்க. இதை ஃபோட்டோ எடுத்து கொண்டு போனா எடிட்டர் பாராட்டி தள்ளிடுவார். எடு ரேஷ்மா "

"இன்னும் கொஞ்சம் கிட்ட போகலாம். முகம் எதுவுமே தெரியல. எப்பிடியும் பேப்பர்ல போடும்போது முகத்தை மறைச்சுடுவாங்க. அப்பிடியே எடு"

"இல்லடா. இன்னும் கொஞ்சம் கிட்ட போகலாம்"

"சொன்னா கேக்க மாட்டியே. வா"

ஒரு அடிதான் எடுத்து வைத்து இருப்போம். அங்கே ஒருவன் எங்களை கவனித்து விட்டான். "அங்கே எவனோ இருக்கான்டா" என்று அவன் கத்தியது எங்களுக்கு தெளிவாக கேட்டது.

"ஓடு ரேஷ்மா!"

ராஜேஷ் என்னுடைய கைகளை பற்றி கொண்டு ஓட தொடங்கினான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இங்கே வந்தது முட்டாள்தனமோ? என்னால் எப்படி இவர்களை விட வேகமாக ஓட முடியும். அவர்கள் துரத்தி பிடித்து ஆளுக்கு ஒரு அடி கொடுத்தால் போதும். இவன் சுருண்டு விடுவான். அடுத்து இவர்கள் கைகளில் சிக்க போவது நான்தான். இந்த ஆளரவம் இல்லாத இடத்தில் அவர்களுக்கு என்னை சிதைக்க போதுமான வாய்ப்புகள் இருக்கிறது. வயிற்றில் பயம் உருண்டது.


"ரேஷ்மா! பேப்பர் ஸ்ப்ரே கைல வச்சு இருக்கியா?" ஓடி கொண்டே கேட்டான்.

"இல்லடா, பேனா கத்தி மட்டும் இருக்கு"

"லூசாடி நீ? எப்பவும் கைல பேப்பர் ஸ்ப்ரே வச்சு இருக்கிறது இல்ல. அந்த 2 இன்ச் பேனா கத்தியை வச்சு எத்தனை பேரை குத்துவ?  நீ கைல எடுத்ததுமே தட்டி விட்டுடுவானுங்க"

இந்த நிலையிலும் எப்படி இவ்வளவு தெளிவாக என்னை திட்டுகிறான். அவனால் ஓட முடியவில்லை என்பது அவன் கேள்வியிலிருந்து தெளிவாக தெரிந்தது. அவனுடைய கனத்த உடம்பு அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. என் கைகளை பற்றியிருந்த அவன் கைகளை விலக்கி கொண்டான்.

"ரேஷ்மா! நீ ஓடு"

அவன் நின்று அவர்கள் பக்கம் திரும்பினான். நான் ஓடுவதை நிறுத்தவில்லை.  அவனை திரும்பி பார்த்தேன். அவன் அவர்களின் வழியில் நின்று அவர்களை தடுக்க  முயன்று கொண்டிருந்தான். பைத்தியக்காரா, வந்து விடு என்று கத்த நினைத்தேன். பயத்தில் வார்த்தைகள் வரவில்லை. ஓடி வந்தவர்கள் அவன் எதிர்த்ததும் சற்று தடுமாறினார்கள். பின்னர் சுதாரித்தனர். ராஜேஷ் வலியில் அலறும் குரல் கேட்டது.திரும்பி பார்த்தேன். கீழே கிடந்த ராஜேஷை இருவர் அடித்து கொண்டிருந்தனர். 3 பேர் என்னை துரத்தி வந்து கொண்டிருந்தனர்.

என்னால் ஓட முடியவில்லை. என்னுடைய வேகம் குறைந்ததை உணர்ந்தேன். என்னுடைய கூந்தலை யாரோ பற்றி இருப்பது  தெரிந்தது. எல்லாம் முடிந்தது. என்னுடைய அழகிய உடல் இவர்கள் கைகளில் சிக்கி விட்டது.

"சூப்பரா இருக்காடா" என்று கூறி கொண்டே அவன் என்னுடைய முகத்தை திருப்பினான். அவன் முகத்தை பார்த்தேன். பள்ளி மாணவன் போல் தெரிந்தான்.

"என்னை விட்டுடுங்க ப்ளீஸ்" அவர்களிடம் கை கூப்பினேன்.

அவன் என் கன்னத்தில் அறைந்தான். தடுமாறி கீழே விழுந்தேன். வாயில் ரத்தத்தின் சுவை தெரிந்தது.

"டேய்! நீ போய் இவ கூட வந்தவனை கட்டி போட்டுட்டு அந்த ரெண்டு பேரையும் வர சொல்லு. கார்த்திக், நீ அவ கையை பிடிச்சுக்கோ "

அவன் கூட இருந்தவர்களுக்கு கட்டளையிட்டான். நாளை என்னை பெண் பார்க்க வர போவது நினைவுக்கு வந்தது.  ராஜேஷை அடித்து கொண்டிருந்த 2 பேரும் நான் இருக்கும் இடம் நோக்கி ஓடி வருவது நிழலாக தெரிந்தது. பயத்தில் அடி வயிற்றில் இருந்து கதற தொடங்கினேன். கண்கள் இருட்டி கொண்டு வந்தது. கண்களை மூடி கொண்டேன். ஒரு உடல் என் மேல் படர்வது தெரிந்தது. என்னை சீரழிக்க போகிறார்கள். ஆயுளுக்கும் தீராத மன வலியை கொடுக்க  போகின்றனர்.

"டேய் வேணாண்டா" திடீரென  பழக்கப்பட்ட ஒரு குரல் கேட்டது. அவன் என்னிடமிருந்து விலகி கொண்டான்.

"என்னடா நல்லவன் ஆயிட்டியா. ஏதோ இதெல்லாம் நமக்கு புதுசு மாதிரி சீன் போடுற"

"இல்லடா அவ என் அக்கா" 

அதிர்ந்தேன். அட பாவி. நீயுமா அந்த கூட்டத்தில்  இருந்தாய். அப்படியே மயங்கினேன்.

நான் கண் விழித்த பொது ராஜேஷும், என்னுடைய தம்பியும் என் அருகே இருந்தனர். ராஜேஷின் முகம் வீங்கி இருந்தது.

"சாரி அக்கா! அவங்க போய்ட்டாங்க. வா நாம வீட்டுக்கு போகலாம்". இருவரும் என்னை தூக்கி விட்டனர்.

"இங்க நடந்ததை வெளிய சொல்லிடாத. அப்படியே மறந்திடு"

"என்னடா இது. நீ இப்பிடிப்பட்ட ஆளா?" கோபத்துடன் அவனை கேட்டேன்

"என் இப்ப கத்துற. அதான் ஒன்னும் ஆகலியே. இந்த மாதிரி இடத்துக்கு வந்தா இப்பிடித்தான் எதாச்சும் நடக்கும்"

"இந்த இடத்துல நான் இல்லாம வேற யாராச்சும் இருந்து இருந்தா?"

அவன் பதில் சொல்லவில்லை.

"ரேஷ்மா! இங்க ஒன்னும் பேச வேண்டாம். வீட்டுக்கு போகலாம் வா" என்றான் ராஜேஷ்.

"இல்ல ராஜேஷ். இது சரி இல்ல. இந்த இடத்துல வேற யாராச்சும் இருந்து இருந்தா?"

"சரி! என்னதான் செய்யலாம்னு சொல்ற."

நான் பதில் சொல்லவில்லை. மெதுவாக பாக்கெட்டில் இருந்த பேனா கத்தியை எடுத்தேன். மின்னல் வேகத்தில் பாய்ந்து  அதை என்னுடைய தம்பியின் கழுத்தில் வைத்து அறுக்க தொடங்கினேன். அதை சற்றும் எதிர்பார்க்காத என்னுடைய தம்பியின் கழுத்திலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...