Monday, May 20, 2013

தோனி - ஒரு அதிசயம் - 2

தோனியின் அந்த ஆட்டத்தை பார்த்த பின் எனக்கு அவர் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்தது. இந்திய அணிக்கு ஒரு அதிரடி ஆட்டக்காரர் கிடைத்துவிட்டார் என முடிவு செய்து விட்டேன். இந்த நிலையில் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த பயணத்தில்தான் தோனியின் இன்னொரு முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரின் ஒரு போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 250 ரன்களை சேர்த்தது. 250 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு  100 ரன்களை சேர்க்கும் முன் ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆறாவது விக்கெட்டுக்கு களம் இறங்கினார் தோனி. அவரால் அதிரடி ஆட்டம் மட்டுமே ஆட முடியும் என்று நம்பி கொண்டு இருந்தேன். ஆட்டத்தின் போக்கை உணராமல் அவசரப்பட்டு ரன் எடுக்க முயன்று அவுட்டாகிவிடுவார் என்று கணித்தேன். இந்திய அணியின் தோல்வி உறுதி என்று முடிவு செய்தே விட்டேன். இந்த முறை தோனி மீண்டும் நான் கணித்தது தவறு என்று முடிவு செய்தார். யுவராஜுடன் இணைந்து மிக கவனமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். அதிரடி ஆட்டம் மட்டுமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப அணிக்கு தனது பங்களிப்பை வழங்க முடியும் என்று நிரூபித்தார்.

இந்த தொடரில் அவரின் அசுர வேக ஸ்டம்பிங்களையும் கவனித்தேன். அவரின்  கைகள், காரணமே இல்லாமல் ஸ்டம்ப்களை தட்டி விடுவது போல் இருக்கும். ஆனால் ரீப்ளே செய்து பார்க்கும்போது பேட்ஸ்மேன் கால்களை மிக சிறிய அளவு கிரீசை விட்டு வெளியே எடுத்து இருப்பது தெரியும். தோனி தனது  மின்னல் வேகத்தால் அந்த இடைவெளியை சரியாக பயன்படுத்தி இருப்பார்.

அதன் பின் நடந்த பாகிஸ்தான் தொடர் தோனியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. முஷாரப் தோனியின் ஹேர் ஸ்டைலை பாராட்ட, இந்திய ரசிகர்கள் அவரை போன்றே தங்கள் ஹேர் ஸ்டைலை அமைத்து கொண்டனர். தோனி ஒரு தேசிய ஹீரோவாக இந்த தொடரின் முடிவில் மாறி போனார். இதற்கு இடையில் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பும் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து தோனியை வந்து சேர்ந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டிகளிலும் சாதித்து காட்டினார் தோனி.


இப்படி தோனி தன்னை அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாற்றி கொண்டு இருந்தார். ஒரு நாள் போட்டிகளில் தன் பேட்டிங் சராசரியை 50க்கு மேலும், ஸ்ட்ரைக் ரேட்டை 100க்கு மேலும் வைத்து இருந்தார். அவரை அணியின் கேப்டனாக கூட நியமிக்கலாம் என என்ன தொடங்கினேன். அப்போது ஒரு ஆட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் என் எண்ணத்தை வலுவாக்கியது. ஒரு போட்டியின்போது தோனி பந்தை பௌலரிடமே திருப்பி அடித்தார். பந்தை பிடித்த பௌலர் அதை தோனியை நோக்கி எறிவது போல பாவ்லா காண்பித்தார். பேட்ஸ்மேன்களை எரிச்சலூட்டி அவர்களின் கவனம் சிதற செய்ய பௌலர்கள் கையாளும் யுக்தி இது. பொதுவாக இது போன்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் பயத்தில் ஸ்டம்பை விட்டு விலகி ஓடுவர். அல்லது பௌலரை முறைப்பார்கள். ஆனால் தோனி என்ன செய்தார் தெரியுமா? நின்ற இடத்திலே சிறிதும் அசைவற்று நின்று கொண்டார். பின் பௌலரை பார்த்து ஒரு தனது  வழக்கமான புன்னகையை உதிர்த்தார். "அட பாவி! நீ எதுக்குமே பயப்பட மாட்டியா" என நினைத்து கொண்டேன். அந்த சம்பவத்திற்கு பின் இவர் கேப்டனாக தகுதியானவர் என்ற என் எண்ணம் வலுப்பட்டது. 

இப்படி தோனிக்கு எல்லாம் உச்சத்தில் சென்று கொண்டு இருக்கும்போதுதான் 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடர் வந்தது. எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் எளிதில் மறக்க முடியாத தொடர் அது.

- தொடரும் 

Thursday, May 9, 2013

தோனி - ஒரு அதிசயம்

ங்குலி தலைமையில் பல வெற்றிகளை இந்திய அணி குவித்து வந்த காலம். அந்த அணிக்கு இருந்த மிக பெரிய பிரச்சனை சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாதது. பார்த்திவ், தினேஷ் கார்த்திக் என சில வீரர்களை முயன்றபோதும் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே ராகுல் டிராவிட் வேண்டா வெறுப்பாக விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருந்தார். கங்குலியோ, "இந்தியாவில் ஒரு கில்க்ரிஸ்டோ, மார்க் பவுச்சரோ இல்லை; எனவே டிராவிடே விக்கெட் கீப்பிங் செய்வார்"  என பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால் டிராவிட்டின்  விக்கெட் கீப்பிங் சொல்லி கொள்ளும்படி இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணி வங்கதேசம் சென்றது. வழக்கமாக சிறிய அணிகளுடன் மோதும்போது புதிய வீரர்கள் அதிக அளவில் வாய்ப்பு பெறுவார்கள். அப்பொழுதும் அதே போல் அணியில் சில  புதுமுக வீரர்கள் வாய்ப்பு பெற்றார்கள். அப்பொழுது இந்திய A அணியில் அசத்தி கொண்டு இருந்த தோனியும் வாய்ப்பு பெற்றார். 

2004 ஆம் ஆண்டு தோனியின் முதல் போட்டி.  நீளமான முடி; இந்திய வீரர்கள் யாருக்கும் இல்லாத கட்டுமஸ்தான உருவம். பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார்.  முதல் போட்டியில் ஒரு ரன்னும் எடுக்காமல் அவுட்.  அடுத்த போட்டியில் அவரின் பேட்டிங்கை பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது. அந்த போட்டியில் சர்வ சாதாரணமாக ஒரு சிக்ஸர் அடித்தார். பின் சிங்க பல் தெரிய ஒரு சிரிப்பு. அவரின் உடல்  வலிமை கவனிக்க வைத்தது. ஆனால்  அவரின் பேட்டிங் ஸ்டைல் மிக மோசம் . சர்வதேச கிரிக்கெட் வீரர் போலவே இல்லை. இந்த பேட்டிங்  ஸ்டைலில் ஆடி சாதிப்பது சாத்தியமே இல்லை. அதிரடியாக ஆடினால் சில போட்டிகளில்  அதிக பட்சம் 30 அல்லது 40 ரன்கள் எடுக்கலாம்.  ஆனால் பெரிய ஸ்கோர், நம்பகமான ஆட்டம் எல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைத்தேன். நினைத்தது போலவே அந்த தொடரில் சுமாராகவே ஆடினார். டிராவிட்டின் தலைவலி எப்போதும் தீராது போலும் என்று எண்ணி கொண்டேன். 


அடுத்த தொடர் பாகிஸ்தானுடன். இந்த தொடருக்கு  அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என  கொண்டேன். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்க பட்டது. இளைஞர்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்த சாப்பல் ஒரு போட்டியில்  தோனிக்கு மூன்றாவது வீரராக களம் இறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் வரலாறு எழுதப்பட்டது அந்த போட்டியில்தான். அந்த போட்டியில் நான்கும், ஆறுமாக அடித்து  அவர் அடித்த ரன்கள் 148. அந்த ஆட்டத்தை பார்த்த டிவி வர்ணனையாளர்களோ  தாங்கள் பார்ப்பது தோனியையா, இல்லை விவியன் ரிச்சர்ட்சின் புயல் வேக ஆட்டத்தையா என வியந்தனர். நானோ இது எத்தனை நாட்களுக்கு என பார்க்கலாம் என எண்ணி கொண்டேன். இந்த ஒரு போட்டியில் ஆடியதால் இன்னும் ஒரு ஆண்டுக்கு அணியில் இருப்பார் என்று எண்ணினேன். . ஆனால் அந்த ஆட்டத்தை முழுவதுமாகவும் என்னால் ஒதுக்கி விட முடியவில்லை. காரணம், அந்த போட்டியில் தோனி காட்டிய அட்டிடியுட். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று எல்லா வீர்களுக்கும் இருக்கும் பயமோ, பதட்டமோ அவரிடம் சுத்தமாக இல்லை. சதம் எடுத்த பின்னும்  முதல் சதம் எடுத்த வீரரின் முகத்தில் இருக்கும் பூரிப்பு அவரின் முகத்தில் இல்லை. தான் எதுவுமே செய்யாதது போல சலனமற்ற முகத்தோடு அவ்வளவு இயல்பாக பந்துகளை நொறுக்கினார்.  

அதற்கு பின் இலங்கை தொடரில் அவர் அடித்த சதமோ அவரின் புகழை இன்னும் உயர்த்தியது. மின்னல் வேகத்தில் 183 ரன்களை குவித்து அந்த போட்டியில் பல  சாதனைகள் படைத்தார். எனக்கு  அந்த ஆட்டத்தை முழுவதும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவரின் ஓடி ரன் சேர்க்கும் வேகம், அசாத்திய பலம் இது எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. தோனியை நான்  முதல்முதலில் வியந்து பார்த்தது அன்றுதான்.

                                                                                                                                            தொடரும் 

 உங்களின் வரவேற்பை பொறுத்தே அடுத்த பகுதி எழுதுவது பற்றி முடிவு செய்வேன்


Monday, May 6, 2013

ஃபேஸ்புக் சமூகம் - இந்த சமூகத்துல நீங்களும் இருக்கீங்களா?

ஃபேஸ்புக் யூஸ் பண்றது போதை பழக்கத்தை விட மோசமானதுன்னு ஒரு நியூஸ் படிச்சேங்க. அது என்னவோ எனக்கு உண்மைதான்னு தோணுதுங்க. இப்போல்லாம் நம்ம ஆளுங்க இருக்காங்களே காலைல பல்லு விளக்க மறந்தாலும் ஃபேஸ்புக் ஓபன் பண்ண மறக்குறது இல்ல. விடிஞ்சதும் 'குட் மார்னிங்' அப்பிடின்னு ஸ்டேடஸ் போடுறது. அப்புறம் ப்ரண்ட் கிட்ட ஓசி வாங்குன ஒரு ஓட்டை கூலர்சை மாட்டிகிட்டு எடுத்த போட்டோவை அப்லோட் பண்றது. இப்பிடி விடிஞ்சதுல இருந்து தூங்குறவரை ஃபேஸ்புக்ல இவங்க செய்யுற அலம்பல் இருக்கே. தாங்க முடியாது.
 
அதுல சில பேரு இருக்காங்க. கூட படிக்கிற பொண்ணு, வேலை செய்யுற பொண்ணு பேரெல்லாம் போட்டு தேடி ப்ரண்ட் ரிகஸ்ட் குடுக்குறது இவங்க முழு நேர வேலை . அந்த பொண்ணு அச்செப்ட் பண்ணிட்டா  . அப்புறம் அந்த பொண்ணு மூஞ்சி கூட கழுவாம போட்டோ எடுத்து போட்டாலும் "யூ ஆர் ஸோ கியூட்", "நைஸ் ஸ்மைல்" அப்பிடின்னு கமெண்ட் தருவாங்க. இந்த மாதிரி ஆளுங்களை நம்பித்தான் பொண்ணுங்க ஃபேஸ்புக்ல போட்டோ போடுறதே. அப்புறம் பொண்ணுங்க யாரும் சாட்டிங் கிடைச்சுட்டா இவங்களுக்கு ஒரே குஷிதான். மொக்கை போட்டே அந்த பொண்ணை சாகடிச்சுடுவாங்க



இந்த பொண்ணுங்களையும் சும்மா சொல்ல கூடாது. ரொம்ப போர் அடிச்சா 'இன்னைக்கு என் தலைல இருந்து ரெண்டு பேன் எடுத்தேன் ' அப்பிடின்னு ஒரு ஸ்டேடஸ் போட்றுவாங்க. அன்னைக்கு நாள் முழுசும் பசங்க போடுற கமெண்டை படிச்சே பொழுதை ஓட்டிடுவாங்க .  ஃபேஸ்புக்ல போட்டோ போட்டுட்டு, யாரு போட்டோவுக்கு லைக்ஸ் ஜாஸ்தி விழுதோ அவங்கதான் பெரிய அழகின்னு சில பொண்ணுங்க அழகி போட்டி வேற நடத்துறதா கேள்வி.

அப்புறம் ஃபேஸ்புக் போராளிகள். அன்னைக்கு பேப்பர்ல முதல் பக்கம் வர்ற நியூஸ் மட்டும் பாத்துப்பாங்க. அதை மட்டும் வச்சுக்கிட்டு ஃபேஸ்புக் ஸ்டேடஸ்ல அறிக்கை விடுவாங்க பாருங்க. மன்மோகன்சிங்ல இருந்து பக்கத்துக்கு வீட்டுக்காரன் வரைக்கும்ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டாங்க.பெரும்பாலும் இவங்க கருத்துகள்ல ஆவேசம் பொங்கும். எல்லாரையும் கண்டபடி திட்டியும் குறை சொல்லியும் எழுதுவாங்க . யாராவது  இவங்க கருத்தை தப்புன்னு சொல்லி கமெண்ட் போட்டா  இவங்களுக்கு வருமே கோவம். கமெண்ட் போட்டவனை இனிமே ஃபேஸ்புக் பக்கமே திரும்பி பாக்க வைக்க முடியாத அளவு காய்ச்சி எடுத்துடுவாங்க.

அடுத்த வகை மக்கள் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள். ஒவ்வொரு நடிகரோட ரசிகனும் அடுத்த நடிகரை படிச்சாலே கண்ணு கூசுற அளவுக்கு நல்ல வார்த்தைகளாலே அர்ச்சனை செய்வாங்க. எப்படியோ  இது நாள் வரைக்கும் சுவத்துல ஒட்டுன போஸ்டர்ல சாணி அடிச்ச சமூகம் இன்னைக்கு கம்ப்யூட்டர் மானிட்டர்ல சாணி அடிக்கிற அளவு முன்னேறி இருக்கிறது நல்ல வளர்ச்சிதான்.

அப்புறம் இன்னும் ஒருத்தரை பத்தி சொல்ல மறந்துட்டேனே. அவர்தான் நம்ம அரசியல் சாணக்கியர். நம்ம ஃபேஸ்புக் சமூகம்  பத்தி சரியா தெரியாம ஒரு பேஜ் ஓபன் பண்ணிட்டார். பாராட்டு வந்து குவிய போகுதுன்னு நெனைச்சவருக்கு முதல் நாள்லயே அதிர்ச்சி . இப்போ  அவரை கழுவி கழுவி ஊத்துற கமெண்ட்ஸ்லாம் டெலிட் பண்றதுக்கே தனியா ரெண்டு பேரை வேலைக்கு வச்சு இருக்கிறதா கேள்வி. இப்பிடி சாணக்கியரையே தடுமாற வச்சுட்டாங்க நம்ம ஆளுங்க.

இப்படி சொன்னா எவ்வளவோ சொல்லிட்டே போகலாமுங்க. இருந்தாலும் ஃபேஸ்புக்ல சில அப்டேட்ஸ் எல்லாம் போட வேண்டிய வேலை இருக்கு. ஸோ முடிச்சுகிறேங்க.

Friday, May 3, 2013

கார்பரேட் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி? வழி காட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்

ரசியல் அரசியல்ல மட்டும் இல்ல. எல்லாத்துலயும் இருக்கு (எதாச்சும் புரியுதா?) அதாவதுங்க நான் என்ன சொல்ல வரேன்னா எல்லா இடத்துலயும் அரசியல் செய்றவங்க இருக்காங்க. வீட்ல மாமியாருக்கு எதிரா மருமகளும், மருமகளுக்கு எதிரா மாமியாரும், ஆஃபீஸ்ல வேலையாட்கள் செய்யுற அரசியலும், திமுக, அதிமுக, பாமக  அப்பிடின்னு கட்சிகள் செய்யுற அரசியலும்  எல்லாமே ஒண்ணுதான். அதிலும் கார்பரேட் கம்பெனில வேலை செஞ்சுகிட்டு அரசியல் செய்ய மாட்டேன்னா உங்களை கேனை பயல்னு சொல்லிடுவாங்கன்னே. அதனால நான் சொல்ற  மாதிரி அரசியல் செஞ்சு வாழ்க்கைல முன்னேற பாருங்க.

முதல் பாய்ன்ட் என்னன்னா . உங்களுக்குள வெக்கம், மானம், ரோசம் இப்பிடி எதாச்சும் ஃபீலிங்க்லாம் இருந்தா இன்னைக்கே தொடைச்சு தூக்கி எரிஞ்சுடுங்க. நாம முன்னேற முதல் தடையே அதுதான். அதே மாதிரி . நான் அரிச்சந்திரன். எப்பவும் ஒரே மாதிரிதான் பேசுவேன் அப்பிடின்னு நிக்காதீங்க. உதாரணத்துக்கு நம்ம ராமதாசை எடுத்துக்குங்க. அவர் எப்பிடி மாறி மாறி கூட்டணி வச்சுக்கிட்டு மாறி மாறி எல்லாரையும் திட்டுனாரு. அதே மாதிரி நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசி பழகுங்க.



உங்களுக்கு வேலை செய்யவே தெரியாம இருக்கலாம். ஆனா அதை எப்பவுமே வெளிய காமிக்க வேணாம். பாக்குறவங்க ஒரு வேளை இவர் உண்மையிலேயே பெரிய ஆளோன்னு குழம்பணும். இந்த அப்பரைசல் மீட்டிங் எல்லாம் போனா வாய்க்கு வந்தபடி பொய் சொல்லணும். கலைஞர் கிட்ட மின்சாரம் ஏன் சரியா வல்லன்னு கேட்டா  "நான் 1960ல்  தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தேன், அண்ணாவின் தம்பி   ஆனேன் " அப்பிடின்னு சம்பந்தம் இல்லாம ஒரு பதில் சொல்லுவாரே. அதே மாதிரி நீங்களும் சம்பந்தம் இல்லாம ஒரு பழைய கதை சொல்லணும். அதை கேட்டா நீங்க உண்மையாவே ஏதோ செஞ்சீங்களோன்னு   உங்க மேனேஜருக்கு சந்தேகம் வரணும். இதை மட்டும் செஞ்சுட்டா உங்க வாழ்க்கை ஓஹோதான்.

உங்க மேனேஜரை பாக்கும்போதேல்லாம் 32 பல்லும் தெரியுற மாதிரி சிரிச்சு வைங்க. அவரு உங்களை எத்தனையோ தடவ கழுவி கழுவி ஊத்தி இருக்கலாம். அதையெல்லாம் நெனச்கிட்டு சிரிக்காம விட்டீங்க நீங்க காலி. மேனேஜர் கிட்ட மட்டையா மடங்கிடுங்க. இதுல எதாச்சும் சநதேகம் இருந்தா கீழ உள்ள படத்தை பாத்துகோங்க.


 அப்புறம் கம்பெனில கூட்டணி இல்லாம இருக்கிறது எல்லாம் சாத்தியமே இல்ல. அதனால கூட வேலை செய்யுறவனை(இல்ல செய்யுறவளை) பிடிக்காட்டியும் அதை வெளில காட்ட வேண்டாம். நாளைக்கு ஒரு வேளை அவனே/அவளே  கூட நம்ம மேனேஜர் ஆகிடலாம்  என்னது, ஏற்கனவே அப்பிடி சண்டை போட்டீங்களா? கவலையே வேண்டாங்க. நாளைக்கு அவங்க கிட்ட போய் நம்ம விஜயகாந்த் மாதிரி ஒரு வணக்கம் வச்சுடுங்க. யாராச்சும் கிண்டல் பண்ணா இது அவ மரியாதை நிமித்தமான சந்திப்பு அப்பிடின்னு சொல்லி சமாளிச்சுடுங்க.
இப்படி அரசியல் நுணுக்கங்களை கத்துகிட்டா ஒரு நாள் நீங்க உங்க கம்பெனியோட MD கூட ஆகலாம். வளமான எதிர்காலம் அமைய வத்திகுச்சி சார்பா வாழ்த்துகள்.

Thursday, May 2, 2013

பீட்சா போச்சே - தமிழனை பாடாய்படுத்தும் ஆங்கிலம்

"பூவே செம்பூவே உன் வாசம் வரும் " அப்பிடின்னு டிவில ராதாரவி பாடிட்டு இருந்தாரு. ஒரு வேளை இந்த பாட்டை ராதாரவி உண்மையாவே தன்னோட வாய்ஸ்ல பாடிட்டு இருந்தா எப்பிடி இருக்கும்னு யோசிச்சுகிட்டே சேனலை மாத்தினேன். விஜய் டிவில இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது குதிரை கொம்பா இருக்குன்னு கோபிநாத் சொல்லிட்டு இருந்தார். அதுல பேசுனவங்க மாணவங்களுக்கு வேலை கிடைக்காம போறதுக்கு பல காரணங்கள் சொல்லிட்டு இருந்தாங்க. குறிப்பா ப்ராக்டிகல் அறிவு காலேஜ்ல கிடைக்கலன்னு பல பேரு சொன்னாங்க. ஆனா ஏனோ நம்ம மக்களோட அதீத ஆங்கில அறிவு பத்தி யாருமே சொல்லலை. சொந்த அனுபவத்துல சொல்றேன். தமிழ் நாட்ல உள்ள பெரும்பாலான மக்களுக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்தான். ஏனோ தெரியல  இந்த இங்கிலீஷ் கருமம் நம்ம ஆட்கள் ரொம்ப பேரு வாயில நுழையவே மாட்டேங்குது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கிறப்போ நடந்தது இது. இங்கிலீஷ் பரிட்சையில இங்கிலீஷ் பழமொழியை தமிழ்ல மொழி பெயர்க்க சொல்லி ஒரு கேள்வி. "UNION IS STRENGTH" இதுதான் கேட்டு இருந்த பழமொழி. "வெங்காயமே பலம்" அப்பிடின்னு நம்ம ஆளுங்க எழுதுனாங்க பாருங்க ஆன்சரு. வாத்தியாருங்க எல்லாம் அசந்து போய்ட்டாங்க.  "ஏன்டா! உங்களுக்கு ஆனியனுக்கும் யூனியனுக்குமா வித்தியாசம் தெரியாதுன்னு ஒரே பாராட்டுதான். இந்த மட்டுலதான் பள்ளிகூடத்துல இங்கிலீஷுக்கும் நமக்கும் உறவு  இருக்கு.


இன்ஜினியரிங் காலேஜ் போனப்புறம் பசங்களுக்கு வேற வழி  இல்ல. அடிக்கடி அதையும் இதையும் சொல்லி இங்கிலிஷ்ல பேச வைக்க பாப்பாங்க. அப்போ நம்ம பசங்க படுற கஷ்டம் இருக்கே. தமிழ்ல ஓலை பாயில நாய் மொண்ட மாதிரி பேசுனவங்களுக்கு அந்த நேரத்துல வாயில இருந்து காத்துதான் வரும். இன்னும் சில பேருக்கு ஏதோ ஃபர்ஸ்ட்  ரூமுக்குள்ள போன மாதிரி வேர்த்துபோய் உடம்பெல்லாம் நடுங்கும்.

இதுல இன்னும் சில பசங்க இருப்பாங்க. இவனுகளுக்கு இங்கிலீஷ் கொஞ்சம்  தெரிஞ்சு இருக்கும். இங்கிலிஷ்ல பேச சொன்னதும் மட மடன்னு பேசுவாங்க. ஆனா பேசுறதை வச்சு அவனுங்க நடந்ததை சொல்லுறாங்களா இல்ல நடக்கபோறதை சொல்லுறாங்களானு கண்டு பிடிக்கவே முடியாது.  பேசும்போது ஒவ்வொரு வார்த்தையா யோசிச்சு யோசிச்சு இழுத்து இழுத்து பேசுறவங்க இன்னொரு ரகம். இவனுங்க பேசி முடிக்கும்போது எதுல இருந்து பேச ஆரம்பிச்சாங்கன்னு அவனுகளுக்கே  மறந்து இருக்கும்.

இப்பிடி சின்ன சின்ன ஊருல இருந்து வந்தவங்களை இங்கிலீஷ் படுத்தற பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. சத்தியமா சொல்றேங்க இன்னும் எனக்கு இங்கிலிஷ்ல இருக்குற 12 டென்சையும் எப்பிடி யூஸ் பண்றதுன்னு தெரியாது. எனக்கு மட்டும் இல்லை. எனக்கு கத்து குடுத்த வாத்தியார்களுக்கும் தெரியாது. இப்பிடி இருக்கும்போது எப்பிடி இன்டர்வியு போய் எங்க இருந்து வேலை வாங்குறது.

இப்பிடி இந்த  இங்கிலீஷாலயே நல்ல புத்திசாலிங்க கூட சரியான வேலை இல்லாம இருக்காங்க.  ஆனா இங்கிலீஷை மட்டுமே வச்சுக்கிட்டு நிறைய பேர் தங்களை புத்திசாலியா காமிச்சுக்கிட்டு நல்ல வேலைல இருக்காங்க. இந்த இங்கிலீஷ் ஏன் நம்ம பசங்களுக்கு வரவே மாட்டேங்குதுனு மட்டும் தெரியல. கடைசியா ஒன்னு மட்டும் அனுபவத்துல சொல்றேங்க. இங்கிலீஷ் மட்டும் கொஞ்சம் கத்துகிட்டா நம்ம ஆளுங்களை அடிச்சுக்க எவனாலயும் முடியாது. 

Sunday, April 28, 2013

இப்படியும் நடக்கலாம்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா விலகல்

 
மும்பை ஜனவரி 20,2018: இனி சர்வதேச போட்டிகளில் இந்திய  கிரிக்கெட் அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. சர்வதேச போட்டிகளால் IPL போட்டிகளிலிருந்து  வீரர்களின் கவனம் சிதறுகிறது. எனவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது என பிசிசிஐ தலைவர் லிலித் களவாணி நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

சந்திப்பின்போது உடனிருந்த  IPL ஜாம்பவான் ரவீந்திர ஜடேஜா கூறுகையில்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளால் யாருக்கும் எந்த எந்த ஒரு பயனும் இல்லை. பிசிசிஐ சரியான முடிவை எடுத்துள்ளது என்றார். இந்த அறிவிப்பால் வீரர்களும், ரசிகர்களும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். IPL போட்டிகளில் அவர்கள் முழு கவனம்  என்றும் அவர் மேலும் கூறினார். இந்த முறை ஜடேஜா மும்பை அணியால் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பிசிசிஐயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனி கடந்த ஆண்டு ஒய்வு அறிவித்த போதே தானும் ஒய்வு பெற இருந்ததாகவும் பதினாறு வயதில் தனக்குள் இருந்த கிரிக்கெட் ஆர்வம் சிறிதும் குறையாததால் ஒய்வு முடிவை கைவிட்டதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு IPL போட்டிகளின்போது எல்லை கோட்டை 50 மீட்டர்களுக்கு சுருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது . மேலும் 20 மீட்டர் வட்டத்துக்கு வெளியே எந்த நேரத்திலும் ஃபீல்டர் யாரும் நிற்க கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

Tuesday, April 23, 2013

தமிழ் படங்களில் ஹீரோயிச பாடல்கள்

ஹீரோ துதி பாடல்கள். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு மாஸை உருவாக்குவதிலும், தக்க வைப்பதிலும் இந்த பாடல்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் யாருடைய ரசிகராக இருந்தாலும் உங்கள் அபிமான ஹீரோவின் பெருமைகளை பாடலில் சொல்லும்போது உங்களின் நரம்புகள் முறுக்கேருவதை உணர்ந்திருப்பீர்கள். 

நாயகனை நல்லவனாகவும், வல்லவனாகவும், வீரனாகவும் , ஏழை தோழனாகவும் காட்டும் இத்தகைய பாடல்கள் MGR காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளன. அதில் நான் சிறந்ததென  கருதும் சில பாடல்கள் பற்றி இங்கே கூறுகிறேன்.

6. மதுர வீரந்தானே (தூள்)

விக்ரமை 'C' சென்டர் வரை கொண்டு சென்ற பாடல்களில் முக்கியமானது 'தூள்'.  தரணி இயக்கிய இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் இந்த பாடலை யாரும் மறந்து இருக்க முடியாது. அந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கான காரணங்களில் இந்த பாடலுக்கும் முக்கிய பங்கு உண்டு. 'பரவை' முனியம்மா குரலும், பாடலின் வேகத்துக்கு ஏற்ற சண்டை காட்சி அமைப்பும் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின. ஹீரோவின் வீரத்தை புகழும் இந்த பாடல் நிச்சயம் தமிழில் வந்த ஒரு சிறந்த ஹீரோ துதி பாடல்.


5. அர்ஜுனரு வில்லு (கில்லி)

விஜயின் கேரியரில் மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் "கில்லி'. தரணிதான்  இந்த படத்தின்  இயக்குனர் என்பதாலோ என்னவோ 'தூள்' படத்தில் வரும் ஹீரோவின்  வீரத்தை  புகழும் பாடல் போல் இந்த படத்திலும் அமைத்து இருந்தார். இந்த படத்திற்கு பின் எவ்வளவோ ஹீரோ துதி பாடல்களில் விஜய் நடித்து இருந்தாலும் இந்த பாடல் போல் இயல்பாக எந்த பாடலும் அமையவில்லை.

4. தலை போல வருமா (அட்டகாசம்)

அஜித் ரசிகர்களுக்கு இந்த பாடல் தேசிய கீதம் போன்று இருந்த காலம் உண்டு. இந்த படம் மிக பெரிய ஹிட் இல்லை என்றாலும் இந்த பாடல் மட்டுமே அஜித் ரசிகர்களை திருப்தி படுத்த போதுமானதாக இருந்தது. இந்த அட்டகாச பாடலை சிறந்த துதி பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக சேர்க்கலாம்.

3. யாரென்று தெரிகிறதா (விஸ்வரூபம்)

கமல் எத்தனையோ ஹீரோ துதி பாடல்களில் நடித்து இருந்தாலும் இந்த பாடலே எனக்கு சிறப்பானதாக தெரிகிறது. "உலக நாயகனே" என்று தசாவதார பாடல் இவரை 
               
                          உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு"                        

என்றெல்லாம் சொல்லி மேலே தூக்கி வைத்தாலும் கதைக்கு தேவை இல்லாத  அந்த பாடலில் இருக்கும் செயற்கை தன்மை அதை சிறந்த பாடலாக ஏற்று கொள்ள தடையாகிறது. அந்த வகையில் ரசிகர்களை அதிக அளவு  உணர்ச்சி கொள்ள செய்த இந்த பாடல் சிறந்த ஹீரோயிச பாடல்.

2. பொதுவாக என் மனசு (முரட்டு காளை)


தமிழின் சிறந்த ஹீரோயிச பாடல்களை பட்டியலிட்டால் யாராலும் இந்த பாடலை தவிக்க முடியாது. பாடல் வரிகளும், ரஜினியின் ஸ்டைலான நடிப்பும் ரசிகர்களை எவ்வளவு உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று சொல்ல தேவையில்லை. "முரட்டு காளை" படம் பார்த்த பின் ரஜினி ரசிகனாக மாறியவர்கள் அதிக அளவு இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணமாக இந்த பாடலும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

1. நான் ஆணையிட்டால் (எங்க வீட்டு பிள்ளை)


                      "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் 
                       அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்"

இந்த வரிகளை  கேட்டால் சில  திமுகவினருக்கு கூட அதிமுகவுக்கு வாக்களிக்க தோன்றும். கிட்டத்தட்ட மக்கள் திலகத்தை ரசிகர்கள்  தெய்வம் போல் உணர செய்த பாடல். இன்றும் கூட 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை திரையிட்டால் போஸ்டரில் MGR கையில் சாட்டையுடன் இருக்கும் இந்த பாடல் காட்சி கட்டாயம் இருக்கும். அதே போல் அதிமுக தேர்தல் பிரசாரத்தின் போதும் அதிகம் பயன்படுத்தப் படுவது இந்த பாடல்தான்  . இந்த பாடலின் பெருமை பற்றி கூற  இதை விட சாட்சி வேண்டுமா?  சந்தேகமின்றி சொல்லலாம் தமிழில் வந்த மிக சிறந்த ஹீரோயிச பாடல் இது.

இந்த பாடல்கள் அனைத்தும் என்னுடைய தேர்வே. மாற்று கருத்து இருந்தால் சொல்லிட்டு போங்க.
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...