Wednesday, December 23, 2015

பீப் மெசின்

ழுத்தில் கட்டி இருந்த டை வெயிலுக்கு கசகசத்தது. மானேஜிங் டைரக்டர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்த அறைக்குள் நுழைந்தேன். சற்று பருமனாக இருந்த அந்த நடுத்தர வயதுக்காரர்  என்னை பார்த்து புன்னகைத்தார்.

“வாங்க அசோக். உங்களுக்காகத்தான் வெயிட் பண்றேன்”

 “சாரி சார். கொஞ்சம் லேட் ஆகிடிச்சு”

“அது பரவாயில்ல. நீங்க பேப்பர்ல குடுத்த விளம்பரம் உண்மையா? நெஜமாவே உங்க கிட்ட அந்த மெசின் இருக்கா?”

“என்ன சார் நீங்க. மெசின் இல்லாமலா விளம்பரம் குடுப்போம்”

“அதுக்கு இல்ல அசோக். நான் இன்டர்நெட் முழுக்க தேடிட்டேன். அப்படி மிசின் எதுவும் இருக்குற மாதிரி தெரியலை. நீங்க  இந்த மெசின் பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?”

“அதுக்குதான சார் வந்திருக்கேன். நான் பேப்பர்ல என்ன விளம்பரம் குடுத்து இருந்தோம்னு நியாபகம் இருக்கா?”

“பொய் சொன்னா கண்டுபிடிக்கிற புதுமையான மிசின் விற்பனைக்கு இருக்கு. தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்னு போட்டு இருந்தது ”

“ரைட். அந்த இப்போ நான் அந்த மெசின் பத்தி சொல்றேன். அதுக்கு முன்னாடி இப்போ நான் சொல்லப்போறது ரொம்ப ரகசியம். நீங்க இந்த ரகசியத்தை வெளிய சொல்லமாட்டேன்னு  உத்தரவாதம் குடுக்கணும். நான் உங்களைப்பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். நீங்க ரொம்ப நம்பிக்கையானவர்னு சொல்லுவாங்க. அந்த நம்பிக்கையிலதான் நான் உங்களைப் பார்க்கவே வந்தேன்”

“என்னங்க நீங்க. ரொம்ப சஸ்பென்ஸ் குடுக்குறீங்க. நான் நீங்க சொல்றதை வெளிய சொல்ல மாட்டேன். நீங்க விசயத்தை சொல்லுங்க”

“நான் இப்போ விக்குற மெசின் அமெரிக்க உளவுத்துறை விசாரணை கைதிகள் கிட்ட பயன்படுத்துறது. அந்த மிசின் எப்படியோ என் கைல வந்து சேர்ந்திருச்சு. என்கிட்ட இருக்கிறது இந்த ஒரு பீஸ் மட்டும்தான்”

“எப்படியோன்னா? திருட்டுத்தனமாவா?”

“அதெல்லாம் கேக்காதீங்க சார் ப்ளீஸ். இந்த மிசினோட மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். ஆனா நீங்க வாங்க முடிவு செஞ்சா நான் பத்து லட்சத்துக்கு தரேன்”

“அசோக். எனக்கு பணம் பிரச்சினையே இல்ல. இந்த ஆபீஸ்ல அறுபது பேர் வேலை பாக்குறாங்க. ஆனா இதுல யாரை நம்புறதுன்னு எனக்கு தெரியல. என்னை யாருமே உண்மையா இல்லைன்னு எனக்கு ஒரு சந்தேகம்”

“கவலைய விடுங்க சார். இந்த மிசின் மட்டும் வாங்கி யூஸ் செஞ்சு பாருங்க. யாரு உங்ககிட்ட உண்மைய பேசுறா யாரு பொய் பேசுறான்னு சுலபமா கண்டுபிடிக்கலாம். நம்ம ஊரு போலீஸ் பயன்படுத்துற மிசின் மாதிரி இல்ல இது .இந்த மிசின் எப்பிடி வொர்க் ஆகுதுன்னு காட்டுறேன் பாருங்க ”

சொல்லிவிட்டு அறைக்கு வெளியே பார்த்தேன். ஒரு பெண் வேர்க்க விறுவிறுக்க அந்த அலுவலகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

“யாரு சார் அது. உங்க ஏம்ப்ளாயியா”

“ஆமா”
“9 மணிக்கு வர்ற ஆபீஸ்க்கு பத்து மணிக்கு வராங்க”

“அந்த பொண்ணு அடிக்கடி லேட்டா வரும். கேட்டா அப்பாவை  கூட்டிட்டு  ஹாஸ்பிடல் போனேன்னு சொல்லும்”

“அந்த பொண்ணை உள்ளே கூப்பிடுங்க”

அவர் தனதுமேஜையில் இருந்த  தொலைப்பேசியை எடுத்து தட்டினார்.
“ரேகா. கொஞ்சம் உள்ளே வாங்க”

சில வினாடிகள் கழித்து அந்த பெண் உள்ளே வந்தாள். என்னை பார்த்ததும் சற்று தயங்கினாள்.

“ஹலோ மேடம். உங்ககிட்ட  என்ன ஒரு கேள்வி கேக்க சொன்னார் உங்க MD” என்றேன்

“கேளுங்க சார்” என்றாள் தயக்கம் மாறாமல்.

நான் என்னுடைய கைப்பையை திறந்தேன். அதனுள் இருந்த பெட்டியை எடுத்து சூயிங்கம் வடிவில் இருந்த அந்த கருவியை சகல மரியாதையுடன் திறந்தேன்.

“கொஞ்சம் இந்த மிசினை உங்க நாக்குக்கு அடியில வச்சுக்கிட்டு பதில் சொல்லமுடியுமா?” என்றேன்

“என்ன சார் இது?”

“பயப்படாதீங்க. இது ஒன்னும் செய்யாது. சும்மா வச்சுக்கோங்க”

அவள் MDயை பார்த்தாள்.

“சார் சொல்ற மாதிரி செய்மா.”

சில நொடி தயக்கத்துக்குப்பின் அதை நாக்கின் அடியில் சொருகிக் கொண்டாள்.

“சொல்லுங்க மேடம். ஏன் லேட்?” என்றேன்.

“பீப் பீப் பீப் பீப் பீப்”

MD என்னை வியப்புடன் பார்த்தார். அந்த பெண் தனது தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் பேச முயன்றாள்.

“பீப் பீப் பீப் பீப் பீப்”

“சார். என்ன சார் இது. குரல் வெளிய வர மாட்டேங்குது” என்றாள் அந்த ரேகா. இப்போது அவள் சொன்னது இப்போது  தெளிவாகக் கேட்டது.

“மேடம். இப்போ உங்க வாய்ல இருக்கிறது அமெரிக்கன் மேட் லை டிடக்டர் மிசின். நீங்க உண்மை பேசாட்டி உங்க குரல் வெளிய வராது.”
அவள் மனதுக்குள் அதிர்வது தெளிவாகத் தெரிந்தது

“சாரி சார். நான் உண்மைய சொல்லிடுறேன்நான் நேத்து நைட் ஷோ என்னோட பாய் பிரண்ட் கூட போனேன். காலைல அசந்து தூங்கிட்டேன்”

“ஓகே. இப்போ வாய்ல இருக்குற அந்த மிசினை எடுத்து என்கிட்ட குடுத்துட்டு போய் உங்க வேலைய பாருங்க”

அவள் வெளியே சென்றாள்.

“அசோக். என்னால நம்பவே முடியல. அப்போ இந்த மிசின் வாய்ல இருக்கும்போது பீப் சவுண்ட்தான் வருமா?”

“இன்னும் சந்தேகமா. உங்க ப்யூன் வெளியே இருக்கார் பாருங்க. அவரை கூப்பிடுங்க”

அவர் கையில் இருந்த பஸ்ஸரை அழுத்தினார். அந்த முதிய வயது ப்யூன் காக்கிசட்டையில் உள்ளே ஓடி வந்தார்.

“சொல்லுங்க சார்”

“நான் உங்க சாரோட சொந்தக்கார பையன். நீங்க சாரை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“அவர் ஒரு மகாராசர். தங்கமான குணம். இவரை மாதிரி ஆளுங்க இருக்குரதாலதான்”

“போதும் போதும். இப்போ இந்த மிசினை உங்க நாக்குக்கு கீழ வச்சுக்கிட்டு இதையே திரும்ப சொல்லுங்க”

“பீப் பீப் பீப்”

“என்ன ஆச்சு ஐயா? குரலே வரல என்று கூறி சிரித்தேன்.

“என்னனு தெரியலையே” என்று இப்போது அவர் தொண்டையை பிடித்துக்கொண்டு கூறியது தெளிவாக கேட்டது.

“ஐயா. உங்க வாய்ல இருக்கிறது பொய் கண்டுபிடிக்கிற மிசின். நீங்க இப்போ உங்க ஐயாவை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு உண்மைய சொல்லுங்க”
“வேண்டாம் சார்”

“சும்மா சொல்லுங்க. உங்களுக்கு இதை தவிர வேற வழி இல்ல. சொல்லுங்க”

”.....மனுசனா அவன். சரியான .....,........ நாயி. ....... பய”

“போதும் போதும்” என்றேன். MDயின் முகம் சுருங்கியது.

“ராமசாமி. நீங்க போய் செட்டில்மெண்ட் வாங்கிக்கோங்க. இனிமே நீங்க வேலைக்கு  வர வேண்டாம்” என்றார்.
ராமசாமி எதுவும் சொல்ல முடியாமல் வெளியேறினார்.

“ராமசாமி. வாய்ல இருக்குறதை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க” என்று வாங்கிக் கொண்டேன்.

“என்ன சார். டெமோ போதுமா?” என்றேன்.

“போதும். இந்த மிசினை நானே வாங்கிக்குறேன். பணத்தை வாங்கிக்கோங்க ” என்றார்.

மறுநாள் இரவு கடற்கரையில் நானும் ரேகாவும் பேசிக் கொண்டிருந்தோம்.

“எப்படியோ அந்த ஆளை ஏமாத்தி பணம் பிடுங்கிட்ட. அந்த கிறுக்குப்பய ஆபீஸ்ல யாரு கிட்டப் பேசினாலும் இதை வாய்ல போட சொல்லிட்டுதான் பேசுறான். அது சரி அது எப்படிடா அந்த பீப் சவுண்ட் எப்போ வரணும், வரக் கூடாதுன்னு கண்ட்ரோல் பண்ண?”

“அது ரொம்ப சுலபம். இந்த ரிமோட் கண்ட்ரோல் பிரஸ் பண்ணா அந்த மிசின்ல சவுண்ட் வரும். டெமோ குடுத்தப்போ நான் தேவைப்படும்போதெல்லாம் பிரஸ் பண்ணேன். அவ்ளோதான்”

“அப்போ இனிமே அதுல பீப் சவுண்ட் வராதா?”

“வராது.”

“ஆனா அநியாயமா அந்த ராமசாமியை வேலையை விட்டு தூக்கிட்டாரே?”

“நீ வேற. ராமசாமி கூட நான் போன வாரமே பேசிட்டுதான் இந்த நாடகமே நடத்துனேன். பத்து லட்சத்துல அவருக்கும் பங்கு இருக்கு. அது மட்டும் இல்ல. அந்த MDயை ஆசை தீர திட்டியும் தீர்த்துட்டார்”

“பக்கா கிரிமினல்டா நீ. நானும் அடுத்த மாசம் வேலைய விட்டுடுவேன்.  அப்புறம் நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்”

“சரி செல்லம்”

“ஆனா நாம அவர எமாத்தலையா?”

“ஏன் ஏமாத்துனோம்னு நினைக்கிற. இனிமே எல்லாரும் அவர் கிட்ட பொய் சொல்றாங்கன்னு  குழம்பாம அவர்   மனசு நிம்மதியா வாழ்வார்ல”

“சரிதான். செய்யுறதும் செஞ்சுட்டு எதாச்சும் சமாதானம் சொல்றது” என்றாள் ரேகா.

Sunday, November 15, 2015

திப்பு சுல்தான் - ஹிந்து நாளிதழின் அதீத ஆராய்ச்சி

திப்பு சுல்தான் நல்லவரா?கெட்டவரா என்பதுதான் இந்த கட்டுரையில் ஹிந்து நாளிதழின் ஆராய்ச்சி. திப்பு மாபெரும் வீரர் என்று சொல்லும் ஹிந்து நாளிதழ் மன்னர் அசோகரும் கலிங்கப் போரில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று குவித்தார் என்று அசோகரையும் திப்புவையும் ஒப்பிடுகிறது. நல்ல வேளையாக திப்பு ஹிந்துக்களை கொன்றதை மட்டும் மறைமுகமாக  அந்த கட்டுரை ஒப்புக் கொள்கிறது.

சமீபகாலமாகவே ஊடகங்கள்  அதீதமாக ஹிந்துத்துவா எதிர்ப்பு நிலையை எடுக்கின்றன. ஹிந்துத்துவா அமைப்புகளை எதிர்க்க அவை எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. அதற்கு ஒரு உதாரணம்தான் ஹிந்துவின் இந்த கட்டுரை. அசோகரின் காலத்தில் இஸ்லாம் மதமே தோன்றவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தவறை கணக்கில்   எடுக்காமல் பார்த்தாலும் கட்டுரையில் கூறியுள்ளவாறு அசோகர் மதத்தை காரணமாக கொண்டு முஸ்லிம்களையும், வெளிநாட்டினரையும்  கொன்று குவிக்கவில்லை. போர் காரணமாகவே ஒரிய மக்களை கொலை செய்துள்ளார். அதிலும் போர் முடிந்த பின் அவர் மனம் மாறிய கதை யாவரும் அறிந்ததே. ஆனால் திப்பு சுல்தான்?

அவரை பற்றிய கேள்விப்பட்ட  செவி வழி செய்தி அவரின் ஆட்சிமுறைக்கு  சிறிய உதாரணம். தமிழகத்தில் தேவாங்கர் என்ற ஜாதியை சேர்ந்த மக்கள் உண்டு. தமிழகம் முழுக்க பரவி வாழும் இந்த மக்களின் பூர்வீகம் கர்நாடகா. அந்த மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததன் காரணம் பஞ்சம் பிழைக்க அல்ல. அந்த கால கட்டத்தில் திப்பு சுல்தானின் கட்டாய  மத மாற்றத்தில் இருந்து தப்ப. முஸ்லிம்களை தவறியும் கொல்லாத அசோகரின்  சகிப்புத்தன்மையையும், ஹிந்துக்களை மதம் மாற்றியும் அகதிகளாகவும் அலைய விட்ட திப்புவின் சகிப்புத்தன்மையையும் எப்படி இவர்கள் ஒப்பிடுகிறார்கள். இது போல திப்பு  துன்புறுத்திய இந்துக்கள் இன்னும் எத்தனை பேரோ? செவிவழி செய்தியை எப்படி ஆதாரமாக கொள்வது என்று கேட்டால் ஹிந்து தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இங்கு இந்தியர்கள் தங்கள் வரலாறுகளை  முறையாக  ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் தாங்கள் அறிந்ததை தங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறுவதில்லை.

ஹிந்து நாளிதழ்(கட்டுரையாளர்) அடிக்கடி திப்புவின் தேசபக்தியை வேறு சிலாகிக்கிறது. அவர் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய தேச பக்தராம். 
தனது மக்களையே கொடுமைப்படுத்திய ஒருவர், தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற போராடியதை எப்படி எப்படி தேசப்பற்று என்று எடுத்துக் கொள்ள முடியும்? நல்ல வேளையாக அவரின் சுதந்திர போர் வெற்றி அடையவில்லை. ஒரு வேளை அவர் வென்றிருந்தால் அவரிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியர்கள் இன்னும் கடுமையாக போராட வேண்டியதிருந்திருக்கும். 

போதாக்குறைக்கு அலா சிங் என்ற மன்னரை வேறு தனது சாட்சிக்கு அழைக்கிறது கட்டுரை. அலா சிங்கை தேசத்துரோகி என்று கூறாவிட்டாலும் அவரை தேசத் தலைவராக யாரும் கொண்டாடவில்லை. ஆனால் திப்புவை இந்தியாவின் கதாநாயகனாக முன்னிறுத்துவதுதான் பிரச்சினை. 

மோடியையும், ஹிந்துத்துத்வதையும் எதிர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா பத்திரிக்கை தர்மம்? முஸ்லீம் மன்னர்களை நாம் வேண்டுமென்றே கெட்டவர்களாக  சித்தரிக்கிறோம் என்றால் அக்பரை மட்டும் நாம் நல்லவர் என்று கூறுவது ஏன்? ஹிந்து நாளிதழ் மட்டும் இல்லாமல் பெரும்பாலான ஊடகங்களின் செயல்பாடும் ஒருதலைப்பட்சமாகவே உள்ளது. அந்த கட்டுரையாளரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் தமக்கு அரைகுறையாக தெரிந்த விஷயங்களை வைத்து கொண்டு முஸ்லிம் மன்னர்களை நியாயப்படுத்த அவர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். 


Sunday, November 1, 2015

ரூம் நம்பர் 125

ந்த அருமையான மாலைப் பொழுதில் திருச்சி காவேரி பாலத்தின் காற்று சுகமாக தாக்கியது. ராஜா கையில்  வைத்திருந்த வங்கி தேர்வுக்கான புத்தகத்தை பையில் வைத்து கொண்டான்.

“இன்னும் எத்தனை தூரம்டா நடக்க விடுவ? இந்த பேங்க் பரிட்சைய மதுரைல வைக்காம திருச்சில வச்சு சாவடிக்கிறான்”

“ஏண்டா நொந்துகுற. திருச்சி எத்தனை அழகு பாரு. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா ஸ்ரீரங்கம் போய் ரங்கநாதரை பாக்கலாம்”

 “நீ ஸ்ரீரங்கம் போக காரணம் ரங்கநாதரை பார்க்க இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்”

“காரணம் எதுவா இருந்தா என்ன?எப்பிடியும் பேங்க் பரீட்சை ஊத்த போகுது. திருச்சியை சுத்தி பாத்துட்டு போகலாம் வா”

“சரி அதுக்காக நடந்தேவா சுத்தி பாக்குறது. அங்க பஸ் வருது வா ஏறிக்கலாம்”

ருவரும் திருவானைக்காலில் இறங்கினோம்.

“என்னடா ஸ்ரீரங்கம் முன்னாடியே இறங்க சொல்லிட்ட. சிவனை முதல்ல கும்பிடலாம்னா”

“அதெல்லாம் இல்ல. இங்க ஒரு ஹோட்டல்ல நெய் தோசை நல்லா இருக்குமாம். பேப்பர்ல எல்லாம் வந்திருக்கு. அந்த ஹோட்டலுக்கு போவோம்னு”

“என்ன ஹோட்டல் அது?”

“ராமனுஜம் ஹோட்டல்”

“எங்க போய் தேடுவ”

“விசாரிக்கலாம்”

ந்த ஹோட்டலை கண்டுபிடிப்பது அத்தனை கடினமான காரியமாக இல்லை. பழைய வீடு ஒன்றில் இயங்கி கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுக்க பிரபலமான ஹோட்டல் என்பதற்க்கான அடையாளம் சிறிதும் இல்லை. தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த பழைய கடிகாரமும் ஒளி அமைப்பும் 1970ம் ஆண்டிலேயே அந்த ஹோட்டல் மட்டும் நின்று போனது போல தோற்றத்தை ஏற்படுத்தியது. வெள்ளை வேட்டி,கை பனியனுடன் ஊழியர்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“என்னடா. இதான் அந்த பிரபல ஹோட்டலா! நம்ம  ஊரு பரோட்டா கடை மாதிரில இருக்கு”

“எப்ப பாரு பரோட்டா கறி நினைப்புதான்.”

அங்கிருந்த மேஜையில் அமர்ந்தோம்  

“என்னடா இது. பழைய டேபிள். பேசாம அந்த கூண்டுக்குள்ள போய் உக்காரலாம் வா”

அவன் விரல் நீண்ட திசையில் பார்த்தேன். ஒரு இரும்பு  கூண்டு போன்ற அமைப்பு. அதில் சிலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
“என்னடா இது கூண்டு?”

“மத்த ஹோட்டல்ல ஏசி ரூம் இருக்குமே. அது மாதிரி இங்க இது போல”

“வா அங்கேயே போய் உக்காரலாம்”

இருவரும் எழுந்து கூண்டை நோக்கி நடந்தோம். கூண்டின் உள்ளே நுழையப்போகும் நேரத்தில் ஒரு  ஒரு வெள்ளை பனியன் வந்து மறைத்தார்.

“உள்ள இடம் இல்ல அண்ணா. நீங்க அங்க உக்காந்துக்குறேளா?”

“இல்லங்க அங்க பாருங்க. இன்னும் நாலு பேரு உக்காரலாம்” என்றான் ராஜா.

“அந்த பெஞ்சுக்கு எல்லாம் நாங்க சப்ளை பண்றது கிடையாது”

“வாடா ராஜா. இடம் இல்ல போல” நாங்கள் பின்னால் நடந்த நொடியில் இரண்டு புதியவர்கள் அந்த கூண்டுக்குள் நுழைந்து நாங்கள் அமர சென்ற இடத்தில் அமர்ந்தனர்.

“என்னங்க அந்த டேபிள்க்கு சப்ளை இல்லன்னு சொன்னீங்க. அவங்களை மட்டும் விட்டுடீங்க” என்றேன்.

“அவா எங்க ரெகுலர் கஸ்டமர்.”

“நாங்களும் இன்னைக்கு இருந்து ரெகுலர் ஆகிக்குறோம். எங்களை உள்ளே விடுங்க”

“சொன்ன புரிஞ்சுகோங்க. பிரச்சினை பண்ணாதீங்க”

“என்ன நாங்க பிரச்சினை பண்றோமா. ராஜா புரியுதா. அந்த கூண்டுக்குள்ள அவங்க ஆளுங்க மட்டும்தான் போகணுமாம். என்ன நான் சொல்றது சரிதான?”

“ஆமா அப்பிடிதான். இதெல்லாம் இங்க இருக்குற பழக்கம்”

“நாங்களும் உங்க ஆளுங்கதான். பார்த்தா தெரியல”

“எல்லாரும் இங்க வாங்களேன். இவா தகராறு பண்றா” பனியன் கூப்பிட்டதும் அனைத்து பணியாட்களும் எங்களை சூழ்ந்தனர். எனக்கு சற்று பயம் வந்தது.

“வாடா ராஜா, போய்டலாம்”

“இதெல்லாம் இப்பிடியே விடக் கூடாது. இவங்க பண்றது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா. போலீஸ்கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்தா அவ்ளோதான்”
இப்போது அங்கிருந்தவர்களிலேயே வயதானவர் பேசத் தொடங்கினார். 

“தம்பிகளா. இப்போ உங்களுக்கு உள்ள போகணும் அவ்ளோதானே. போய் நன்னா சாப்பிடுங்கோ”

எங்கள் முகத்தில் பெருமிதம். புரட்சி செய்து எதையோ சாதித்தது போல் உணர்ந்தோம்.

“தாத்தா. மனுசங்க எல்லாரும் சமம்தான். இனிமே இப்பிடி எல்லாம் பிரிச்சு வைக்காத. வாடா போகலாம் என்று ராஜா சாப்பிடாமலே வெளியே நடந்தான்.

“எண்டா சாப்பிடாம வந்த?”

“நாம அந்த கூண்டுக்குள்ள போனா நாம உக்காந்தா இடத்தை கழுவி விடுவானுங்க. எதுக்கு அவங்களுக்கு கஷ்டம். அதான்”

ருவரும் திருச்சி வந்து சேர்ந்தோம். தங்குவதற்கு  இடம் தேடி அங்கிருந்த லாட்ஜ்களை சலிக்கத் தொடங்கினோம். எங்கும் இடம் கிடைக்காமல் அங்கிருந்த சிறிய லாட்ஜ் ஒன்றில் கடைசியாக முயற்சி செய்தோம். அங்கிருந்த மீசைக்காரரின் கை காலை பிடித்தாவது இடம் வாங்கி விட முடிவு செய்து அவரை அணுகினோம்.

“சார். நாளைக்கு பரீட்சை. எப்பிடியாச்சும் அட்ஜஸ்ட் செஞ்சு ஒரு ரூம் குடுத்தா நல்லா இருக்கும்”

“எல்லாம் புல் ஆயிடுச்சே தம்பிகளா”

“கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார்”

“சரி ஒன்னு செய்யுங்க. இங்க ஒரு ரூம்ல உங்களை மாதிரியே பரீட்சை எழுத வந்த மூணு பசங்க தங்கி இருக்காங்க. பாவம் ஏழை பசங்க போல. வாடகை அதிகம்னு வருத்தப்பட்டாங்க. உங்களுக்கு ஓகேன்னா  அவங்க கூட தங்கிக்கோங்க. வாடகை ஷேர் செஞ்சுக்கலாம்”

“ரொம்ப சந்தோஷம் சார். நாங்க அவங்க கூடவே தங்கிக்கிறோம்”

“ரூம் நம்பர் 125”

இருவரும் மாடி ஏறி அந்த அறையை அடைந்தோம். கதவை தட்டினோம். எங்கள் வயதை ஒத்த ஒருவன் வந்து கதவை திறந்தான். அறையில் இன்னும் இரண்டு பேர்.

“என்ன சார்” என்றான் அவன்.

“சாரி.ரூம் மாறி வந்துட்டோம்” கூறிவிட்டு ராஜா வேகமாக மீண்டும் கீழே இறங்கத் தொடங்கினான்.

“டேய்! என்னடா ஆச்சு. நமக்கு தங்க இந்த இடம் கிடைச்சதே பெருசு”
ராஜா பதில் சொல்லவில்லை.

“என்னடா பிரச்சினை?”

“அவங்களை பார்த்தயா? கீழ் ஜாதி பசங்க மாதிரி இருக்காங்க. அவங்க கூட எப்பிடி தங்குறது” என்றான். 


Tuesday, October 6, 2015

தமிழ் ஃபேண்டசி சினிமா

ஃபேண்டசி என்ற வார்த்தை சில நாட்களாக அடிக்கடி கண்ணில்படுகிறது. ஃபேண்டசி என்றால்  நடக்க முடியாத, நடக்கவே வாய்ப்பில்லாத  கற்பனை என்று ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.  அந்த வகையில் ஊழல்  இல்லாத அரசியல் என்பது ஃபேண்டசிக்கு ஒரு சிறந்த  உதாரணம்.

‘புலி’ படம் தமிழில் அபூர்வமாக  வந்திருக்கும் ஃபேண்டசி படம் என்று கூறுகிறார்கள். எனக்கு என்னவோ தமிழில் ஃபேண்டசி படங்களுக்கு பஞ்சமே இல்லை என்றே தோன்றுகிறது. உதாரணத்துக்கு ‘சுள்ளான்’ படத்தை எடுத்துக் கொள்வோம். தனுஷ் படம் முழுக்க புவி  ஈர்ப்பு விசைக்கு சவால் விட்டு படம் முழுக்க பறந்து பறந்து வில்லனின் ஆட்களை தாக்குவார். ‘குருவி’ விஜயோ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் கற்பனைக்கும் எட்டாத பல சாதனைகளை புரிந்து இருப்பார். இப்படி நிஜ வாழ்வில்  நடக்க வாய்ப்பே இல்லாத  காட்சிகள் பல நிரம்பிய குருவியும், சுள்ளானும் ஏன் ஃபேண்டசிக்குள் வராது என்று நான் கேட்கிறேன். கேப்டனின் ‘நரசிம்மா’வையும் மறந்து விடக் கூடாது. இதே போல சூப்பர் ஸ்டாரில் தொடங்கி சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்   எல்லா மாஸ் ஹீரோக்களும் பல ஃபேண்டசி படங்களில் நடித்தவர்களே.

தமிழில் ‘எந்திரன்’ வந்ததே. அது முழுக்க அறிவியல் புனைவு படம்தானே என்று நினைத்து  imdb வலைத்தளத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் பலரும் படம் பற்றிய தங்கள் கருத்துகளை பதிவு செய்திருந்தனர். அதில் பெரும்பான்மையோருக்கு எழுதி இருந்த சந்தேகம் “அது எப்படி இந்தியாவில் பேசிக் கொண்டிருந்த  வசீகரனும் சனாவும் திடீரென  மச்சுபிச்சுக்கு சென்று பாடி ஆடிவிட்டு வருகிறார்கள்?” என்பது . அவர்களை பொறுத்தவரையில் நமது  டூயட் பாடல்கள் அனைத்தும் அவர்களால் ஏற்று கொள்ள முடியாத, நடக்க துளியும்  வாய்ப்பே இல்லாத கற்பனை. ஆக அவர்களை பொறுத்தவரையில்  டூயட் காட்சிகள் அனைத்தும் ஃபேண்டசி காட்சிகள்தான்.

இப்படி தமிழ் சினிமாவில்  ஃபேண்டசி கொட்டி கிடக்க ‘புலி’ படத்தை மட்டும் ஃபேண்டசி என்று சொல்வது தமிழ் திரையுலகத்துக்கு நாம் இழைக்கும் அநீதியாகவேபடுகிறது.

குறிப்பு: ஒரு வேளை தமிழ் ஃபேண்டசி படங்கள் பார்த்து உங்களுக்கு சலித்து போய் இருந்தால் Pan’s Labyrinth என்கிற ஸ்பானிஷ்  படத்தை பாருங்கள்.


Friday, September 4, 2015

மதுவிலக்கும் வசந்த மாளிகையும்

ரசியல் கட்சிகள் மது விலக்கு போராட்டத்தை மறந்து விட்டது போல தோன்றுகிறது. கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் மதுவை ஒரு வாரத்துக்கு எதிர்த்து விட்டு தங்கள் மக்கள் பணியை செவ்வனே செய்த திருப்தியில் ஓய்வெடுக்க சென்று விட்டனர். மதுவிலக்கு வந்தால் தமிழ்நாட்டை காலி செய்துவிட்டு அண்டை மாநிலங்களில் குடி பெயரத் தயாராக இருந்த குடிமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மதுவிலக்கு போராட்டங்கள் ஆரம்பித்த நாளிலிருந்தே ஒரு சந்தேகம் என்னை பாடாய்படுத்துகிறது. அந்த சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்தியது ‘வசந்த மாளிகை’ திரைப்படம். நீங்கள் ஒரு வேளை அந்த படத்தை பார்த்து இருக்கலாம். படத்தின் முதல் பாதியில் சிவாஜி கணேசன் ‘குடி மகனே.....பெருங்குடி மகனே’ என்று  கண்ணதாசன் பாட்டு எழுதும் அளவுக்கு பெரிய குடிகாரராக இருப்பார். ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்..ஏன்’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்வார்.

இப்படி ஆனந்தமாக அவரின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது வாணிஸ்ரீ அவர் வாழ்க்கையில் வருவார். கதாநாயகன் குடிகாரன் என்றால் கதாநாயகியால் பொறுக்க முடியுமா? சிவாஜியை குடிக்க கூடாது என்று கூறி விடுவார். சிவாஜியும் மனம் திருந்தி ‘அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை தொட மாட்டேன்’ என்று பாடி விடுவார். அதற்கு பின்னர் வரும் காட்சிகளில் வாணிஸ்ரீ காதலை பிரேக் அப் செய்து விட, அவரை சமாதானம் செய்ய முடியாமல் சிவாஜி தவிப்பார். அவரின் உடல்நிலை வேறு கெட்டுப்போகும். சிவாஜியை பரிசோதிக்க வரும் மருத்துவர், மொடாக் குடிகாரரான சிவாஜி திடீரென்று  குடிப்பதை நிறுத்தியதால் உடல் நிலை கெட்டுப் போனது என்பார். அவரை மீண்டும் குடிக்க வற்புறுத்துவார். ஆனால் சிவாஜியோ வாணிஸ்ரீக்கு செய்த சத்தியத்தின்படி குடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடிப்பார். உடல்நிலை மோசம் அடையும். அதன் பின் வரும் காட்சிகள் நமக்கு தேவை இல்லை. அந்த மருத்துவரின் கருத்துகள் மட்டுமே கவனிக்கப்பட வேண்டியது.

அவரின் கருத்துப்படி, குடிகாரர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடியை நிறுத்த வேண்டுமா என்ன? குடியை ஒரே நாளில் நிறுத்தக்கூடாது என்று  ‘வசந்த மாளிகை’ படம் மட்டும் கூறவில்லை. சமீபத்தில் ஒரு நடிகர் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு குடியை திடீரென நிறுத்தியதுதான் காரணம் என்று ஒரு பத்திரிக்கை வேறு எழுதியது. கூகிள் செய்து பார்த்தால் மொடாக் குடியர்கள் திடீரென  குடியை நிறுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தெரிகிறது.

அப்படியென்றால்  மதுவிலக்குக்கு பின் தமிழக குடிமக்களின் கதி?? மக்களின் நலம் பேணும் அரசாங்கம்  மருத்துவர்கள் சீட்டு குடுத்தால் மது கிடைக்கும் என்று சில வருடங்களுக்கு கொஞ்சமாக மதுவிலக்கை தளர்த்தி கொள்ளலாம் அல்லது மதுவை ரேஷன் முறையில் குடுக்கலாம். மது விற்பனையை  அரசாங்கம் எடுத்துக்கொண்டது புலி வாலை பிடித்தது போலத்தான்.

Sunday, July 5, 2015

விடிவதற்குள் ஆம்பூர் வா!!!

“விடிவதற்குள் வா” என்று  சுஜாதா ஒரு புதினம் எழுதி இருக்கிறார். முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்துள்ளது. மண்டைக்காடு கலவரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் ஊர் பெயரை மட்டும் மணல்காடு என்று மாற்றி விட்டார். மற்றபடி இந்துக்களுக்கும் கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான மோதல் என்று மற்ற எல்லா விஷயங்களும் வெளிப்படையாகவே எழுதப்பட்டுள்ளது.

கத்தி மேல் நடப்பது போன்ற கதைக்களம். ஏதாவது இரண்டு பிரிவினரில் ஏதேனும் ஒருவருக்கு ஆதரவாக இருப்பது போல் எழுதி  இருந்தால் மிகப் பெரிய எதிர்ப்பை சுஜாதா சந்தித்திருக்க கூடும். ஆனாலும் கதையை முடிந்தவரை  மிகத் திறமையாக balance செய்துள்ளார். ஒரு அத்தியாத்தில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மேல்தான் தவறு என்று கூறுவது போல் எழுதி இருப்பார். அடுத்த அத்தியாத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூறுவார்கள். அன்றைய நாட்களில்  இந்த தொடர்கதையை எதிர்த்து  யாரும் போராடாமல் இருந்தது ஆச்சரியமே.

இந்த நாவலின் கதை இதுதான். வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவன் விடுமுறையில் மணல்காட்டுக்கு வரும்போது அவன் மனைவியை காணவில்லை. ஏற்கனவே கலவரத்துக்கு நேரம் பார்த்து கொண்டிருந்த அந்த ஊரில் இந்த சம்பவம் பதட்டத்தை அதிகப்படுத்தி மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறை ஒரு பக்கம் கலவரத்தை முனைப்புடன் கட்டுப்படுத்த, மறுபக்கம் அந்த பெண்ணைத் தேட என்று சுறுசுறுப்பாகிறது. கதையில் கலவரத்துக்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கலவரத்தை தொடங்குவது காணாமல் போன அந்த பெண்ணே. காவல்துறையும் அந்த பெண் கிடைத்தால் இந்த கலவரம் அடங்கிவிடும் என்றே நம்புகிறது. கதை முழுவதும் அந்த பெண்ணையும், அவள் கணவனையும் வைத்தே நகர்கிறது.

ஆம்பூரில் நடக்கும் சம்பவங்களை படிக்கும்போது ஏனோ இந்த கதை  நியாபகம் வந்தது. அதே போல் காணமல் போன பெண், கலவரம், பெண்ணைத் தேடும் காவல்துறை என்று எக்கச்சக்க ஒற்றுமைகள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் “விடிவதற்குள் வா” புதினத்தில் கூறப்பட்ட  பெண் காணாமல் போன சம்பவம் சுஜாதாவின் கற்பனை. மண்டைக்காடு கலவரத்தில் அது போன்ற பெண் காணாமல் போன சம்பவம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இணையத்தில் தேடி பார்த்து விட்டேன்.


அன்று சுஜாதா மண்டைக்காடு கலவரத்திற்கு கற்பனையாக சொன்ன காரணம், இன்று ஆம்பூரில் கலவரத்திற்கு நிஜமான காரணம் ஆகிவிட்டது. சரி நாவலில் அந்த பெண் கிடைத்தாளா என்று கேட்கிறீர்களா? அதை இன்றைய செய்திகளை படித்து தெரிந்து கொள்ளவும். இன்று கதையாக எழுதப்படுபவைதான்  நாளை  செய்தியாக மாறுகிறது போலும்.


Saturday, July 4, 2015

பேய்களை பிடித்த தமிழ் சினிமா !!!

மிழ் சினிமாவை இப்போது பேய் பிடித்து இருக்கிறது. அது என்ன காரணமோ, தமிழ் படங்களில் மட்டும் ஒரு காலகட்டம் முழுதும் ஒரு குறிப்பிட்ட வகையான படங்கள் தொடர்ந்து வெளிவந்து சலிப்பூட்டுகின்றன. 80களில் பழி வாங்கும் கதை படங்கள், பின்னர் கிராமத்து பின்னணி கதைகள். அந்த வகையில்  இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து ரவுடிகளை நாயகனாக கொண்ட கதையாக எடுத்து தள்ளினர். ‘ரெட்’ அஜித், ‘பாபா’ ரஜினி என்று அந்த காலகட்டத்தில்  ரவுடியாக மாறாத நாயகர்களே இல்லை. ஒரு வேளை நாயகன் ரவுடியாக இல்லாவிட்டாலும்  வில்லன் மிகப்பெரிய  ரவுடியாக இருப்பான். ‘சொர்ணக்கா’ போன்று மிகப் பெரிய  பெண் ரவுடிகளையும் தமிழ் சினிமா உருவாக்கிய காலம் அது.

‘கேங்ஸ்டர்’ கதைகளை அடித்து துவைத்த  கொஞ்ச காலம் கழித்து  ரௌடி நாயகர்கள் மனம் திருந்தி காவல்துறை அதிகாரிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.   ‘ஆஞ்சநேயா’ அஜித், ‘காக்க காக்க’ சூர்யா, ‘சாமி’ விக்ரம்  என்று காக்கிசட்டையில் ஒரு கடமை தவறாத  போலீஸ் அதிகாரியாக பொறுப்பெடுத்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இந்த கதைக்களம் ஓவர் டோஸாக மாறி  படம் பார்க்க சென்றவர்கள் திரை அரங்கிற்கு பதில்  காவல் நிலையம் செல்லத் தொடங்கி விட்டனர். நம் இயக்குனர்களும் போலீசை இதற்கு மேல் தொந்தரவு செய்ய விரும்பாமல் அடுத்த களத்தை தேடினர்.

அடுத்த  சீசனில் தமிழ் சினிமாவின் கையில் மாட்டியது மதுரை. தொடர்ந்து மதுரை படங்களாக எடுத்து தள்ளினர். ஆனால் எல்லா படங்களின்  கதைக்கரு  கிட்டத்தட்ட ஒன்றுதான். மதுரை மக்கள் எந்த நேரமும் லுங்கி கட்டி கொண்டு கையில் அரிவாளோடு சுற்றுபவர்கள். எந்த நேரமும் மதுரையில் சண்டை நடந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டு வரிகளை அடிப்படையாக கொண்டு மதுரையில் விளையாடத் தொடங்கியது தமிழ் சினிமா. ஒரு கட்டத்தில் மதுரை மக்களே நொந்து போய் ‘நாங்கள் அப்படி எல்லாம் இல்லை’ என்று அடிக்கடி தன்னிலை விளக்கம் குடுக்க வேண்டிய சூழ்நிலை. நல்ல வேலையாக தமிழ் சினிமாவை அடுத்த நோய் பற்றிக் கொண்டது.

சிரிப்பது நல்லதுதான். அதற்காக எந்நேரமும் சிரித்து கொண்டே இருந்தால்? தொடர்ந்து வந்த காமெடி படங்கள் மக்களை தொடர்ந்து சிரிக்க சொல்லி துன்புறுத்தின. கதை என்று எதுவும் தேவை இல்லை. மொக்கையான காமெடி காட்சிகள் நான்கு இருந்தால் போதும். இந்த trend சற்று அதிக காலம் நீடித்தது. வடிவேலுவின் வனவாசத்தால் ஏற்பட்ட காமெடி வறட்சி கூட இந்த நிலைக்கு காரணமாக இருந்து இருக்கலாம். அதன் பின் காமெடியுடன் ஹாரர் என்னும் புதிய கதைக்களத்தில் படங்கள் வெளிவந்தன. இப்போது  முக்கால்வாசி சினிமாவை முழுக்க பேய் ஆக்கிரமித்து விட்டது. பேய் படங்களுக்கு அதிக செலவு இல்லை. ஒரு வீடும், நான்கு மனிதர்களும் இருந்தால் போதும் ஒரு சிறிய முதலீட்டு படத்தை எடுத்து விடலாம் என்பது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். 2001 முதல் 2012 வரை வந்த பேய் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இப்போதோ எங்கே பார்த்தாலும் பேய்.

இப்படி ஹாரர் காமெடி என்று வெளிவரும் படத்தின் கதைகள் கொடுமையிலும் கொடுமை. சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் கதை இது. வழக்கப்படி நாயகனும், நாயகியும் ஒரு தனிமையான பங்களாவிற்கு குடி வருகின்றனர். நாயகியை பேய் பிடித்து விடுகிறது. அந்த பேய், தான் தற்கொலை செய்து கொண்டு பேயாக மாறியதற்கு காரணம் தனது கணவன் தன்னை சீரியல் பார்க்க விடாமல் தடுத்ததுதான் என்கிறது. உடனே நாயகன் டிவி கம்பெனிக்கு சென்று அந்த சீரியல் கேசட்டை வாங்கி அந்த பேயை பார்க்க விடுகிறான். பேய் விலகி விடுகிறது. இந்த கதையை சிறுகதையாக எழுதினாலே போர் அடிக்கும். ஆனால் இதை வைத்து ஒரு படமே எடுத்து விட்டார்கள்.

அடிப்படையில் பேய் படங்கள் எடுப்பது சற்று சிக்கலான விஷயம். படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பது,  அழ வைப்பதை விட பயமுறுத்துவது சற்று கடினம். பின்னணி இசை, கேமரா கோணங்கள் என்று எல்லாமே சரியான விகிதத்தில் இருந்தாலே பயம் வரும். ஆனால் இப்போது வரும் பேய் படங்களில் அந்த பயம் மிஸ்ஸிங். 13ம் நம்பர் வீடும் , மை டியர் லிசாவும் கேமரா உத்திகளிலும், மேக்அப்களிலும் காட்டிய பயத்தை இன்றைய கிராபிக்ஸ் பேய்கள் காட்டுவதில்லை.


அடுத்து ஒரு புதிய trend ஆரம்பித்து எல்லாரும் அந்த ட்ரெண்டை பின் பற்றும் வரை இந்த பேய் மோகம் தொடரவே செய்யும். அந்த ட்ரெண்டை தொடங்கப் போகும் படத்தை எடுக்கப்போகும் பேயோட்டி யார் என்பதே கேள்வி.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...