Wednesday, September 18, 2013

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதல் ஏன்?

மீப காலமாக சமூக வலைதளங்களில் நடந்து வரும் விஜய்- அஜித் ரசிகர்களின் சண்டையை கவனித்து வருகிறேன். எதற்காக அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் இப்படி அடித்து கொள்கிறார்கள் என்றே புரியவில்லை. விஜய் ரசிகர்கள் அஜித்தை மோசமான வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர். பதிலுக்கு அவர்கள் மிக கேவலமாக  விஜயை கேலி செய்கின்றனர். 

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி ஒன்றும் புதியதல்ல. MGR-சிவாஜி ரசிகர்கள் செய்யாததையோ, ரஜினி-கமல் ரசிகர்கள் செய்யாததையோ இவர்கள் செய்யவில்லைதான். ஆனால் நான் ஆச்சரியப்படும் விஷயம் விஜய்- அஜித் இடையேயான போட்டி எங்கிருந்து உருவானது? அது இயற்கையாக உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்பதுதான்.

MGR-சிவாஜி இவர்களுக்கு இடையேயான போட்டியை எடுத்து கொண்டால் இவர்கள் திரை வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி இவர்கள் இரு துருவங்கள். ஒருவர் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றவர் படத்தில் பணியாற்ற முடியாத அளவு இவர்களுக்கு இடையேயான போட்டி இருந்தது. இவர்கள் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மேல் கொண்ட அபிமானத்தால் மற்ற நடிகர்கள் மேல் வெறுப்பு கொள்வது மிக இயல்பானது. 

ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இடையேயான மோதல்களை பற்றி சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சில வருடங்கள் இவர்களில் ஒருவரின் படம் வெளி வந்தால் போதும். இன்னொருவரின் ரசிகர்கள் மாட்டு சாணமும் கையுமாக கிளம்பி விடுவார்கள். எங்கெல்லாம் அந்த படத்தின் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளதோ அங்கெல்லாம் சென்று சாணி அடித்து விட்டு வந்து விடுவார்கள். இதை காரணமாக வைத்து மறுநாள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் மோதல் மூளும். மோதல் என்றால் இப்போது நடப்பது போல பேஸ்புக் மோதல்கள் இல்லை. ரத்தம் வர அடித்து கொள்ளும் சண்டை அது. இந்த மோதல்கள் முற்றும்போது ரஜினியும் கமலும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு நாங்கள் நண்பர்கள்தான் என்று அறிக்கை கொடுப்பார்கள். இருந்தாலும் ரசிகர்கள் ஓய மாட்டார்கள். 

ரஜினியும், கமலும் நண்பர்கள்தானே? அவர்களின் ரசிகர்கள் ஏன் மோதி கொள்ள வேண்டும்? என்று யோசித்தால் நமக்கு கிடைக்கும் விடை இவர்கள் ரசிகர்கள் இவர்கள் மேல் கொண்ட பேரபிமானம். தாங்கள் விரும்பும் நடிகரே மற்றவரை விட பெருந்திறமை கொண்டவர் என்று இவர்கள் நம்பியதும் அதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று இன்னொரு நடிகரை மட்டம் தட்ட எடுத்த முயற்சிகளுமே இத்தகைய மோதல்களுக்கு காரணம். சம காலத்தில் தமிழ் திரையுலகில் இவர்களுக்கு இணையான  திறமை கொண்ட நடிகர்கள் எவரும் இல்லாததால் தங்கள் அபிமான நடிகர்களை உயர்த்தி பிடிக்க முயற்சித்த இவர்களின் முயற்சி புரிந்து கொள்ள கூடியதே.


இப்போது  விஜய்-அஜித் போட்டிக்கு வருவோம். ரஜினி படம் நடிப்பதை குறைத்து கொண்டிருந்த சமயம். கமலோ ஆளவந்தான், மருதநாயகம்  போன்ற படங்களில் அதிக நேரத்தை செலவழித்து கொண்டிருந்தார். விஜயகாந்த் ஒரே மாதிரியான கதைகளில் நடித்து கொண்டிருந்தார். அது போன்ற சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் ஏற்பட்டு இருந்த வெற்றிடத்தை நிரப்புவது போல் விஜய், அஜீத், பிரசாந்த், அருண் விஜய் போன்றவர்களின் படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. விஜய் அவருடைய தந்தையின் வழி காட்டுதலால் சிலவெற்றி படங்களை கொடுத்து படிப்படியாக முன்னேறி கொண்டிருந்தார்.  அஜீத்தும் சில வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார். அப்போதே விஜய்க்கு காதல் பற்றி வசனம் மட்டுமே பேச தெரியும், நடிக்க தெரியாது என அஜீத் ரசிகர்களும், அஜீத்துக்கு விஜய் அளவு நடனம் ஆட தெரியாது,  பாட தெரியாது என விஜய் ரசிகர்களும் விவாதம் செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

இது போன்ற விவாதங்கள் சிறிது காலத்தில் திறமையான  புது நடிகர்கள் வரவின்போது முடிந்து போய் இருக்கும்.  ஆனால் அப்படி முடிய விடாமல் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் விஜய். சில வருடங்கள் முன் அஜீத்தின் தீனா படம் வெளி வந்தது. அஜீத்துக்கு  தல  என்று பேர் சூட்டிய படம் அது. அந்த படத்திற்கு அடுத்து வந்த தன்னுடைய படத்தில்(தமிழன்??)  விஜய் 'உன்னோட தலை, வாலு எல்லாத்தையும் வர சொல்லு' என்று வசனம் பேசுவார். அடுத்தடுத்து வந்த படங்களிலும் இதே போன்ற தாக்குதலை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அஜீத்தும் தன்னுடைய படங்களில் பதில் தாக்குதலை ஆரம்பிக்க ஆட்டம் சூடு பிடித்தது. உண்மையிலேயே விஜயும், அஜீத்தும் ஜென்ம விரோதிகள் என்று எண்ணி கொண்டு அவர்களின் ரசிகர்கள் மோதி கொண்டார்கள்.  பின்னாளில் சில காரணங்களுக்காக விஜய்  அஜீத்தை  தன்னுடைய நண்பராக காட்டி கொள்ள முயன்ற போதும் ரசிகர்கள் தங்களுக்கு இடையிலான மோதலை விடவில்லை. அதன் காரணம் இவர்களின் மோதல் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மீதான அபிமானத்தால் உருவானதில்லை. மாறாக மற்ற நடிகர் மேலான வெறுப்பினால் உருவானது.

அது சரி, விஜய் ஏன் அஜீத்தை தாக்கி வசனம் வைக்க வேண்டும்? அவர் கூட வாய்க்கால் தகராறா? இல்லை, இவரின் பட  வாய்ப்புகளை அஜீத் கைப்பற்றி எடுத்து கொண்டாரா?   இரண்டுமே இல்லை. அது விஜய் பின் பற்றிய ஒரு யுக்தி. அருமையாக திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட தன் திரை  வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அஜீத்தை தன்னுடைய எதிரியாக விஜய் சித்தரித்து கொண்டார். இதனால் அஜீத்தும் ஓரளவு பயனடைந்தார். கடைசியில் திரைக்கு வெளியே நடந்த நாடகத்தை உண்மை என நம்பி இன்றும் மோதி கொண்டிருப்பவர்கள் ரசிகர்கள்தான்.

நினைவுகளில் இருந்து எழுதப்பட்டது. விஜயும், அஜீத்தும் எப்போது தங்களை எதிரிகளாக காட்டி கொண்டனர் என்று தரப்பட தகவலில்  ஏதேனும் தவறு இருப்பதாக யாரேனும் நிறுவினால் இந்த பதிவை எடுத்து விடுகிறேன்.




Sunday, September 15, 2013

மோடி- மீட்பரா? ஹிட்லரா?

மோடிதான்  பிரதமர் வேட்பாளர்ன்னு பிஜேபி சொன்னதும் நாடே பரபரப்பு ஆயிடுச்சுங்க. மோடிய இந்தியாவ மீட்க வந்த மீட்பர்னு சிலரும், ஹிட்லர்ன்னு சிலரும் சொல்றாங்க. எல்லாத்தையும் கேட்டும், படிச்சும், கொஞ்சமா இருக்குற சொந்த புத்திய வச்சு ஆராய்ச்சி செஞ்சும் பார்த்தா கடைசில எந்த விடையும் கிடைக்கலை. புரிஞ்ச ஒரே ஒரு விஷயம் மோடியோட தலைமையை குறை சொல்ல வேற எந்த விஷயமும் இல்லாததால இந்த ஹிட்லர் கோஷத்தை வச்சுதான் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போகுது.

இந்தியாவை பொருத்தவரைக்கும் நம்மகிட்ட நல்ல தலைவர்கள்னு சொல்ல ரொம்ப பேரெல்லாம் இல்ல. சுதந்திரம் வாங்கின காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் சுயநலம் இல்லாத சேவை மட்டுமே செய்ய அரசியலுக்கு வந்த தலைவர்களை விரல் விட்டு எண்ணிடலாம். இதுக்காக  யாரையும் குறை சொல்லிட முடியாது. காரணம் நம்ம கலாசாரமே அப்பிடி. நம்ம மக்களுக்கு அவங்க வேலை சரியா முடிஞ்சா போதும். அடுத்தவங்களை பத்தி எல்லாம் கவலை இல்லை. 
 

ஒரு தடவை   டிரெய்ன்ல டிக்கெட் பண்ணேன். அந்த டிரெய்ன் வேற ஒரு ஊருல இருந்து கிளம்புற டிரெய்ன். அது அந்த ஊருல இருந்து நான் புக் பண்ண ஸ்டேஷன் வரதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகும். நான் அந்த டிரெய்ன்ல ஏறி என்னோட பெர்த் போய் பாக்கும்போது பெர்த்ல எனக்குன்னு ஒதுக்குன தலகாணிய காணோம். கீழ படுத்துட்டு இருந்தவர்கிட்ட கேட்டா பக்கத்து பெர்த்காரர் அந்த தலகாணிய எடுத்து வச்சு இருக்கார் அப்பிடிங்கிறார். நான் அவரை எழுப்பி தலகாணிய  கேக்கலாம்ன்னு பார்த்தா அவர் போர்வையை நல்லா இழுத்து போத்திகிட்டு படுத்துகிட்டு இருக்கார். எப்பிடி எப்பிடியோ எழுப்பி பார்த்தும் கடைசி வரை போர்வையை விலக்கி எந்திரிக்கவே இல்லை. அப்புறம் என்ன செய்ய? கையை தலைக்கு வச்சுக்கிட்டு பட்டனத்தார் மாதிரி தூங்கிகிட்டு வந்தேன். இது நம்ம மக்களோட மனசுக்கு ஒரு உதாரணம்.

டிரெய்ன்  கதையை முடிச்சாச்சு. அடுத்து பஸ் கதை. ஒரு நாள் ஒரு ட்ராவல்ஸ்ல மதுரை வழியா போய்கிட்டு இருந்தேன். ட்ராவல்ஸ்காரன் விடியற்காலை நாலு மணிக்கு மதுரை சிட்டிக்குள்ள டீசல் போட வண்டிய நிறுத்துனான். உடனே வண்டில இருந்த நம்ம ஆளுங்க இறங்கி பக்கத்துல இருந்த பள்ளிக்கூட வாசல் கிட்ட சிறுநீர் கழிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுக்கு என்ன கவலை? அவங்க பிள்ளைங்கதான் அந்த பள்ளிகூடத்துல படிக்கலியே. பொதுவாவே நாம இப்பிடிதான். அடுத்தவங்களை பத்தி நமக்கு எந்த கவலையும் கிடையாது.

இப்போ மேல சொன்ன மாதிரி சின்ன விசயங்களை விட்டுடுவோம். அடுத்த கட்டத்துக்கு வருவோம். இந்த பெரும்  பணக்காரங்க இருக்காங்களே, அவங்களுக்கு யார் ஆட்சி பண்றாங்கன்னு பெரிய கவலை எல்லாம் இல்லை. அதனால அவங்களை விட்டுடுவோம். நம்ம மாச சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் மக்களை எடுத்துப்போம். அரசியல்வாதிங்க சரி இல்லை, ஆட்சி சரி இல்லன்னு ஆயிரம் குத்தம் சொல்லுவாங்க. ஆனா இன்கம்டாக்சை குறைக்க என்னென்ன டூப்ளிகேட் பில் தர முடியுமோ அத்தனை பில்லையும் தருவாங்க. கேட்டா நாம இன்கம்டாக்ஸ் காட்டுனா எவனோ அமுக்க போறான்னு விளக்கம் தருவாங்க. இவங்க இவங்களால முடிஞ்ச அளவு அரசாங்கத்தை ஏமாத்துனா, அரசியல்வாதிங்க  அவனால முடிஞ்ச அளவு அரசாங்கத்தை ஏமாத்ததானே செய்வாங்க?

இப்பிடிப்பட்ட சமூக சூழ்நிலைல இருந்து வர்ற அரசியல் தலைவர்கள் பெரிய தியாகியா இருக்கணும்ன்னு எதிர் பார்க்க முடியாது. மீறி மக்களுக்கு சேவை மட்டுமே செய்யுறதை நோக்கமா வச்சிக்கிட்டு யாராவது அரசியலுக்கு வந்தாலும் அவங்களால தாக்கு பிடிக்க முடியாது. ஒரு கார்ப்பரேட் கம்பெனியிலேயே நேர்மையா இருக்கிறது கஷ்டமாகி போன காலத்துல எப்பிடி அரசியல்ல நேர்மையா இருக்க முடியும்?

இதையெல்லாம் மீறி இந்தியாவுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைப்பரான்னு யோசிச்சா மோடி மட்டும்தான் நினைவுக்கு வரார். நம்ம  நாட்ல இவரை மாதிரி  தொலைநோக்கு பார்வை கொண்ட, மக்களோட வளர்ச்சிக்காக சிந்திக்க கூடிய ஒரு தலைவர் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப  கஷ்டம். இவர் இங்கிலாந்து போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சவர் கிடையாது. மக்களோட மக்களா இருந்து வந்தவர். மக்களோட கஷ்டத்தை புரிஞ்சவர். பெரிய தேச பக்தர். இந்தியாவுக்கு என்ன தேவைன்னு அவருக்கு சரியா தெரியும். இவர் நிச்சயம் ஆட்சியை மக்களுக்காக நடத்துவாரே தவிர  தன்னோட சொந்த இலாபத்துக்காக நடத்த மாட்டார். ஏற்கனவே தன்னோட நிர்வாக திறமையை தேசத்துக்கு காட்டியும் இருக்கார்.  இதுதான் இவர் பக்கமா என்னை சாய வைக்குற விஷயம்.

ஆனா மோடியை பத்தி இப்பிடி ஒரே அடியா நல்லவிதமா சொல்லிட்டு போயிட முடியல. அரசியல்வாதியா அவருக்கு ஒரு சித்தாந்தம் இருக்கலாம். அவர் ஹிந்துத்துவவாதியா இருக்கலாம். ஆனா ஆட்சில இருக்கும்போது அவரோட முக்கிய கடமை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. கலவரத்தப்போ அவர் அப்படிபட்ட ராஜதர்மத்தோடு நடக்கணும்ன்னு  வாஜ்பாயே சொன்னதுதான் உறுத்துது. ஒரு வெள்ளை துணில பட்ட மை  மாதிரி மோடியோட ஒட்டு மொத்த நல்ல பேருக்கும் களங்கமா இருக்குது அந்த கலவரம்.

அவரோட ஆட்சியில எல்லா எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுதுன்னா அவருக்கு ஓட்டு போடுறதுல யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. எந்த காரணத்தை கொண்டும் காங்கிரஸ்க்கு வோட்டு போட முடியாத சூழ்நிலைல இப்போதைக்கு தேசத்துக்கு இருக்குற ஒரே நம்பிக்கையும்  அவருதான். இருந்தாலும் இப்போதைக்கு மோடி மேல இருக்குற விமர்சனங்கள் மாதிரியே  மனசும் ரெண்டு பக்கமா சாஞ்சுகிட்டு ஒரு dilemmaலயே இருக்கு.  முடிஞ்சா நீங்க சொல்லிட்டு போங்க அவர் இந்தியாவை மீட்க வந்த மீட்பரா? இல்லை ஹிட்லரான்னு?


Friday, September 13, 2013

தமிழ்நாட்டிலிருந்து -> செவ்வாய் கிரகத்துக்கு

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற திட்டம் - செய்தி 

 
"ஏங்க!  இங்க எல்லாத்தையும் விட்டுட்டு நாம கட்டாயம் செவ்வாய் போய்தான் ஆகணுமா?'

"சுதா! இவ்வளவு பணம் கொடுத்த அப்புறம் கேக்குற கேள்வியா இது. நாம கட்டாயம் செவ்வாய் கிரகம் போறோம். இது என்னோட கனவு."

"அதுக்கு இல்லைங்க. முன்ன பின்ன தெரியாத ஒரு கிரகத்துக்கு போய் நாம என்ன பண்றது"

"பைத்தியம். நமக்கு மட்டும்  இல்ல. அங்க போக எல்லாருக்குமே அது புது கிரகம்தான். இது வரைக்கும் நாம பார்த்தது, கேட்டது எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழ்க்கையை தொடங்கதான்  நாம அங்க போறதே. இப்போவே அங்க இருக்குற நிலத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு செஞ்சுட்டா நாளைக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சு நெறையா சம்பாதிக்கலாம். அங்க வரதுல உனக்கு என்ன கஷ்டம்"

"இதுல என்ன கஷ்டமா? சின்ன வயசுல இருந்து நான் அமாவாசை விரதம் இருப்பேன். அதை எப்பிடி விடுறது"

"உன்னை யாரு விட சொன்னா? அங்க ஒன்னுக்கு ரெண்டு நிலா இருக்கு. நீ தாராளமா அமாவாசை அன்னைக்கு விரதம் இருக்கலாம்."

"நம்ம  பசங்க படிப்பு?"

"நம்ம குழந்தைங்க படிப்பு செலவு எல்லாத்தையும் அங்க வரப் போற   அரசாங்கமே ஏத்துக்கும்"

"வாரத்துக்கு ஒரு  படம் பாப்பேன். அங்க தியேட்டர் இருக்கா?"

"தியேட்டர் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு வர இன்னும் நாள் ஆகும் செல்லம். ஆனா அடுத்த மாசம் பவர் ஸ்டார் அங்க ஷூட்டிங் வராராம். இன்னும் நெறைய பேர் படம் எடுக்க அங்க வர போறாங்களாம். சோ  சீக்கிரமாவே தியேட்டர் வந்துடும்."

"பண்டிகை வந்தா ஒரு வடை, முறுக்கு கூட செஞ்சு சாப்பிட முடியாதேங்க."

"முறுக்கு இல்லாட்டி என்ன. தமிழ்நாடு அரசாங்கம் அங்க டாஸ்மாக் கிளை  திறக்க திட்டம் போட்டு இருக்காங்க. எனக்கு சரக்கு பஞ்சம் இல்லாம கிடைக்கும்."

"எனக்கு மருதாணி ரொம்ப பிடிக்கும்ங்க. அது அங்க கிடைக்காதே."

"ஹஹஹா! அந்த கிரகமே சிகப்பு கிரகம்தான். அந்த மண்ணுல விழுந்து உருண்டா நீ நல்லா சிகப்பா ஆகிடுவ. அப்புறம் எதுக்கு மருதாணி?"

"சரிங்க! நான் செவ்வாய் கிரகம் வர சம்மதிக்கிறேன். நம்ம முதல்வரும், கலைஞருமே அங்க கிளம்பி வரும்போது எனக்கு என்ன?"

"என்னது முதல்வரும், முன்னாள் முதல்வரும் அங்க வராங்களா? என்னடி சொல்ற?"

"ஆமா. இன்னைக்கு நீங்க பேப்பர் படிக்கலையா? அவங்க ரெண்டு பேரும் அங்க வந்து கட்சி ஆரம்பிக்க போறாங்களாம்."

"அட பாவமே! அப்போ நம்ம ட்ரிப் கேன்சல்"

Wednesday, September 11, 2013

கோச்சடையான் - சில எண்ணங்கள்

னக்கு ரஜினியை எந்த வயதிலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று சரியாக நினைவில்லை.குழந்தை பருவத்திலிருந்தே நான் ரஜினி ரசிகன் ஆகி விட்டேன். சிறிய வயதில் என்னை  வசீகரித்த எத்தனையோ விஷயங்கள் நாளடைவில் சாதாரண விஷயங்கள் ஆகிவிட்டன. ஆனால் ரஜினி மீதான ஈர்ப்பு மட்டும் வயது ஏற ஏற அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை. அதுதான் ரஜினி மேஜிக். படம் பார்க்க வருபவர்களை தன்னை நோக்கி ஈர்த்து கொள்ளும் காந்தம் அவர்.

'சிவாஜி' படம் வெளிவந்த போது ரஜினி மாநில எல்லைகளை கடந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சூப்பர் ஸ்டார் ஆகி போனார். அந்த படம் தயாரிப்பில் இருந்த நேரம் 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த்  இயக்கி கொண்டிருந்தார். அந்த படத்தின் டீசர் 'சிவாஜி' படத்தோடு  வெளியிடப்பட்டது. உண்மையிலேயே அந்த டீசர் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ரஜினி போன்ற உருவம் கொண்ட ஒரு பொம்மையே சினிமாவின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க போகிறது என்று எண்ணி கொண்டேன். 'சிவாஜி' ஜூரம் ஒட்டு மொத்த தேசத்திலும் அடித்து கொண்டிருந்த அந்த நாளில் அந்த படம் வெளிவந்து இருந்தால் அதுதான் நடந்து இருக்கும்.

இப்படி அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட 'சுல்தான்' பின்னாளில் எதனால் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை. சௌந்தர்யா படம் தயாரித்து நஷ்டம் அடைந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு சில  காரணங்களும் இருக்கலாம். சௌந்தர்யா படம் எடுத்து பட்ட கடன்களை அடைத்த ரஜினி அவருக்கு திருமணம்  முடித்து வைத்தார். இந்த நிலையில் சுல்தானை ஏறக்குறைய எல்லாரும் மறந்தே விட்டனர். 

ரஜினியின் உடல் நல குறைவுக்கு பின் 'கோச்சடையான்' என்று மீண்டும் ஒரு அனிமேஷன் படம் ஆரம்பித்தனர். சரி, சுல்தானை தூசி தட்டுகிறார்கள் போலும் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை என்று சௌந்தர்யா பேட்டி கொடுத்தார். எது எப்படி இருந்தால் என்ன ,தலைவர் படம் வந்தால் போதும் என்று எண்ணி கொண்டேன். படம் விறுவிறுப்பாக தயாரானது. ரஜினி நடனமாடும் அட்டகாசமான ஸ்டில் வேறு வெளியானது. K.S. ரவிகுமார் படத்தில் இணைந்து கொண்டதும் எனது எதிர்பார்ப்பு அதிகமானது. 'ஜீன்ஸ்' ராஜு சுந்தரம் போலி ஐஸ்வர்யா ராயை ஆட்டுவிப்பது போல, 'கோச்சடையான்' நடிகர்கள் அனைவரும் உடலில் இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு தங்கள் 3டி மாதிரிக்கு உயிர் கொடுக்கும் மேகிங் வீடியோ பார்த்ததும் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு போனது.

 
ரஜினி கடந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளிவரும் என்று பேட்டி கொடுத்தார். தயாரிப்பு நிறுவனமோ தீபாவளிக்கும் முன்னரே படம் வெளிவரும் என்றது. ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆண்டு ஒன்று ஓடிப்போனது. ரஜினிக்கு படத்தில் திருப்தி இல்லை; படம் கைவிடப்பட்டு விட்டது என பேச்சு எழ தொடங்கியது. ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் வதந்திகள் அடங்கி விட்டன. சொன்னபடி டீசரும் வெளியானது.

கடந்த திங்கள் அன்று ஆவலோடு முதல் முறையாக டீசர் பார்க்க ஆரம்பித்தவனுக்கு அதிர்ச்சி. டீசர் 'சுல்தான்' பட டீசரை விட மோசமாக தெரிந்தது. என்ன காட்சிகள் ஓடுகிறது என்றே புரியவில்லை. இந்த தரத்தில் படம் எடுக்கவா இதற்கா இத்தனை நாட்கள் என திகைத்தேன். ஒரு வேளை கேன்ஸில் ரஜினி படத்தின் ட்ரைலரை வெளியிட விடாமல் தடுக்க இதுதான் காரணமோ என எண்ணினேன். அப்போதுதான் யூ ட்யூபில் இருந்த அந்த கமெண்டை கவனித்தேன்.

டீசரை 1080 hd தரத்தில் பார்க்கவும் என்று பரிந்துரைத்து இருந்தது அந்த கமெண்ட். அங்கே குறிப்பிட்டு இருந்தபடி வீடியோ  குவாலிட்டி மாற்றி பார்த்த பின்தான் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்தது. உண்மையிலேயே படத்திற்காக நிறைய மெனக்கெட்டு உள்ளனர். சில காட்சிகள் நன்றாகவே உள்ளன. ஒரே ஒரு குறை ரஜினியின் முகத்தை இன்னும் சற்று துல்லியமாக வடிவமைத்து இருக்கலாம். தந்தை ரஜினியின் முகம் ரஜினி போலவே இல்லை. மகன் ரஜினியின் முகமோ உடலை விட்டு வித்தியாசமாக, ஒட்டப்பட்டது போல தெரிகிறது. ரஜினியின் முகத்தை மட்டும் துல்லியமாக வடிவமைத்து இருந்தால் அது மற்ற எல்லா குறைகளையும் மறைத்து இருக்கும். ரஜினியின் முகத்துக்காக படம் பார்க்க வருபவர்கள்தானே அதிகம்.

இந்த டீசரை பார்த்து பலர் இந்த படம் தோல்வி அடையும் என்று சிலர்  கணித்து இருப்பார்கள். ஆனால் எனக்கு என்னவோ இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை மெகா ஹிட் ஆனாலும் ஆகலாம். ஏனெனில் எதையும் நடத்தி காட்டுவதுதானே ரஜினி மேஜிக்.

 

Wednesday, September 4, 2013

ஒரு குட்டி நீதி கதை

ரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது.  அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. தன் ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ,"மயிலே! இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு " என்றது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள் .

நீதி: பிரபுதேவாவால் SPB போல பாட முடியாது. SPBயால் பிரபுதேவா போல ஆட முடியாது. உங்கள் திறமையை பற்றி  நீங்கள் அறிந்து கொண்டால் போதும். அடுத்தவர்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பட தேவையில்லை.

Inspired by:  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் 
நன்றி: கவிஞர் வாலி

Saturday, August 31, 2013

ஒரு 'பிட்டு' காதல் கதை (U)

"அண்ணே! நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே"

"கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்."

"சரி சொல்லுங்க"

"இது என்னோட  காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்."

"என்னது படிச்சீங்களா?"

"சரி +2   க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு  புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா."

"அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே."

"டேய்! மூடிகிட்டு கதையை கேளு."

"சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா"

"புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்கா என்ன?"

"இப்பிடி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் பள்ளிகூடத்தில ரிவிசன் டெஸ்ட் வந்துச்சு. பரீட்சை எழுதலாமுன்னு போனவனுக்கு பெரிய அதிர்ச்சி"

என்ன ஆச்சு

"புதுசா வந்த பொண்ணு பேரு என்னோட பேருக்கு அடுத்து வரதால அவளை என்னோட டெஸ்க்ல உக்கார வச்சுட்டாங்க"

"அது அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சின்னு சொல்லுங்க"

மண்ணாங்கட்டி. வழக்கமா என் கிட்ட ஒரு பையன் உக்காந்து இருப்பான். நானும் அவனும்தான் பிட் ஷேர் செஞ்சுக்குவோம். இப்போ இவ கிட்ட இருந்தா "நான் எப்பிடி பாஸ் ஆகுறது."

"ஐயோ பாவம்!"

"கஷ்டம்தான்"

"ஒரு வழியா நானே கை வலிக்க பிட் எழுதி எல்லா பரீட்சையையும் சமாளிச்சிட்டேன். ஆனா கடைசி பரீட்சை பிசிக்ஸ். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டாங்க"

"ம்"

"நான் எழுதிட்டு போன பிட்டை வச்சு என்னால அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியல. லேசா  திரும்பி அவளை பார்த்தேன். அவ கடகடன்னு எழுதிகிட்டே இருக்கா."

"ஆமா! பொண்ணுங்க எப்பவுமே நல்லா படிக்கும்ல."

"அப்படிதான் நானும் நெனச்சேன். இப்போ நான் எழுதி இருந்த பதிலை வச்சு கட்டாயம் பாஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. சூப்பர்வைசர் அசந்த நேரமா பாத்து லேசா பெஞ்சை தட்டி அவளை திரும்பி பாக்க வச்சேன்."

"ஆகா! அண்ணல் நோக்கியதை அண்ணியும் நோக்குறாங்க போல"

"அவ திரும்பினதும் அவ கிட்ட லேசா பேப்பரை காட்டேன்னு சிக்னல் பண்ணேன்."

"பேப்பரை காட்டேன்னுதான சிக்னல் பண்ணீங்க"

"ஆமா!  பேப்பரைதான்"

"காட்டுனாங்கள"

"காட்டுனா"

"அப்போ அவங்க புண்ணியத்துல பாஸ் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க"

"கிழிச்சேன். பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்னு மட்டும்தான் அவ எழுதி இருந்தா"

"ஹா ஹா! அப்புறம் என்ன செஞ்சீங்க"

"என்ன செய்றது? ஏதோ பத்து,பதினஞ்சு மார்க்காச்சும் அவ எடுக்கட்டும்னு என் கைல இருந்த பிட்டை அவளுக்கு பாஸ் செஞ்சேன்."

"அவங்க வேணாமுன்னு சொல்லலியா"

"அவளா? அவ ஏதோ பிட் அடிக்கறதுல எக்ஸ்பெர்ட் மாதிரி அதை வாங்கி அவ்வளவு நேக்கா பிட் அடிச்சா. அவ மூஞ்சியை பாத்தா அவ பிட் அடிக்கிறான்னு எவனும் சொல்ல மாட்டான்."

"சரி! இதுல எங்க காதல்"

"இரு!  அவ என் கிட்ட பிட் வாங்குனதும்தான் எனக்கு அப்போதான் எனக்கு இவ கிட்ட லவ் சொல்ல இதுதான் சரியான நேரமுன்னு. ஒரு பேப்பரை எடுத்தேன். பென்சிலால ஒரு இதயத்தை வரைஞ்சு அதுல அம்பு விட்டேன். எழுதுன பேப்பரை அவ கிட்ட பாஸ் பண்ணேன்."

"பரீட்சை ஹால்லயா? ஏன் அவ்வளவு அவசரம்."

"இப்போ லெட்டர்  குடுத்தாதான் அவளால கத்தி ஊரை கூட்ட முடியாது. குடுத்த பேப்பரை வெளியே எடுத்துட்டு போய் அவங்க அப்பா கிட்ட போட்டு தரவும் முடியாது. திரும்ப என் கிட்டதான் குடுத்து ஆகணும். அதை நான் அழிச்சுட்டு ஏதாவது எழுதிட்டு கட்டி கொடுத்துடுவேன். ரிஸ்க் இல்லாம லவ்வை சொல்லிடலாம்."

"அபார மூளைண்ணே உங்களுக்கு. இந்த மூளையை படிப்புல காட்டி இருந்தா நீங்க பெரிய ராக்கெட் எஞ்சினியர்  ஆகி இருப்பீங்க. சரி அதை படிச்சுட்டு என்ன சொன்னாங்க"

 "நான் பேப்பரை குடுத்துட்டு அவ படிக்கிறாளான்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ அதை பாத்த உடனே இன்னொரு பேப்பரை எடுத்து பென்சிலால ஏதோ எழுதுனா. என் கிட்ட அந்த பேப்பரை பாஸ் செஞ்சா"

"என்ன எழுதி இருந்துச்சு அந்த பேப்பர்ல? லவ் ஓகே ஆயிடுச்சா"

"நானும் ஓகே சொல்லிதான் எழுதுறான்னு நெனச்சேன். ஆனா  இங்கதாண்டா ட்விஸ்ட். அவ அந்த பேப்பர்ல எனக்கு படம் வரைய சரியா வராது. நீங்க குடுத்த படத்தையே நான் கட்டி குடுத்துடறேன். நீங்க உங்களுக்கு வேற படம் வரைஞ்சுகுங்க அப்பிடின்னு எழுதி இருந்தா. அவளுக்கு எப்பிடி புரிய வச்சு அந்த பேப்பரை வாங்குறதுன்னு தெரியல. கடைசில கட்டியே குடுத்துட்டா"

"அடி பாவி! அவளுக்கு பிசிக்ஸ்க்கும், பயாலஜிகுமா வித்தியாசம் தெரியாது?"

"அந்த கூமுட்டைக்கு அதுவே தெரியலையே".

"அப்புறம் என்ன ஆச்சு? பேப்பர் திருத்தும்போது நீங்க ரெண்டு பேருமே கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா?"

"அது நடந்து இருந்தா கூட பரவாயில்லயே"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"பரீட்சை ரிசல்ட் வரும்போது நான் ஃபெயில். அவ பாஸ் ஆகி இருந்தா. இப்போ அவ அந்த பிசிக்ஸ் வாத்தியாரை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கா"

"அட பாவமே! பாவம்னே நீங்க. நீங்க குடுத்த லவ் லெட்டரால அந்த பொண்ணு ப்ரீத்தி பிசிக்ஸ் வாத்தியார் கூட சேந்து லைப்ல செட்டில் ஆகிடிச்சு. ரொம்ப சோகமான கதைதான்."

"ஆமாடா! இந்த மாதிரி ஒரு சோகம் யாரு வாழ்க்கையிலயும் வந்திடவே கூடாது."

Friday, August 30, 2013

ஜாதிப் பேய்கள்

பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் தெளிவாக கேட்டது . இந்த வழியில் நடந்து வந்தது தவறோ என்று தோன்றியது. துணைக்கு யாரும் இல்லாமல் சுடுகாட்டு வழியில் எவனாவது வருவானா? பகல்தானே என்ற அசட்டு துணிச்சலில் இப்படி வந்து சிக்கி கொண்டேனே.நாம் பயப்பட்டால் பேய்கள் நம்மை எளிதில் தாக்கி விடும் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. சற்று துணிவை வரவழைத்து கொண்டு திரும்பி பார்க்காமலேயே குரல் கொடுத்தேன் 

" நீ யாரு? நீ ஏன் என் பின்னாடியே வர்ற?"

"நான் உங்களோட நண்பன்தான். பயப்படாம திரும்பி என்னோட பேசுங்க". பதில் கூறியது ஒரு ஆண் குரல். திரும்பியவுடன் என்னை அடிக்க இந்த பேய் திட்டம் தீட்டுகிறதோ.

"நீ மனுசனா?"

"இல்லை. ஆனா மனுசங்களை விட நாங்க ரொம்ப நல்லவங்க. எனக்கு உதவுங்க ப்ளீஸ்"

"என்ன நான் உதவணுமா? உனக்கு என்ன பிரச்சனை?"

"காதல்தான் என்னோட பிரச்சனை. எங்க காதலை இந்த சுடுகாட்டுல இருக்கிற யாரும் ஏத்துகிற மாட்டேங்குறாங்க" என்றது அது. அட பாவமே. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டவன் போலும். நிச்சயம் மூர்க்கமான பேயாக இருப்பான். நிச்சயம் திரும்ப கூடாது.

"இங்க பாரு. நீ இறந்ததும் உன்னோட காதல் முடிஞ்சு போச்சு. உன்னோட காதலி இப்ப வேற யாரையோ கல்யாணம் செஞ்சுகிட்டு சந்தோசமா இருப்பா. இப்போ நான் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. என்னை விட்டுடு."

"இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. தயவு செய்து திரும்பி பாருங்க.  உங்களுக்கு எல்லாமே புரியும்" இப்போது அது கெஞ்சும் குரலில் கேட்டது. பகலில் பேய்களுக்கு சக்தி இல்லை என்று யாரோ சொல்லி கேட்டிருந்தேன். அந்த நம்பிக்கையில் ஆனது ஆகட்டும்   என்று திரும்பினேன். அங்கே வெள்ளை உடையில் ஒரு இளம் வயது ஆணும், பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள். பெண் தனது கூந்தலை முகத்தின் முன் போட்டு முகத்தை மறைத்து வைத்திருந்தாள். எனக்கு இப்போது பயம் சற்று  குறைந்து இருந்தது.

"யாருப்பா நீங்க" சற்று குழைவாகவே கேட்டேன்

"தயவு செஞ்சு எங்களுக்கு உதவுங்க. நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம். நாங்க ரெண்டு பேரும் வேற வேற ஜாதிங்கறதால இந்த சுடுகாட்டுல்ல எங்க காதலை ஒத்துக்க மாட்டேங்குறாங்க."

"என்னது. செத்த அப்புறமுமா ஜாதி பாக்குறாங்க?"

"சாவு மனுசங்களுக்கு மட்டும்தான். ஜாதி எப்பவுமே சாகுறது இல்ல "

"சரி இதுல நான் எப்படி உங்களுக்கு உதவி பண்ண முடியும்"

" பகல்ல சுடுகாடுல்ல எல்லா பேயும் தூங்கிகிட்டு இருக்கும்போது நாங்க எங்க கல்லறையை விட்டு ஓடி வந்துட்டோம். ஆனா இந்த நேரத்துல்ல எங்களால இந்த சுடுகாட்டு எல்லையை தாண்டி போக முடியாது.  என்ன செய்றதுன்னு நாங்க முழிச்சுகிட்டு இருக்கும்போது நீங்க வந்தீங்க. நீங்க எங்களை கூட்டிகிட்டு பக்கத்துக்கு ஊரு சுடுகாட்ல விட்டுட்டா நாங்க பிழைச்சுக்குவோம். ப்ளீஸ்"

எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. யோசித்தேன். இவர்களை நம்பலாமா? என்  இரத்தம்  குடிக்க இது தீட்டும் சதி திட்டமா? இருக்காது. என்னை ஏதாவது செய்வதாக இருந்தால் இது நேரடியாகவே செய்து விடலாமே? நான் அந்த ஆண் பேயின் கண்களை பார்த்தேன். பாவம்! பேய் முழி முழித்து கொண்டிருந்தான்.

"சரி நான் உங்களுக்கு உதவி செய்றேன். உங்களை நான் எப்படி வெளிய கூட்டிகிட்டு போறது"

"அங்க ஒரு பாட்டில் இருக்கு பாருங்க. நாங்க ஆவி வடிவம் எடுத்து அதுக்குள்ள நாங்க போய்க்கிறோம். எங்களை அப்பிடியே நீங்க தூக்கிகிட்டு கொண்டு போய்டுங்க"

"சரி பக்கத்துக்கு ஊரு சுடுகாடுல்ல உங்களுக்கு கல்லறை இருக்காதே. எங்க தங்குவீங்க."

"அங்கே ஏதாவது ஒரு மர பொந்துல வச்சாவது இவளை காப்பாத்துவேன் சார்". அவன் சொன்ன பதிலில் சற்று உருகிவிட்டேன்.

"சரி சீக்கிரம் உள்ள போங்க"

அவர்கள் உள்ளே போய் விட்டார்கள். எடுத்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். சுடுகாட்டை விட்டு சற்று தூரம் வெளியே வந்த பின்தான் எனக்கு உரைத்தது.

"ரெண்டு  பேரும் வெளியே வாங்க". மூடியை திறந்து விட்டு அவற்றை அழைத்தேன். அவை வெளியே வந்தன.

"என்ன ஆச்சு"

"ரெண்டு பேரும் ஒரே பாட்டிலுக்குள்ள போய்டீங்க. எதாச்சும் தப்பு தண்டா செஞ்சுடீங்கன்னா?" நான் சொன்னவுடன் அந்த பெண் பேய் வெக்கப்பட்டது அவளின் அடர்ந்த கூந்தலை தாண்டியும் வெளியே தெரிந்தது.

"நீ ஏன் முடியை முன்னாடி போட்டு இருக்க?" அந்த பெண் பேயிடம் கேட்டேன்.

"சுடுகாட்ல இதான் லேட்டஸ்ட் ஃபேசன்." 

"சரி! நீங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து கல்லறையா?"

"அது எப்பிடி? நாங்க வேற வேற ஜாதி ஆச்சே. அவ  சுடுகாட்டு வடக்கு பக்கம். நான் தெற்கு பக்கம். நான் தினமும்  இவ ஏரியா பக்கம் போய் இவளை டாவடிப்பேன். ஆரம்பத்துல்ல ஓவரா அலட்டிகிட்டா " அவன் இதை சொன்னதும் அந்த பெண் பேய் அவனை குத்துவது போல் பாசாங்கு செய்தாள். சுடுகாட்டு எல்லையை தாண்டியதும் இருவரும் உற்சாக மூடுக்கு வந்து விட்டார்கள் போலும். அது சரி. அவன் சுடுகாட்டு தெற்கு பக்கம் அவன் ஏரியா என்றானே. அப்படியானால் இவன் அந்த ஜாதியா?அதிர்ச்சியாக இருந்தது.

"ஒன்னு கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க என்ன ஜாதி"

"நான் *********, அவ ********" 

"சரி நேரமாச்சு. நீ இந்த பாட்டிலுக்குள்ள போ. அவ இந்த பாட்டிலுக்குள்ள போகட்டும்." அவர்கள் உள்ளே போனதும் இறுக்கமாக பாட்டில்களை மூடி திரும்பி சுடுகாட்டை நடக்க ஆரம்பித்தேன்

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...