Sunday, May 18, 2014

மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு

திப்பிற்கும், மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு,

ஒரு இந்திய குடிமகன் எழுதி  கொள்வது. முதலில் தங்களின் சரித்திர சாதனை வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தேச மக்கள் உங்களை ஒரு கதாநாயகனாகவே உருவகித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டி விட்டன. அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.

தங்களிடம் நல்ல திட்டங்கள் இருக்கிறது. மற்ற கட்சியினரை விட உங்கள் கட்சியினரிடம்  தேச பக்தியும் அதிகமாகவே இருக்கிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரமும், நிர்வாகமும் படித்தவர்களை விட தேநீர் கடையில் பணிபுரிந்த உங்களாலேயே இந்தியாவின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.

மற்ற எந்த பிரச்சினைகளையும் விட எதிர்காலத்தில் நம்மை பெரிய சங்கடத்தில் ஆழ்த்தப்போகும் தண்ணீர் பற்றாக்குறையை நீங்கள் இப்போதே உங்கள் நீர் மேலாண்மை  திட்டங்கள் மூலம் எளிதில் சரி செய்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உழவர்களின் வாழ்க்கையும், தேச பாதுகாப்பும் இனி கட்டாயம் மேம்படும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க போகிறது. நாட்டின் பொருளாதாரமும், தனி நபர் வாழ்க்கை தரமும் உயரப்போகிறது. இவற்றை எல்லாம் நீங்கள் எளிதில் செய்து முடிக்க போகிறீர்கள். ஏனென்றால் இதற்கு முன் பதவியில்  இருந்தவர்கள் தங்களை  பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். பாட புத்தகத்தில் படித்ததை அப்படியே மக்களிடம் பிரயோகித்து பார்த்து நாட்டை வளப்படுத்தியதாக நினைப்பவர்கள் . நீங்கள் நாட்டை பற்றி சிந்திப்பவர். இந்தியர்களின் பிரச்சினைகள் நுணுக்கமானவை என்பதை அறிந்தவர்.

தேசம் முன்னேற நாட்டின் தலைவன் மட்டும் பாடுபட்டால் போதாது. தேசத்தின் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்தை இந்தியர்களின் மனதில் கொண்டு வந்து விடுவீர்கள். இந்தியர்களை மற்ற நாட்டினர் மரியாதையாக பார்க்கும் நிலை வரும். அந்த நிலையை நீங்கள் கொண்டு வருவீர்கள். ஒருவேளை தங்களால் இவற்றை எல்லாம் செய்ய இயலாவிட்டால்தான் ஆச்சரியம்.


ஆனால் மனதை உறுத்தும் ஒரே விஷயம் தேர்தல் பிரசாரங்களில் உங்களுக்கு எதிராக எதிர்கட்சியினர் பயன்படுத்திய முக்கிய  ஆயுதமான மதவாதம்தான். மதரீதியில் உங்களின் அரசு  ஒரு உண்மையான மத சார்பற்ற அரசாகவே  இருக்க விரும்புகிறேன். அனைத்து மதத்தாரும் அவர்களுக்கான உரிமைகளை பெற்று சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இதுவே உங்களின் கொள்கையாகவும் இருக்க வேண்டும். உங்கள் அரசு  நிச்சயம் மதம் சார்ந்து  ஒரு தலை பட்சமாக செயல்படும் அரசாக இருக்காது. ஏனென்றால் வழிபாட்டு முறையும், வழிபடும் கடவுளும் வேறுபட்டாலும்  அவர்கள்  கண்ணனையே சென்று அடைவதாகத்தானே கீதை சொல்கிறது.


Saturday, May 10, 2014

யாமிருக்க பயமே - கட்டாயம் பாருங்க

மிழில் பேய் படங்கள் வருவது இப்போது  மிகவும் குறைந்து விட்டது. 13ம் நம்பர் வீடு, உருவம் போன்ற மாதிரியான படங்களை தமிழில் இப்போது  யாரும் எடுக்காமல் தமிழ் பேய் பட ரசிகர்கள் ஹாலிவுட் படங்களை பார்த்து சந்தோசப்பட்டு கொள்ள வேண்டிய நிலை. காமெடி படங்கள் மட்டும்தான் ஓடும் என்றால் யார்தான்  பேய் படம் எடுப்பார்கள். அபூர்வமாக அவ்வப்போது ‘காஞ்சனா’ போன்ற படங்கள் வெளிவந்தாலும் ஓட்டு மொத்தமாக வெளி வரும் பேய் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த சூழ்நிலையில் காமெடியையும், பயத்தையும் கலந்து கொடுத்து காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு புது அனுபவம் குடுக்கும் படமாக வந்துள்ளது ‘யாமிருக்க பயமே’   

கதாநாயகனுக்கு எதிர்பாராத வகையில் பங்களா ஒன்று கிடைக்கிறது. அவர் அந்த  பங்களாவுக்கு குடி புகுந்ததும் நடக்கும் சம்பவங்களை நிறைய காமெடி, கொஞ்சம் பயம், கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் கவர்ச்சி  என்று சரியான விகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கிறார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை திரையரங்கில் அனைவரும் சிரித்து கொண்டே இருக்கிறார்கள். டைட்டிலில் இருந்து படம் முடியும் வரை எல்லாமே புதிதாக இருக்கிறது (குறைந்தபட்சம் தமிழ் படம் மட்டும் பார்ப்பவர்களுக்கு)


கதையில் குறைகளே இல்லையா என்று கேட்டால் நிறைய சொல்லலாம்தான். ஆனால் காமெடி படத்திலும், பேய் படத்திலும் லாஜிக் எதற்கு பார்க்க வேண்டும். கொடுத்த  காசுக்கு படம் திருப்தியாக இருக்கிறது அவ்வளவுதான். இரட்டை அர்த்த வசனங்களை கொஞ்சம் குறைத்து கொண்டிருந்தால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி விடலாம். இப்போதைக்கு  இது பார்க்க வேண்டிய படம் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.


கால மாற்றம் – காதல் தற்கொலைகள்

தொன்னூறுகளில் காதல் தோல்வி என்று ஒரு கான்செப்ட்  இருந்தது. தினத்தந்தியில் அடிக்கடி காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை, காதல் ஜோடி தற்கொலை என்று செய்திகளை பார்க்கலாம். அதில் பாதிக்கும் மேலான தற்கொலைகளின் காரணம்  ஒரு தலை காதல் என்பது இன்னும் கொடுமை. .இப்படி காதல் தோல்வி அடைந்தவர்களில் சிலர் தேவதாஸ் பாணியில் தாடி வளர்த்து சுற்றுவார்கள். இன்னும் சிலர் மரணதேவனை நாடி செய்திகளில் வருவார்கள். இப்போது அந்த மாதிரியான செய்திகளை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. இப்போது வரும் செய்திகள் கள்ளக்காதல் காரணமாக நடக்கும் கொலைகளை பற்றியவை.

இப்படி குறைந்து விட்ட காதல் தற்கொலைகள்  எதை காட்டுகின்றன? காதலிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதையா? அப்படி இருக்க முடியாது. காதலர்கள் உண்மையில் அதிகரித்தே உள்ளனர். காதலர்கள் அதிகரித்த பின்னர் காதல் தற்கொலைகள் குறைந்தது விசித்திரம்தான். ஆனால் இது நமது  சிந்தனை, பொருளாதாரம், சமூகம் என பல விஷயங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதையே காட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இளம் ஆணும், பெண்ணும் பொது இடத்தில்  நின்று பேசிக்கொண்டு இருந்தாலே வித்தியாசமாக பார்ப்பார்கள். ஆனால் இன்றோ ஆண்கள் பெண்களுடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்று விட்டதால் ஒரே பெண்ணுடன் வாழ்க்கை முடிந்து விடும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. காதல் ஒரு முறைதான்  பூக்கும்  என்று நினைக்காமல் அடுத்த காதலை தேடிப்  போகும் பக்குவத்தை இந்த தலைமுறையினர் பெற்று விட்டனர். ஒரு பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அடுத்த பெண்ணை தேடுவது அவர்களுக்கு கடினமாக இல்லை. ஒருதலை காதலால் வாழ்க்கையை முடித்து கொள்ளுவது  பைத்தியக்காரத்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.


காதலில் வரும் அடுத்த பிரச்சினை பெற்றோர் எதிர்ப்பு. யார் தடுத்தாலும்  , எதிர்த்தாலும் காவல் நிலையம் சென்று தாங்கள் விரும்பியவர்களையே திருமணம் செய்து கொள்ளும்  துணிச்சல் காதலர்களுக்கு வந்து விட்டது. அவர்களுக்கு கிடைத்து இருக்கும் பொருளாதார வசதிகளும் இதற்கு துணை புரிகிறது. பெற்றோர்கள் துணை  இல்லாமல் தங்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்ட பின்னர் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படுவது இல்லை. பள்ளி , கல்லூரி வயதில்  காதலிப்பவர்கள்  கூட தெளிவாக சிந்திக்கின்றனர். தங்கள் நிலை என்ன என்பதை  தெளிவாக உணர்ந்துள்ளனர். தங்களுக்கு வேலை கிடைக்கும்வரை  காதல் வீட்டுக்கு தெரியாமல் பார்த்து கொண்டு சரியான  நேரத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த மாற்றத்திற்கு இன்னொரு முக்கிய காரணம் இந்த தலைமுறை பெற்றோர்கள்  பொதுவாக அதிக கெளரவம் பார்க்கும்  நடுத்தட்டு பெற்றோர்கள் இப்போது காதலை எல்லாம் அதிகம் எதிர்ப்பது இல்லை. தங்கள் பிள்ளைகளின் சந்தோசமே முக்கியம் என்ற ரீதியில்தான் பெரும்பாலானோர் சிந்திக்கின்றனர். ஒரு வேளை தங்கள் பெண் செட்டில் ஆகாத பையனை காதலித்தாலும் அவனுக்கும் ஒரு வேலை தேடி கொடுத்து தங்கள் பெண்ணுடன் சேர்த்து வைக்கும் பெற்றோர்கள் எல்லாம் இருக்கின்றனர்.

எந்த காரணத்தை கொண்டு பார்த்தாலும் காதல் தற்கொலைகள் குறைந்ததன் காரணம் ஆண்கள் பெண்களுடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்று விட்டதாகவே தோண்டுகிறது. சிலர் உண்மையான காதல் குறைந்து விட்டதுதான் இதற்கு காரணம்  என சொல்லலாம். அப்படி சொன்னால் உண்மையான காதல் என்றால் என்ன? காதல் என்பது முற்றிலும் உடல் சார்ந்த ஹார்மோன்கள் செய்யும் லீலை என்கிறது அறிவியல். காதல் என்பதை மனம் சார்ந்து புனிதப்படுத்த நினைக்கின்றனர் சிலர். உடலில் தொடங்கி மனதில் முடிவது காதல் என்போர் சிலர். ஆனால் காதலை எந்த ஒரு அறிவுப் பூர்வமான  எந்த வரையறைக்குள்ளும் கொண்டு வந்து விட முடியாது. அப்படி கொண்டு வந்து விட்டால் காதல் தனது கவர்ச்சியை இழந்து விடும். இப்படி காதலையே வரையறுக்க முடியாதபோது உண்மையான காதலை எப்படி வரையறுப்பது. ஆக முன்பு உண்மையான காதல் இருந்தது, இப்போது இல்லை என்று சொல்ல முடியாது.

இந்த மாற்றத்தை நம்முடைய திரைப்படங்களில் கூட அப்பட்டமாக காண முடிகிறது. ‘புன்னகை மன்னன்’ தொடக்க காட்சி போல இப்போது எந்த படத்திலும் காட்சி இல்லை. காதலை எதிர்க்கும் ‘அலைகள் ஓய்வதில்லை’ பாணி வில்லன்கள் எந்த படத்திலும் வருவதில்லை.  இப்போது காதல் படம் எடுத்தால் கூட காதலர்களுக்கு இடையே ஈகோ பிரச்சினை வருவதாகவே காட்டுகின்றனர். இப்படியான மாற்றம் ஆரோக்கியமானதுதான். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் காதல் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியை அடைந்துவிடாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.


Sunday, May 4, 2014

நாட் சோ அமேசிங் ஸ்பைடர்மேன் - 2

ஸ்பைடர்மேன் படங்களின் மேல் எப்போதும் எனக்கு விருப்பம் அதிகம். காரணம் ஸ்பைடர்மேன் படங்களில் ஆக்சன், செண்டிமெண்ட், காதல் என்று சரியான விகிதத்தில் கலந்து கிட்டத்தட்ட ஒரு கமர்ஷியல் தமிழ் படம் போலவே கொடுத்து இருப்பார்கள். ஸ்பைடர்மேன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் விறுவிறுப்பு. மூன்றாம்  பாகம் சற்று சொதப்பல்தான்.

ஸ்பைடர்மேன் மூன்று பாகங்களுக்கு பின்  ஸ்பைடர்மேனை அமேசிங் ஸ்பைடர்மேனாக மாற்றி எடுத்து வெளியிட்டார்கள். முதல் பாகம் எந்த குறையும் இல்லை. ஆனால் தற்போது வெளி வந்து இருக்கும் இரண்டாம் பாகம் சற்று ஏமாற்றம்தான். ஸ்பைடர்மேனின் பெற்றோர்கள், ஆஸ்கார்ப் நிறுவனத்தில் நடக்கும் சதி செயல்கள் என்று கதை சென்றாலும் ஒரு சராசரி ‘B’ சென்ட்டர் ரசிகனை திருப்திபடுத்துமாறு படம் இல்லை.


ஸ்பைடர்மேன் படங்களின் உண்மையான ஹீரோ வில்லன்தான். வில்லன் வலுவாக இருந்தால்தான் ஸ்பைடர்மேனால் தன்னுடைய முழு பலத்தையும்  காட்டி சண்டையிட முடியும். ஆனால் இந்த பாகத்தில் ஒரு விபத்தில் மின்சாரத்தை பாய்ச்சும்/தேக்கும்  சக்தி வரப் பெற்ற  வில்லன் அத்தனை எடுபடவில்லை. வழக்கமாக ஸ்பைடர்மேன் படங்களில் வில்லன்கள் எதிர்பாராத நேரத்தில் நகரத்தை தாக்குவார்கள். ஆனால் இந்த படத்தில் எப்போதெல்லாம் வில்லன் நகரத்தை தாக்குவான் என்று எளிதில் கணித்து விட முடிகிறது. எப்போதெல்லாம் ஸ்பைடி தன் காதலியை நெருங்குகிறாரோ அப்போதெல்லாம் வில்லன் வருவான் என்று நினைக்கிறோம். சொல்லிவைத்தார் போல வில்லனும் வந்து விடுகிறான். பெரிய பெரிய வில்லன்களை  ஊதி தள்ளிய ஸ்பைடி அவனை எளிதில் தோற்கடித்து விடுகிறார்.

படம் முடியும் நேரத்தில் ஸ்பைடியின் நண்பன் வில்லனாக மாறி ஸ்பைடியை அழிக்க கிளம்புகிறார். அந்த வில்லனும் சப்பையாக போய் விட எல்லா எதிர்பார்ப்பும் புஸ்சென்று போய் விடுகிறது. இருந்தாலும் இந்த வில்லன்களுடன் நடக்கும் சண்டையில் ஸ்பைடி தனது காதலியை இழந்து மனச் சோர்வுக்கு ஆளாகிறார். ஸ்பைடியின் நண்பன் அவரை அழிக்க அடியாட்களை தயார் செய்து அனுப்புகிறார். ஸ்பைடி அவர்களுள் ஒரு அடியாளுடன் மோதப் போகும்போது படத்தை முடித்து விடுகிறார்கள்.


மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் இந்த ‘அமேசிங் ஸ்பைடர்மேன் 2’ நிஜத்தில் அமேசிங்காக இல்லை. குழந்தைகளுக்கு போர் அடிக்கும். வழக்கப்படி தொழில்நுட்ப ரீதியில் வலுவாக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் வலுவில்லாமல்  போய் விட்டது. அமெரிக்கர்களுக்கு ஓர் வேளை படம் பிடித்து இருந்தாலும் டப்பிங்கில் பார்க்கும்  தமிழர்களுக்கு  இது ஒரு சராசரி படம்தான். இருந்தாலும் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.


Monday, April 7, 2014

பிரபஞ்சத் தேடல்

“நீங்கள் அந்த கிரகத்தில் இறங்கி விட்டீர்களா?” பூமியிலிருந்து நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அந்த தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நான் எதிர் பார்த்தது போல் பூமியுடன்   தொடர்பு துண்டிக்கப்படவில்லை.

“இன்னும் சில வினாடிகளில் இறங்கி விடுவோம்  சார்” குரலில் உற்சாகத்தை ஏற்றி சொன்னேன்.

“நல்லது. நீங்கள் செய்யப்போகும் காரியம்  மிகப் பெரியது. இதுவரை பிரபஞ்சத்தில் யாருமே செய்யாதது. மிகப் பெரிய பொருட்செலவில் இதை செயல்படுத்துகிறோம்  என்பதை உணர்ந்து கவனமாக செயல்படுங்கள்.”

“உத்தரவு சார்.”

“நியாபகம் வைத்து கொள்ளுங்கள். அதை கண்டறிய  வேண்டுமானால் நீங்கள் நம்முடைய விசேச கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.”

“நீங்கள் அதை பார்த்து விட்டீர்கள்தானே?”

“பார்த்து விட்டோம்”

“நேரில் பார்க்க எப்படி இருக்கிறது அது?”

“வர்ணிக்க தெரியவில்லை. ஒளி போல தெரிகிறது. கருப்பா, வெள்ளையா? உயரமா, குட்டையா? சொல்லத் தெரியவில்லை. எதையுமே  வர்ணிக்கத்  தெரியவில்லை.”

“ஆனால்  அது தெரிகிறதுதானே?”

“ஆமாம் சார்”

“அப்போது உன் குழுவிற்கு ஆணை பிறப்பிக்கலாம்”

“உத்தரவு”

சொல்லி விட்டு ஏன் அணியினருக்கு கட்டளைகளை அளிக்க தொடங்கினேன்

“எல்லாரும் தயாராகுங்கள். அதை பிடித்த மறு நிமிடம் நம் விண்கலத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். அதன் பதில் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எச்சரிக்கை.”

நான் கட்டளைகளை அளிக்கும் முன்னரே என்னுடைய அணியினர் தயார் நிலையில் இருந்தனர். முன்னர் வகுத்து இருந்த திட்டப்படி அதை நோக்கி முன்னேற தொடங்கினோம். அது நாங்கள் வருவதை அது கண்டுகொண்டதாகவே தெரியவில்லை

நான் என் கையில் இருந்த அந்த கதிர்வீச்சு துப்பாக்கியை தயாராக வைத்து கொண்டேன். இன்னும் சில அடிகளில் அதன் மேல் பிரயோகித்து விடலாம். அது இதற்கு கட்டுப்படுமா? கோபத்தில் எங்களையும் பூமியையும் அழித்து விடுமா? மனதில் நின்ற கேள்விகளை  தவிர்த்து வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

“கேப்டன்! பிரயோகித்து விடுங்கள் கேப்டன்! நாங்கள் எங்கள்  ஆயுதங்களை தயாராகவே வைத்துள்ளோம். ஏதேனும் சிக்கலென்றால் பார்த்து கொள்கிறோம்” என்னுடைய டெபுடி எனக்கு ஊக்கம் அளித்தான்.

“இதே பிரயோகித்து விடலாம்”

தயக்கத்துடன் என் துப்பாக்கியில் மாயக்கதிர் உருவாக வேண்டிய ஆரத்தை குறிப்பிட்டு ட்ரிக்கரை இழுத்தேன். எதிர்பார்த்தது போலவே கச்சிதமாக  அந்த மாய உருவத்தை எங்கள் கதிர்வீச்சு சிறை பிடித்தது. அந்த துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டு இருந்த  எங்கள் கம்ப்யூட்டர்கள் அந்த மாய வட்டத்தை அந்த உருவத்துடன் விண்கலத்தை நோக்கி இழுக்கத் தொடங்கின. சில நொடிகள்தான். அந்த உருவம் எங்கள் விண்கலத்தில் தனியாக வடிவமைக்கப்பட்ட அறையில் சிறைபிடிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அதை பிடித்து விட்டோம்.


“யாஹ்ஹூ” எங்கள் அணியினர் உற்சாக கூக்குரல் எழுப்ப தொடங்கினர்.

“கேப்டன்! எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இத்தனை சுலபமாக சாதித்து விட்டோம். அது துளி எதிர்ப்பு கூட காட்டவில்லையே?”

“எல்லாம் கடவுளின் கருணை.” என்னை அறியாமல் நான் சொன்ன பதிலை கேட்டு எங்கள் அணியினர் சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்
.
“என்ன கேப்டன் நீங்கள்? பிரபஞ்சத்தில் கடவுளையே தேடி கண்டுபிடித்து விட்டோம்; சிறையும் பிடித்து விட்டோம். இன்னமும் கடவுளின் கருணை என்கிறீர்களே?”

“உண்மைதான். ஆனால் இது என்னுடைய பழக்கம். ஆனால் நண்பர்களே. நான் இதை பூமிக்கு கொண்டு சென்று சேர்க்கும்வரை நம்முடைய மிசன் முடியவில்லை. பயணத்திற்கு தயாராகுங்கள்.”

சில நிமிடங்களில் பூமியை நோக்கி விண்கலத்தை செலுத்த தொடங்கினோம்.

“ஆரே!” என் பெயரை சொல்லி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தேன்.

விண்கலத்தில்  எல்லாரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். சத்தம் எங்கே இருந்து வந்தது. அதுவும் ஏன் பெயரை சொல்லி என்னை அழைக்கும் தைரியம் யாருக்கு வந்தது. ஒரு வேளை கடவுள்தான் பேசுகிறாரோ?

“ஆமாம்! நீ நினைப்பது சரி. கடவுள்தான் பேசுகிறேன்”

“நினைத்தேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

“நான் உன்னுடன் பேசலாமா?”

“விதிப்படி நான் உங்களிடம் கேள்விகள் கேட்கக்  கூடாது. ஆனால் உங்களுக்கு கேள்வி கேட்க  உரிமை உண்டு. ஆனால் எங்களிடம் இருந்து விடுதலை மட்டும் பெற்று விடலாம் என்று நினைக்காதீர்கள்”

“நான் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடித்தீர்கள்?”

“அதை விளக்குவது எளிது அல்ல. பல கோடிகள் செலவு செய்து பிரபஞ்சம் முழுவதும்  அலசி உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தோம்."

“என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”

“பூமிக்கு”

“அங்கே என்னை கொண்டு சென்று என்ன செய்யப் போகிறீர்கள்”

“உங்களை ஆராய்ச்சி செய்யப்போகிறோம். உங்களிடமிருந்து கடவுள் கூறு என்ன என்று ஆராய்ந்து மனிதர்களை கடவுளாக்க போகிறோம்.”

“நல்லது. அதன் பின்”

“அதன் பின் எல்லாரும் கடவுள். யாருக்கும் மரணமில்லை. ஆளுக்கு ஒரு பிரபஞ்சம் படைப்பார்கள். தனியாக ஒரு சொர்க்கம் படைத்தது அதில் வாழ்வார்கள். வாழ்க்கையின் ரகசியம் அனைத்தும் உங்களை கொண்டு அறிவோம். கவலையில்லா வாழ்வு வாழ்வோம்”

“என்னை பூமிக்கு கொண்டு சென்றால் என்ன ஆகும் என்று யோசித்தாயா? உங்கள் பூமியில் உள்ள அத்தனை மதத்தினரும் என்னை சொந்தம் கொண்டாடுவார்கள். மத மோதல்கள் அதிகமாகும். நாத்திகர்கள் நான் கடவுளே இல்லை என்பார்கள். என்ன செய்வீர்கள்?”

“அது  எங்கள் கவலை. உங்களுக்கு எதற்கு? மேலும் நீங்கள் பூமிக்கு சென்ற பின் மக்கள் உண்மையில்  மதங்களையே மறந்து விடுவார்கள்

“மனிதா! நான் சொல்வதை கேள். நீ  என்னை பூமிக்கு கொண்டு சென்றால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.”

“நான் இதை பற்றி எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. என்னுடைய பணி உங்களை பூமிக்கு கொண்டு செல்வது.”

கடவுளிடமிருந்து பதில் இல்லை. சில நொடி மௌனத்திற்கு பின் கடவுளிடம் கேட்டேன். 

“கடவுளே! என்னிடம் மட்டும் சொல்லுங்கள். எங்கள் மதத்தினர் வழிபாடுதானே உங்களை அடைய சரியான வழி?”

எது சரியான வழி என்று இப்போது அறிந்து கொள்வாய்

சொல்லிவிட்டு கடவுள் இடியென சிரித்தார்.  எங்கள் விண்கலம் கட்டுப்பாடு இழந்து  ஒரு பெரும் குலுங்கலுடன் திசை மாறியது. மிகப்பெரிய விண்கல் ஒன்று எங்கள் விண்கலத்தை  நோக்கி வந்து கொண்டிருப்பதை என்னால் விண்கலத்தின்  ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது.


Wednesday, April 2, 2014

வழி அறியா பூக்கள்

காயத்ரி! மீட்டிங் ரூமுக்கு வா”

என்னுடைய மேனேஜர் அழைத்தது என்னுடைய மூளையில் ஏற சில நொடிகள் பிடித்தது. சுதாரித்து கொண்டு எழுந்தேன். மற்ற சிந்தனைகள் விலகி என்னை எதற்காக அழைக்கிறார் என்ற ஒரே சிந்தனையோடு மீட்டிங் ரூமை நோக்கி மேனேஜரின் பின்னே நடக்க ஆரம்பித்தேன்.

மீட்டிங் ரூமின்  உள்ளே சென்றதும் அவர் அறையின்  கதவை மூடினார்.

“உட்கார் காயத்ரி”

அமர்ந்தேன்.

“காயத்ரி! நான் எதுக்காக உன்னை கூப்பிட்டேன்னு தெரியுமா?”

“தெரியாது ரூபிணி”

“கொஞ்ச நாளா ஜாப்ல உன்னோட பெர்பார்மன்ஸ் எங்களுக்கு திருப்தி இல்லை. உன்னோட ப்ரொஜெக்ட்ல எக்கச்சக்கமா தப்பு வருது. இப்பிடியே போனா உன்னை வேலைய விட்டு தூக்குறது தவிர எங்களுக்கு வேற வழி இல்லை. இதை சொல்லி  உன்னை வார்ன் செய்யத்தான் இந்த மீட்டிங்.”

“சரி பண்ணிக்கிறேன் ரூபிணி”

“சரி நீ போகலாம்.”

எழுந்து கதவை நோக்கி நடக்க தொடங்கினேன்.

“காயத்ரி! கொஞ்சம் நில்லு. திரும்ப வந்து உட்கார்.”

முகத்தில் கேள்விக்குறியுடன் மீண்டும் வந்து அமர்ந்தேன்.

“இப்போ நான் கொஞ்ச நேரம் ஒரு பொண்ணா உன்கிட்ட பேசலாம்னு நெனைக்கிறேன் காயத்ரி. நாலு மாசம் முன்னாடி டீம்லயே ரொம்ப டேலன்டட் பெர்சன் நீதான். ஆனா இப்போ வேலையையே இழக்க போற பொசிசன்ல இருக்க. ஆபிஸ்ல யாரு கூடவும் சரியா பேசுறது இல்ல. எப்போ பார்த்தாலும் எதையோ யோசிச்சுகிட்டு இருக்க. சொல்லு என்ன ஆச்சு உனக்கு?”

எனக்கு எரிச்சலாக வந்தது. இதெல்லாம் இவளுக்கு எதற்கு. பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டு எடுக்க வேண்டியதுதானே. ஏன் தேவை இல்லாமல் பேசுகிறாள்?

“அது பெர்சனல் ப்ராப்ளம் ரூபிணி. நான் போகலாமா?”

சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

“பெர்சனல் ப்ராப்ளம் அப்பிடின்னு எனக்கு நல்ல தெரியும், அதனாலதான் கேக்குறேன். என்னை உன்னோட அக்கா மாதிரி நினைச்சு சொல்லுமா?”

நான் பதில் சொல்லவில்லை.

“ஓகே காயத்ரி! நீ போகலாம்”

அந்த நொடியில் நான் எப்படி உடைந்தேன் என்று தெரியவில்லை. கண்களில் நீர் கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தது.

“என்னம்மா ஆச்சு? அழாதே.”

“ரூபிணி! நான் லவ் மேரேஜ் செஞ்சது உங்களுக்கு தெரியும்தானே?”

“ஆமா. வீட்ல சண்டை போட்டுக்கிட்டு ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சீங்கதானே. எனக்கு நியாபகம் இருக்கு.”

“கல்யாணம் முடிஞ்சதும் ஒரே மாசம்தான். அவனுக்கு காதல் கசந்து போச்சு. தொட்டதுக்கெல்லாம் சண்டை. பிரச்சனை. காதலிக்கும்போது என்னோட ஒரு நாள் கூட பேசாம இருக்க முடியாதுன்னு சொன்னான். இப்போ நாங்க பேசிகிட்டே பத்து நாள் ஆகுது. ஒரே வீட்ல இருந்துகிட்டு இப்பிடி இருக்கிறது எத்தனை கஷ்டம் தெரியுமா? தினமும் குடிச்சுட்டு வரான். என்னன்னு கேட்டா பொண்டாட்டி சரியில்ல. அதான் குடிக்கிறேன்னு சொல்றான்”

“காயத்ரி! கல்யாணத்துக்கு பின்னாடி இதெல்லாம் சகஜம்மா! இதே மாதிரி நானும் என்னோட புருஷன் கூட நாள் கணக்கா பேசாம இருந்திருக்கேன். அப்புறம் யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து பேசிக்குவோம். நீயும் கவுரவத்தை விட்டு பேசிடேன்.”

“பேசவா சொல்றீங்க. நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடான்னு நான் அவனை கட்டி பிடிச்சு அழுதேன். என்னை விலக்கி விட்டுட்டு போயிட்டான். . போன வாரம் நான் உடம்பு சரி இல்லாம ராத்திரி முழுக்க இருமினப்போ கூட ஒரு வார்த்தை என்னன்னு கேக்கல. அவனுக்கு என்னோட உடம்பு சலிச்சு போச்சு ரூபிணி. ஏமாந்துட்டேன்னு பயமா இருக்கு”

“ரொம்ப கஷ்டமா இருந்தா டிவர்ஸ் செஞ்சுடுமா”

“எப்பிடி? எங்க வீட்டுக்கும் என்னால இனிமே போக முடியாது. வாழ்க்கை முழுக்க தனியா வாழ்ற அளவு எனக்கு தைரியம் இல்ல”

“அப்போ இப்பிடியே இவன் கூட இன்னும் எத்தனை நாள் இருப்ப. உங்க அப்பா, அம்மாகிட்ட பேசு. புரிஞ்சுப்பாங்க. அவனை விட்டு பிரிஞ்சுடு.”

“அவங்க புரிஞ்சுப்பாங்க. ஆனா என்னால அவனை விட்டு பிரிஞ்சு வாழ முடியாது ரூபிணி”

அவர் சிரித்தார்.

“ஐடி கம்பெனில வேலை செய்யுற மாடர்ன் பொண்ணு மாதிரி பேசாம கிராமத்து கிழவி மாதிரி பேசுறம்மா. ஒன்னு செய்யலாம். நீ கூடவே இருக்குறதால உன்னோட அருமை அவனுக்கு தெரியலன்னு நெனைக்கிறேன். நீ அவனை விட்டு பிரிஞ்சு கொஞ்ச நாள் இருந்து பாரேன்”

“பிரிஞ்சு எங்க போறது? எனக்கு யாரையும் தெரியாதே”

“ நீ ஆபீஸ்க்கு ஒரு மாசம் லீவ் போடு. நானே லீவ் அப்ரூவ் செய்றேன். ப்ராஜெக்ட் விஷயமா வெளியூர் போறேன்னு உன்னோட புருசனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பு. பெங்களூர்ல என்னோட பிரண்ட் ஒருத்தி இருக்கா. அவ கூட தங்கிட்டு வா. ஒரு மாறுதல் இருந்தா உனக்கும் நல்லது. தெளிவா யோசிப்ப. பின்னாடி என்ன செய்யுறதுன்னு திரும்பி வந்த அப்புறம் யோசிக்கலாம்.”

“உங்க பிரண்ட் வீட்ல நான் எப்பிடி?”

“அவளுக்கு கல்யாணம் ஆகல. தனி வீட்லதான் இருக்கா. நீ தாராளமா அவ கூட தங்கலாம். என்ன யோசிச்சு சொல்றியா?”

“நாளைக்கே நான் பெங்களூர் கிளம்பலாமா?”

- தொடரும் 

இந்த வலைப்பூ பற்றிய  உங்கள் கருத்தை மேலே உள்ள வாக்கு பெட்டி மூலம் தெரிவிக்கவும் 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...