Sunday, June 2, 2013

ஆ......சுஜாதா

 சில செய்திகள் நம்மை மிகவும் ஆச்சரியமடைய வைக்கும். அவை  விஷயங்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உயிரினங்களை பற்றியதாக இருக்கலாம். அல்லது மன்மோகன் சிங் ஒரு பிரச்சினை பற்றி வாய் திறந்து கருத்து  கூறியதாக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் சில  சாதாரண செய்திகள் கூட நம்மை மிகவும் அதிசயிக்க வைக்கும். இன்று சுஜாதாவை பற்றி படித்த செய்தி அந்த வகை செய்தியே. தன்  வீட்டு பெண்கள் வெளியே செல்வதை கூட அவர் விரும்ப மாட்டார் என்ற செய்தி ஆச்சரியத்தின் உச்சம்.

அவரின் எழுத்துகள் என்னை வசீகரித்தது ஸ்ரீரங்கத்து  தேவதைகள் படித்த பின். அந்த புத்தகத்தை ஒரே நாளில் இரண்டு முறை படித்தேன். தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சாதாரண நிகழ்வுகளை இவ்வளவு நகைச்சுவையுடனும், சுவாரசியமாகவும் எழுத முடியுமா என்று தோன்றியது. அதை விட நான் வியந்த விஷயம் ஸ்ரீரங்கத்து அக்ரஹார பின்னணி கொண்ட ஒருவர் சற்றும் தயக்கமின்றி காமத்தை பற்றி எழுதுகிறாரே என்று.

அந்த புத்தகத்தை படித்த பின் அவரின் மற்ற நாவல்களையும் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன். அவரின் புகழுக்கான காரணம் விளங்கியது. அது, இது என்று பிரிக்காமல் அறிவியல் முதல் ஆன்மிகம் வரும் அனைத்தையும் எழுதுவது அவரின் சிறப்பு. நிச்சயம் ஒரு ஜீனியசால் மட்டுமே இது போல் எழுத முடியும் என்று எண்ணி கொண்டேன். தமிழில் எழுத்தாளாராக முயலும் 75 சதவீதம் பேர் சுஜாதா போலவே ஆக முயல்கின்றனர். இவ்வளவுக்கும் எழுத்து மட்டுமே சுஜாதாவின் தொழில் கிடையாது. 


அவரின் நாவல்களில் சிறப்பு  அவரின் பெண் கதாபாத்திரங்கள். அவர்கள்  எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. கணேஷிடம் தன் கொங்கைகளை பற்றி விவாதிப்பார்கள்; வசந்தை கட்டி பிடித்து முத்தம் தருவார்கள்; எதற்கும் தயங்க மாட்டார்கள்.ஒரு சமகால அமெரிக்க பெண்ணுக்கு நிகராக அவரின் நாவல்களில் வரும் தமிழ் பெண்கள் இருப்பார்கள். இவர் ஜீனியஸ் மட்டும் இல்லை. நிச்சயம் ஒரு புரட்சியாளர் என்று எண்ணி கொண்டேன். பின்னே, 60 வயதுக்கு மேலும் தமிழ் சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதினாரானால் தன் மனதை அவர்   எவ்வளவு இளமையாக வைத்திருக்க வேண்டும்? தன் மகனை ஒரு வெளிநாட்டு பெண்ணை மணம் செய்ய அனுமதித்தவர் எவ்வளவு பெரிய முற்போக்கு சிந்தனையாளராக இருந்திருக்க வேண்டும்?

இப்படி  சுஜாதாவை பற்றின என் பிரமிப்பு உச்சத்தில் இருந்தபோது அவர் மரணமடைந்தார். அப்போது அவர் மனைவி அளித்த ஒரு பேட்டியில், தன் கணவருக்கு கோபமே வராது என்றும் கோபம் ஒரு மனிதனின் பலவீனம் என்பது அவர் எண்ணம் என்றும் கூறியிருந்தார். திருமணமான புதிதில் அவர்  ஒரு புதிய பல்பை உடைத்து விட்டாராம். தனது கணவர் என்ன கூற போகிறார் என்று அவர் பயந்து கொண்டிருந்த போது சுஜாதா சாதாரணமாக "விடு! வேற வாங்கிக்கலாம்" என்று கூறி விட்டாராம். தன் கணவரை பற்றி சிலாகித்து கூறியிருந்தார் அந்த பேட்டியில். சுஜாதா சிறந்த எழுத்தாளர் மட்டும் இல்லை, சிறந்த மனிதராகவும் வாழ்ந்து இருக்கிறார் என எண்ணி கொண்டேன்.

ஆனால் சுஜாதாவின் மனைவியின் இன்றைய பேட்டி, சுஜாதா பற்றிய என் மன பிம்பங்களை லேசாக அசைத்து பார்த்து இருக்கிறது. மிக பெரிய ஆச்சரியத்தை எனக்கு அளித்திருக்கிறது அந்த பேட்டி. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட குணங்களை அவர் படைப்புகளை வைத்து தீர்மானிக்க முடியாது என தோன்றுகிறது. இனி மேல்  படைப்பாளியை அவன் படைப்புகளிலிருந்து பிரித்தே பார்க்க வேண்டும்.

Saturday, June 1, 2013

தோனி - ஒரு அதிசயம் - நிறைவு பகுதி

T-20 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி ஓவரை தோனி  ஜோகிந்தர் சர்மாவுக்கு கொடுத்தது பலரை ஆச்சர்யப்பட வைத்தது. அந்த தொடரில் தோனியின்  வெற்றிக்கு காரணம் அவரின் துணிச்சல் என்று சிலரும், அதிர்ஷ்டம் என்று சிலரும் பேச தொடங்கினார்கள். இருந்தும் எனக்கு அவரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டம் என்று தோணவில்லை. காரணம், இறுதி போட்டியில் தோற்ற பின் பாகிஸ்தான் அணி தலைவர் சோயப் மாலிக் கூறிய கருத்து. இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வேறுபாடு நெருக்கடியை கையாளும் விதம் என்றார் அவர். அனுபவம் மிகுந்த பாகிஸ்தான் அணியை விட இளம் இந்திய அணி சிறப்பாக நெருக்கடியை கையாண்டால் அதற்கு நிச்சயம் தோனிதான் காரணம் என்று நம்பினேன்.

அந்த T-20 உலக கோப்பை வெற்றிக்கு பின் தோனியின் மேல் நம்பிக்கை அதிகரித்தது . கால ஓட்டத்தில் டிராவிட் அணியில் இருந்து நீக்கப்பட ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாகவும், கும்ப்ளே ஓய்வுக்கு பின் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாகவும் நியமிக்கபட்டார். அணியில் டிராவிட் இல்லாத நிலையில் தனது ஆட்ட முறையையே மாற்றி டிராவிட் போல பொறுமையாக ஆடி அணியின் இளம் வீரர்களுக்கு தங்களின் விருப்பம் போல் ஆடும் சுதந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 

2008ம்  ஆண்டு காமன் வெல்த் பேங்க் முத்தரப்பு  தொடர். அத் தொடர் மூன்று பைனல்களை கொண்டது. இந்தியாவும் வலிமையான ஆஸ்திரேலியாவும்  பைனலுக்கு முன்னேறின.  இறுதி போட்டிகளுக்கு  முன் பேட்டி அளித்த பாண்டிங் தன் வழக்கமான திமிருடன்,   2 பைனல்களுக்கு மேல் இந்த தொடர் நடக்காது; ஆஸ்திரேலியா முதல் 2 போட்டிகளிலேயே வென்று விடும் என்றார். அவர் கணித்தபடி  2 பைனல்களே அந்த தொடரில் நடந்தன. ஆனால் வென்றதோ இந்திய அணி. பாண்டிங் சொன்னதை, தோனி செய்து காட்டினார். ஆஸ்திரேலியாவின் ஆணவத்திற்கு சவுக்கடி கொடுத்தார். இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரை வென்றது.

 அதன் பின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் அவரும் இணைந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார்கள். கூடவே அணியை 2011 உலக கோப்பைக்கும் தயார் செய்தார்கள். இந்திய அணியின் 2011 உலக கோப்பை வெற்றிக்கு இவர்களின் முன் திட்டமிடலே காரணம்.

 
2011  உலக கோப்பை இறுதி போட்டி. தோனி சிக்ஸர் அடித்து அணியை ஜெயிக்க வைத்தார். நாடே வெற்றி களிப்பில் மிதந்தது .  ஆனால் தோனியோ அப்போதும் அதனை பெரிதாக கொண்டாடவில்லை  அத்தனை பெரிய வெற்றிக்கு பின்னும், 2007ல் ரன் எடுக்காமல் வெளியேறிய போது பார்த்த அதே சலனமற்ற முகம் . 'இதுவும் கடந்து போகும்; எப்போதும் சம நிலையை இழக்காதே' என்று எப்போதோ படித்த போதனை கதை நினைவுக்கு வந்தது. கோப்பை வாங்கிய பின்னர் அணியினரின் கொண்டாட்டத்தில் கூட பெரிய அளவில் பங்கேற்கவில்லை. வெற்றிக்கு தன் அணியினரை பொறுப்பாக்கி தான் எதுவுமே செய்யாதது போல இருந்தார் கேப்டன் கூல். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கு பாடம் எடுத்தார்.

2007ல் தோனியிடம் இருந்த கூல், 2011ல் இல்லை என்பது உண்மையே. அதற்க்கு காரணம் என நான் நினைப்பது 2007ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. 2011ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. வென்று காட்டிய பின் அதை தொடர வேண்டிய கட்டாயம் சில நேரங்களில் அவரை மிக சிறிதளவு நிதானம் தவற செய்தது. இருப்பினும் அவர் ஒரு போதும் மைதானத்தில் கத்தியோ, முகம் சுளித்தோ பார்த்ததில்லை.

இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கபட்டதும் தனி பட்ட முறையில் கங்குலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டது. சச்சின், அசாருக்கும் கூட அப்படியே. ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்டும் தோனியின் பேட்டிங்கில் பெரிய அளவு பாதிப்பு ஏதும் இல்லை. ஒரு நாள் போட்டிகளில் இன்னும்  சிறப்பான சராசரியை கொண்டுள்ளார். இத்தனைக்கும்  விக்கெட் கீப்பர் பணி வேறு . அனைத்தையும் அருமையாக கையாள்கிறார்.

 அதீத நம்பிக்கை, தோல்வியையும் வெற்றியையும் ஒரே போல் எடுத்து கொள்ளும் பக்குவம், துணிச்சல் என  ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தோனி எனக்கு ஒரு அதிசயமே. உங்களுக்கு?


Thursday, May 30, 2013

ரஜினி-கமல் இணைந்தால் படத்தின் கதை எப்படி இருக்கும்?

"ரஜினி! நாம சேந்து படம் பண்ணனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க. அதுக்காக நான் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செஞ்சுட்டேன். நாம சேந்து படம் செய்யலாம்"

"டெபனட்லி கமல்! நீங்க கதைய சொல்லுங்க. நாம பண்ணலாம்."

"ரஜினி! இந்த படத்துல நான் ஒரு புதுமைய கொண்டு வரேன். இந்த படத்தை நாம வெப்கேம்ல எடுக்குறோம். படம் எடுக்க எடுக்க லைவா இண்டர்நெட்ல போட்டு காமிக்கிறோம். இதுக்காக நான் இந்தியால எல்லா இன்டர்நெட்  சர்வீஸ்  ப்ரொவைடர்ஸ் கிட்டவும் பேசிட்டேன். "

ரஜினியின் மைண்ட் வாய்ஸ், "அரே பாபாஜி! என்னை என் நண்பர்களிடம் இருந்து காப்பாற்று."

"சூப்பர் கமல்! சூப்பர்! உங்களால மட்டும்தான் இது மாதிரி யோசிக்க முடியும். யூ ஆர் அ ஜீனியஸ். பாலச்சந்தர் சார் 1978ல உங்களை பத்தி சொன்னது சரிதான். பட் கமல் படத்தோட கதை என்ன?"

"நம்ம கதைப்படி  ஒரு பணக்கார  துபாய் ஷேக்."

"வெல்! நமக்கு ஷேக் வேஷமெல்லாம் நல்லா சூட் ஆகும்"

 
"அப்கோர்ஸ் ரஜினி. உங்க முகத்துக்கு அந்த ரோல் பொருந்தும். இப்போ கதைக்கு வரலாம். அந்த ஷேக் பெரிய பணக்காரர். நெறைய எண்ணெய் கிணறு அவர் பேருல இருக்கு. அந்த ஷேக்குக்கு ஒரு நாள் போன் வருது."

"வெயிட்! வெயிட்!  இன்ட்ரோ சாங் இருக்குல"

"நிச்சயம் இருக்கு. அந்த ஷேக்குக்கு  போன் பண்ணது அமெரிக்க அதிபர். தன் பொண்ணை அல்-கொய்தா தீவிரவாதிங்க  கடத்தி ஷேக்கோட  ஊருல வச்சு இருக்குறதா சொல்றார். இதை ஏன்  ஷேக்கிட்ட சொல்றாருன்னு கேக்குறீங்களா? ஷேக் முன்னாள் FBI ஏஜெண்ட். அவரு காதலிய தீவிரவாதிங்க கொன்னதால துபாய் வந்து ஷேக்கா மாறிட்டார்."

"சோ நீங்க தசாவதாரம் படத்துல புஷ் வேஷம் போட்ட மாதிரி இப்போ ஒபாமா வேஷம் போடுறீங்க. குட்"

"ஆமா ரஜினி! என்னை தவிர யாருக்கு அந்த ரோல் சூட் ஆகும். அப்புறம் அந்த அதிபர்  பொண்ணு ரோல்ல ஏஞ்சலினா ஜோலி நடிக்கிறாங்க "

"வெரி குட்!ரொம்ப நல்லா இருக்கு  . பட் கமல், கதைல ஒரு சின்ன மாற்றம்  செய்ய முடியுமான்னு பாருங்க."

" சொல்லுங்க ரஜினி. பகுத்தறிவாளர்கள் யாரு என்ன சொன்னாலும் ஆராய்ந்து முடிவு எடுப்பாங்க. சொல்லுங்க "

"அந்த ஷேக்கை அல்-கொய்தா தீவிரவாதிங்க ஏமாத்தி அவர் சொத்தை எல்லாம் பிடுங்கிட்டு நடு தெருல விட்டுடுறாங்க. அப்புறம் அந்த ஷேக் அவங்ககிட்ட சவால் விட்டுட்டு உழைச்சு புதுசா நாலு எண்ணெய் கிணறு வாங்குறாரு. அதுனால ஏற்கனவே அவருக்கும் தீவிரவாதிங்களுக்கும் பகை."

கமலின் மைண்ட் வாய்ஸ், "நம்மளை ஹாலிவுட் தரத்துல படம் எடுக்க விட மாட்டார் போலயே "

"இதை  K.S. ரவிகுமார் கிட்ட சொல்லி கதைல கொண்டு வர முடியுமான்னு பாக்குறேன். இப்போ கதை. இந்த விஷயத்த கேள்விபட்ட ஷேக் அதிபர் மகளை தேடி கிளம்புறாரு. இது தெரிஞ்ச தீவிரவாதிகள் பாகிஸ்தான்ல இருந்து நியுக்லியர் பாம் வாங்கிட்டு வந்து அந்த ஊரு முழுசும் வச்சுடுறாங்க. இப்போ அந்த ஷேக் அந்த பாமை எல்லாம் எடுத்துட்டு அந்த ஊரையும் அந்த பொண்ணையும் காப்பாத்துறதுதான் கதை. கிளைமாக்ஸ்ல ஷேக்குக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு விழா நடத்துறாரு. அவரு கையாலேயே ஆஸ்கார் அவார்ட் குடுக்குறாரு . ஷேக்குக்கு  ஜோலி லிப் டு லிப் கிஸ் குடுக்குறாங்க. இந்த கிஸ்ஸிங் ஸீன் மட்டும் 5 நிமிசம் வருது. இதை உலக தரத்துல எடுக்குறோம்"

"கமல்! இந்த கிஸ்ஸிங் சீன் எல்லாம் என்னால செய்ய முடியாது"

"நீங்க ஏன் செய்யணும் ரஜினி. நான்தானே படத்தோட ஹீரோ. நான்தான் செய்யணும்."

"அப்போ ஷேக் ரோல்ல நீங்க நடிக்கிறீங்களா? என்கிட்ட உங்க முகம்தான் ஷேக் ரோலுக்கு நல்லா வருமுன்னு சொன்னீங்க?"

"ஆமா. அதனாலதான் நான் உங்களை  மாதிரி வேஷம் போட்டு இந்த படத்துல நடிக்க போறேன். இதுக்காக நான் ஹாலிவுட் மேக்-அப் மேன் மைக்கேல் வெஸ்ட்மோர் கிட்ட பேசியாச்சு. அப்படியே என்னை உங்களை மாதிரியே மாத்திடுவார். இது கூடவே ஒபாமா வேஷமும் "

"அப்போ எனக்கு இந்த படத்துல வில்லன் ரோலா?"

"நோ நோ. உங்களை அப்பிடி விடுவேனா?"

"அப்போ எனக்கு என்னதான் ரோல்?"

"கிளைமாக்ஸ்ல பாராட்டு விழால என்னை பாராட்டி 5 நிமிஷம் பேசுறீங்க. அதுக்கு வசனம் எல்லாம் நீங்களே எழுதிக்கலாம்.  உங்களுக்கு அது நல்லா வருமே. ரஜினி! நில்லுங்க  எங்க போறீங்க."
 
"இமயமலைக்கு."


Monday, May 27, 2013

ஒரு பயங்கர பேய் கதை

"அண்ணே! இந்த பேய், பிசாசு இதெல்லாம் இருக்கா?"

"அதெல்லாம் இருக்குப்பா"

"ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க"

"ஆமா. நான் நேர்ல பாத்து இருக்கேன்"

"என்னண்ணே சொல்றீங்க! நீங்க எப்போ பேய பாத்தீங்க? எங்க பாத்தீங்க?"

"இதே ஊருல. அப்போ எனக்கு ஒரு 18 வயசு இருக்கும். நம்ம ஊருல சேர்மன் ராமசாமி செட்டியார் பார்க் இருக்குல. அங்கதான் அந்த ஆவிய பாத்தேன் "

"என்னண்ணேஆவிய பாத்தேன்னு ஏதோ அனுஷ்காவை பாத்த மாதிரி சொல்றீங்க"

"இரு உனக்கு அந்த கதைய சொல்றேன். கதை சொல்லும்போது குறுக்க பேசாதே."

"சரி சொல்லுங்க"

"எனக்கு அப்போ 18 வயசு. ராமசாமி செட்டியார் பார்க்ல தூக்குல தொங்குன ஒரு பொண்ணு அங்கேயே மோகினியா சுத்துறானு ஒரு பேச்சு அப்போ ஊருக்குள்ள இருந்தது. அதுவும் அந்த பேய் சின்ன வயசு ஆம்பளைங்களை பாத்தா அப்படியே ஒரு அறை கொடுக்கும். அந்த அறைய வாங்குனவன் இரத்தம் கக்கி சாக வேண்டியதுதான்னு எல்லாரும் நம்புனாங்க"

"ஆமாண்ணே! இப்போ கூட அந்த ஏரியால நைட்  8 மணிக்கு மேல ஆள் நடமாட்டமே குறைஞ்சிடும்"

"ஷு! கதைய மட்டும் கேட்கணும்."

"சரி சரி சொல்லுங்க"

"அந்த வயசுல எனக்கும் உன்னை மாதிரியே பேய், பிசாசுல நம்பிக்கை இல்ல. ஒரு நாள் ராத்திரி சினிமா பாத்துட்டு வரும்போது வேணும்னே அந்த வழியா போக முடிவெடுத்து அந்த வழியா போனேன் . ராத்திரி 1 மணிக்கு அந்த பார்க் கிட்ட யாருமே இல்ல. நான் கொஞ்சம் கூட பயம் இல்லாம பார்க் ரோடுல நடக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச கொஞ்சமா நடந்து பார்க் கிட்ட போனதும் என்னையும் அறியாம பார்க்ல யாரு இருக்கானு திரும்பி பார்த்தேன். அங்க அது இருந்துச்சு"

"என்னது அது. சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு"

 
'அதாண்டா மோகினி. அதுக்கு வயிறு வரைக்கும் நாக்கு வெளியே தொங்கிட்டு இருந்துச்சு. அதோட ரெண்டு சிங்க பல்லும் வாய விட்டு வெளிய நீட்டிகிட்டு டிராகுலா பல்லு மாதிரி இருந்துச்சு . கருப்பு சேலை கட்டிக்கிட்டு அங்க பசங்க விளையாடுற ஊஞ்சல்ல உக்காந்து  ஆடிட்டு இருந்துச்சு. அது என்னை பாத்துடுச்சு"

"அய்யயோ! அப்புறம்"

"அதை பாத்ததும் நான் ஓட ஆரம்பிச்சேன். அது என்னை துரத்த ஆரம்பிச்சிடுச்சு. அன்னைக்கு பாத்து நான் புது செருப்பு வேற போட்டு இருந்தேன். அந்த செருப்பு காலை கடிச்சதுல என்னால வேகமா ஓட முடியல. பேய் என்னை நெருங்கிடிச்சு. இன்னும் ஒரு அடில என்னை பிடிச்சிடும். பிடிச்சுட்டா ஒரே அறைதான். புது செருப்பை கழட்டி போட்டு ஓடவும் எனக்கு மனசு வரல "

"அப்புறம்  என்னதான் ஆச்சு"

"இப்போ பேய் என் கிட்ட வந்து என் கூடவே ஓட ஆரம்பிச்சிடுச்சு. அறைய சரியான நேரம் பாத்து கைய ஒங்குது"

"என்னதான் செஞ்சீங்க"

"அண்ணன் யாரு. அன்னைக்கு நான் பாத்துட்டு வந்த படம் 'எண்ட்டர் தி டிராகன்'. ப்ருஸ் லீய மனசுல நெனைச்சுகிட்டு பேய் அறைய அறைய நான் என்னோட கைய வச்சு பிளாக் பண்ணேன்.அப்பிடியே ஒரு பத்து பன்ச்சை பிளாக் பண்ணி இருப்பேன். மோகினியால என்னை அறைய முடியல. அப்போ ஒரு சுவர் தெரிஞ்சிச்சு. அப்பிடியே ஒரே ஜம்ப்ல அதை தாண்டிட்டேன். அந்த பேய் புடவை கட்டி இருந்ததால சுவர் ஏறி குதிக்க முடியல. நான் தப்பிச்சுட்டேன். இதுதான் நான் பேய் பார்த்த கதை."

"யோவ்! நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்னு நெனச்சு உன் கிட்ட சந்தேகம் கேட்டேன் பாரு. உன்னை பேயே அறைஞ்சு இருக்கலாம்."

Sunday, May 26, 2013

விஜய் டிவி - இதெல்லாம் எனக்கு நல்லதா படல

புதுசாவும், கலர் புல்லாவும் .நிகழ்ச்சி தரதுல விஜய் டிவியை அடிச்சுக்க தமிழ்ல வேற சேனலே இல்ல. இந்த மேட்டர் அவங்க ஜோடி நிகழ்ச்சி பத்தினது. இதை எழுதலாமா வேணாமான்னு ஒரு குழப்பம். இருந்தாலும் எழுத வேற மேட்டர் இல்லை. அதனால இதையே எழுதலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். 

நேத்து டிவில அந்த ஜோடி நிகழ்ச்சில ரொமான்ஸ் ரவுண்டாம். ஆடுன ஜோடிங்கல்லாம் கட்டி உருளாத குறைதான். அட அவங்களாவது பெரியவங்க, பக்குவப்பட்டவங்க பரவாயில்லன்னு விட்டுடலாம் . அதுல  ர பிக்-காப்ரியல்ங்குற ஜோடில ரெண்டு பேருக்குமே முழுசா 16 வயசு கூட இருக்காது. அவங்க ரெண்டு பெரும் ஒருத்தரையொருத்தர்  தொட்டு தொட்டு ஆடிட்டு இருக்காங்க. அந்த பொண்ணு முகத்துல அப்பிடி காதல் உணர்ச்சிகளை காட்டுது. நல்ல வேளை, பெரியவங்க ஆடுனத விட மூவ்மெண்ட்ஸ் கொஞ்சம் டீசன்ட்தான்.


இப்பிடி சின்ன பசங்களை வச்சு ப்ரோக்ராம் நடத்துறதை எல்லாம் குழந்தை தொழிலாளிகள் லிஸ்ட்ல சேக்க முடியாதா?. இதை டிவில காமிச்சா இதெல்லாம் தப்பு இல்லன்னு மக்கள் மனசுல பதியாதா? குறைஞ்ச பட்சம் கீழ 'இந்த நிகழ்ச்சியால் உங்கள் மன நலம் பாதிக்கப்படலாமு'ன்னு கீழ எச்சரிக்கை வாசகமாச்சும் காமிக்க சொல்லணும்.

எனக்கு என்ன பயம்னா நாளைக்கு 'ஜோடி ஜூனியர்'னு புது நிகழ்ச்சி ஆரம்பிச்சு சின்ன பசங்களையா ஆட விட்டுடுவாங்களோன்னு. அப்புறம் கொஞ்ச நாள்ல கோபிநாத் 'சீரழியும் இளைய சமுதாயம். காரணம் யார்?' அப்பிடின்னு 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சி நடத்துறதை நாம பாக்க வேண்டி வரும். அப்புறம் இதே மாதிரி ஒரு ஹேர் ஆயில் விளம்பரம். ஒரு ஸ்கூல் பொண்ணை ரெண்டு ஸ்கூல் பசங்க கமெண்ட் அடிச்சுகிட்டே பாலோ-அப் செஞ்சுகிட்டே போறாங்க. எனக்கு என்னமோ இதெல்லாம் நல்லதா படல.

Friday, May 24, 2013

சில சந்தேகங்கள் - தெரிந்தால் பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்

சில சந்தேகங்கள் எப்போதும் நம் மனதை அரித்து வரும். ஆனால் அதை யாரிடம் கேட்பது என்று தெரியாது. அப்படி என் மனதில் உள்ள சந்தேகங்கள் இவை. உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்.


 மனிதனால்  எத்தனையோ உயிரினங்கள் உலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனிதனால் கொசுக்களை மட்டும் அழிக்க முடியவில்லையே ஏன்?

மைலாப்பூரில் பிறந்த வள்ளுவர், மதுரையில் திருக்குறள் அரங்கேற்றம் செய்தார் என்கிறார்களே. அந்த காலத்தில் வள்ளுவர் எந்த ரூட்டில் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்திருப்பார்?

கமலஹாசன்    எந்த மேடையில், எந்த விழாவில் பேசினாலும் ஏன்  சம்பந்தமே இல்லாமல் பகுத்தறிவு பேசுகிறார்?

சிறு வயதில் விரைவாக  பெரியவராக ஆசைப்படுகிறோம் . பெரியவர் ஆன பின் சிறுவராகவே இருந்திருக்கலாமா என நினைக்கிறோம். இது ஏன்?

தமிழில் இப்போது அதிக நகைச்சுவை படங்கள் வருவதற்கும், வடிவேலு இப்போது சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

ஸ்பாட் பிக்சிங்கில் பெரும்பாலும் பௌலர்களே சிக்குகிறார்களே. பேட்ஸ்மேன்களை வைத்து ஸ்பாட் பிக்சிங் செய்ய முடியாதா?

கல்லூரிகள் தங்கள் விளம்பரங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி விடுதிகள் என்று விளம்பரம் செய்கிறார்களே. ஆண்களையும், பெண்களையும் ஒரே விடுதியில் தங்க வைக்கும் கல்லூரி இந்தியாவில் எங்கேயும் இருக்கிறதா?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.  கை வலிக்க எழுதி நான் போஸ்ட் செய்யும் பதிவுகளை யாராவது முழுவதும் படிக்கிறீர்களா?


தோனி - ஒரு அதிசயம் - 3

2007ம் ஆண்டு உலக கோப்பை ஆட சென்ற இந்திய அணியின் மேல் யாருக்கும் பெரிய நம்பிக்கை எல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை.இருந்தாலும் அப்படி ஒரு தோல்வியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.வீரர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கண்ணீர் விட வைத்த தொடர் அது. அந்த தொடரின் முதல் சுற்றிலேயே படு தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய அணி.

இந்திய அணிக்கு தொடரின் முதல் போட்டி பங்களாதேஷ் அணியுடன். அந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி. மீதமிருந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை. தனது இரண்டாவது போட்டியில் பெர்முடாவை நசுக்கிய இந்தியா, மூன்றாவது போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இலங்கையை சந்தித்தது. 

அந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 254 ரன்களை சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின. 120 ரன்களை சேர்க்கும் முன் 5 விக்கெட்டுகளை இழந்த  இந்திய அணிக்கும், இருந்த கடைசி நம்பிக்கை தோனி மட்டுமே.  நானும் தோனி இருக்கும்வரை கவலை பட தேவை இல்லை. சற்று நேரம் ஆடினால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார் என்ற நினைப்பில் இருந்தேன். 

ஆட வந்த தோனி தனது முதல் பந்தை  எதிர் கொண்டது முரளிதரனிடமிருந்து. அதீதமாக திசை திரும்பிய அந்த பந்து தோனியின் கால் காப்பில் பட்டது. நடுவர் விரலை தூக்கி விட ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் தோனி. தோனியை கண்டு நான் அதிசயித்த நேரங்களில் இதுவும் ஒன்று. ஏன் என்று கேட்கிறீர்களா? அந்த  அவுட் ஆனதும் மற்ற வீரர்களின் முகத்தில் தென்பட்ட சோகமோ, விரக்தியோ தோனியின் முகத்தில் சிறிதும் இல்லை. ஏதோ ஒரு கண்காட்சி போட்டியில் ஆட்டம் இழந்த வீரர் போல வழக்கமான  உணர்ச்சியற்ற முகத்துடன் வெளியேறினார்.

 
எதற்கும் பயமும் இல்லை, கவலையும் இல்லை என்ன மாதிரியான மனிதன் இவன் என அந்த சோகமான நேரத்திலும் ஆச்சரியமடைந்தேன். கீதை குறிப்பிடும் கர்ம யோகியா இவர்? எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டாரா? இவர் போல நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என யோசிக்க தொடங்கினேன்.

இந்திய அணி அந்த போட்டியில்  தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. அந்த தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்களின் வீட்டில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. தோனியின் வீடும் தப்பவில்லை. அதன் பின் அணிக்குள்ளே புகைந்து கொண்டிருந்த சாப்பல் பிரச்சினை வெளியே வந்தது. இந்திய அணிக்கு கடும் சோதனையான காலகட்டம் அது. அந்த பிரச்சினைகளில் இருந்து சிறிது, சிறிதாக வெளியே வந்த இந்திய அணி இங்கிலாந்தில்  டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. அப்போதுதான் வந்தது T-20 உலக கோப்பை.

T-20 உலக கோப்பை அணியிலிருந்து இளைஞர்களுக்கு வழி விட்டு விலகுவதாக அப்போதைய கேப்டன் டிராவிட், சச்சின், கங்குலி போன்ற   சீனியர் வீரர்கள் அறிவித்தனர். இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த பிரச்சினை இவர்களுக்கு மாற்று வீரர்களை தேடுவது. அதை விட பெரிய பிரச்சினை ஒரு புதிய கேப்டனை நியமிப்பது.  சச்சினின் யோசனைப்படி தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தோனி கேப்டனாக சரியான ஆள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஒரு விக்கெட் கீப்பரை கேப்டனாக அறிவிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எப்படியோ தோனி கேப்டனாகி விட்டார். அந்த தொடரையும் வென்று கொடுத்தார். அந்த தொடரை பார்த்த அனைவரும் அவர் சிக்கலான சூழலையும்  மிக கூலாக கையாண்டதாக பாராட்டினார். ஆனால் எனக்கு ஒன்றும் அதில் வியப்பில்லை. அவர் அது போன்ற சூழ்நிலைகளில் பதட்டப்பட்டு செயல்பட்டிருந்தால்தான் எனக்கு அது ஆச்சரியம் அளித்திருக்கும்.

-  ஆச்சரியங்கள் தொடரும் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...