Saturday, October 5, 2013

நான் பிரதமராக போகிறேன்

இந்த கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. பிறந்த, பிறக்காத மனிதர்களையோ நடந்த, நடக்கப் போகும் சம்பவங்களையோ குறிப்பது போல் தோன்றினால் அது தற்செயல் ஆனது

டதடவென அவர்கள்  அந்த   ஸ்கார்பியோவில் இருந்து இறங்கி என்னை தூக்கி செல்வார்கள் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவர்கள் நான்கு பேரும் ஒரே மாதிரி சஃபாரி உடையில் இருந்தனர். அதில் ஒருவன் "முதல்ல அவன் மொபைலை பிடுங்குடா" என கட்டளையிட்டான். அவர்களின் வலுவான பிடியை எதிர்த்து போராடும் அளவு என் உடலில் பலம் இல்லை. மெதுவாக மயங்க தொடங்கினேன்.

நான் கண்களை திறக்கும்போது என் முன்னால் நின்று கொண்டிருந்தான் ஒரு சஃபாரி சட்டை. நான் அமர்ந்து இருந்த இடம் ஒரு அலுவலகம் போல இருந்தது.

"சிரமத்துக்கு மன்னிக்கவும் சார். விமான பயணத்தின்போது நீங்கள் மற்ற பயணிகளுக்கு தொல்லை தர கூடாது என்ற காரணத்துக்காக உங்களை மயக்கமடைய செய்து விட்டோம்." 

"என்னது விமான பயணமா? நான் இப்போ எங்க இருக்கேன்?"

"நீங்கள் இப்போது இருப்பது டெல்லியில்"

"அடப்பாவிங்களா. எதுக்குடா என்னை கடத்தி டெல்லிக்கு கொண்டு வந்தீங்க?"

"இன்னும் சற்று நேரத்தில் மேடம் வருவார்கள் சார். அவர்கள் சொல்வார்கள்"

"மேடமா? யாரு அது?"

அவன் பதில் சொல்லாமல் என்னை அந்த அறையில் விட்டு விலகினான். எனக்கு குழப்பமும் பயமும் அதிகரித்தது. யார் இவர்கள்? என்னை ஏன் விமானத்தில் எல்லாம் வைத்து கடத்த வேண்டும். நந்தினி வேறு என்னை தேடி கொண்டிருப்பாள். 

நான் சிந்தனையில் மூழ்கி இருந்தபோது அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் ஒரு பெண். அவர் கண்ணியமாக உடை அணிந்து இருந்தார். இவரை எங்கேயோ பார்த்து இருக்கிறேனே. எங்கே? ஆங், நினைவுக்கு வந்து விட்டது. இவர் அவரேதான். தொலைக்காட்சியில் பல முறை பார்த்த முகம்தான். இருந்தாலும் நேரில் சற்று வித்தியாசமாக இருந்தது. மெதுவாக நடந்து வந்து அவர் எனக்கு முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். என்னை பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தார். நடப்பதை எல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? ஒரு சாதாரண மனிதனை கூட்டி வந்து ஒரு சர்வ வல்லமை படைத்த பெண்மணி என்ன பேச போகிறார்? 

"வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள்?" அவர் மெதுவாக பேச்சை தொடங்கினார். அவர் கண்கள் கூர்மையாக என்னை கவனித்தது. என்னுடைய எண்ணங்கள் முழுவதையும் பார்வையாலேயே அளந்து விடுவது போல் இருந்தது.

"மேடம்! நீங்கள்" வார்த்தை வராமல் தடுமாறினேன்.

"நீங்கள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கிறீர்கள் போல் உள்ளது. பயப்பட வேண்டாம். நான் சொல்வதை மட்டும் கவனமாக கேட்டு கொள்ளுங்கள். நான் உங்களுக்கு தரப்போவது மிக பெரிய வாய்ப்பு. உங்களால் அதை மறுக்கவே முடியாது."

"சொல்லுங்கள் மேடம்." இப்போது சற்று சுதாரித்து இருந்தேன். மிக மென்மையாக பேசுகிறார். இப்போதைக்கு ஆபத்து ஏதும் இருப்பதாக தெரியவில்லை

"நேராக விஷயத்திற்கு வருகிறேன். இந்த முறை தேர்தலில் எங்கள் கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது உங்களுக்கு தெரியும்தானே?"

"நாட்டில் நடந்த தேர்தலை பற்றி   கூட தெரியாமல் எப்படி இருப்பேன்?"

"நல்லது. நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். ஆனால் யாரை பிரதமராக்குவது என்ற குழப்பம் எங்களுக்கு"

"என்ன மேடம் இது. நீங்கள் பிரதமராக போவதாகத்தானே தேசமே எதிர்பார்க்கிறது"

"உண்மைதான். ஆனால் நான் பிரதமராவதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன."

"புரியவில்லை மேடம்"

"உங்களுக்கு இப்போது ஏதும் புரிய தேவை இல்லை. நான் இப்போது சொல்லபோவது ஒன்றே ஒன்றுதான். நீங்கள்தான்  இந்த தேசத்தின் அடுத்த பிரதமர்."

"மேடம்!" நான் உதிர்த்த இந்த வார்த்தையில் என்ன மாதிரியான உணர்ச்சி இருந்தது என சொல்ல தெரியவில்லை.

"என்ன அதிர்ச்சியா? மகிழ்ச்சியா?"

"இரண்டுமே. ஆனால் அதை விட குழப்பம்தான் அதிகம்"

"என்ன குழப்பம். கேளுங்கள்"

"யாரோ ஒரு தெருவில் போவனை பிடித்து பிரதமராக்குவது எதற்கு?"

"உங்களை எப்படி தேர்ந்தெடுத்தோம் என்று சொல்கிறேன். முதலில் ஒரு மென்பொருள் பணியாளனைத்தான் பிரதமராக்குவது என்று  தீர்மானித்தோம்"

"அது ஏன்?"

"அவர்கள்தான் நிர்வாகத்திடம் அதிகம் கேள்வி கேட்க மாட்டார்கள்."

"அதன் பின் இந்தியாவின் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் மூன்றை தேர்வு செய்தோம். அதில் இருந்த ஊழியர்களை கண்காணிக்க தொடங்கினோம். அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஊழியர்களை விட்டு விட்டோம். எந்த லட்சியமும் இல்லாத, நாங்கள் எதிர் பார்த்த பிற தகுதிகளுடனும்  30 பேர் கடைசியில் மிஞ்சினர்"

"அந்த முப்பதிலும் நான் எப்படி?"

"இருங்கள். அதற்குதான் வருகிறேன். அந்த 30 பேரிலும் மென்மையானவர் நீங்கள்தான். கொடுத்த வேலை அனைத்தையும் பதில் பேசாமல் செய்வீர்கள். உங்களிடமிருந்து நன்றாக வேலை வாங்கிய பின் மேனேஜர் கொடுக்கும் திட்டுகளையும் எதிர்த்து பேசாமல் வாங்கி கொண்டீர்கள். கிட்டதட்ட ஒரு பேசா மடந்தை போல எல்லா சூழ்நிலையிலும் பொறுமை காக்கிறீர்கள்."

"...."

"இந்த தகுதிகள்தான் நாங்கள் எதிர்பார்ப்பது."

"ஆனால் எனக்கு அரசியல் தெரியாதே"

"உங்களுக்கு அது தெரிந்தால்தான் பிரச்சினை"

" உங்கள் கட்சியினர் எப்படி திடீரென வந்த ஒருவனை ஏற்று கொள்வார்கள்."

"அவர்களை ஏற்று கொள்ள வைக்கும் வித்தை எனக்கு தெரியும். நீங்கள் செய்ய வேண்டியது யார் கட்சி பற்றி உங்களிடம் கேட்டாலும் நீங்கள் பரம்பரை பரம்பரையாக எங்கள் கட்சியில் இருப்பதாக கூற வேண்டும். இனிமேல் நீங்கள் அதிகம் கேள்வி கேட்க கூடாது.  சுற்றி என்ன நடந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ள கூடாது. அவ்வளவுதான்."

"அதற்கு இல்லை மேடம்."

"உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன். நீங்கள் குடும்பத்தோடு டெல்லிக்கு வர தயாராகுங்கள்." சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார். நான் மகிழ்ச்சியில் மிதக்க ஆரம்பித்தேன். நான் இந்த தேசத்தின் பிரதமர். நான் செய்ய வேண்டிய ஒரே வேலை எதுவும்  பேசாமலே இருக்க வேண்டியதுதான். யார் என்ன விமர்சித்தாலும் உணர்ச்சி எதையும் முகத்தில் காட்டாமல்  கேட்டு கொள்ள வேண்டியதுதான். அதுதான் எனக்கு கை வந்த கலை ஆயிற்றே.. எனக்கு ராஜ யோகம் இருக்கிறது போலும். பிரதமர் ஆனதும் தாடி வைத்து கொள்வோம். பார்வைக்கு சிறப்பாக இருக்கும்.அதன் பின் என்னுடைய மேனேஜர் சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் தேசிய சொத்து என அறிவித்து விடுவோம். என்னையா எதற்கும் லாயக்கில்லை என்றான்?

நான் கண்களை திறந்தபோது எதிரில்  நந்தினி நின்று இருந்தாள். "நந்தினி! நான் எப்போ டெல்லியில் இருந்து வந்தேன்?"

"இப்படிதான் டாக்டர். நேத்து இருந்து ஒரே புலம்பல். டெல்லிங்குறார், பிரதமராக போறேங்குறார்." நந்தினி அருகே நின்று இருந்த முகம் தெரியாத மனிதரிடம் பேசினாள்.

"நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம். நான் அவரை முழுசா ஹிப்னடைஸ் செஞ்சு பேசியாச்சு. அவர் மேனேஜர் அவரை ஏதோ சொல்லி திட்டி இருக்கார். அதை இவர் மனசுக்குளேயே வச்சு ரொம்ப புழுங்கிகிட்டே இருந்து இருக்கார். அப்புறம் நியூஸ் சேனல் எல்லாம் நிறைய பார்த்து இருக்கார். இதெல்லாம் சேர்ந்து அவர் மண்டைக்குள்ள போய் இருக்கு. கடைசில அவர் தனக்கு பிரதமர் ஆகுற தகுதி இருக்கிறதா நம்ப ஆரம்பிச்சுட்டார்."

"இப்போ என்ன டாக்டர் செய்றது?" என்றாள் நந்தினி.

"நீங்க பயப்பட வேண்டாம். கொஞ்ச நாள் இவரை வேலைக்கு அனுப்பாதீங்க. பேப்பர், டிவி நியூஸ் ஏதும் பார்க்காம பாத்துக்கங்க. அவராவே சரி ஆகிடுவார். இப்போ இவரை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போகலாம்"

நந்தினி என் கையை பிடித்து என்னை கூட்டி கொண்டு நடக்க தொடங்கினாள். வெளியே மேடத்தின் ஆட்கள் எங்களை டெல்லிக்கு கூட்டி செல்ல காத்திருப்பது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

1 comment:

  1. //"இப்போ என்ன டாக்டர் செய்றது?" என்றாள் நந்தினி//
    "விசம் வைத்து கொன்று விடுங்கள்" என்ற பதிலை கேட்டு அதிர்ச்சியடையவில்லை நந்தினி.பேசா பிரதமரிடம் இருந்து இந்திய உயிர்களை காக்கும் இந்த விசம் காப்பாற்றப்பட்ட உயிர்களுக்கு மருந்தாய் தானே இருக்க முடியும்.எனவே விசத்தை மருந்தாய் மாற்றி ஒரு உயிரை கொன்று 100கோடி இந்திய உயிர்களை காப்பாற்றப்போகும் மருத்துவரின் எண்ணவோட்டத்தை உள்வாங்கி கொண்ட நந்தினிக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருந்தால் தான் நமக்கு அதிர்ச்சி.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...