Tuesday, November 15, 2016

பீதாம்பரபட்டி மக்கள்

“தம்பி! கொஞ்சம் சீக்கிரம்  ஆலமரத்து கிட்ட வாங்க” என்று அந்த பெரியவர் பதட்டமாக என்னை அழைத்தார்.

“என்னய்யா ஆச்சு? எதுக்கு இப்பிடி மூச்சு வாங்குறீங்க?”

“நம்ம ஊருக்கு ஒரு சிக்கல் தம்பி. நீங்களே வந்து என்னன்னு பாருங்க” என்று பெரியவர் என் கையை பிடித்து இழுக்காத குறையாக என்னை அழைத்தார். குழப்பத்தோடு அவருடன் நடக்க ஆரம்பித்தேன்.

“எதுவும் பெரிய பிரச்சினையா?”

“அப்பிடித்தான் தோணுது, அதான் ஊருல இருக்குற படிச்ச பசங்களையெல்லாம் கூப்பிடுறோம் என்றார். நூறு வீடுகள் கூட இல்லாத கிராமத்துக்கு அப்படி என்ன பெரிய பிரச்சினை வந்து விடப்போகிறது என்று குழப்பமாக இருந்தது. அதே நேரத்தில்  ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்த சிலரில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது மிகவும்  பெருமையாகவும் இருந்தது.

“புதுசா பாக்டரி கட்ட திட்டம்  எதுவும் போட்டுக்கிட்டுபோட்டு இருக்காங்களா?கவர்மென்ட் பூமிக்கடியில பெட்ரோல், நிலக்கரின்னு எதுவும் கண்டு பிடிச்சு நம்மள ஊர காலி பண்ண சொல்றாங்களா?”

“அதெல்லாம் இல்ல தம்பி. வந்து பாருங்க”

அவர் சொல்லி முடிக்கும்போதே அந்த ஆலமரம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் வந்து விட்டது. மரத்தை சுற்றி ஊரே திரண்டிருந்தது. சலசலவென்று பேசிக் கொண்டிருந்தவர்களை “வழி விடுங்க. வழி விடுங்க.படிச்ச பயலை கூட்டிகிட்டு வந்துட்டேன்”  என்றவாறே  விலக்கி என்னை உள்ளே கூட்டி சென்றார்.

“அங்க பாருங்க தம்பி”

பார்த்ததும் வியந்தேன்.  மரத்துக்கு கீழே அடர் பச்சை நிறத்தில் ஒரு எட்டு வயது சிறுவன்  அமர்ந்திருந்தான்.அவன் கண்கள் மட்டு இரத்த சிகப்பாக. சட்டை அணியாமல் இடுப்பில் மட்டும் ஒரு துணியை சுற்றி இருந்தான். அவன் கண்கள் வேகமாக சுழன்று கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரையும் எடை போடுவது போல தெரிந்தது. மொட்டை அடித்து ஒரு வாரம் ஆனா தலை போல அவன் தலையில் லேசாக  போல தலையில் முடி லேசாக எட்டி பார்த்தது.

“என்னங்க? பெயிண்ட் டின்னுல விழுந்துட்டானா? யாரோட பையன்” என்றேன்

“அவன் நம்ம ஊரே இல்லப்பா யாரு, எங்க இருந்து வந்தான்னே தெரியல. காலைல இரத்தினம் பால் ஊத்தப் போகும்போது  இவனை இங்க பார்த்து இருக்கான். பார்த்ததும் பயந்து  போய்  ஊருக்குள்ள ஓடி வந்து எங்களை எல்லாம்  கூட்டிகிட்டு வந்தான்” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

“பேச்சு குடுத்து பார்த்தீங்களா?”

“பேசுனோம். ஆனா இங்கிலீஷ்ல பதில் சொல்றான். அதான் படிச்ச பயலுகளை கூப்பிட்டு யாருன்னு விசாரிக்க பாக்குறோம்”

இங்கிலீஷ் என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. “நம்ம ஊரு பையன் இல்லன்னா போலீஸ்ல சொல்லிடலாம். அவங்க வந்து விசாரிக்கட்டும்”

“நம்ம ஊருல கலவரம்  நடந்து அவனவன் வெட்டிகிட்டு செத்தாலே  போலீஸ் ஒரு வாரம் கழிச்சுதான்  வரும். இதுக்கு எப்ப வருவாங்கன்னு யாருக்கு தெரியும்”
அவங்க வந்து விசாரிக்கட்டும். . நாம நம்ம வேலைய பார்க்கலாம்” என்று நடக்க ஆரம்பித்தேன்.

கூட்டத்தில் இருந்த ஒரு வெள்ளை மீசை பெருசு , “என்ன தம்பி? ஊருல எல்லாரும் இவனை பார்த்து பயந்து போய் இருக்காங்க. இவன் யாரு என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா. விசாரிச்சு சொல்லுங்க” என்றார்.

“ஆமாப்பு. இன்னைக்கு முழுக்க கரண்ட்டு இருக்காதாம். வீட்டுக்கு போனா நாடகம் பாக்காம பொழுது போகாது. கொஞ்சம் இவனை என்னன்னு கேளு” என்றது இன்னொரு கிழவி.

சுற்றி இருந்த வயது பெண்களும் ஆர்வமாக என்னையே பார்க்கவும் தயக்கமாக அந்த பச்சை பையனிடம் சென்றேன். கூர்மையாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“வாட் இஸ் யுவர் நேம்?”

“மியா கியா மயா க்கி கூ”

“விச் ப்ளேஸ் யு கம்?”

“கூ க்கி மமூ பஷி”

திரும்பி கூட்டத்தை பார்த்தேன். “என்னய்யா? இங்கிலீஷ்தான் பேசுறானா?” என்றார் ஊர் தலைவர்.

“அப்படிதான் தெரியுது”.

“அப்போ உனக்கும் புரியலையா?” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார். நான் சத்தம் காட்டாமல் கூட்டத்தில் ஒதுங்கினேன்.

“இவன் ஏலியன் மாதிரி இருக்கான் பா” என்றார் கூடத்தில் இருந்த இன்னொரு சிறுவன்.

“எலி எல்லாம் இல்லடா. கை காலு எல்லாம் மனுஷன் மாதிரிதான் இருக்குது”. என்றது ஒரு  கிழவி பதில்  சொல்லியது.

அருகில் இருந்த  ஒரு இளம் பெண் “இவனை நாமளே கொண்டு போய் வளர்த்துக்கலாம் மா. அழகா இருக்கான்” என்றாள் தனது தாயிடம்.

“அவன் கரப்பான்பூச்சி மட்டும் தாண்டி தின்பான்” என்று அவளின் தோழி கூறியதும் உவ்வே என்றாள்.

“இது பேயா,பிசாசான்னு தெரியலையே”, “மஞ்சக் காமாலை மாதிரி பச்சை காமாலைன்னு  சீக்கு வந்து இப்பிடி ஆயிட்டானா”, “அமெரிக்கால பச்சை மனுசங்க இருக்காங்கப்பா. நான் படிச்சு இருக்கேன்” என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.

“எல்லாரும்  அமைதியா இருங்கப்பா. இவனை என்ன செய்யலாம்னு யோசனை சொல்லுங்க” என்றார் தலைவர்.

அப்போது  ஒரு பெண் கூட்டத்தின் நடுவில் வந்து “தேவனே! தேவனே! கடைசியிலே  எங்க ஊருக்கே வந்துட்டீங்களா” என்று சொல்லிவிட்டு மண்ணில் விழுந்து புரளத் தொடங்கினாள். 

“பிரச்சினை ரொம்ப புதுசா இருக்கே” என்று தலைவர் தனது கன்னத்தை தடவத் தொடங்கினார். கூட்டம் மீண்டும் சலசலக்க தொடங்கியது.

“தலைவரே! ஏதோ ஒரு வண்டி வருது பாருங்க” என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னதும் எல்லாரும் அந்த திசையை கவனித்தோம்.

“போலீஸ் வண்டி மாதிரி இல்லையேப்பா” என்றார் தலைவர்.

“அதுல  அடுத்த தலைமுறை  டிவினு போட்டு இருக்கு பாருங்க” என்றேன்.

டிவி என்றதும் பையனை மறந்து எங்கள் கவனம் அந்த வண்டியின் மேல் திரும்பியது. “டிவியா?” என்று  உருண்டு கொண்டிருந்த பெண்ணும் எழுந்து கவனித்தாள்.

அந்த வேன் எங்கள் அருகில் வந்ததும் அதில் இருந்து கேமராவுடன் இரண்டு பேர் இறங்கினர். மூன்றாவதாக ஒருவர் குதித்து பின்னால் நடந்து கொண்டே  “மக்களே. இந்த ஊருல ஒரு அமானுஷ்யமான விசயம் நடக்குதுன்னு எங்களுக்கு தகவல் வந்தது. அதை பார்க்க இந்த ஊரு மக்கள் எல்லாம் கூடி இருக்காங்க” என்று சொல்லிவிட்டு  “சொல்லுங்க. இங்க என்ன நடக்குது  என்று கேட்டுவிட்டு கூடத்தில் ஒருவரிடம் மைக்கை நீட்டினார்.

அவர் முகத்தை துடைத்துக் கொண்டு  “இங்க ஒரு சின்ன பையன் வந்து இருக்கான் . யாருன்னு அடையாளம் தெரியல. அவன் பச்சை நிறத்துல...”  என்று ஆரம்பித்து முழு கதையையும் கூறி முடித்தார்.

“நேயர்களே! இப்போ இந்த அதிசய பையனை நாங்களே சென்னைக்கு கொண்டு போய் போலீஸ்ல ஒப்படைக்கப் போறோம்” என்று நடப்பதை யாரும் உணரும் முன்னரே  அவர்கள் அந்த சிறுவனை தூக்கி வேனில் ஏற்றினார்கள். நாங்கள் சிறிது நேரம் நின்று விட்டு கலைந்து சென்றோம்.

ரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் ஊரே பரபரப்பாகி ஊர்த் தலைவர் வீட்டில் கூடி பத்து மணிக்காக காத்து இருந்தோம்.

“நம்ம ஊரை பத்தி உலகத்துக்கே தெரியப் போகுது இப்போ. நமக்கு அந்த பையன் யாருன்னு தெரியப் போகுது. எல்லாரும் வெளியூர்ல இருக்குற சொந்தகாரங்களுக்கு சொல்லிட்டீங்கள்ல” என்றார் தலைவர்.

“சொல்லிட்டேன் தலைவரே.” என்று வேகமாக சொன்னார் டிவியில் பேட்டி கொடுத்தவர்.

“தலைவரே!  நம்ம ஊரை காட்டுறாங்க பாருங்க”

எல்லாரும் ஆவலாக பார்த்தோம். எங்கள் ஊர் பெயர்ப் பலகையும் வயலையும் காட்டினார்கள். அனைவரின் முகமும் பல்லாக மாறியது. பின்னர் எங்க ஊருக்கு வந்த நிருபர் டிவியில் தோன்றினார். அவரை பார்த்ததும் சிலர் விசில் அடித்தார்கள்.

“நம்ம ஊரு வேர்ல்ட் பேமஸ் ஆச்சுடா ”  என்றார் தலைவர்.

“இது வரைக்கும் தனி மனிதர்கள் கிட்ட விளையாண்டு முட்டாள் ஆக்கின நம்ம நிகழ்ச்சியில முதல் முறையா ஒரு ஊரையே முட்டாள் ஆக்கி இருக்கோம். அதை நீங்க பார்த்து ரசிக்கப் போறீங்க” என்று அந்த நிருபர் பேசிக் கொண்டிருந்தார்.


Monday, May 16, 2016

அப்சரஸ் வந்திருந்தாள்

னது புத்தம் புதிய வீட்டின் சமையல் அறைக்குள்  அந்த தவளையைப் பார்த்ததும் ராஜுவுக்கு அறுவறுப்பாக இருந்தது. வந்த அந்த தவளை அவனை சற்று அலட்சியமாக பார்த்து விட்டு தனது வழியில் தத்தி தத்தி செல்ல ஆரம்பித்தது. அந்த தவளை பாத்திரங்களின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்ததை உணர்ந்த ராஜு வேகமாக அந்த தவளையை தவளையை மிதித்து பலமாக நசுக்கத் தொடங்கினான். சில வினாடிகளுக்கு பின் தவளை இறந்திருக்கும் என்று திருப்தி அடைந்து காலை நகர்த்தியதும்தான் தவளையின் உடலில் இருந்து புகை வருவதை உணர்ந்தான். அவன் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் புகை சமையல் அறை முழுவதும் பரவியது. புகைக்கு அவனுக்கு  மூச்சு முட்டியது..

அப்போதுதான் அதை கவனித்தான்.புகையின் மத்தியிலிருந்து ஒரு பெண் வெளிப்பட ஆரம்பித்தாள். ராஜு கண்களை கசக்கிவிட்டு கவனிக்கத் தொடங்கினான். சந்தேகமே இல்லை. உண்மையிலேயே அவள் பெண்தான். அந்த பெண் அப்படி ஒரு அழகு.ஹன்ஷிகா, தமன்னா எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். புராணப் படங்களில் வருவது போல உடை அணிந்திருந்தாள். உடலில் ஒரு இடம் விடாமல் நகை அணிந்திருந்தாள். அதிகம் ஜொலிப்பது தங்கமா இல்லை அவளின் முகமா என்று பட்டிமன்றமே நடத்ததலாம். நடப்பது கனவா இல்லை நனவா என்று நம்ப முடியாமல் ராஜு எக்கச்சக்கமாக பயந்திருந்தான். அந்த பெண், ஒரு பேய்தான் என்று முடிவு எடுத்து விட்டான். வெளியே ஓடலாம் என்றால் அந்த பெண் கட்சிதமாக வழியை மறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

ராஜுவுக்கு வேர்த்துக் கொட்டியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யாரு நீ?” என்றான்.

அந்த பெண் புன்னகை செய்தாள். “முதலில் உங்களுக்கு மிகுந்த நன்றிகள். பயப்படாதீர்கள் அன்பரே. நான்தான் அப்சரஸ்..”

“அப்சரஸ்னா ஒருவகை பேய்தான?”

“இல்லை இல்லை. நான் தேவலோக மங்கை.”

“நம்புற மாதிரியே இல்லையே?”

“நம்புங்கள் அன்பரே . தவளை பெண்ணாக மாறியதை பார்த்தீர்களா இல்லையா?”

“பார்த்தேன்”

“பின் என்ன சந்தேகம்?”

“சரி. நீங்க ஏன் பூமிக்கு  வந்தீங்க? அதுவும் என் வீட்டுக்கு?”

“ஒரு  லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிஷியை நான் அவமதித்தேன். அந்த ரிஷி எனக்கு இரண்டு சாபங்களை குடுத்தார். அதில் முதல் சாபம் நான் பூமியில் தவளையாக பிறக்க வேண்டும். அதன் பின் மானுடன் ஒருவன் என்னை தனது காலால் நசுக்கி சாப விமோட்சனம் அளிப்பான் என்பது. நான் அந்த ஒரு மானிடனுக்காக . ஒரு லட்சம் ஆண்டுகள் காத்திருந்து இதோ உங்களை கண்டடைந்து விட்டேன்”

ராஜுவுக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் கூறுவதை நம்புவதுதான் அவனுக்கிருந்த ஒரே வழி. பின்னே பூட்டிய வீட்டுக்குள் தவளை பெண்ணாக மாறுகிறது என்றால் இப்படி ஒரு விளக்கம் இருந்தால்தான் உண்டு.

“சரி அப்சரஸ். இப்ப  நீங்க  உங்க லோகத்துக்கு போகலாம்தானே?”

“அது முடியாது அன்பரே. இன்னொரு சாபம் இன்னும் என் மேல் இருக்கிறது அதுவும் தீர்ந்தால்தான் நான் தேவலோகம் செல்ல முடியும்.”

இத்தனை வருஷம் அப்புறம் அந்த சாபம் எல்லாம் காலாவதி ஆகி இருக்கும். நீங்க தேவலோகம் போக எந்த தடையும் இருக்க வாய்ப்பு இல்லை”

“நானும் அப்படி இருக்கத்தான் ஆசைப்படுகிறேன் அன்பரே”

“அப்போ தேவலோகம் போகலாம்தானே?”

“அது எப்படி அன்பரே. எனக்கு உதவி செய்த உங்களுக்கு நான் உபகாரம்  செய்ய வேண்டாமா?”

“கட்டாயம் செய்யத்தான் வேண்டும். நீங்க என்ன பண்றீங்க ஒரு பத்து கோடி ரூபாய் எனக்கு குடுத்து உதவி செஞ்சா நான் என்னோட கடன் எல்லாம் அடைச்சுட்டு கடைசி காலம் வரைக்கும் சந்தோசமா  இருப்பேன்”
“ரூபாய் என்றால்”

“ம்ம். செல்வம், பொருள்”

“செல்வம் தர என்னால் முடியாது அன்பரே.”

“என்னம்மா இப்படி சொல்லுற. தேவலோகவாசிகள்  ஜீபூம்பானு சொல்லி  பணம் கொண்டுவர முடியாதா?”

“சித்து வேலை எனக்கு தெரியாது”

“அப்போ கெளம்பு”

“அது எப்படி. எனக்கு இத்தனை உதவி செய்த உங்களை நான் விவாகம் செய்து கொண்டு வாழ்நாள் முழுக்க உங்களுக்கு சேவை ஆற்ற வேண்டும். அதன் பின் தேவலோகம் சென்று விடுவேன்”

“அய்யோ அப்சரஸ். எப்படிப்பட்ட  ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்து இருக்கீங்க. ஆனா எனக்கு ஏற்கனவே  கல்யாணம் ஆயிடிச்சு.  உங்களை கல்யாணம் பண்ண சட்டம் ஒத்துக்காது. அப்படியே சம்மதிச்சாலும் என்னோட பொண்டாட்டி சம்மதிக்கமாட்டா.”

“நீங்கள் அப்படி  சொல்லக்கூடாது நாதா”

“புரிஞ்சுக்கோங்க. இத்தனை அழகான பொண்ணை வச்சு காப்பாத்துறது இந்த ஊருல ரொம்ப கஷ்டம். அது மட்டும் இல்லாம நீங்க பணம்னா என்னன்னு கேக்குறீங்க. இனிமே நீங்க பணத்தை பத்தி தெரிஞ்சுகிட்டு இந்த ஊருக்கு அட்ஜஸ்ட் ஆகிறது எல்லாம் வாய்ப்பே இல்ல. . புரிஞ்சுக்கோங்க”

“தங்களுக்கு சேவை செய்யாமல் போவது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றாள் அப்சரஸ். உண்மையிலேயே வருத்தம் அவள் முகத்தில் தெரிந்தது.

“அப்போ ஒன்னு செய்யுங்க. எப்படியும் ஒரு பத்து கிலோக்கு நகை போட்டு இருக்கீங்க. அதுல ஒரு இரண்டு கிலோ எனக்கு குடுத்துடுங்க. என் பொண்டாட்டி ரொம்ப  சந்தோசப்படுவா. நானும் சந்தோசப்படுவேன்"

“இல்லை அன்பரே. அது என்னால் முடியாது. அது தேவலோக தங்கம்.”

ராஜுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. இத்தனை நகை இவளுக்கு எதற்கு எப்படியும் தேவலோகத்தில் எப்படியும் குறைந்த விலைக்கு  இதே போல நிறைய நகை கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு அந்த யோசனை வந்தது.. இவளின் மொத்த நகைகளையும் திருடிவிட்டால் இவள் எங்கே போய் புகார் குடுப்பாள். எப்படியாவது இன்று இரவுக்கு இவளை இங்கே தங்க சொல்லி நகைகளை அபகரித்து விடலாம். காலையில் எழுந்து கேட்டால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விடலாம். இவள் நடந்ததை வெளியே போய் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். முடிந்தால் இந்த பேரழகியை  வெளியே விற்கவும் கூட முயன்று பார்க்கலாம். ஆனால் அதற்கு இவளை முதலில் இங்கிருந்து வெளியேற விடக் கூடாது. அவளை அவனின் சிந்தனையை அப்சரஸ் கலைத்தாள்.

“என்ன சிந்தனை அன்பரே”

“அப்சரஸ். நீ எனக்கு உதவி செய்யணும்  அதானே உன் ஆசை. இன்னைக்கு  ராத்திரி  இங்கேயே தங்கு. நாம நாளைக்கு கல்யாணம் செஞ்சுக்கலாம்”

“மகிழ்ச்சி அன்பரே”

அப்சரசை தனது படுக்கை அறைக்கு அழைத்து சென்றான் ராஜு.

“என் பொண்டாட்டி நைட்டி எடுத்து தரவா”

“நைட்டி என்றால்?”

“இரவு உடை”

அப்சரஸ் இனிமையாக சிரித்து, “அதெல்லாம் வேண்டாம்.திருமணம் முடியும்வரை தேவலோக உடைகளையே அணிந்து கொள்கிறேன் ” என்றாள்.

பாவி, நகையை கழட்டாமல் தூங்கப் போகிறாளே இவள் என்று ராஜு நினைத்துக் கொண்டான். இரவு பலவந்தமாக திருடி விட முடிவு எடுத்தான். அப்சரஸ் அந்த அறையில் படுத்துக் கொண்டாள். ராஜு இன்னொரு அறையில் படுத்துக் கொண்டான்.

ரவு ஒரு மணி.

ராஜு சத்தம் எழுப்பாமல் அந்த அறைக்குள் வந்தான். அப்சரஸ் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக சென்று அவளின் கால்களில் அணிந்து இருந்த அந்த பெயர் தெரியாத ஆபரணத்தை கழட்ட முயற்சி செய்தான் ராஜு. அந்த நகை  அவன் கையில் வந்தவுடன் திடுமென எழுந்தாள் அப்சரஸ். எழுந்தவள் பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள். ராஜுவுக்கு ஒன்றும் புரியவில்லை. எதிர்ப்பாள் என்று எதிர்பார்த்தால் அழுகிறாளே. அவளின் அழுகை பலமாகிக் கொண்டே போனது. ராஜுவின் காதுகள் வலிக்கத் தொடங்கின

“அப்சரஸ். அழாத. என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. . தெரியாம நகையை எடுத்துட்டேன். நீயே வச்சுக்க ”

“நான் அதற்கு அழவில்லை நண்பரே”

“பின்ன?”

“அந்த இரண்டாம் சாபம் இன்னும் என்னை விட்டு  நீங்கவில்லை. இப்போதுதான் சாபமே தொடங்கியிருக்கிறது. என்னால் அதை உணர முடிகிறது.இன்னும் எத்தனை நாள் அந்த சாபத்தோடு நான் வாழ வேண்டுமோ தெரியவில்லை”

“இன்னுமா அந்த சாபம் கன்டின்யு ஆகுது?”  

“நானும் அந்த சாபம் இனி பாதிக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் விடாமல் துரத்துகிறது” சொல்லிக்கொண்டே அப்சரஸ் தனது உடலை பயங்கரமாக முறுக்கத் தொடங்கினாள். அவள் கண்கள் சிகப்பாக மாறத் தொடங்கியது. “எனக்கு உடலெல்லாம் வலிக்கிறது என்றாள்.

 “சரி என்ன சாபம்னு சொல்லுங்க. சரி செய்ய முயற்சி பண்ணலாம்”
“இல்லை. உங்களால் அது முடியாது”

“நான் முயற்சி பண்றேன்.இது ஏதோ உடம்பு பிரச்சினை மாதிரிதான் இருக்கு. நல்ல டாக்டர் கிட்ட கூட்டிபோறேன் ஆனா நான் உனக்கு சரி செஞ்சு விட்டா எனக்கு உன் நகை முழுக்க தரணும் சரியா”

“சரி” என்றாள் ராஜு உற்சாகம் ஆனான். இன்னமும் நகைகளை அடைய வாய்ப்பு இருக்கிறது

“நான் உங்களால் தவளை வாழ்வில் இருந்து விடுபட்டேன் என்று நீங்கள் அறிவீர்கள்”

“ஆமா. மேலே சொல்லு”

“இரண்டாம் சாபத்தின்படி நான் தவளை வாழ்வில் இருந்து விடுபட்டு  நான் பகலில் அப்சரஸாக வாழ்ந்தாலும் .....”

அவள் வாயில் இருந்து வார்த்தை வரத் தடுமாறியது. அவள் கை விரல்கள் தடித்து நகம் நீள்வது போல ராஜுவுக்கு தோன்றியது. ராஜு லேசாக பயந்தான்

“வாழ்ந்தாலும்????”.

“மூன்றாம் ஜாமத்தில் மனித ரத்தம் குடிக்கும் பூதமாக மாறி விடுவேன்” என்று அவள் சொல்லி முடிக்கும்போது அவளின் நாக்கு வயிறு வரை நீண்டு வளர்ந்து இருந்தது. சில வினாடி சிரமங்களுக்குப் பின் ராஜுவின் ரத்தத்தை அவள் குடிக்கத் தொடங்கியிருந்தாள்.
   

Wednesday, April 13, 2016

அடுத்த முதல்வர்? நடுநிலை வாக்காளர்கள் விரும்புவது யாரை?

ரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்று நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரே குழப்பமாக உள்ளது. தமிழர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இல்லையென்றால் அவர்களுக்கு இத்தனை சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்திருப்பார்களா? மாநிலத்தின் முன்னேற்றமும் , மக்களின் நலனுமே நோக்கம் எனக் கொண்டு  முதுமை, உடல் நலக்குறைவு அனைத்தையும் மறந்து இந்த வேகாத வெயிலிலும் ஊரெல்லாம் சுற்றி பிரசாரம் செய்கிறார்களே நமது முதல்வர் வேட்பாளர்கள். இவர்கள் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் எப்படியும் தீர்த்து விடுவார்கள். .இப்போதைக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை  இவர்களில் யாருக்கு முதல்வர் நாற்காலியை பரிசளிப்பது என்பதுதான். அத்தனை நல்லவர்கள் நம் தலைவர்கள். 

தற்போதையை முதல்வரையே எடுத்துக்கொள்ளுங்கள். மாநில தலைநகரமே வெள்ளம் வந்து மூழ்கும் வேளை. அப்படிப்பட்ட சிக்கலான வேளையிலும் எத்தனை நிதானமாக செயல்பட்டார் அவர். அப்படிப்பட்ட பொறுமையான அணுகுமுறை ஒரு தலைவருக்கு  எத்தனை முக்கியம். மதுவிலக்கு கேட்டு தமிழகமே கொந்தளித்த போதும் “ஆல்கஹால் வித்டிராயல் சிண்ட்ரோம்(alcohol withdrawal syndrome)” வந்து மக்கள் பாதிக்கப்படக்கூடாது என பொறுமையாக படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்தப்போகிறார் அவர். குடிமக்களின் உடல்நலத்தை முக்கியமாக நினைக்கும் தலைவரால்தானே இப்படி செயல்பட முடியும். அதுமட்டுமா? மக்களுக்காகவே உழைத்து அந்த வேலைச்சுமையால் அமைச்சர்கள் தங்கள் உடல்நலத்தை கண்டு கொள்வதில்லை என்று உணர்ந்து அவர்களை அடிக்கடி உடலை வளைக்கும்  உடற்பயிற்சி  செய்ய வைத்தார். மேலும் ஊழல்வாதிகளை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து தவறு செய்த அமைச்சர்களை நான்கு நாட்கள் வீட்டு சிறையில் கடும் தண்டனை கொடுத்தாராம். இப்படி நீதி வழுவாமல் நடக்கும் அரசியல்வாதியை இதுவரை வரலாறு கண்டதில்லை. அடிக்கடி கூட்டம் நடத்தி போக்குவரத்தை தடை செய்தது எதற்காக? ஆராய்ந்து பார்த்தால் காற்று மாசுபாட்டை சற்று நேரமாவது தடுத்து மக்களுக்கு நல்ல காற்றை தருவதற்கு  என்று புரியும்  . இப்படி சற்று நுணுக்கமாக யோசித்தால்  ஐந்து ஆண்டுகளில் இந்த  அரசு செயல்படாதது போலத் தெரிந்தாலும் மக்களின் நன்மைக்காக இது போல பல மறைமுக திட்டங்களை தீட்டி இருப்பது தெரியும்.

அடுத்து தமிழினத் தலைவரை பற்றி  பார்ப்போம் . தனது உடல் பொருள் ஆவியை மக்களுக்காகவே அர்ப்பணித்தவர் அல்லவா அவர்? அவருடையதை மட்டும் அர்ப்பணித்திருந்தால் கூட பரவாயில்லை. தனது குடும்பத்தினர் நூறு பேரையும் அதே போல தியாகம் செய்ய வைத்தவர் ஆயிற்றே. அரசு கொடுத்த இலவசத் தொலைக்காட்சியை மக்கள் அதிகம் பார்த்து தங்கள் கண்களை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பதினாறு மணி நேரம் மின்தடை செய்தார். எப்படிப்பட்ட ராஜ தந்திரம் அது? மக்களிடம் அதிக நிலம் சேர்ந்து விட்டால் ஏழை, பணக்காரர் வேறுபாடு அதிகரிக்கும் என்று அவரின் கட்சியினரே நில அபகரிப்பு செய்து ஒரு புதிய கம்யூனிஸ சித்தாந்தத்தை உருவாக்கினார்களே? வேறு எந்த கட்சிக்காவது இப்படி ஒரு வரலாறு உண்டா? அது மட்டுமா, நூறு கோடிக்கு மேலே எண்களே இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு லட்சம் கோடியை அறிமுகம் செய்தார்களே? அந்த லட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியங்கள் என்று விரல் விட்டு எண்ணி நாம் கணித அறிவை வளர்த்தோமே . இப்படி நமது அறிவை விரிவடைய செய்தது எத்தனை பெரிய சாதனை.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவரும் இவர்களுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை. பதவியை பிடிப்பதையே கொள்கையாக கொண்டு கட்சி வைத்துள்ளாரே. இவரின் வெளிப்படைத்தன்மை வேறு யாருக்கு உண்டு. பத்திரிக்கையாளர்களையும், கட்சியினரையும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொது இடத்தில் அடித்தும், துப்பியும் குழந்தை மனதோடு நடந்து கொள்கிறாரே. இப்படி குழந்தை மனம் கொண்ட ஒரு தலைவர் உலகில் எங்கேயும் உண்டோ? மனைவியையும், மச்சானிடமும் கட்சியை கொடுத்து கட்சியை குடும்ப சொத்தாக மாற்றி  புரட்சி செய்தவர், நாளை ஆட்சியை பிடித்தால் தமிழ்நாட்டையும் தனது குடும்ப சொத்தாக எண்ணி பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்தியாவில், ஏன் உலகத்திலேயே இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பது அரிது. நடுநிலை வாக்காளர்களுக்கு இப்படிப்பட்ட தலைவர்களுள்  ஒரே ஒருவரை தேர்வு செய்வது மிகக் கடினம் என்பதால் மத்திய அரசு சட்ட திருத்தம் செய்து இந்த மூவரையும் தமிழக முதல்வராக பணியாற்ற அனுமதிப்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...