Thursday, December 31, 2015

அவனா? ஆவியா?

ந்த பேருந்துகாரன் நடுராத்திரி இரண்டு மணிக்கு கொண்டு  வந்து இறக்கி விடுவான் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனது  கிராமத்துக்கு செல்ல மணல் சாலையில் இரண்டு மைல் நடக்க வேண்டும். இறக்கிவிட்ட கண்டக்டர் பேசாமலாவது சென்று இருக்கலாம். “பேய் நடமாட்டம் இருக்குற ரோடு சார். பத்திரம்” என்று பயமுறுத்தி விட்டான்.

நிலா வெளிச்சத்தில் பாதை தெளிவாக தெரிந்தது. இருந்தபோதும் பயம். சின்ன வயதில் இருந்து எத்தனை கதைகள் இந்த பாதையைப் பற்றி. பேய் அடித்தது எனவும், துரத்தியது எனவும். வேகமாக நடக்கத் தொடங்கினேன். திடீரென பின்னால் வந்த குரல் கேட்டு திரும்பினேன்.

“தம்பி எங்க போறீங்க?” என்றவாறே முண்டாசு கட்டிய முதியவர் ஒருவர் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். நடையில் வயதுக்கு மீறிய வேகம். எங்கிருந்து முளைத்தார் அவர்?

“சனலூருக்கு” என்றேன்.

“உங்கள ஊருல பார்த்தது இல்லையே ஊருல. யாரு மகன் நீங்க?”

“அருணாசலம் பையன். சின்ன வயசுல இருந்தே வெளியூர்ல படிச்சவன். நீங்களும் சனலூருக்குதான் போறீங்களா?”

“ஆமாம். டவுன்ல வாத்தியார் படம் படம் பாத்துட்டு வந்துட்டு இருந்தேன். நல்ல வேள. ஊரு வரைக்கும் துணை  நீங்க கிடைச்சுடுச்சு” என்று சொல்லிக்கொண்டே என்னோடு நடக்கத் தொடங்கினார். அவர் மேல் இருந்து வர்ணிக்க முடியாத ஒரு விதமான நெடி அடித்தது. இவரை நம்பலாமா என்ற சந்தேகம் மனதில் பரவியது.

“இந்த வழியா பேய் நடமாட்டம் இருக்குதாமே. நீங்க எப்பிடி படத்துக்கு போயிட்டு வறீங்க”

“அதெல்லாம் சும்மா தம்பி. போன வருஷம் எவனோ ஒருத்தன் இங்க நெஞ்சு வலி வந்து செத்து போய்ட்டான். நம்ம ஆளுங்க உடனே அவனை பேய் அடிச்சதுன்னு சொல்லிட்டாங்க”

“இங்க அப்போ பேய் இல்லையா?”

“பேய் இல்லன்னு நான் எங்க சொன்னேன். பேய் அந்த ஆளை அடிக்கலைன்னுதான் சொன்னேன்”

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்வது எனக்கு சற்று சிரமமாக இருந்தது. கேள்வியை சற்று மாற்றி கேட்கலாம் என்று முடிவு  செய்தேன்

“அப்போ உங்களுக்கு பேய் மேல பயம் இல்லையா?”

“எதுக்குங்க பயப்படணும். நமக்கு பேய பார்த்தா பயம். பேய்க்கு நம்மள பார்த்தா பயம். ”

எனக்கு ஏதோ உறுத்தியது. இவரின் கால்களை அவருக்கு தெரியாமல் பார்த்து விட வேண்டும்.

“என்ன தம்பி யோசிக்கிறீங்க” என்று சொல்லி எனது சிந்தனையை கலைத்தார்.

“ஒன்னும் இல்லங்க”

“நான் சொல்லட்டா”

“சொல்லுங்க”

“இப்போ பேய் வந்தா உங்களை என்ன செய்யும்னு யோசிக்கிறீங்க. சரியா? இதுல என்ன யோசனை. பேய் வந்து மூஞ்சிய காமிச்சாலே பயத்துல இரத்தக் குழாய் எல்லாம் வெடிச்சுடும். அவ்ளோதான்” என்று சொல்லி சிரித்தார். எங்கிருந்தோ ஒரு நாய் வேறு அசர்ந்தப்பமாக ஊளையிட்டு தொலைத்தது.

எனக்கு திடுக் என்றது. இப்போது தனது டிராகுலா பல்லைக் காட்டி சிரிப்பாரோ.

“வேண்டாங்க வேண்டாம்” என்றேன்

“என்னாச்சு தம்பி? என்ன வேண்டாம்?”

“காளியாத்தா, மாரியாத்தா, காளியாத்தா, மாரியாத்தா” என்று ஜெபிக்கத் தொடங்கினேன். என்னை அறியாமல்.

“என்ன ஆச்சு தம்பி. துணைக்கு ஆள்  இருக்கும்போதே எதுக்கு இத்தனை பயப்படுறீங்க?”

“ஒன்னும் இல்லைங்க. கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கவா” என்றேன்.

“குடிங்க”

தண்ணீர் எடுக்க முயல்வது போல வேண்டுமென்றே கைப்பையை கீழே போட்டேன்.

“தவறிடிச்சு சார்” சொல்லிக் கொண்டே குனிந்து அவரின் கால்களை தேடினேன். சரியாக இருந்தது.

“தம்பிக்கு நடக்க முடியாட்டி நான் தூக்கி தோள்ல வச்சுக்குறேன். 

ஹாஹா”

இவர் நிச்சயம் மனிதன் இல்லை. ஏதோ தவறாகத் தெரிகிறது. செருப்பை எடுத்து கைகளில் பிடித்துக் கொண்டேன்.

“என்கிட்ட வராத” அவரை விட்டு விலகி வேகமாக ஓடத் தொடங்கினேன்.

பொழுது விடிந்தது. சிரமத்துடன் கண்களை திறந்தேன். அந்த முதியவர் என் கட்டிலின் அருகில் நின்று கொண்டிருந்தார். பார்க்க மருத்துவர் போல இருந்தார். அவரின் பக்கத்தில் ஒரு பெண். அவள் பார்க்க நர்ஸ் போல இருந்தாள்.

“இவரை பத்திரமா பார்த்துக்கோமா”

“சின்ன வயசுல இருந்து பேய் கதையா கேட்டு கேட்டு பேயை பத்தியே நினைச்சு பயந்து பயந்து இப்போ இவரே பேயை பத்தி நெறையா கற்பனை பண்ணிக்கிறார். இவருக்கு பேய் மேலேயே ஒரு obsession, hallucination .. நேத்து ராத்திரி என் கிட்டயே என்னென்னமோ பேசி இவரை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு”

அந்த பெண் என்னை பார்த்து  சிநேகமாக சிரித்தாள். “நான்  பார்த்துக்குறேன் டாக்டர்” என்றார். 

அந்த டாக்டர் என்னை பார்த்து “டேக் கேர்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். நான் நர்சை பார்த்தேன். கொஞ்சம் கிட்ட வாங்க என்றேன்.

“என்னங்க”

“நேத்து ராத்திரி ஏதோ ஒரு சின்ன குழப்பம். மத்தபடி எனக்கு சரி ஆயிடிச்சு. அந்த டாக்டர் கிட்ட சொல்லுங்க ப்ளீஸ். நான் வீட்டுக்கு போகணும்.”

“சரிங்க நான் சொல்றேன்”

“தேங்க்ஸ். எனக்கு பிரச்சினை ஏதும் இல்லைன்னு உங்களுக்கு புரியுதுல” என்றேன்

நர்ஸ் தனது சிவந்த நாக்கை வயிறு வரை நீட்டி “நல்லா புரியுது” என்றாள்.


Tuesday, December 29, 2015

தூ - ஆதரவு அளிக்காதீர்கள்

சென்னை வெள்ளத்திற்கு முன்புவரை ஆளும்கட்சியின் மீது பெரிய அதிருப்தி எதுவும் இல்லை. கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றபோதும் ஆட்சியாளர்கள் மேல் கோபம் கொள்ள காரணம் எதுவும் இருக்கவில்லை. இத்தனைக்கும் ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து கட்டணம், பால் விலையை உயர்த்தினார்கள். கடந்த முறை அதிமுக ஆட்சியோடு ஒப்பிட்டால் சட்டம் ஒழுங்கும் மோசம்தான். ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெரும் வரை அதிமுகவுக்கு எதிராக எதுவும் இல்லை. ஒரு வகையில் ஜெயலலிதா பெற்ற தண்டனையும் வெகுஜனங்களுக்கு அவர் மேல் ஒரு பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவர் பதவி இழந்ததில் தொடங்கி அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் ஆட்சிக்கு மிகப் பெரிய அளவில் அதிருப்தியை கொடுத்து விட்டது. ஜாஸ் சினிமா, ஸ்டிக்கர், கோவன் கைது  என்று அரை டஜன் சம்பவங்கள். அதிலும் ஒன்றுதான்  விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் விதம்.

ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதுகிறார்கள். ஆட்சியாளர்கள் சொன்னது என்ன? செய்தது என்ன? என்று. மக்களுக்கு  ஒரு நினைவூட்டல் குடுக்கிறார்கள். அவர்கள் எழுதியதில் பிழை இருந்தால் ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமாக  பதில் கூறி ஒரு மறுப்பு அறிக்கை குடுத்து அதை அவர்கள் பத்திரிக்கையிலேயே வெளியிட செய்து இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் தவறான தகவல் கொடுத்ததாக பத்திரிக்கையே மன்னிப்பு கேட்டு இருப்பார்கள். ஆனால் குற்றம் கூறியதற்காக பத்திரிக்கை மேல் அவதூறு வழக்கு போடுகிறார்கள். பேரிடரில் மாநிலமே தவிக்கும்போது முதல்வர் குறைந்தபட்சம் அவரது கட்சி தொலைக்காட்சியிலாவது  மக்களுக்கு அறிக்கை விட்டு இருக்கலாம். ஆனால்  அவருக்கு ஊடகங்கள் மேல் என்ன கோபமோ, வாட்ஸ்அப்பிலே மக்களுக்கு தகவல் அளிக்கிறார்.

முத்ல்வராவது பரவாயில்லை. பிடிக்காதவர்களை தவிர்த்து விடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அதற்கும் மேல். நேரடியாகவே ஊடகங்களின் மேல் துப்புகிறார் அல்லது  தூக்கி அடிப்பேன் என்கிறார். ஜனநாயகத்தின் நான்காவது தூண் மேல் அவருக்கு அப்படி என்ன அதிருப்தியோ?அரசியலில் இருப்பவர்கள் ஊடகங்களை ‘தவிர்ப்போம், அவமதிப்போம்’ என்ற கொள்கையுடன் நடந்து கொண்டால் அவர்களை வேறு யார்தான் கேள்வி கேட்பது? 

ஊடகங்களை சந்திக்காமல் விட்டுவிடுவது கூட பயம் காரணமாக என்று எடுத்து கொள்ளலாம். ஆனால் அவமதிப்பது கண்டிக்கத்தக்கது. ஊடகங்களின் மேல் அரசியல்வாதிகளுக்கு உள்ள பயமே இன்னும் ஜனநாயகத்தை கட்டி காப்பாற்றுகிறது. இந்த பயத்தை கணக்கில் எடுக்காமல் துரதிர்ஷ்டவசமாக விஜயகாந்தின்  செயலுக்கு ஆதரவு குடுத்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர் சிலர். இது அரசியல்வாதிகளுக்கு உள்ள பயத்தை போக்கும் செயல். மக்கள் ஊடகங்களுக்கு எதிரானவர்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்கத் தொடங்கிவிட்டால் நாளை அவர்களை கேள்வி கேட்க ஆளில்லாமல் போகும் ஊடகங்களை எதிர்கொள்ள இதே பாணியை அனைத்து அரசியல்வாதிகளும் பின்பற்ற தொடங்கினால் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பே இல்லாமல் போகும். ஊடகங்களை எதிர்க்கிறோம் என்று விஜயகாந்தை ஆதரிப்பது சட்டிக்கு பயந்து அடுப்பில் குதிப்பதற்கு சமானம்.

விஜயகாந்த் சொல்வது போல அனைத்து ஊடகங்களும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் இல்லை. ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் பெரும்பாலான  ஊடகங்கள்  அதிலிருந்த பிழையை சுட்டிக் காட்டின. செம்பரம்பாக்கம் நீர் திறப்பு விவகாரத்தில் நடந்த குழப்பங்களை தொடர்ந்து  விவாதித்தும் வருகின்றன. இது தவிர உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் முதல்வரை சுற்றி வளைத்து நேரடியாக கேள்வி கேட்பதுதான் நடுநிலை என்கிறாரா?


Wednesday, December 23, 2015

பீப் மெசின்

ழுத்தில் கட்டி இருந்த டை வெயிலுக்கு கசகசத்தது. மானேஜிங் டைரக்டர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்த அறைக்குள் நுழைந்தேன். சற்று பருமனாக இருந்த அந்த நடுத்தர வயதுக்காரர்  என்னை பார்த்து புன்னகைத்தார்.

“வாங்க அசோக். உங்களுக்காகத்தான் வெயிட் பண்றேன்”

 “சாரி சார். கொஞ்சம் லேட் ஆகிடிச்சு”

“அது பரவாயில்ல. நீங்க பேப்பர்ல குடுத்த விளம்பரம் உண்மையா? நெஜமாவே உங்க கிட்ட அந்த மெசின் இருக்கா?”

“என்ன சார் நீங்க. மெசின் இல்லாமலா விளம்பரம் குடுப்போம்”

“அதுக்கு இல்ல அசோக். நான் இன்டர்நெட் முழுக்க தேடிட்டேன். அப்படி மிசின் எதுவும் இருக்குற மாதிரி தெரியலை. நீங்க  இந்த மெசின் பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?”

“அதுக்குதான சார் வந்திருக்கேன். நான் பேப்பர்ல என்ன விளம்பரம் குடுத்து இருந்தோம்னு நியாபகம் இருக்கா?”

“பொய் சொன்னா கண்டுபிடிக்கிற புதுமையான மிசின் விற்பனைக்கு இருக்கு. தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்னு போட்டு இருந்தது ”

“ரைட். அந்த இப்போ நான் அந்த மெசின் பத்தி சொல்றேன். அதுக்கு முன்னாடி இப்போ நான் சொல்லப்போறது ரொம்ப ரகசியம். நீங்க இந்த ரகசியத்தை வெளிய சொல்லமாட்டேன்னு  உத்தரவாதம் குடுக்கணும். நான் உங்களைப்பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். நீங்க ரொம்ப நம்பிக்கையானவர்னு சொல்லுவாங்க. அந்த நம்பிக்கையிலதான் நான் உங்களைப் பார்க்கவே வந்தேன்”

“என்னங்க நீங்க. ரொம்ப சஸ்பென்ஸ் குடுக்குறீங்க. நான் நீங்க சொல்றதை வெளிய சொல்ல மாட்டேன். நீங்க விசயத்தை சொல்லுங்க”

“நான் இப்போ விக்குற மெசின் அமெரிக்க உளவுத்துறை விசாரணை கைதிகள் கிட்ட பயன்படுத்துறது. அந்த மிசின் எப்படியோ என் கைல வந்து சேர்ந்திருச்சு. என்கிட்ட இருக்கிறது இந்த ஒரு பீஸ் மட்டும்தான்”

“எப்படியோன்னா? திருட்டுத்தனமாவா?”

“அதெல்லாம் கேக்காதீங்க சார் ப்ளீஸ். இந்த மிசினோட மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். ஆனா நீங்க வாங்க முடிவு செஞ்சா நான் பத்து லட்சத்துக்கு தரேன்”

“அசோக். எனக்கு பணம் பிரச்சினையே இல்ல. இந்த ஆபீஸ்ல அறுபது பேர் வேலை பாக்குறாங்க. ஆனா இதுல யாரை நம்புறதுன்னு எனக்கு தெரியல. என்னை யாருமே உண்மையா இல்லைன்னு எனக்கு ஒரு சந்தேகம்”

“கவலைய விடுங்க சார். இந்த மிசின் மட்டும் வாங்கி யூஸ் செஞ்சு பாருங்க. யாரு உங்ககிட்ட உண்மைய பேசுறா யாரு பொய் பேசுறான்னு சுலபமா கண்டுபிடிக்கலாம். நம்ம ஊரு போலீஸ் பயன்படுத்துற மிசின் மாதிரி இல்ல இது .இந்த மிசின் எப்பிடி வொர்க் ஆகுதுன்னு காட்டுறேன் பாருங்க ”

சொல்லிவிட்டு அறைக்கு வெளியே பார்த்தேன். ஒரு பெண் வேர்க்க விறுவிறுக்க அந்த அலுவலகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

“யாரு சார் அது. உங்க ஏம்ப்ளாயியா”

“ஆமா”
“9 மணிக்கு வர்ற ஆபீஸ்க்கு பத்து மணிக்கு வராங்க”

“அந்த பொண்ணு அடிக்கடி லேட்டா வரும். கேட்டா அப்பாவை  கூட்டிட்டு  ஹாஸ்பிடல் போனேன்னு சொல்லும்”

“அந்த பொண்ணை உள்ளே கூப்பிடுங்க”

அவர் தனதுமேஜையில் இருந்த  தொலைப்பேசியை எடுத்து தட்டினார்.
“ரேகா. கொஞ்சம் உள்ளே வாங்க”

சில வினாடிகள் கழித்து அந்த பெண் உள்ளே வந்தாள். என்னை பார்த்ததும் சற்று தயங்கினாள்.

“ஹலோ மேடம். உங்ககிட்ட  என்ன ஒரு கேள்வி கேக்க சொன்னார் உங்க MD” என்றேன்

“கேளுங்க சார்” என்றாள் தயக்கம் மாறாமல்.

நான் என்னுடைய கைப்பையை திறந்தேன். அதனுள் இருந்த பெட்டியை எடுத்து சூயிங்கம் வடிவில் இருந்த அந்த கருவியை சகல மரியாதையுடன் திறந்தேன்.

“கொஞ்சம் இந்த மிசினை உங்க நாக்குக்கு அடியில வச்சுக்கிட்டு பதில் சொல்லமுடியுமா?” என்றேன்

“என்ன சார் இது?”

“பயப்படாதீங்க. இது ஒன்னும் செய்யாது. சும்மா வச்சுக்கோங்க”

அவள் MDயை பார்த்தாள்.

“சார் சொல்ற மாதிரி செய்மா.”

சில நொடி தயக்கத்துக்குப்பின் அதை நாக்கின் அடியில் சொருகிக் கொண்டாள்.

“சொல்லுங்க மேடம். ஏன் லேட்?” என்றேன்.

“பீப் பீப் பீப் பீப் பீப்”

MD என்னை வியப்புடன் பார்த்தார். அந்த பெண் தனது தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் பேச முயன்றாள்.

“பீப் பீப் பீப் பீப் பீப்”

“சார். என்ன சார் இது. குரல் வெளிய வர மாட்டேங்குது” என்றாள் அந்த ரேகா. இப்போது அவள் சொன்னது இப்போது  தெளிவாகக் கேட்டது.

“மேடம். இப்போ உங்க வாய்ல இருக்கிறது அமெரிக்கன் மேட் லை டிடக்டர் மிசின். நீங்க உண்மை பேசாட்டி உங்க குரல் வெளிய வராது.”
அவள் மனதுக்குள் அதிர்வது தெளிவாகத் தெரிந்தது

“சாரி சார். நான் உண்மைய சொல்லிடுறேன்நான் நேத்து நைட் ஷோ என்னோட பாய் பிரண்ட் கூட போனேன். காலைல அசந்து தூங்கிட்டேன்”

“ஓகே. இப்போ வாய்ல இருக்குற அந்த மிசினை எடுத்து என்கிட்ட குடுத்துட்டு போய் உங்க வேலைய பாருங்க”

அவள் வெளியே சென்றாள்.

“அசோக். என்னால நம்பவே முடியல. அப்போ இந்த மிசின் வாய்ல இருக்கும்போது பீப் சவுண்ட்தான் வருமா?”

“இன்னும் சந்தேகமா. உங்க ப்யூன் வெளியே இருக்கார் பாருங்க. அவரை கூப்பிடுங்க”

அவர் கையில் இருந்த பஸ்ஸரை அழுத்தினார். அந்த முதிய வயது ப்யூன் காக்கிசட்டையில் உள்ளே ஓடி வந்தார்.

“சொல்லுங்க சார்”

“நான் உங்க சாரோட சொந்தக்கார பையன். நீங்க சாரை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“அவர் ஒரு மகாராசர். தங்கமான குணம். இவரை மாதிரி ஆளுங்க இருக்குரதாலதான்”

“போதும் போதும். இப்போ இந்த மிசினை உங்க நாக்குக்கு கீழ வச்சுக்கிட்டு இதையே திரும்ப சொல்லுங்க”

“பீப் பீப் பீப்”

“என்ன ஆச்சு ஐயா? குரலே வரல என்று கூறி சிரித்தேன்.

“என்னனு தெரியலையே” என்று இப்போது அவர் தொண்டையை பிடித்துக்கொண்டு கூறியது தெளிவாக கேட்டது.

“ஐயா. உங்க வாய்ல இருக்கிறது பொய் கண்டுபிடிக்கிற மிசின். நீங்க இப்போ உங்க ஐயாவை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு உண்மைய சொல்லுங்க”
“வேண்டாம் சார்”

“சும்மா சொல்லுங்க. உங்களுக்கு இதை தவிர வேற வழி இல்ல. சொல்லுங்க”

”.....மனுசனா அவன். சரியான .....,........ நாயி. ....... பய”

“போதும் போதும்” என்றேன். MDயின் முகம் சுருங்கியது.

“ராமசாமி. நீங்க போய் செட்டில்மெண்ட் வாங்கிக்கோங்க. இனிமே நீங்க வேலைக்கு  வர வேண்டாம்” என்றார்.
ராமசாமி எதுவும் சொல்ல முடியாமல் வெளியேறினார்.

“ராமசாமி. வாய்ல இருக்குறதை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க” என்று வாங்கிக் கொண்டேன்.

“என்ன சார். டெமோ போதுமா?” என்றேன்.

“போதும். இந்த மிசினை நானே வாங்கிக்குறேன். பணத்தை வாங்கிக்கோங்க ” என்றார்.

மறுநாள் இரவு கடற்கரையில் நானும் ரேகாவும் பேசிக் கொண்டிருந்தோம்.

“எப்படியோ அந்த ஆளை ஏமாத்தி பணம் பிடுங்கிட்ட. அந்த கிறுக்குப்பய ஆபீஸ்ல யாரு கிட்டப் பேசினாலும் இதை வாய்ல போட சொல்லிட்டுதான் பேசுறான். அது சரி அது எப்படிடா அந்த பீப் சவுண்ட் எப்போ வரணும், வரக் கூடாதுன்னு கண்ட்ரோல் பண்ண?”

“அது ரொம்ப சுலபம். இந்த ரிமோட் கண்ட்ரோல் பிரஸ் பண்ணா அந்த மிசின்ல சவுண்ட் வரும். டெமோ குடுத்தப்போ நான் தேவைப்படும்போதெல்லாம் பிரஸ் பண்ணேன். அவ்ளோதான்”

“அப்போ இனிமே அதுல பீப் சவுண்ட் வராதா?”

“வராது.”

“ஆனா அநியாயமா அந்த ராமசாமியை வேலையை விட்டு தூக்கிட்டாரே?”

“நீ வேற. ராமசாமி கூட நான் போன வாரமே பேசிட்டுதான் இந்த நாடகமே நடத்துனேன். பத்து லட்சத்துல அவருக்கும் பங்கு இருக்கு. அது மட்டும் இல்ல. அந்த MDயை ஆசை தீர திட்டியும் தீர்த்துட்டார்”

“பக்கா கிரிமினல்டா நீ. நானும் அடுத்த மாசம் வேலைய விட்டுடுவேன்.  அப்புறம் நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்”

“சரி செல்லம்”

“ஆனா நாம அவர எமாத்தலையா?”

“ஏன் ஏமாத்துனோம்னு நினைக்கிற. இனிமே எல்லாரும் அவர் கிட்ட பொய் சொல்றாங்கன்னு  குழம்பாம அவர்   மனசு நிம்மதியா வாழ்வார்ல”

“சரிதான். செய்யுறதும் செஞ்சுட்டு எதாச்சும் சமாதானம் சொல்றது” என்றாள் ரேகா.

Sunday, November 15, 2015

திப்பு சுல்தான் - ஹிந்து நாளிதழின் அதீத ஆராய்ச்சி

திப்பு சுல்தான் நல்லவரா?கெட்டவரா என்பதுதான் இந்த கட்டுரையில் ஹிந்து நாளிதழின் ஆராய்ச்சி. திப்பு மாபெரும் வீரர் என்று சொல்லும் ஹிந்து நாளிதழ் மன்னர் அசோகரும் கலிங்கப் போரில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று குவித்தார் என்று அசோகரையும் திப்புவையும் ஒப்பிடுகிறது. நல்ல வேளையாக திப்பு ஹிந்துக்களை கொன்றதை மட்டும் மறைமுகமாக  அந்த கட்டுரை ஒப்புக் கொள்கிறது.

சமீபகாலமாகவே ஊடகங்கள்  அதீதமாக ஹிந்துத்துவா எதிர்ப்பு நிலையை எடுக்கின்றன. ஹிந்துத்துவா அமைப்புகளை எதிர்க்க அவை எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. அதற்கு ஒரு உதாரணம்தான் ஹிந்துவின் இந்த கட்டுரை. அசோகரின் காலத்தில் இஸ்லாம் மதமே தோன்றவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தவறை கணக்கில்   எடுக்காமல் பார்த்தாலும் கட்டுரையில் கூறியுள்ளவாறு அசோகர் மதத்தை காரணமாக கொண்டு முஸ்லிம்களையும், வெளிநாட்டினரையும்  கொன்று குவிக்கவில்லை. போர் காரணமாகவே ஒரிய மக்களை கொலை செய்துள்ளார். அதிலும் போர் முடிந்த பின் அவர் மனம் மாறிய கதை யாவரும் அறிந்ததே. ஆனால் திப்பு சுல்தான்?

அவரை பற்றிய கேள்விப்பட்ட  செவி வழி செய்தி அவரின் ஆட்சிமுறைக்கு  சிறிய உதாரணம். தமிழகத்தில் தேவாங்கர் என்ற ஜாதியை சேர்ந்த மக்கள் உண்டு. தமிழகம் முழுக்க பரவி வாழும் இந்த மக்களின் பூர்வீகம் கர்நாடகா. அந்த மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததன் காரணம் பஞ்சம் பிழைக்க அல்ல. அந்த கால கட்டத்தில் திப்பு சுல்தானின் கட்டாய  மத மாற்றத்தில் இருந்து தப்ப. முஸ்லிம்களை தவறியும் கொல்லாத அசோகரின்  சகிப்புத்தன்மையையும், ஹிந்துக்களை மதம் மாற்றியும் அகதிகளாகவும் அலைய விட்ட திப்புவின் சகிப்புத்தன்மையையும் எப்படி இவர்கள் ஒப்பிடுகிறார்கள். இது போல திப்பு  துன்புறுத்திய இந்துக்கள் இன்னும் எத்தனை பேரோ? செவிவழி செய்தியை எப்படி ஆதாரமாக கொள்வது என்று கேட்டால் ஹிந்து தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இங்கு இந்தியர்கள் தங்கள் வரலாறுகளை  முறையாக  ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் தாங்கள் அறிந்ததை தங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறுவதில்லை.

ஹிந்து நாளிதழ்(கட்டுரையாளர்) அடிக்கடி திப்புவின் தேசபக்தியை வேறு சிலாகிக்கிறது. அவர் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய தேச பக்தராம். 
தனது மக்களையே கொடுமைப்படுத்திய ஒருவர், தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற போராடியதை எப்படி எப்படி தேசப்பற்று என்று எடுத்துக் கொள்ள முடியும்? நல்ல வேளையாக அவரின் சுதந்திர போர் வெற்றி அடையவில்லை. ஒரு வேளை அவர் வென்றிருந்தால் அவரிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியர்கள் இன்னும் கடுமையாக போராட வேண்டியதிருந்திருக்கும். 

போதாக்குறைக்கு அலா சிங் என்ற மன்னரை வேறு தனது சாட்சிக்கு அழைக்கிறது கட்டுரை. அலா சிங்கை தேசத்துரோகி என்று கூறாவிட்டாலும் அவரை தேசத் தலைவராக யாரும் கொண்டாடவில்லை. ஆனால் திப்புவை இந்தியாவின் கதாநாயகனாக முன்னிறுத்துவதுதான் பிரச்சினை. 

மோடியையும், ஹிந்துத்துத்வதையும் எதிர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா பத்திரிக்கை தர்மம்? முஸ்லீம் மன்னர்களை நாம் வேண்டுமென்றே கெட்டவர்களாக  சித்தரிக்கிறோம் என்றால் அக்பரை மட்டும் நாம் நல்லவர் என்று கூறுவது ஏன்? ஹிந்து நாளிதழ் மட்டும் இல்லாமல் பெரும்பாலான ஊடகங்களின் செயல்பாடும் ஒருதலைப்பட்சமாகவே உள்ளது. அந்த கட்டுரையாளரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் தமக்கு அரைகுறையாக தெரிந்த விஷயங்களை வைத்து கொண்டு முஸ்லிம் மன்னர்களை நியாயப்படுத்த அவர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். 


Sunday, November 1, 2015

ரூம் நம்பர் 125

ந்த அருமையான மாலைப் பொழுதில் திருச்சி காவேரி பாலத்தின் காற்று சுகமாக தாக்கியது. ராஜா கையில்  வைத்திருந்த வங்கி தேர்வுக்கான புத்தகத்தை பையில் வைத்து கொண்டான்.

“இன்னும் எத்தனை தூரம்டா நடக்க விடுவ? இந்த பேங்க் பரிட்சைய மதுரைல வைக்காம திருச்சில வச்சு சாவடிக்கிறான்”

“ஏண்டா நொந்துகுற. திருச்சி எத்தனை அழகு பாரு. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா ஸ்ரீரங்கம் போய் ரங்கநாதரை பாக்கலாம்”

 “நீ ஸ்ரீரங்கம் போக காரணம் ரங்கநாதரை பார்க்க இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்”

“காரணம் எதுவா இருந்தா என்ன?எப்பிடியும் பேங்க் பரீட்சை ஊத்த போகுது. திருச்சியை சுத்தி பாத்துட்டு போகலாம் வா”

“சரி அதுக்காக நடந்தேவா சுத்தி பாக்குறது. அங்க பஸ் வருது வா ஏறிக்கலாம்”

ருவரும் திருவானைக்காலில் இறங்கினோம்.

“என்னடா ஸ்ரீரங்கம் முன்னாடியே இறங்க சொல்லிட்ட. சிவனை முதல்ல கும்பிடலாம்னா”

“அதெல்லாம் இல்ல. இங்க ஒரு ஹோட்டல்ல நெய் தோசை நல்லா இருக்குமாம். பேப்பர்ல எல்லாம் வந்திருக்கு. அந்த ஹோட்டலுக்கு போவோம்னு”

“என்ன ஹோட்டல் அது?”

“ராமனுஜம் ஹோட்டல்”

“எங்க போய் தேடுவ”

“விசாரிக்கலாம்”

ந்த ஹோட்டலை கண்டுபிடிப்பது அத்தனை கடினமான காரியமாக இல்லை. பழைய வீடு ஒன்றில் இயங்கி கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுக்க பிரபலமான ஹோட்டல் என்பதற்க்கான அடையாளம் சிறிதும் இல்லை. தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த பழைய கடிகாரமும் ஒளி அமைப்பும் 1970ம் ஆண்டிலேயே அந்த ஹோட்டல் மட்டும் நின்று போனது போல தோற்றத்தை ஏற்படுத்தியது. வெள்ளை வேட்டி,கை பனியனுடன் ஊழியர்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“என்னடா. இதான் அந்த பிரபல ஹோட்டலா! நம்ம  ஊரு பரோட்டா கடை மாதிரில இருக்கு”

“எப்ப பாரு பரோட்டா கறி நினைப்புதான்.”

அங்கிருந்த மேஜையில் அமர்ந்தோம்  

“என்னடா இது. பழைய டேபிள். பேசாம அந்த கூண்டுக்குள்ள போய் உக்காரலாம் வா”

அவன் விரல் நீண்ட திசையில் பார்த்தேன். ஒரு இரும்பு  கூண்டு போன்ற அமைப்பு. அதில் சிலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
“என்னடா இது கூண்டு?”

“மத்த ஹோட்டல்ல ஏசி ரூம் இருக்குமே. அது மாதிரி இங்க இது போல”

“வா அங்கேயே போய் உக்காரலாம்”

இருவரும் எழுந்து கூண்டை நோக்கி நடந்தோம். கூண்டின் உள்ளே நுழையப்போகும் நேரத்தில் ஒரு  ஒரு வெள்ளை பனியன் வந்து மறைத்தார்.

“உள்ள இடம் இல்ல அண்ணா. நீங்க அங்க உக்காந்துக்குறேளா?”

“இல்லங்க அங்க பாருங்க. இன்னும் நாலு பேரு உக்காரலாம்” என்றான் ராஜா.

“அந்த பெஞ்சுக்கு எல்லாம் நாங்க சப்ளை பண்றது கிடையாது”

“வாடா ராஜா. இடம் இல்ல போல” நாங்கள் பின்னால் நடந்த நொடியில் இரண்டு புதியவர்கள் அந்த கூண்டுக்குள் நுழைந்து நாங்கள் அமர சென்ற இடத்தில் அமர்ந்தனர்.

“என்னங்க அந்த டேபிள்க்கு சப்ளை இல்லன்னு சொன்னீங்க. அவங்களை மட்டும் விட்டுடீங்க” என்றேன்.

“அவா எங்க ரெகுலர் கஸ்டமர்.”

“நாங்களும் இன்னைக்கு இருந்து ரெகுலர் ஆகிக்குறோம். எங்களை உள்ளே விடுங்க”

“சொன்ன புரிஞ்சுகோங்க. பிரச்சினை பண்ணாதீங்க”

“என்ன நாங்க பிரச்சினை பண்றோமா. ராஜா புரியுதா. அந்த கூண்டுக்குள்ள அவங்க ஆளுங்க மட்டும்தான் போகணுமாம். என்ன நான் சொல்றது சரிதான?”

“ஆமா அப்பிடிதான். இதெல்லாம் இங்க இருக்குற பழக்கம்”

“நாங்களும் உங்க ஆளுங்கதான். பார்த்தா தெரியல”

“எல்லாரும் இங்க வாங்களேன். இவா தகராறு பண்றா” பனியன் கூப்பிட்டதும் அனைத்து பணியாட்களும் எங்களை சூழ்ந்தனர். எனக்கு சற்று பயம் வந்தது.

“வாடா ராஜா, போய்டலாம்”

“இதெல்லாம் இப்பிடியே விடக் கூடாது. இவங்க பண்றது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா. போலீஸ்கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்தா அவ்ளோதான்”
இப்போது அங்கிருந்தவர்களிலேயே வயதானவர் பேசத் தொடங்கினார். 

“தம்பிகளா. இப்போ உங்களுக்கு உள்ள போகணும் அவ்ளோதானே. போய் நன்னா சாப்பிடுங்கோ”

எங்கள் முகத்தில் பெருமிதம். புரட்சி செய்து எதையோ சாதித்தது போல் உணர்ந்தோம்.

“தாத்தா. மனுசங்க எல்லாரும் சமம்தான். இனிமே இப்பிடி எல்லாம் பிரிச்சு வைக்காத. வாடா போகலாம் என்று ராஜா சாப்பிடாமலே வெளியே நடந்தான்.

“எண்டா சாப்பிடாம வந்த?”

“நாம அந்த கூண்டுக்குள்ள போனா நாம உக்காந்தா இடத்தை கழுவி விடுவானுங்க. எதுக்கு அவங்களுக்கு கஷ்டம். அதான்”

ருவரும் திருச்சி வந்து சேர்ந்தோம். தங்குவதற்கு  இடம் தேடி அங்கிருந்த லாட்ஜ்களை சலிக்கத் தொடங்கினோம். எங்கும் இடம் கிடைக்காமல் அங்கிருந்த சிறிய லாட்ஜ் ஒன்றில் கடைசியாக முயற்சி செய்தோம். அங்கிருந்த மீசைக்காரரின் கை காலை பிடித்தாவது இடம் வாங்கி விட முடிவு செய்து அவரை அணுகினோம்.

“சார். நாளைக்கு பரீட்சை. எப்பிடியாச்சும் அட்ஜஸ்ட் செஞ்சு ஒரு ரூம் குடுத்தா நல்லா இருக்கும்”

“எல்லாம் புல் ஆயிடுச்சே தம்பிகளா”

“கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார்”

“சரி ஒன்னு செய்யுங்க. இங்க ஒரு ரூம்ல உங்களை மாதிரியே பரீட்சை எழுத வந்த மூணு பசங்க தங்கி இருக்காங்க. பாவம் ஏழை பசங்க போல. வாடகை அதிகம்னு வருத்தப்பட்டாங்க. உங்களுக்கு ஓகேன்னா  அவங்க கூட தங்கிக்கோங்க. வாடகை ஷேர் செஞ்சுக்கலாம்”

“ரொம்ப சந்தோஷம் சார். நாங்க அவங்க கூடவே தங்கிக்கிறோம்”

“ரூம் நம்பர் 125”

இருவரும் மாடி ஏறி அந்த அறையை அடைந்தோம். கதவை தட்டினோம். எங்கள் வயதை ஒத்த ஒருவன் வந்து கதவை திறந்தான். அறையில் இன்னும் இரண்டு பேர்.

“என்ன சார்” என்றான் அவன்.

“சாரி.ரூம் மாறி வந்துட்டோம்” கூறிவிட்டு ராஜா வேகமாக மீண்டும் கீழே இறங்கத் தொடங்கினான்.

“டேய்! என்னடா ஆச்சு. நமக்கு தங்க இந்த இடம் கிடைச்சதே பெருசு”
ராஜா பதில் சொல்லவில்லை.

“என்னடா பிரச்சினை?”

“அவங்களை பார்த்தயா? கீழ் ஜாதி பசங்க மாதிரி இருக்காங்க. அவங்க கூட எப்பிடி தங்குறது” என்றான். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...