Friday, February 20, 2015

வாட்ஸ்அப் காப்பிகள் – தீர்விருந்தால் சொல்லவும்

ந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. பொழுதுபோக்குக்காக எதையோ கிறுக்குவோம் என்று தொடங்கி என்ன எழுதுவது  என்று தெரியாமல் என்னென்னவோ எழுதி ஒருவாறாக செட்டில் ஆகவே ஒரு வருடம் ஆகிவிட்டது. இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை என்றாலும்  எழுத தொடங்கும்போது நான் கொண்டிருந்த லட்சியம் இந்த வலைப்பூவுக்கென்று   ஒரே ஒரு வாசகரையாவது பெற்று விட வேண்டும் என்பதுதான். அந்த லட்சியத்தில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு பதிவையும் ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்றால் அதில் பத்து பேராவது இவன் எதையாவது உருப்படியாக எழுதி இருப்பானே என்று எழுதி படிக்கிறவர்கள் என்பது எனது கணிப்பு.

ஆரம்பத்தில் எல்லாம் எதையாவது எழுதி விட்டு பின்னூட்டங்கள் வந்து குவிந்து இருக்கும் என்று அடிக்கடி பார்த்து கொண்டே இருப்பேன். ஆனால் ஒரு கமெண்ட் வந்தாலே ஆச்சரியம். ஆனால் அந்த பின்னூட்டமும் பெரும்பாலும்  எழுதியதை படித்து பார்க்காமல் வந்த டெம்ப்லேட் வந்ததாகவே இருக்கும். பின்னர் போகப்போக பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது தவறு என்று புரிந்தது. நாமே எத்தனையோ பேரின் வலைப்பூக்களை படிக்கிறோம்;ஆனால் எத்தனை பேருக்கு பின்னூட்டம் இட்டிருப்போம் என்று மனதை சமாதானப்படுத்தி கொண்டேன். இருந்தாலும் என்னுடைய ஒரு வாசகரையாவது பெற்று விடுவது என்ற லட்சியத்தில்  வெற்றி பெற்றுவிட்டேனா  என்று எப்படி சரி பார்ப்பது என்று அறிய இயலவில்லை. பின்னர் கிடைக்கும் அத்தனை பாலோயர் விட்ஜெட்டுகளையும் வலைப்பூ பக்கத்தில் சேர்த்து ஒருவாறாக என்னுடைய லட்சியம் ஈடேறிவிட்டதை ஒருவாறாக அறிந்து கொண்டேன்.

சரி, இதற்கு ஏன் இத்தனை அலட்டல். ஏதோ இலக்கியத்தில் நோபல் பரிசு கிடைத்தது போல என்று நினைக்க வேண்டாம். இன்று காலையில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு தகவலே இந்த பதிவை எழுதுவதன் காரணம். நான் ஓராண்டுக்கு முன் எழுதிய “ஒரு கார்ப்பரேட் நீதிக்கதை”என்ற பதிவு  அப்படியே ஒரு வாட்ஸ்அப் க்ரூப் மூலம் வந்திருந்தது. என்னுடைய பதிவு பல பேரை சென்றடைந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் யோசித்து எழுதியது  வலைப்பக்கம் பெயர் குறிப்பிடப்படாமல் சுற்றி வருவது சிறிது வருத்தம்தான். இந்த வருத்தம் எப்படிப்பட்டது என்பதை காக்கா வடை திருடிய கதையை எழுதியவர் இன்றிருந்தால் அவரால் உணர முடியும். யார் கண்டது, என்னுடைய கதையும் நாளை பெயர் தெரியாதவர் எழுதியது என்று அடையாளப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் தமிழகத்தை சுற்றி சுற்றி வரலாம். 

என்னுடைய பதிவுகள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு  பேஸ்புக்கிலும், பிற தளங்களிலும் பயன்படுத்தப்படுவதை பார்த்து இருக்கிறேன். இருந்தபோதும் வாட்ஸ்அப்பின் ரீச் அவற்றை விட மிக ஆழம். தவிர எந்த நாளில் யாரால் எங்கிருந்து ஆரம்பித்து யாரால் பரப்பப்பட்டது என்று அறிய வாய்ப்பில்லை. ஒரே நாளில் ஒரு தகவல் லட்சக்கணக்கானவர்களை அடைந்து விடும். நாளை அந்த கதையை நான்தான் எழுதினேன் என்று சொன்னாலும் “போய்யா! காமெடி பண்ணிக்கிட்டு” என்ற ரீதியில்தான் பதில் வரும். இது என்னுடைய பிரச்சினையாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான பதிவர்கள் இதே போன்ற சூழ்நிலையை சந்தித்திருக்கலாம். யாராவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று.


ஆனால் இதிலும் ஒரு சந்தோஷம். படிக்கும் வழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது என்று எண்ணியிருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சியில் விற்கும் புத்தகங்களும் இது போல் பரப்பப்படும் வாட்ஸ்அப் மூலம் தமிழில் பரப்பப்படும் தகவல்களும் என்னுடைய எண்ணத்தை மாற்றி வருகின்றன. வாசகர்களுக்கு பிடிப்பது போல எழுதினால் சுஜாதா, ராஜேஷ்குமார் போல புகழ் பெறப்போகும் எழுத்தாளர்கள் வருங்காலத்திலும் தோன்றலாம். கற்காலத்தில்  தோன்றிய  தோன்றிய மொழி டிஜிட்டல் யுகத்தில் புது அவதாரம் எடுக்கும் என்று நம்புவோம். 


Saturday, February 14, 2015

ஸ்மிருதியின் காதல் கதை(கள்) !

ஸ்மிருதி. தமிழ் பெண்ணுக்கு இது புதுமையான பெயர்தான். பெயர் மட்டும் அல்ல அவளும் எனக்கு ஒரு புதிராகவே தெரிந்தாள்.அவள் இந்த அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. இது வரை என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. பெண்கள் தேடி வந்து பேச நீ பேரழகனா? என்று கேட்க வேண்டாம். சொந்த நாட்டை விட்டு நீங்கள் ஸ்வீடன் வந்து இருந்தீர்கள் என்றால், வந்து  இடத்தில் ஒரு தமிழனை பார்த்ததும்  இயல்பாக உங்களுக்கு  ஒரு நட்புணர்வு வருமே. அப்படி எதுவும் அந்த  பெண்ணிற்கு வந்தது போலவே தெரியவில்லை. என்னுடன் மட்டும் இல்லை. மற்ற வெள்ளைக்காரர்களுடனும் அந்த பெண் அதிகம் பேசுவதில்லை. தொழில் நிமித்தம் பேசுவதோடு சரி.

அந்த பெண்ணின் மேல் எனக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்று கேட்காதீர்கள். தமிழ் பேச ஒரு துணை கிடைத்தது என்ற ரீதியிலேயே அந்த பெண் மேலான என்னுடைய அக்கறை தொடங்கியது .எங்கேயோ மதுரையில் பிறந்து மென்பொருள் படித்து பின்னர் விருப்பமே இல்லாமல் கரன்சி நோட்டுகளுக்காக  ஸ்வீடன் கிளம்பினேன். கிளம்பினேன்  என்பதை விட என் கம்பெனி வலுக்கட்டாயமாக என்னை அனுப்பி வைத்தார்கள் என்பதே உண்மை. இந்த ஊர்காரர்களிடம் பேசி மென்பொருள் எழுதி தருகிறோம் என்று மூளைசலவை செய்து  காசு பிடுங்க நான்தான் அவர்களின் முதல் தேர்வு. இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்து திக்கி திணறி ஒரு பின்னர் சமாளித்து விட்டேன். தமிழ் பேச ஆள் இல்லாமல் உப்பு சப்பில்லாமல் சாப்பிட்டு அலுத்து இருந்த நேரத்தில் இன்னொரு பெண்ணும் சென்னையில் இருந்து இங்கே வருகிறாள் என்றதும் எனக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.

ஸ்மிருதியை முதல் நாள் அலுவலகத்தில் பார்த்ததும் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது. பெரிய அழகி என்று சொல்ல முடியாது. இருந்தாலும் களையான முகம். அழகான பெரிய கண்கள். கண்களை வைத்தே பெரிய நடிகை ஆகி விடலாம். அப்படி எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்கும் கண்கள். இருந்தாலும் அந்த  கண்களில் சோகம் மட்டுமே இருந்ததாக உணர்ந்தேன். புதிய இடம் தந்த பயமாக இருக்கலாம். ஆனாலும் அவள் நடவடிக்கைகளில் எந்த பயமும் இல்லை. சோகம் மட்டுமே அப்பட்டமாக தெரிந்தது. எப்படியும் இந்த அலுவலகத்தில் தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சென்னையிலேயே விசாரித்திருப்பாள். எப்படியும் என்னை தேடி வருவாள் என்று எதிர்பார்த்து அவளையே கவனித்து கொண்டிருந்தேன். இறுதியில் ஏமாந்தேன்.

இரண்டாம் நாள் நானே முதல் அடி எடுக்க தீர்மானித்தேன். மதிய நேரத்தில் அவளின் இடத்தை  நோக்கி சென்று “ஹலோ!” என்றேன். அவளும் செயற்கையான புன்சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து கொண்டே “ஹலோ” என்றாள்.

“நானும் சென்னைதான். ஸ்வீடன் வந்து இரண்டு வருசமாச்சு”. பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்தாள். அந்த செயற்கையான சிரிப்பு முகத்தில் அறைவது போல இருந்தது. “செட்டில் ஆகுற வரைக்கும் ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க” என்றேன். “தேங்க்ஸ்” என்று ஒரே வார்த்தையில் பதில் வந்தது. எனக்கு சற்று எரிச்சல் வந்தது. தரையில் எதையோ தேடுவது போல பாவனை செய்தேன். “என்ன ஆச்சு?” என்றாள். “இல்ல நீங்க பேசும்போது முத்து எதாவது உதிர்ந்திருக்கான்னு பார்த்தேன்” என்றேன். சிரிப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றினாள். தோல்வியுடன் வீட்டுக்கு திரும்பினேன்.

நாட்கள் உருண்டு ஓடின. அந்த பெண்ணுடன் திரும்ப பேச முயலவில்லை. அந்த பெண் என்னுடன் மட்டும் இல்லை, அனைவரிடமும் அப்படிதான் இருக்கிறாள் என்பதில் ஏதோ ஒரு குரூர சந்தோசம். இருந்தாலும் எதற்காக எப்பொழுதும் சோகமாக இருக்கிறாள் என்ற கேள்வி மனதை குடைந்து கொண்டே இருந்தது. வெளியே பனி கொட்டும் நேரங்களில் அவளின் சோக முகத்தை பார்ப்பது மனச்சோர்வு அளிப்பதாக இருந்தது. ஒரு நாள் சென்னை அலுவலகத்து நண்பர்களை  தொலைபேசியில் அழைத்து அந்த பெண்ணை பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். வேலை சுமையில் அதையும் செய்ய முடியவில்லை.

இப்படி ஸ்மிருதியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது இரண்டு நாட்கள் அவள் காணாமல் போனாள். அலுவலகம் திரும்பியபோது மணிக்கட்டுக்கு சற்று மேல் பெரிய கட்டு. அதே அழுது வடிந்த முகம். பாவம், எப்படியோ காயம் பட்டுவிட்டது போலும். தனியாக வேறு இருக்கிறாள். பொதுவாக விசாரித்துவிட்டு வரலாம் என்று தேடி போனேன்.

“என்னங்க கைல கட்டு” என்றேன்.

“காய் நறுக்கும்போது வெட்டிகிட்டேன்”

“பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க. காய் வெட்டும்போது விரலை வெட்டலாம். மணிக்கட்டுக்கு மேல எப்படி வெட்டிக்குவீங்க” இந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு எனக்கு அவளிடத்தில் உரிமை இல்லை. ஒரே நாட்டில்  இருந்து வந்து இங்கே வேலை செய்கிறோம் என்பதை தவிர அவளுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இருந்தபோதும் அவள் என்னிடம் பொய் சொல்ல முயல்கிறாள் என்பதே எனக்கு அந்த கேள்வியை கேட்க போதுமானதாக இருந்தது. எப்படியும் கத்தி அவமானப்படுத்த போகிறாள். குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் கத்தி தொலையட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். இல்லையென்றால் வெள்ளைக்காரன் எதையாவது புரிந்து கொண்டு வேலைக்கே ஆப்படித்து விடுவான்.

“தற்கொலை செஞ்சுக்கலாம்னு பார்த்தேன். ஆனா சரியா வெட்டிக்கலை போல. கொஞ்சமா ரத்தம் வந்து நின்னு போச்சு. அப்புறம் வலி பொறுக்காம ஹாஸ்பிடல் போய்டேன்” என்றாள். சற்றும் அலட்டிக் கொள்ளாமல்.

“என்னங்க சொல்றீங்க. தற்கொலை முயற்சி செஞ்சேன்னு சாதாரணமா சொல்றீங்க?”

“வேற எப்படி சொல்றது?”

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. வந்த இடத்தில வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் தெரியாமல் இவளிடம் மாட்டி கொண்டேனோ? இந்த மாதிரி நேரத்தில் என்ன சொல்லுவது என்று கூட தெரியவில்லையே. ஆங். இப்படி சொல்லலாம். “வாழ்க்கைல ஆயிரம் பிரச்சினை இருக்கும்ங்க. அதுக்காக தற்கொலை ஒரு தீர்வே இல்லை”

“பின்ன வேற எதுதான் தீர்வு?”

“உங்களுக்கு ஒரு இருவத்தஞ்சு வயசு இருக்குமா. இன்னும் எவ்வளவோ இருக்கும் வாழ்க்கைல. இப்படி கடவுள் தந்த வாழ்க்கைய கோழைத்த...”

“கொஞ்சம் நிறுத்துறீங்களா ப்ளீஸ். எப்பவாச்சும் தற்கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்கீங்களா? அப்போ தெரியும் அதுக்கு எத்தனை தைரியம் வேணும்னு. ரொம்ப நாளா பயந்து பயந்து ரெண்டு நாள் முன்னாடிதான் எனக்கே தைரியம் வந்துச்சு”

“சரிங்க. அதுக்காக நீங்க செய்யுறது சொல்யூசன் இல்ல” என்றேன்.

“ஒரு உதவி செய்ங்க கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரலாமா. யாரு கூடவாச்சும்  பேசணும் போல இருக்கு ப்ளீஸ்” என்றாள். மூளை வேண்டாம், மாட்டி கொள்ளாதே என்றது. இறுதியில் இதயமே ஜெயித்தது.

ருகில் இருந்த ஒரு பூங்காவுக்கு என்னை அழைத்து சென்றாள். எதுவுமே பேசவில்லை. “என்னங்க. ஏதோ பேசணும்னு சொன்னீங்க?” என்றேன்.

“நான் ஸ்வீடன் வந்தது பெரிய தப்புங்க. என்னோட பாய் பிரெண்ட் என் கூட சண்டை போட்டான். நான் போக கூடாதுன்னு. நான்தான் கேக்கல. எப்படியும் சமாதானம் ஆகிடுவான்னு நெனச்சேன். ஆனா இந்த மூணு மாசத்துல ஒரு நாள் கூட என் கூட பேசல.”

“அடச்சே. இதுக்கு போய் தற்கொலையா? என்னங்க நீங்க. ஒயர் காதல் கான்செப்ட் எல்லாம் பூவே உனக்காக காலத்திலேயே எக்ஸ்பைரி  ஆகிடிச்சு. இப்போ போய் லவ் பெயிலியர் பத்தி எல்லாம் பேசிக்கிட்டு”

“இல்லங்க அவன் எப்படி என்னை லவ் செஞ்சான்னு தெரியாது. ஆனா நான் அவனை ரொம்ப லவ் பண்ணேன். நாங்க ரெண்டு பெரும் ஒரே நேரத்தில நம்ம கம்பெனில வேலைக்கு சேர்ந்தோம். ஒரே டீம். முதல் நாளே எவ்ளோ அழகா ப்ரோபோஸ் செஞ்சான் தெரியுமா?”

“சொல்லுங்க”

“உங்க பேரு என்னங்கன்னு கேட்டான்?”. “ஸ்மிருதி” அப்படின்னேன். “உங்க அப்பா புத்திசாலி போல. என்ன அழகா பேரு வச்சு இருக்காரு” அப்படின்னான். “அப்போ நீங்களும் உங்க பொண்ணுக்கு அதே பேரை வச்சுடுங்க”ன்னு சொன்னதும் “அது முடியாதுங்க. எப்படி அம்மாவுக்கும், பொண்ணுக்கும் ஒரே பேரை வைக்க முடியும்” அப்படின்னு கேட்டான்.

“புரியலையே”

“எனக்கும் அப்போ புரியல. கொஞ்சம் யோசிச்சு பாருங்க புரியும்”

 தொடரும்


Monday, February 9, 2015

பெண்களுக்கு ஏன் சூர்யாவை பிடிக்கிறது ?

சில நாட்களாகவே என் மனதில் உள்ள  ஒரு கேள்வி பெண்களுக்கு சூர்யாவை ஏன் பிடிக்கிறது என்பதுதான். எந்த பெண்ணிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் தயங்காமல் சூர்யா என்று சொல்கின்றனர். சூர்யாவின் நடிப்பை பற்றியோ அழகை பற்றியோ எந்த சந்தேகமும் இல்லை. இருந்த போதும் எப்படி எல்லா பெண்களையும் கவர்ந்தார் மனிதர் என்பதுதான் ஆச்சரியம். அரிதாக மற்ற நடிகர்களின் பெயர்களை சிலர் கூறினாலும் “சூர்யாவையும் பிடிக்கும்” என்று இழுத்து கொண்டேதான் முடிக்கின்றனர். பத்து வயது முதல் முப்பது வயது வரை பெரும்பாலான பெண்கள் சூர்யா ரசிகைகளாகவே உள்ளனர்.

ஒரு வேளை சிக்ஸ்பேக்ஸ்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் ஒரு பெண்ணிடம் கேட்டேன். சூர்யாவை எந்த படத்திலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று. நான் எதிர்பார்த்த பதில் “அயன்” அல்லது “வாரணம் ஆயிரம்”. ஏனென்றால் ஆனால் அந்த பெண் சொன்ன பதில் “பூவெல்லாம் கேட்டு பார்”. அந்த படம் வெளிவந்தபொழுது அந்த பெண்ணுக்கு பத்து வயதுதான் இருந்திருக்கும். அந்த படம் சூர்யாவுக்கே எவ்வளவு பிடிக்கும் என்பது சந்தேகம்தான். ஆனால் பாருங்கள், அந்த பெண்ணுக்கு அந்த படம் பிடித்து  இருக்கிறது.

இந்த ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்து ஒரு பெண்ணிடம் கேட்டே விட்டேன் “அப்படி சூர்யாவிடம் என்ன ஸ்பெசலாக இருக்கிறது என்று உங்களுக்கு எதற்கு சூர்யாவை பிடிக்கிறது” என்று.

“எதற்காக கேட்கிறீர்கள்” என்றார் அந்த பெண்.

“இதை தெரிந்து கொண்டால் பெண்களை புரிந்து கொள்ளலாம் என்றுதான் ” என்றேன்.

அந்த பெண் சிறிது நேரம் யோசித்தார். “ஆண்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கிறது?” என்று கேட்டார்

“பெரும்பாலும் விஜய், அஜித் என்று சொல்வார்கள்” என்றேன்.

“சரி. ஏன் விஜயை பிடிப்பவர்களுக்கு அஜித்தை பிடிக்கவில்லை. அஜித் பிடிப்பவர்களுக்கு விஜயை பிடிப்பதில்லை” என்று கேட்டார்.

“காரணம் சொல்வது கடினம். ஒரு வேளை விஜயை பிடிக்காமல் போனதால் அஜித்தை பிடித்து இருக்கலாம். அல்லது  அஜித்தை பிடிக்காமல் போனதால் விஜயை பிடித்து இருக்கலாம்” என்றேன்.

“அதுதான் ஏன்? இருவரின் கதை தேர்வு செய்யும் விதத்திலும் ஒரு வித்தியாசமும் இல்லை. நடிப்பிலும் பெரிய வித்தியாசம் ஏதும் சொல்ல முடியாது. பின்னர் ஏன்?” என்றார்.

“இதற்கு பதில் சொல்ல வரலாற்றை திருப்பி பார்க்க வேண்டியது இருக்கும். ஆரம்ப காலங்களில் ஒருவர்  நடித்த படங்கள் சில ஆண்களுக்கு பிடித்து இருக்கும். அதே நேரத்தில் மற்ற சில ஆண்களை வெறுப்படித்து இருக்கலாம் ” என்றேன்.

“பாருங்கள். பெண்களுக்கு  சூர்யாவை பிடித்திருக்கிறது. ஆனால் பாதி ஆண்களுக்கு பிடித்த நடிகரை இன்னொரு பாதி ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அப்படியானால் ஆண்களை அறிந்து கொள்வதுதானே கடினம்?” என்று கேட்டார்.

“யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால்  நீங்கள் எப்பொழுதாவது ஆண்களை அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?”  என்று கேட்டேன்

“நான் எதற்கு செய்ய வேண்டும்” என்று கேட்டு முகத்தை திருப்பி கொண்டார்.

உண்மையை சொல்லப் போனால் ஆண்களோ பெண்களோ மனிதர்களை  புரிந்து கொள்வதுதான் கடினம். ஆனால் பாருங்கள் ஆண்கள் எப்பொழுதும் பெண்களை புரிந்து கொள்ள முயன்று தோற்று பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது என்று எழுதி வைத்து விட்டனர். ஆனால் ஆண்களை புரிந்து கொள்ள பெண்கள் முயல்வதில்லை. ஆண்களும் கூட.


மேற்கண்ட பதிவில் பாதி கற்பனை 


Wednesday, February 4, 2015

உலகக்கோப்பை இந்திய அணி - ஒரு பார்வை

லகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  நெருங்கி விட்டது. இந்த முறை இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. லீக் சுற்றை தாண்டி முன்னேறினாலே பெரிய சாதனை என்ற அளவிலேயே அணியின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்து விட்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்ரிக்க அணிகள் நல்ல பார்மில்  உள்ளன. இந்திய அணியோ  பேட்டிங்கில் பலவீனமாகவும், பந்து வீச்சில் மிக  பலவீனமாகவும் உள்ளது.

இந்திய அணியின் வீரர்களை பற்றி பார்க்கலாம். முதலில் சிகர் தவான். நீ எப்படி வேண்டுமானாலும் பந்து வீசிக் கொள் , நான் அவுட் ஆகி காட்டுகிறேன் பார் என்ற ரீதியில் ஆடிக் கொண்டிருக்கிறார். சமீப காலங்களில் ஒரே மாதிரி ஆட்டம் இழப்பது இவர் மேலான  நம்பிக்கையை மேலும் குறைக்கிறது.

அடுத்தவர் ரஹானே. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் ஒரு நாள் போட்டிகளில் இவர் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இதுவரை ஒரு நாள் போட்டிகளில் மிகப் பெரிய ஸ்கோர் எதுவும் எடுத்தது இல்லை. துவக்க ஓவர்களில் எதிரணியின் பந்து வீச்சை ஓரளவு சமாளித்தாலும், ரன்களை உயர்த்த முயலும்போது அவுட்டாகி விடுகிறார். இவரிடம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

கோலியை பற்றி கூற வேண்டுமானால் சமீபத்திய முத்தரப்பு தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அதிலிருந்து விரைவாக மீண்டு வந்து ரன் குவிப்பார் என்று நம்பலாம். அவரின் திறமை அப்படிப்பட்டது.

ரோஹித் ஷர்மா ஒரு கணிக்க முடியாத வீரர். எப்போது எப்படி ஆடுவார் என்று கணிக்க முடியாது.  அவருடைய அதிர்ஷ்ட தினத்தில் அணியை தனியாளாக வெற்றி பெற செய்யக் கூடியவர்.

அம்பதி ராயுடு அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாதவர். நன்றாக ஆடக் கூடியவர்தான். இருந்தபோதும் IPL போட்டிகளில் கவனித்தவரை இவர் எளிதில் பொறுமை இழக்க கூடியவர். உலகக்கோப்பையின் பதட்டமான கணங்களை எப்படி கையாளப் போகிறார் என்பது கேள்விக்குறி.

சுரேஷ் ரெய்னா முத்தரப்பு தொடரில் சாதிக்க தவறினாலும் தனது தவறுகளை உணர்ந்து விரைவில்  சரி செய்து கொண்டு விடுவார். உலகக்கோப்பையில் நன்றாக ஆடுவார் என்றே நம்பலாம்.

ஒரு நாள் போட்டிகளில் தோனியின் பேட்டிங் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. இவர் மோசமான பார்மில் இருந்த நாட்கள் மிகக் குறைவு. இவரின் கேப்டன்ஷிப்பும் அணிக்கு மிகப் பெரிய பலம்.

ஜடேஜா நன்றாக பந்து வீசி எதிரணியை திணற செய்வார், ஆனால் சுழலுக்கு சாதகமான பிட்சுகளில் மட்டும். ஆஸ்திரேலியாவில் இவரின் பந்து வீச்சு எதிரணிக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆஸ்திரேலியாவில்  பேட்டிங் எடுபடுவதும் சந்தேகம்தான்.

ஸ்டூவர்ட் பின்னியின் தேர்வு மிகவும் சர்ச்சை கிளப்பிய ஒன்று. ரோஜர் பின்னியின் மகன் என்பதால் வாய்ப்பு பெற்றார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் எனக்கென்னவோ  தோனி போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் இவர் நன்றாகவே ஆடுவார் என்றே தோன்றுகிறது. பந்து ஸ்விங் ஆகும் மைதானங்களில் இவரை சமாளிப்பது கடினம். பேட்டிங்கிலும் விரைவாக இருபது, முப்பது ரன்களை சேர்த்து விடுவார்.

அக்சர் படேலை சுழல் பந்து வீச்சாளர் என்று கூற முடியாது. இருந்தபோதும் விரைவாக நேர்கோட்டில்  பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி விடுவார். ஆஸ்திரேலிய பிட்சுகளில், இவரின் உயரம் பந்துகளை அதிக பௌன்ஸ்  செய்ய உதவும். சுமாராக பேட்டிங் செய்வது கூடுதல் பலம்.

அஷ்வின் பந்து வீச்சில் ஏமாற்ற மாட்டார் என்று நம்புவோம். இருந்தபோதும் ஒரு நாள் போட்டிகளின் புதிய விதிகள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடியவை.

புவனேஸ்வர் குமார் வேகப்பந்து இந்திய வேகப்பந்து  வீச்சில் ஒரே நம்பிக்கை. மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் இவரை நம்பலாம். விக்கெட்டுகள் வீழ்த்த இயலாவிட்டாலும் ரன்களை கட்டுப்படுத்துவார்.

இஷாந்த் ஷர்மாவை பற்றி என்ன சொல்வது? ரிக்கி பாண்டிங் உச்சத்தில் இருக்கும்போது அவரை திணற வைத்ததை தவிர்த்து இத்தனை ஆண்டுகளில் எதுவும் பெரிதாக சாதித்தது போல் நினைவில்லை. சமீபத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியையும், சாம்பியன்ஸ் ட்ராபி பைனலையும் கணக்கில் சேர்க்காதீர்கள். முப்பது போட்டிகளில் விளையாடும்போது ஒன்றிரண்டு போட்டிகளில் தவறுதலாக சில விக்கெட்டுகள் விழுந்து விடும்.

உமேஷ் யாதவும், முஹம்மது சாமியும் நல்ல பந்து வீச்சாளர்கள்தான். ஆனால் மலிங்கா போலவோ, ஸ்டெயின் போலவோ அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சச்சின் இல்லாத குறை அப்பட்டமாக தெரிகிறது. கடந்த உலகக் கோப்பைகளில் அவர் ஒரு முனையில் உறுதியாக நின்று ஆட இன்னொரு முனையில் மற்றவர்கள் அவருக்கு துணையாக தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆடினால் போதும் என்ற வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு இல்லாததால் ஒவ்வொரு வீரருக்கும் அழுத்தம் இருப்பது போல் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். ஒருவர் தொடர்ந்து ரன் சேர்க்க  தவறினாலும் அது அணியின் வெற்றியை பாதிக்கும்.

தன்னம்பிக்கை  குறைவாக உள்ள வீரர்கள் குட்டி அணிகளுடன் ஆடி ரன் சேர்த்து மீண்டும் பார்முக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இருந்த போதும் பந்து வீச்சு மிகவும் கவலை அளிக்கும் விஷயம். இந்திய அணியின் கேப்டன், மற்ற அணிகளின் கேப்டன்களை விட நெருக்கடியான நேரங்களை  சிறப்பாக கையாளக்கூடியவர் என்பதே இப்போதைக்கு அணியின் ஒரே பலம். பார்க்கலாம் வேறு எதாவது அதிசயம் நடக்கிறதா என்று.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...