Saturday, August 31, 2013

ஒரு 'பிட்டு' காதல் கதை (U)

"அண்ணே! நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே"

"கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்."

"சரி சொல்லுங்க"

"இது என்னோட  காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்."

"என்னது படிச்சீங்களா?"

"சரி +2   க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு  புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா."

"அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே."

"டேய்! மூடிகிட்டு கதையை கேளு."

"சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா"

"புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்கா என்ன?"

"இப்பிடி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் பள்ளிகூடத்தில ரிவிசன் டெஸ்ட் வந்துச்சு. பரீட்சை எழுதலாமுன்னு போனவனுக்கு பெரிய அதிர்ச்சி"

என்ன ஆச்சு

"புதுசா வந்த பொண்ணு பேரு என்னோட பேருக்கு அடுத்து வரதால அவளை என்னோட டெஸ்க்ல உக்கார வச்சுட்டாங்க"

"அது அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சின்னு சொல்லுங்க"

மண்ணாங்கட்டி. வழக்கமா என் கிட்ட ஒரு பையன் உக்காந்து இருப்பான். நானும் அவனும்தான் பிட் ஷேர் செஞ்சுக்குவோம். இப்போ இவ கிட்ட இருந்தா "நான் எப்பிடி பாஸ் ஆகுறது."

"ஐயோ பாவம்!"

"கஷ்டம்தான்"

"ஒரு வழியா நானே கை வலிக்க பிட் எழுதி எல்லா பரீட்சையையும் சமாளிச்சிட்டேன். ஆனா கடைசி பரீட்சை பிசிக்ஸ். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டாங்க"

"ம்"

"நான் எழுதிட்டு போன பிட்டை வச்சு என்னால அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியல. லேசா  திரும்பி அவளை பார்த்தேன். அவ கடகடன்னு எழுதிகிட்டே இருக்கா."

"ஆமா! பொண்ணுங்க எப்பவுமே நல்லா படிக்கும்ல."

"அப்படிதான் நானும் நெனச்சேன். இப்போ நான் எழுதி இருந்த பதிலை வச்சு கட்டாயம் பாஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. சூப்பர்வைசர் அசந்த நேரமா பாத்து லேசா பெஞ்சை தட்டி அவளை திரும்பி பாக்க வச்சேன்."

"ஆகா! அண்ணல் நோக்கியதை அண்ணியும் நோக்குறாங்க போல"

"அவ திரும்பினதும் அவ கிட்ட லேசா பேப்பரை காட்டேன்னு சிக்னல் பண்ணேன்."

"பேப்பரை காட்டேன்னுதான சிக்னல் பண்ணீங்க"

"ஆமா!  பேப்பரைதான்"

"காட்டுனாங்கள"

"காட்டுனா"

"அப்போ அவங்க புண்ணியத்துல பாஸ் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க"

"கிழிச்சேன். பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்னு மட்டும்தான் அவ எழுதி இருந்தா"

"ஹா ஹா! அப்புறம் என்ன செஞ்சீங்க"

"என்ன செய்றது? ஏதோ பத்து,பதினஞ்சு மார்க்காச்சும் அவ எடுக்கட்டும்னு என் கைல இருந்த பிட்டை அவளுக்கு பாஸ் செஞ்சேன்."

"அவங்க வேணாமுன்னு சொல்லலியா"

"அவளா? அவ ஏதோ பிட் அடிக்கறதுல எக்ஸ்பெர்ட் மாதிரி அதை வாங்கி அவ்வளவு நேக்கா பிட் அடிச்சா. அவ மூஞ்சியை பாத்தா அவ பிட் அடிக்கிறான்னு எவனும் சொல்ல மாட்டான்."

"சரி! இதுல எங்க காதல்"

"இரு!  அவ என் கிட்ட பிட் வாங்குனதும்தான் எனக்கு அப்போதான் எனக்கு இவ கிட்ட லவ் சொல்ல இதுதான் சரியான நேரமுன்னு. ஒரு பேப்பரை எடுத்தேன். பென்சிலால ஒரு இதயத்தை வரைஞ்சு அதுல அம்பு விட்டேன். எழுதுன பேப்பரை அவ கிட்ட பாஸ் பண்ணேன்."

"பரீட்சை ஹால்லயா? ஏன் அவ்வளவு அவசரம்."

"இப்போ லெட்டர்  குடுத்தாதான் அவளால கத்தி ஊரை கூட்ட முடியாது. குடுத்த பேப்பரை வெளியே எடுத்துட்டு போய் அவங்க அப்பா கிட்ட போட்டு தரவும் முடியாது. திரும்ப என் கிட்டதான் குடுத்து ஆகணும். அதை நான் அழிச்சுட்டு ஏதாவது எழுதிட்டு கட்டி கொடுத்துடுவேன். ரிஸ்க் இல்லாம லவ்வை சொல்லிடலாம்."

"அபார மூளைண்ணே உங்களுக்கு. இந்த மூளையை படிப்புல காட்டி இருந்தா நீங்க பெரிய ராக்கெட் எஞ்சினியர்  ஆகி இருப்பீங்க. சரி அதை படிச்சுட்டு என்ன சொன்னாங்க"

 "நான் பேப்பரை குடுத்துட்டு அவ படிக்கிறாளான்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ அதை பாத்த உடனே இன்னொரு பேப்பரை எடுத்து பென்சிலால ஏதோ எழுதுனா. என் கிட்ட அந்த பேப்பரை பாஸ் செஞ்சா"

"என்ன எழுதி இருந்துச்சு அந்த பேப்பர்ல? லவ் ஓகே ஆயிடுச்சா"

"நானும் ஓகே சொல்லிதான் எழுதுறான்னு நெனச்சேன். ஆனா  இங்கதாண்டா ட்விஸ்ட். அவ அந்த பேப்பர்ல எனக்கு படம் வரைய சரியா வராது. நீங்க குடுத்த படத்தையே நான் கட்டி குடுத்துடறேன். நீங்க உங்களுக்கு வேற படம் வரைஞ்சுகுங்க அப்பிடின்னு எழுதி இருந்தா. அவளுக்கு எப்பிடி புரிய வச்சு அந்த பேப்பரை வாங்குறதுன்னு தெரியல. கடைசில கட்டியே குடுத்துட்டா"

"அடி பாவி! அவளுக்கு பிசிக்ஸ்க்கும், பயாலஜிகுமா வித்தியாசம் தெரியாது?"

"அந்த கூமுட்டைக்கு அதுவே தெரியலையே".

"அப்புறம் என்ன ஆச்சு? பேப்பர் திருத்தும்போது நீங்க ரெண்டு பேருமே கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா?"

"அது நடந்து இருந்தா கூட பரவாயில்லயே"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"பரீட்சை ரிசல்ட் வரும்போது நான் ஃபெயில். அவ பாஸ் ஆகி இருந்தா. இப்போ அவ அந்த பிசிக்ஸ் வாத்தியாரை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கா"

"அட பாவமே! பாவம்னே நீங்க. நீங்க குடுத்த லவ் லெட்டரால அந்த பொண்ணு ப்ரீத்தி பிசிக்ஸ் வாத்தியார் கூட சேந்து லைப்ல செட்டில் ஆகிடிச்சு. ரொம்ப சோகமான கதைதான்."

"ஆமாடா! இந்த மாதிரி ஒரு சோகம் யாரு வாழ்க்கையிலயும் வந்திடவே கூடாது."

Friday, August 30, 2013

ஜாதிப் பேய்கள்

பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் தெளிவாக கேட்டது . இந்த வழியில் நடந்து வந்தது தவறோ என்று தோன்றியது. துணைக்கு யாரும் இல்லாமல் சுடுகாட்டு வழியில் எவனாவது வருவானா? பகல்தானே என்ற அசட்டு துணிச்சலில் இப்படி வந்து சிக்கி கொண்டேனே.நாம் பயப்பட்டால் பேய்கள் நம்மை எளிதில் தாக்கி விடும் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. சற்று துணிவை வரவழைத்து கொண்டு திரும்பி பார்க்காமலேயே குரல் கொடுத்தேன் 

" நீ யாரு? நீ ஏன் என் பின்னாடியே வர்ற?"

"நான் உங்களோட நண்பன்தான். பயப்படாம திரும்பி என்னோட பேசுங்க". பதில் கூறியது ஒரு ஆண் குரல். திரும்பியவுடன் என்னை அடிக்க இந்த பேய் திட்டம் தீட்டுகிறதோ.

"நீ மனுசனா?"

"இல்லை. ஆனா மனுசங்களை விட நாங்க ரொம்ப நல்லவங்க. எனக்கு உதவுங்க ப்ளீஸ்"

"என்ன நான் உதவணுமா? உனக்கு என்ன பிரச்சனை?"

"காதல்தான் என்னோட பிரச்சனை. எங்க காதலை இந்த சுடுகாட்டுல இருக்கிற யாரும் ஏத்துகிற மாட்டேங்குறாங்க" என்றது அது. அட பாவமே. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டவன் போலும். நிச்சயம் மூர்க்கமான பேயாக இருப்பான். நிச்சயம் திரும்ப கூடாது.

"இங்க பாரு. நீ இறந்ததும் உன்னோட காதல் முடிஞ்சு போச்சு. உன்னோட காதலி இப்ப வேற யாரையோ கல்யாணம் செஞ்சுகிட்டு சந்தோசமா இருப்பா. இப்போ நான் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. என்னை விட்டுடு."

"இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. தயவு செய்து திரும்பி பாருங்க.  உங்களுக்கு எல்லாமே புரியும்" இப்போது அது கெஞ்சும் குரலில் கேட்டது. பகலில் பேய்களுக்கு சக்தி இல்லை என்று யாரோ சொல்லி கேட்டிருந்தேன். அந்த நம்பிக்கையில் ஆனது ஆகட்டும்   என்று திரும்பினேன். அங்கே வெள்ளை உடையில் ஒரு இளம் வயது ஆணும், பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள். பெண் தனது கூந்தலை முகத்தின் முன் போட்டு முகத்தை மறைத்து வைத்திருந்தாள். எனக்கு இப்போது பயம் சற்று  குறைந்து இருந்தது.

"யாருப்பா நீங்க" சற்று குழைவாகவே கேட்டேன்

"தயவு செஞ்சு எங்களுக்கு உதவுங்க. நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம். நாங்க ரெண்டு பேரும் வேற வேற ஜாதிங்கறதால இந்த சுடுகாட்டுல்ல எங்க காதலை ஒத்துக்க மாட்டேங்குறாங்க."

"என்னது. செத்த அப்புறமுமா ஜாதி பாக்குறாங்க?"

"சாவு மனுசங்களுக்கு மட்டும்தான். ஜாதி எப்பவுமே சாகுறது இல்ல "

"சரி இதுல நான் எப்படி உங்களுக்கு உதவி பண்ண முடியும்"

" பகல்ல சுடுகாடுல்ல எல்லா பேயும் தூங்கிகிட்டு இருக்கும்போது நாங்க எங்க கல்லறையை விட்டு ஓடி வந்துட்டோம். ஆனா இந்த நேரத்துல்ல எங்களால இந்த சுடுகாட்டு எல்லையை தாண்டி போக முடியாது.  என்ன செய்றதுன்னு நாங்க முழிச்சுகிட்டு இருக்கும்போது நீங்க வந்தீங்க. நீங்க எங்களை கூட்டிகிட்டு பக்கத்துக்கு ஊரு சுடுகாட்ல விட்டுட்டா நாங்க பிழைச்சுக்குவோம். ப்ளீஸ்"

எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. யோசித்தேன். இவர்களை நம்பலாமா? என்  இரத்தம்  குடிக்க இது தீட்டும் சதி திட்டமா? இருக்காது. என்னை ஏதாவது செய்வதாக இருந்தால் இது நேரடியாகவே செய்து விடலாமே? நான் அந்த ஆண் பேயின் கண்களை பார்த்தேன். பாவம்! பேய் முழி முழித்து கொண்டிருந்தான்.

"சரி நான் உங்களுக்கு உதவி செய்றேன். உங்களை நான் எப்படி வெளிய கூட்டிகிட்டு போறது"

"அங்க ஒரு பாட்டில் இருக்கு பாருங்க. நாங்க ஆவி வடிவம் எடுத்து அதுக்குள்ள நாங்க போய்க்கிறோம். எங்களை அப்பிடியே நீங்க தூக்கிகிட்டு கொண்டு போய்டுங்க"

"சரி பக்கத்துக்கு ஊரு சுடுகாடுல்ல உங்களுக்கு கல்லறை இருக்காதே. எங்க தங்குவீங்க."

"அங்கே ஏதாவது ஒரு மர பொந்துல வச்சாவது இவளை காப்பாத்துவேன் சார்". அவன் சொன்ன பதிலில் சற்று உருகிவிட்டேன்.

"சரி சீக்கிரம் உள்ள போங்க"

அவர்கள் உள்ளே போய் விட்டார்கள். எடுத்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். சுடுகாட்டை விட்டு சற்று தூரம் வெளியே வந்த பின்தான் எனக்கு உரைத்தது.

"ரெண்டு  பேரும் வெளியே வாங்க". மூடியை திறந்து விட்டு அவற்றை அழைத்தேன். அவை வெளியே வந்தன.

"என்ன ஆச்சு"

"ரெண்டு பேரும் ஒரே பாட்டிலுக்குள்ள போய்டீங்க. எதாச்சும் தப்பு தண்டா செஞ்சுடீங்கன்னா?" நான் சொன்னவுடன் அந்த பெண் பேய் வெக்கப்பட்டது அவளின் அடர்ந்த கூந்தலை தாண்டியும் வெளியே தெரிந்தது.

"நீ ஏன் முடியை முன்னாடி போட்டு இருக்க?" அந்த பெண் பேயிடம் கேட்டேன்.

"சுடுகாட்ல இதான் லேட்டஸ்ட் ஃபேசன்." 

"சரி! நீங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து கல்லறையா?"

"அது எப்பிடி? நாங்க வேற வேற ஜாதி ஆச்சே. அவ  சுடுகாட்டு வடக்கு பக்கம். நான் தெற்கு பக்கம். நான் தினமும்  இவ ஏரியா பக்கம் போய் இவளை டாவடிப்பேன். ஆரம்பத்துல்ல ஓவரா அலட்டிகிட்டா " அவன் இதை சொன்னதும் அந்த பெண் பேய் அவனை குத்துவது போல் பாசாங்கு செய்தாள். சுடுகாட்டு எல்லையை தாண்டியதும் இருவரும் உற்சாக மூடுக்கு வந்து விட்டார்கள் போலும். அது சரி. அவன் சுடுகாட்டு தெற்கு பக்கம் அவன் ஏரியா என்றானே. அப்படியானால் இவன் அந்த ஜாதியா?அதிர்ச்சியாக இருந்தது.

"ஒன்னு கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க என்ன ஜாதி"

"நான் *********, அவ ********" 

"சரி நேரமாச்சு. நீ இந்த பாட்டிலுக்குள்ள போ. அவ இந்த பாட்டிலுக்குள்ள போகட்டும்." அவர்கள் உள்ளே போனதும் இறுக்கமாக பாட்டில்களை மூடி திரும்பி சுடுகாட்டை நடக்க ஆரம்பித்தேன்

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

Sunday, August 25, 2013

ஆறு ஆண்கள் - ஒரு பெண்

"என்னடா! இந்த இடத்துல வேற கட்டடமே இல்ல?" என்று கேட்டேன்

"அந்த தைரியத்தில்தான் இங்க வந்து எல்லா வேலையும் செய்றானுங்க. வா உள்ள போகலாம்".

இருவரும் மெதுவாக அந்த கைவிடப்பட்ட பழைய ஃபாக்டரி உள்ளே சென்றோம். மிக மெல்லிய சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் ஆட்கள் எங்கேயும் தட்டுப்படுகின்றனரா என தேட தொடங்கினேன். இந்த 22 வயதில் என்னை நம்பி இது போன்ற வேலைகளை என்னுடைய எடிட்டர் கொடுக்கிறார் என்றால் அதற்கு காரணம் என்னுடைய திறமை. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மனதிற்குள் உறுதி எடுத்து கொண்டேன்.

"ரேஷ்மா! உன் செருப்பு ஜாஸ்தி சத்தம் குடுக்குது பார். அதை கழட்டி போடு"

அவன் சொல்வதும் சரிதான். இந்த ஹை-ஹீலில் இருந்து வரும் சத்தமே எங்களை காட்டி கொடுத்துவிடும். செருப்பை கழட்டி விட்டு நடக்க தொடங்கினேன். 

"மொபைலை சைலன்ட்ல போட்டுட்டியா?"

"அதான் இங்க சிக்னலே இல்லியே"

"நிஜம்மாவே இங்க போதை மருந்து எல்லாம் விக்கிற மாதிரி உனக்கு தெரியுதா?"

"நமக்கு வந்த இன்பர்ஃமேசன் அதுதான்."

"யாரோ தந்த இன்பர்ஃமேசனை நம்பி இங்க வந்து நிக்கிறோம்னு தோணுது . எனக்கு என்னமோ இங்க அப்படி ஏதும் நடக்குற மாதிரி தெரியல"

"ரேஷ்மா! அங்க பாரு"

அவன் காட்டிய திசையில் பார்த்தேன். ஐந்து பேர் அமர்ந்து இருப்பது தெரிந்தது.  ஒருவன் எதையோ புகைத்து கொண்டிருந்தான். மீதி நால்வரும் தங்களுக்குள் எதையோ விவாதித்து கொண்டிருந்தனர்.

"எல்லாம் காலேஜ் பசங்க. இதை ஃபோட்டோ எடுத்து கொண்டு போனா எடிட்டர் பாராட்டி தள்ளிடுவார். எடு ரேஷ்மா "

"இன்னும் கொஞ்சம் கிட்ட போகலாம். முகம் எதுவுமே தெரியல. எப்பிடியும் பேப்பர்ல போடும்போது முகத்தை மறைச்சுடுவாங்க. அப்பிடியே எடு"

"இல்லடா. இன்னும் கொஞ்சம் கிட்ட போகலாம்"

"சொன்னா கேக்க மாட்டியே. வா"

ஒரு அடிதான் எடுத்து வைத்து இருப்போம். அங்கே ஒருவன் எங்களை கவனித்து விட்டான். "அங்கே எவனோ இருக்கான்டா" என்று அவன் கத்தியது எங்களுக்கு தெளிவாக கேட்டது.

"ஓடு ரேஷ்மா!"

ராஜேஷ் என்னுடைய கைகளை பற்றி கொண்டு ஓட தொடங்கினான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இங்கே வந்தது முட்டாள்தனமோ? என்னால் எப்படி இவர்களை விட வேகமாக ஓட முடியும். அவர்கள் துரத்தி பிடித்து ஆளுக்கு ஒரு அடி கொடுத்தால் போதும். இவன் சுருண்டு விடுவான். அடுத்து இவர்கள் கைகளில் சிக்க போவது நான்தான். இந்த ஆளரவம் இல்லாத இடத்தில் அவர்களுக்கு என்னை சிதைக்க போதுமான வாய்ப்புகள் இருக்கிறது. வயிற்றில் பயம் உருண்டது.


"ரேஷ்மா! பேப்பர் ஸ்ப்ரே கைல வச்சு இருக்கியா?" ஓடி கொண்டே கேட்டான்.

"இல்லடா, பேனா கத்தி மட்டும் இருக்கு"

"லூசாடி நீ? எப்பவும் கைல பேப்பர் ஸ்ப்ரே வச்சு இருக்கிறது இல்ல. அந்த 2 இன்ச் பேனா கத்தியை வச்சு எத்தனை பேரை குத்துவ?  நீ கைல எடுத்ததுமே தட்டி விட்டுடுவானுங்க"

இந்த நிலையிலும் எப்படி இவ்வளவு தெளிவாக என்னை திட்டுகிறான். அவனால் ஓட முடியவில்லை என்பது அவன் கேள்வியிலிருந்து தெளிவாக தெரிந்தது. அவனுடைய கனத்த உடம்பு அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. என் கைகளை பற்றியிருந்த அவன் கைகளை விலக்கி கொண்டான்.

"ரேஷ்மா! நீ ஓடு"

அவன் நின்று அவர்கள் பக்கம் திரும்பினான். நான் ஓடுவதை நிறுத்தவில்லை.  அவனை திரும்பி பார்த்தேன். அவன் அவர்களின் வழியில் நின்று அவர்களை தடுக்க  முயன்று கொண்டிருந்தான். பைத்தியக்காரா, வந்து விடு என்று கத்த நினைத்தேன். பயத்தில் வார்த்தைகள் வரவில்லை. ஓடி வந்தவர்கள் அவன் எதிர்த்ததும் சற்று தடுமாறினார்கள். பின்னர் சுதாரித்தனர். ராஜேஷ் வலியில் அலறும் குரல் கேட்டது.திரும்பி பார்த்தேன். கீழே கிடந்த ராஜேஷை இருவர் அடித்து கொண்டிருந்தனர். 3 பேர் என்னை துரத்தி வந்து கொண்டிருந்தனர்.

என்னால் ஓட முடியவில்லை. என்னுடைய வேகம் குறைந்ததை உணர்ந்தேன். என்னுடைய கூந்தலை யாரோ பற்றி இருப்பது  தெரிந்தது. எல்லாம் முடிந்தது. என்னுடைய அழகிய உடல் இவர்கள் கைகளில் சிக்கி விட்டது.

"சூப்பரா இருக்காடா" என்று கூறி கொண்டே அவன் என்னுடைய முகத்தை திருப்பினான். அவன் முகத்தை பார்த்தேன். பள்ளி மாணவன் போல் தெரிந்தான்.

"என்னை விட்டுடுங்க ப்ளீஸ்" அவர்களிடம் கை கூப்பினேன்.

அவன் என் கன்னத்தில் அறைந்தான். தடுமாறி கீழே விழுந்தேன். வாயில் ரத்தத்தின் சுவை தெரிந்தது.

"டேய்! நீ போய் இவ கூட வந்தவனை கட்டி போட்டுட்டு அந்த ரெண்டு பேரையும் வர சொல்லு. கார்த்திக், நீ அவ கையை பிடிச்சுக்கோ "

அவன் கூட இருந்தவர்களுக்கு கட்டளையிட்டான். நாளை என்னை பெண் பார்க்க வர போவது நினைவுக்கு வந்தது.  ராஜேஷை அடித்து கொண்டிருந்த 2 பேரும் நான் இருக்கும் இடம் நோக்கி ஓடி வருவது நிழலாக தெரிந்தது. பயத்தில் அடி வயிற்றில் இருந்து கதற தொடங்கினேன். கண்கள் இருட்டி கொண்டு வந்தது. கண்களை மூடி கொண்டேன். ஒரு உடல் என் மேல் படர்வது தெரிந்தது. என்னை சீரழிக்க போகிறார்கள். ஆயுளுக்கும் தீராத மன வலியை கொடுக்க  போகின்றனர்.

"டேய் வேணாண்டா" திடீரென  பழக்கப்பட்ட ஒரு குரல் கேட்டது. அவன் என்னிடமிருந்து விலகி கொண்டான்.

"என்னடா நல்லவன் ஆயிட்டியா. ஏதோ இதெல்லாம் நமக்கு புதுசு மாதிரி சீன் போடுற"

"இல்லடா அவ என் அக்கா" 

அதிர்ந்தேன். அட பாவி. நீயுமா அந்த கூட்டத்தில்  இருந்தாய். அப்படியே மயங்கினேன்.

நான் கண் விழித்த பொது ராஜேஷும், என்னுடைய தம்பியும் என் அருகே இருந்தனர். ராஜேஷின் முகம் வீங்கி இருந்தது.

"சாரி அக்கா! அவங்க போய்ட்டாங்க. வா நாம வீட்டுக்கு போகலாம்". இருவரும் என்னை தூக்கி விட்டனர்.

"இங்க நடந்ததை வெளிய சொல்லிடாத. அப்படியே மறந்திடு"

"என்னடா இது. நீ இப்பிடிப்பட்ட ஆளா?" கோபத்துடன் அவனை கேட்டேன்

"என் இப்ப கத்துற. அதான் ஒன்னும் ஆகலியே. இந்த மாதிரி இடத்துக்கு வந்தா இப்பிடித்தான் எதாச்சும் நடக்கும்"

"இந்த இடத்துல நான் இல்லாம வேற யாராச்சும் இருந்து இருந்தா?"

அவன் பதில் சொல்லவில்லை.

"ரேஷ்மா! இங்க ஒன்னும் பேச வேண்டாம். வீட்டுக்கு போகலாம் வா" என்றான் ராஜேஷ்.

"இல்ல ராஜேஷ். இது சரி இல்ல. இந்த இடத்துல வேற யாராச்சும் இருந்து இருந்தா?"

"சரி! என்னதான் செய்யலாம்னு சொல்ற."

நான் பதில் சொல்லவில்லை. மெதுவாக பாக்கெட்டில் இருந்த பேனா கத்தியை எடுத்தேன். மின்னல் வேகத்தில் பாய்ந்து  அதை என்னுடைய தம்பியின் கழுத்தில் வைத்து அறுக்க தொடங்கினேன். அதை சற்றும் எதிர்பார்க்காத என்னுடைய தம்பியின் கழுத்திலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.


Friday, August 23, 2013

ஒன்றை இரண்டாக்கி, இரண்டாவதை '3' ஆக தந்த கஸ்தூரிராஜா குடும்பம்

மிழில் ஒரு ஆண்டுக்கு எத்தனையோ படங்கள் வருகின்றன. அவ்வளவு படத்துக்கும் கதை எப்படி பிடிக்கிறார்கள் என்று எப்போதேனும் யோசித்ததுண்டா? 'தலைவா' மாதிரியான படங்களை விட்டு விடவும். ரீ மேக் படங்களையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம். இவை தவிர்த்து வரும் படங்களுக்கு யார் மூல கதை எழுதுகிறார்கள்? திரைக்கதை எழுதுவது யார்? டைட்டிலில் போடுவது போல உண்மையிலேயே படத்தின் டைரக்டர்தான் கதை எழுதுகிறாரா? இல்லை என்ற பதில் நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் இங்கே நான் கூறப்போகும் விஷயம் என்னை மிக ஆச்சரியபடுத்திய விஷயம். 

பொதுவாக ஆங்கில படங்கள் நான் அவ்வளவாக பார்ப்பதில்லை. பார்த்த சில படங்களும் ஸ்பைடர் மேன், ஜாக்கிசான், அனகோண்டா வகையறா டப் செய்யப்பட்ட படங்கள். சமீபத்தில் ஒரு பொழுது போகாத தருணத்தில் ஒரு ஆங்கில படம் பார்க்க நேர்ந்தது. படத்தின் பெயர் 'A  beautiful mind'. சிறந்த படம் என்று சிலர் பரிந்துரைத்ததால் அந்த படத்தை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை அந்த படத்தை ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போலவே தோன்றியது. சிறிது சிரமப்பட்டு யோசித்ததும் சில தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகள் அந்த படத்திலிருந்து உருவப்பட்டிருப்பது புரிந்தது.

'A  beautiful mind' படத்தின் கதை இதுதான். படத்தின் கதாநாயகன் ஒரு கணித மேதை. படிக்கும் காலத்திலிருந்தே அதிகம் தனிமை விரும்புபவனாகவும், பெரும்பாலான நேரத்தை கணித சிக்கல்களை தீர்ப்பதிலேயும் செலவிடுகிறான். படிப்பிற்கு பின் கணித பேராசிரியராக பணியில் சேர்கிறான். தன்னுடைய மாணவியை காதலித்து மணந்தும் கொள்கிறான். திருமணத்திற்கு பின் அவனுடைய மனைவி அவன் மன நோயால் பாதிக்கபட்டிருப்பதை கண்டு பிடிக்கிறாள். அவனுடைய மனம் சில உருவங்களையும் சம்பவங்களையும் கற்பனை செய்து கொண்டு, அவற்றை உண்மை என்று நம்பி வருவது அவளுக்கு தெரிய வருகிறது. இந்த மனநிலை பாதிப்பிலிருந்து எப்படி கதாநாயகன் மீண்டு வந்து சாதிக்கிறான்? அவனுடைய மனைவி அவனுக்கு எந்த அளவு ஆறுதல் அளித்து அவனை மிக பெரிய சாதனைகள் செய்ய வைக்கிறாள் என்பது மீதி கதை.

இந்த படத்தின்  கதையை படித்ததும் உங்களுக்கு இரண்டு தமிழ் படங்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஒன்று மயக்கம் என்ன, மற்றொன்று 3. 'மயக்கம் என்ன' படத்திற்கு கதை எழுதிய செல்வராகவன் மனைவியும், 3 படத்திற்கு கதை எழுதிய ஐஸ்வர்யா தனுஷும் தங்கள் வீட்டில் சேர்ந்து அமர்ந்து 'A  beautiful mind' படம் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒரே படத்தை இரண்டாக்கி தனுஷை வைத்து எடுத்து முடித்து விட்டனர்.


 'மயக்கம் என்ன' பல இடங்களில் ஆங்கில படத்தோடு ஒத்து போகிறது. அந்த படத்தின் இடைவேளைக்கு பின் வரும் கதை அப்படியே ஆங்கில படத்தின் தழுவல். அதிலும் படத்தின் இறுதி காட்சி அப்படியே ஆங்கில படத்தின் அட்ட காப்பி. ஆங்கில படத்துக்கும், தமிழ் படத்துக்கும் இருக்கும் ஒரு  வித்தியாசம்   ஆங்கில பட நாயகன் மனநிலை பாதிப்பு அடைந்த  பின்னும் மென்மையானவனாக  இருக்கிறான். அவன் கண்களுக்கு தெரியும் உருவங்கள் மட்டுமே அவனின் பிரச்சினை. ஆனால் தனுஷோ மனநிலை பாதித்தவுடன் பார்ப்பவர்களை எல்லாம் அடித்து துவைக்கிறார்.


தனது அக்கா தன்னுடைய கதையில் பயன்படுத்த தவறிய மனதில் தோன்றும் பிம்பங்கள் (hallucination) விஷயத்தை தன்னுடைய கதையில் பயன்படுத்திக்கொண்டு விட்டார் ஐஸ்வர்யா. இந்த கதைக்கும் ஒரிஜினல் ஆங்கில படத்துக்கும் உள்ள வித்தியாசம் தனுஷின் பிரச்சினை கடைசி வரை அவர் மனைவிக்கு தெரியாது. தனுஷ் தானாகவே இந்த மனநோயில் இருந்து விடுபட போராடி முடியாமல் கடைசியில் தற்கொலையும் செய்து கொள்கிறார். 'A  beautiful mind' படத்தின் பெரும்பகுதியை 'மயக்கம் என்ன' படம் எடுத்து  கொண்டதால் ஐஸ்வர்யா தன்னுடைய கதையில் ஏற்படுத்தி கொண்ட மாற்றம் இது.

பெரும்பாலான தமிழ் படங்கள், ஆங்கில படத்தில் இருந்து காப்பி அடிக்கப்படுபவை என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரே படத்தை இரண்டாக பிரித்து எடுத்து, இரண்டு படத்திலும் ஒரே நடிகரை நடிக்க வைத்து, அந்த படங்களையும் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிடுவார்கள் என்ற விஷயம் எல்லாம் இதுவரை நான் அறியாதது மட்டும் இல்லை; கற்பனை செய்தும் பார்க்காதது. எனக்கு மிகவும்  பிடித்த இயக்குனர் செல்வராகவன்தான் இதில் ஒரு படத்தின் இயக்குனர் என்பது எனக்கு இன்னும் அதிர்ச்சியான விஷயம். எது எப்படியோ ஒரு கதையை தங்கள் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு இல்லாமல் பாக பிரிவினை செய்து கொண்டு விட்டனர்.

தமிழ்நாட்டிலேயே கூறாத கதைகள் நிறைய இருக்கும்போது ஏன் இந்த அளவுக்கு இறங்கி காப்பி அடிக்கிறார்கள் என்பது புரியவில்லை. தமிழில் சிறந்த படங்கள் உருவாக வேண்டுமென்றால் இயக்குனர்கள் படம் இயக்குவதை மட்டும் பார்த்து கொண்டு கதை, வசனம் போன்ற சமாசாரங்களை எழுத்தாளர்களிடம் விட்டு விடுவதே சிறந்த வழி. அந்த மாற்றம் வரும் வரை ஆங்கில படங்கள் பார்க்காமல் இருப்பதே நாம்  தமிழ் படங்களை ரசிப்பதற்கு  ஒரே வழி.

பின்குறிப்பு: 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய் தனது வகுப்பறைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருப்பவர்களை சிறிது நேரம் சத்தம் எழுப்பாமல்  இருக்க சொல்வது போல ஒரு காட்சி வரும்.  இது  'A  beautiful mind' படத்தின் கதாநாயகி அறிமுக காட்சியின் காப்பி.

Tuesday, August 20, 2013

ஒபாமா அழைக்கிறார்!!!

"ஹலோ யாரு பேசுறது?"

"நாந்தாங்க ஒபாமா பேசுறேன்"

"யாருங்க அமெரிக்க அதிபர் ஒபாமாவா?"

"ஆமா"

"சொல்லுங்க சார். என்ன விசயமா கால் செஞ்சு இருக்கீங்க"

"என்னங்க. ஒபாமா பேசுறேன்னு சொல்றேன். கொஞ்சம் கூட ஆச்சரியப்படவே மாட்டேங்குறீங்க"

"இதுல ஆச்சரியபட என்ன சார் இருக்கு. ப்ளாக் எழுத வந்ததுல இருந்து இப்படி தினமும் யாராச்சும் போன் செஞ்சு நீயெல்லாம் என்னத்துக்கு எழுத வர்றன்னு கழுவி கழுவி ஊத்துறாங்க. ஒரு படைப்பாளி ஆன பின்னாடி இப்படி ரசிகர்கள்  தொல்லை பண்றது சகஜம்தானே?"

"உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு. பை  தி வே நான் எதுக்கு கூப்பிடேன்னு சொல்லிடுறேன். நீங்க என்னோட அரசியல் ஆலோசகரா இருக்க சம்மதிக்கணும்"

"ஆனா சார், எனக்கு அமெரிக்க அரசியல பத்தி ஒன்னும் தெரியாதே"

"நோ நோ. அமெரிக்க அரசியல் பத்தி எல்லாம் நான் பாத்துக்குறேன். நான் என்னோட கட்சியோட பிரான்ச்சை தமிழ்நாட்ல ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்குதான் உங்க ஆலோசனை தேவை"

"என்ன சார் சொல்றீங்க. அது எப்பிடி சாத்தியம்?"

"ஏன் சாத்தியம் இல்லை. எங்க ஊருகாரன் இங்க  வந்து சில்லறை வியாபாரம் செஞ்சா ஒத்துப்பீங்க. அரசியல் செய்ய வந்தா ஒத்துக்க மாட்டீங்களா. அது மட்டும் இல்லாம ஏற்கனவே நீங்க இத்தாலி....... "

"சார் சார் மேல சொல்லாதீங்க . எனக்கு புரிஞ்சிடுச்சு."

"நீங்க ஷார்ப் தம்பி "

"ஆனா ஏன் இந்தியா மேல இந்த திடீர் ஆர்வம்"

"என்னோட பதவி காலம் இங்க சீக்கிரமா முடிய போகுது தம்பி. உங்க ஊரு மாதிரி இங்க திரும்ப திரும்ப பதவிக்கு வர முடியாது. அதான் பதவி போன பின்னாடி உங்க ஊருக்கு வந்து எதாச்சும் பதவியை பிடிக்கலாமுன்னு"

"வெரி குட் ஐடியா சார். ஆனா ஏன் கிட்ட ஏன் யோசனை கேக்குறீங்க"

"அதுக்கு காரணம் எங்க உளவுத்துறை ரிப்போர்ட்படி யாருமே படிக்காட்டியும் வாரத்துக்கு ரெண்டு போஸ்ட் போடுறது தமிழ்நாட்டுல நீங்க மட்டும்தான். அந்த சின்சியாரிட்டி எனக்கு பிடிச்சு போச்சு"

"தாங்க்ஸ் சார்"

"சரி சொல்லுங்க. தமிழ்நாட்ல நான் கட்சி ஆரம்பிச்சு ஆட்சியை பிடிக்கணும். அதுக்கு என்ன வழி"

"அதுக்கு நீங்க முதல்ல சினிமால நடிக்கணும் சார். இல்ல சினிமால  வசனம் எழுதறது, கேமராமேன், எடிட்டிங் இந்த மாதிரி வேலைங்களையாவது செஞ்சு இருக்கணும்."

"என்ன தம்பி! அரசியலுக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?"

"இங்க பெரிய சம்பந்தம் இருக்கு சார்."

"இந்த வயசுக்கு மேல என்னால சினிமாவுக்கு வந்து சாதிக்க முடியாதே"

"நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஒன்னு செய்யலாம்.  நம்ம கட்சியில ஸ்டார் யாரையாச்சும் சேத்து முக்கிய பதவி கொடுத்துடலாம்."

"ஓகே தம்பி! எனக்கு தெரிஞ்சு பமீலா ஆண்டர்சன் அப்பிடின்னு ஒரு ஸ்டார் இருக்காங்க. அவங்களை கட்சியில சேத்துக்கலாம்"

"சூப்பர் ஐடியா சார்! அவங்க மட்டும் நம்ம கட்சிக்கு ஓட்டு கேட்டா நமக்கு வெற்றிதான். அப்படியே எங்க ஊருல சாம் ஆண்டர்சன்னு ஒருத்தர் இருக்கார். அவரையும் கட்சில சேத்துகிட்டு பிரச்சார பீரங்கிகளா வச்சுப்போம். இப்போ நம்ம கட்சிக்கு ஸ்டார் வால்யூ கிடைச்சிடிச்சு."

"அடுத்து நான் என்ன செய்யணும்"

"கட்சிக்கு என்ன பேரு சார் வைக்க போறீங்க?"

"டெமாக்ரடிக் பார்ட்டி"

"சார்! இப்படி எல்லாம் பேரு வச்சா ஒரு பய வோட்டு போட மாட்டான். கட்சியில திராவிடர் அப்படின்னு வார்த்தை கட்டாயம் வேணும்."

"திராவிடர் அப்படின்னா என்ன அர்த்தம்?"


"அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு மட்டும் இல்ல. எங்க ஊருல பாதி பேருக்கு தெரியாது. அந்த வார்த்தை இருந்தா வோட்டு போடுவோம். அவ்வளவுதான்."

"கோவிச்சுக்காதீங்க தம்பி. நீங்களே ஒரு நல்ல பேரா சொல்லுங்க."

"ம்ம். சரி. நீங்க சொன்ன டெமாக்ரடிக்  கூட திராவிடர்  சேத்து, டெமாக்ரடிக் திராவிடர் முன்னேற்ற கழகம் அப்படின்னு பேரு வச்சுக்கலாம்."

"நல்ல பேரு. நல்ல பேரு"

"சரி இப்போ கட்சி  மீட்டிங்க்ல பேசணும்னா எப்பிடி பேசுவீங்க?"

"தமிழக மக்களே! நாம் முன்னேறுவோம். வளர்ச்சி அடை ...."

"நிறுத்துங்க நிறுத்துங்க. இப்படியா பேசுறது."

"இப்படி பேசித்தான் அமெரிக்கால வோட்டு வாங்குனேன் தம்பி."

"அது அமெரிக்கா. இங்க இப்பிடி பேசுனா ஒரு வோட்டு கிடைக்காது."

"அப்புறம் எப்பிடி பேசணும்?"

"மக்களே! நான் சின்ன வயசுல சிகாகோல MGR படம் பாத்து வளர்ந்தவன். நான் ஒரு தீவிர MGR ரசிகன்னு ஆரம்பிங்க. அப்புறம் அப்பிடியே உங்களுக்கு தெரிஞ்சதை பேசி பிக்கப் செஞ்சுக்கங்க."

"சரி"

"முடிஞ்சா கைல  MGR டட்டூ ஒன்னு போட்டுகோங்க. அப்புறம் என்னை தம்பி, தம்பின்னு வாய் நிறைய கூப்பிடுறேங்களே. அப்போ நான் உங்களை எப்பிடி கூப்பிடணும் "

"அண்ணா"

"திரும்ப சொல்லுங்க"

"அண்ணா"

"இப்பிடி அடிக்கடி உங்க பேச்சுல அண்ணாவையும் சேத்துக்கோங்க"

"சரி தம்பி. ஆனா மக்களுக்கு என்ன மாதிரியான  திட்டம் கொண்டு வருவீங்கன்னு யாராச்சும் கேட்டா."

"அது ரொம்ப சிம்பிள் சார். மக்கள் எல்லாருக்கும் அமெரிக்கால அரை கிரவுண்ட் இடமும் ஒரு ஆடி காரும் இலவசமா தரேன்னு சொல்லிடுங்க. அதுக்கு மேல திட்டம், கிட்டம்னு எவனும் வாயை திறக்க மாட்டான்"

"i see"

"அப்புறம் ஒரு டிவி சேனல் ஆரம்பிக்கணும் சார்"

"ஆரம்பிச்சு மக்களுக்கு விழிப்புணர்வு தர்ற மாதிரி நிகழ்ச்சிகள் போடணுமா"

"சார். முதலுக்கே மோசம் வந்திடும். அப்பிடியெல்லாம் செஞ்சுடாதீங்க. ஹாலிவுட் நடிகைகளை கூப்பிடுகிட்டு வந்து டான்ஸ் ப்ரோக்ராம் நடத்துங்க. அப்புறம் கேம் ஷோ. நியூஸ் மட்டும் நாளுக்கு மூணு தடவை போட்டு எதிர்க்கட்சிகாரங்களை கண்டபடி திட்டணும். அது போதும். அப்புறம் அந்த டிவியை கூட நானே கவனிச்சுகிறேன்"

"சரி தம்பி! நான் எப்போ தமிழ்நாட்டுக்கு வரணும்"

"எப்போ வேணும்னாலும் வரலாம். வரும்போது சொல்லிட்டு வாங்க. மதுரைல மீட்டிங் வச்சுக்கலாம். மீனம்பாக்கம் ஆரம்பிச்சு மதுரை வரை ப்ளெக்ஸ் பானர் வச்சுடலாம். 'வாஷிங்டன் வள்ளுவனே! வருக ', கலிபோர்னியா காந்தியே வருக' இந்த மாதிரி வாசகம் எழுதிப்போம்"

"இப்பிடி எல்லாம் ரோடுல பானர் வச்சா மக்களுக்கு இடைஞ்சலா இருக்காது."

"எங்க ஊருல மக்களை பத்தி யோசிச்சா அரசியலே உங்களுக்கு சரி வராது சார்."

"ஓகே தம்பி. இப்போ எனக்கு எல்லாம் புரிஞ்சு நம்பிக்கை வந்திடுச்சு."

"சூப்பர் சார்! 2016 நாமதான்"


பின்குறிப்பு: பமீலா ஆண்டர்சன் படத்தை கூகிளில் தேடி பார்த்து கொள்ளவும்.


Monday, August 12, 2013

இரவு பேருந்தில்

"கண்டக்டர் சார்! என்னை சீட் மாத்தி விடுங்க" 

"என்ன சார்? அந்த பொண்ணே பிரச்சனை இல்லன்னு சொல்லிடிச்சு. உங்களுக்கு என்ன?"

"அதுக்கு இல்ல சார். ராத்திரி தூங்கும்போது தெரியாம கை, கால் பட்டு பிரச்சினை ஆகிட கூடாது."

"இருங்க பாக்குறேன்" சொல்லிவிட்டு சென்று விட்டார் கண்டக்டர்.

எனக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்து இரவு முழுதும் பயணம் செய்ய வேண்டும். உள்ளுக்குள்ளே சந்தோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படி பயணம் செய்வது மிக பெரிய ரிஸ்க். என்னை நம்ப முடியாது . பெண் அழகாக வேறு இருக்கிறாள். மெதுவாக ஒரக்  கண்ணால் அந்த பெண் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். அவள் என்னை ஒரு பொருட்டாக கூட எண்ணியதாக தெரியவில்லை. உலகமே மறந்து தன் மொபைலில் பேசி கொண்டிருந்தாள். அப்படி என்னதான் பேசுகிறாள். காதை தீட்டினேன்.

"சொன்ன கேளுங்க. நான் உங்க கிட்ட அப்படி நெனச்சு பழகல"

"........"

"நான் பேசுனது உங்களை ஹர்ட் செஞ்சு இருக்கும்னுதான் திரும்ப உங்களுக்கு பிரண்ட்ஷிப் டே மெசேஜ் அனுப்பினேன்"

"....."

"நீங்க சொல்றதெல்லாம் சரியா வராது. நல்ல பிரண்டா இருக்குறதுன்னா இருங்க.கண்டபடி  மெசேஜ் பண்றதெல்லாம் வேண்டாம். பஸ் மூவ் ஆகுது. கட் செய்யுறேன்."

கட் செய்து விட்டாள். நான் கண்களை மூடி கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தேன். அவளின் விசும்பல் சத்தம் மெலிதாக கேட்டது. சற்று நேரத்துக்கு கண்களை திறக்க கூடாது என முடிவு செய்தேன்.

"எக்ஸ்க்யூஸ் மீ" அவளின் குரல் என்னை எழுப்பியது. கண்களை மெதுவாக திறந்தேன்.

"என்னோட மொபைல்ல சார்ஜ் இல்ல. வீட்டுக்கு ஒரு கால் பண்ணனும். உங்க மொபைல் கொஞ்ச நேரம் கொடுக்க முடியுமா?". யோசிக்காமல் கொடுத்தேன். பஸ் கிளம்பியதை வீட்டுக்கு தெரிவித்து விட்டு மொபைலை திரும்ப கொடுத்தாள்.

"தேங்க்ஸ்"

"உங்களுக்கு என்ன பிரச்சனை?" எந்த தைரியத்தில் கேட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் கேட்டு விட்டேன். சில வினாடிகள் அமைதியாக கழிந்தது.

"பொம்பளையா பிறந்ததுதான் பிரச்சனை" சலனமில்லாமல் ஒரு பதில் சொன்னாள்.

"என்னங்க சொல்றீங்க?"

"உண்மையைத்தான் சொல்றேன்.ஒரு பெரிய கம்பெனில வேலை செய்யுறேன். கை நிறைய சம்பளம்.என்ன பிரயோஜனம். ஒரு நாள் கூட வேலை செய்யுற இடத்தில நிம்மதியா இருந்ததில்லை. ஒரு ஆம்பளை கூட கொஞ்சம் பழகிட்டா போதும். உடனே தொட்டு பேச ஆரம்பிக்கறாங்க. பழகுனவங்களை ஒன்னும் சொல்ல முடியல. அப்படியே எதாச்சும் சொன்னாலும் ஏதோ காமெடி செஞ்ச மாதிரி கண்டுக்காம போய்டுறாங்க"
 
"எல்லாருமே அப்படி இல்லீங்க" இது போன்ற சூழலில் எல்லாரும் சொல்லும் பதிலை பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்தேன்.

"இப்போ என் கூட பேசுனவன் என்னோட டீம் லீட். போன வாரம் என்னை லவ் பண்றேன்னு சொன்னான். இப்படி எல்லாம் பேசுனா என் கூட பேசவே வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனாலும் என்னால நிம்மதியா இருக்க முடியல. அவனோட சண்டை போட்டா என்னோட கேரியர்தான் ஸ்பாயில் ஆகும். நான் சரி இல்லன்னு மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பிடுவான்."

"புரியுது"

"அதனால பிரச்சனைய ஸ்மூத்தா கொண்டு போவோம்னு ஹாப்பி ஃபிரண்ட்ஷிப்டேனு மெசேஜ் அனுப்பினேன். இதோ அனுப்பின உடனே i need youனு மெசேஜ் அனுப்பிட்டான். வீட்டை விட்டு 400 கிலோ மீட்டர் தள்ளி வந்து வேலை செய்யுறேன். இதெல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சா சென்னைக்கே போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க. நாளைக்கு ஆபீஸ் போனா அவன் என்ன டார்ச்சர் கொடுக்க போறான்னு தெரியல."

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலங்க. நான் வேணும்னா அவன் கூட பேசட்டா?"

"அதெல்லாம் வேணாம். இதை யாருகிட்டயாச்சும் ஷேர் பண்ணா நல்லா இருக்கும்னு தோணிச்சு. நான் சொன்னதையும் என்னையும் மறந்துடுங்க. தயவு செஞ்சு நீங்க இது மாதிரி எந்த பொண்ணு கிட்டவும் நடந்துக்காதீங்க. பொண்ணுங்களை நிம்மதியா வாழ விடுங்க. அவங்களை மதிங்க "

"நீங்க பாத்த சில பேரை வச்சு எல்லாரையும் தப்பு சொல்லாதீங்க. ஆம்பளைங்கள்ள நல்லவங்கதான் ஜாஸ்தி". சொல்லிவிட்டு கண்களை மூடி கொண்டேன். இந்த பெண்கள்தான் எவ்வளவு பாவம். வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் எத்தனை எத்தனை பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மனது கனமானது.

மறுநாள் காலை. கோயம்பேடு பஸ் நிலையத்தை பஸ் வந்து சேர்ந்தது. அவளிடம் சொல்லி கொண்டு பிரிந்து செல்லலாமா? வேண்டாம். அவளை நேருக்கு நேர் பார்க்காமலேயே பிரிந்தேன். சற்று தூரம் சென்றதும் என்னுடைய மொபைல் ஒலித்தது.

"ஹலோ. நேத்து இந்த நம்பர்ல இருந்து எங்க அக்கா கால்  செஞ்சா. அவ கிட்ட  இருந்தா கொஞ்சம் பேச சொல்லுங்களேன்?" ஒரு இனிமையான குரல் ஒலித்தது.

"நான் உங்க அக்காவோட ஃப்ரண்டுதான். உங்க பேரு என்னங்க.". நல்ல ஆண்களின் எண்ணிக்கையில் ஒன்றை குறைக்கும் முயற்சியில் இறங்கினேன்.


Wednesday, August 7, 2013

தலைவ்வ்வா

ரு திரைப்படத்துக்கு பிரச்சனைகள் வருவதும், படத்தை வெளிவிட முடியாமல் போவதும் புதிதல்ல. 'சூப்பர் ஸ்டார்' முதல் 'சோலார் ஸ்டார்' வரை அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தே இருப்பார்கள். ஆனால் இப்போது தலைவாவுக்கு வந்திருக்கும் பிரச்சினை மிக விசித்திரமானது. ஆட்சியாளர்களே ஒரு படத்தை எதிர்க்கிறார்கள் என கூறப்படுகிறது. இத்தனைக்கும் அவர்களுக்கு படத்தின் கதையை பற்றியோ, காட்சி அமைப்புகளை பற்றியோ ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது படத்தின் தலைப்பு மட்டும்தான்.

தேசம் கெட்டு விட்டது , கருத்து சுதந்திரம்  பறி போய் விட்டது என்றெல்லாம் பேச வேண்டாம்.   இந்த படத்தை அவர்கள் எதிர்ப்பது எத்தனை அர்த்தமற்றது என்று பார்க்கலாம். விஜய் ஒரு அரசியல் படத்தில் நடித்தால் மக்கள் அவரை உடனே முதல்வராக்கி விடுவார்கள் என்று நினைக்கிறார்களா?  இன்றைய நிலைமையில் விஜய் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் ஒரு வேளை ஓட்டுகளை சற்று பிரிக்கலாம்.  ஆனால் ஒன்றிரண்டு தொகுதிகளை கை பற்றினாலே அது மிகப் பெரிய விஷயம். அதற்கு காரணமாக நான் கருதுபவை.


1. விஜய் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால்  ஒரு முறை கூட அவர் மேடைகளில் திணறாமல் சிறப்பாக பேசியதாக நினைவில்லை. பெரும்பாலும் பேசுவதை தவிர்த்து ஏதேனும் ஒரு பாடலை பாடிவிட்டு சென்றுவிடுவார் . தமிழ்நாட்டிலோ பேசி பேசி ஆட்சியை பிடித்தவர்கள்தான் அதிகம். ஒரு வேளை விஜய் அரசியலுக்கு வந்து அரசியல் மேடைகளில் 'தொட்டபெட்ட ரோட்டு மேல' என பாடினால் மக்கள் எந்த நம்பிக்கையில் அவருக்கு ஓட்டு அளிப்பார்கள்?

2. விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு எப்போதுமே விஜய் மேல் ஒரு கொலை வெறி உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் விஜயை கலாய்த்து அவரை கிட்டத்தட்ட ஒரு காமெடியன் நிலைக்கு தள்ளினார்கள். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு வாக்கு அளிக்க போவதில்லை.

3. தமிழக மக்கள் நடிகர்களை முதல்வராக்கி பார்க்கும் மன நிலையை எல்லாம் எப்போதே கடந்து விட்டனர். கருப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று சொல்லி எல்லாம் முதல்வராக முடியாது. 

4. ஒரு வேளை மக்கள்  விஜயை நம்பி, ஒரு மாற்று சக்தியாக அவரை ஆட்சியில் அமர்த்த எண்ணினாலும் விஜய் ஆரம்பிக்கபோகும் கட்சியின் முக்கிய தலைவர்களான இருக்க போகும் 'கில்லி' பாண்டி, 'குருவி'  வாசு போன்றவர்களின் செயல்பாடுகள் அவர்களை விஜயை தேர்ந்தெடுக்க விடாமல் செய்து விடும். 

5. ஒரு பேச்சுக்கு விஜய் புதிய கட்சி ஆரம்பிக்காமல்  ஜெயலலிதா, கருணாநிதி  காலத்துக்குப் பின் அதிமுகவிலேயோ, திமுகவிலேயோ  இணைந்து அதன் தலைவராக முயல்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த நிலை வந்தால் திமுகவின் குடும்ப அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகி போவார். 

சரி, மேலே கூறிய அனைத்து காரணங்களையும் மீறி, விஜய் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா? இருக்கிறது. என்னதான் நம் மக்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் ஒருவர் மேல் பரிதாப்பட்டு விட்டால் தங்கள்  புத்திசாலித்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விடுவார்கள். இப்போது 'தலைவா' படத்துக்கு வந்திருக்கும் எதிர்ப்புகள் விஜய் மேல் அந்த பரிதாபத்தையே உருவாக்கபோகிறது  . இந்த படம் வெளிவரும்போது 'விஸ்வரூபம்' போல மிக பெரிய வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. 

இது மட்டுமில்லாமல் 'மாணவர் புரட்சி படை' என்ற அமைப்பு இந்த படத்தை எதிர்ப்பது போல ஒரு செய்தியை வேறு உலவ விட்டுள்ளனர்.  இந்த அமைப்பின் பெயரை பார்க்கும்போது விஜய் ஏதோ ஒரு புதிய அரசியல்  சித்தாந்தத்தை உருவாக்கிவிட்ட போராளி போலவும் அதனால் அந்த அமைப்பு  அவரை எதிர்ப்பது போலவும் தெரிகிறது. பிற்காலத்தில் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு இது உதவி செய்யலாம்.

ஆக காரணமே இல்லாமல் ஒரு படத்தை எதிர்த்து படத்துக்கும், விஜய்க்கும் ஒரு விளம்பரம் தேடி தந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் நடக்கப் போகும் நிகழ்வுகள் விஜயின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. அது அவரை அரசியலை நோக்கி நகர்த்த போகிறதா அல்லது அரசியலை விட்டு தூரமாக நகர்த்த போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Saturday, August 3, 2013

கடவுளின் ஃபோன் கால்

ரு வெள்ளிக்கிழமையின் அதிகாலை பொழுது.அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு அந்த தொலைபேசி  அழைப்பு வந்தது.மிகவும் சலிப்புடனும், இந்த நேரத்தில் அழைப்பது யார் என்னும் குழப்பத்துடனும்   மொபைலை எடுத்து பார்த்தவனுக்கு ஆச்சரியம். calling god என்று டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்தது. யாருடைய பெயரையும் நான் god என்று சேமிக்கவில்லையே. மொபைலின் ஆன்சர் பட்டனை அழுத்தினேன்.

"ஹலோ! யாரு பேசுறது"

"நான்தான் கடவுள்."

"சார்! காலங்காத்தால நாலு மணிக்கு எழுப்பி விட்டு விளையாடுறீங்களே"

"சுரேஷ்! என்னை நம்பு. நான் கடவுள்தான். உன்னுடைய மொபைலில் calling god என்று வந்ததே. அது கூடவா உனக்கு தெரியவில்லை. வேண்டுமென்றால் அழைப்பு வந்த எண்ணையும் பார். ."

எண்ணை சோதித்தேன். எனக்கு குழப்பம் அதிகமானது. என்னுடைய மொபைலை யாராவது எடுத்து தங்கள் நம்பரை god என்று சேமித்து வைப்பது சாத்தியம். ஆனால் அழைப்பு வந்த எண் என ஒரு வெற்றிடம் மட்டுமே இருக்கிறதே. புதிதாக வந்த ஏதோ ஒரு  மென்பொருளை பயன்படுத்தி யாராவது விளையாடுகிறார்களா? விட கூடாது. அவன் வழியிலேயே சென்று மடக்குவோம்.

"இதை மட்டும் வைத்து உங்களை எப்படி கடவுள் என்று சொல்வது?"

"வேறு என்ன செய்தால் நம்புவாய்?"

"இப்போது எனக்கு சூடாக  காபி வேண்டும். அதுவும் நடிகை நஸ்ரியா கொண்டு வந்து தர வேண்டும்."

நம்பினால் நம்புங்கள். இதை சொல்லி நான் வாய் மூடவில்லை . என்னுடைய  அறை கதவை திறந்தது கொண்டு நஸ்ரியா வந்தார். அதே அழகிய முகம். திணறவைக்கும் அழகு.கைகளில் காப்பி கோப்பை. மெதுவாக என்னை நெருங்கி என்னுடைய கைகளில் காப்பியை கொடுத்து விட்டு மறைந்து விட்டார். என்னுடைய உடல் நடுங்கி கொண்டிருந்தது. ச்சே! மடையன் நான். போயும் போயும் காப்பியோடு  நிறுத்தி கொண்டேனே. மறைந்த நஸ்ரியாவை எங்கே தேடுவேன்.


"இப்போது நம்புகிறாயா?" கடவுளின் குரல் என்னுடைய சிந்தனையை கலைத்தது.

"கடவுளே! நம்புகிறேன் "

"சந்தோசம். உன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறதே கோயில் அதுதான் என்னுடைய இருப்பிடம் "

"நீங்கள் ஏன் என்னை தொடர்பு கொண்டீர்கள்?"

"அதைத்தான் சொல்ல போகிறேன் கேள். வர வர எனக்கு எப்படி பொழுது போக்குவது என்றே தெரியவில்லை. அதுதான் உன்னுடன் சற்று நேரம் பேசி கொண்டிருக்கலாம் என்றுவந்து விட்டேன்"

"என்னது! கடவுளுக்கே பொழுது போகவில்லையா"

"அதை ஏன் கேட்கிறாய். முன்பெல்லாம் மனிதன் சதாசர்வ காலமும் என்னையே நினைத்து கொண்டிருப்பான். அவனின் குறைகளை கேட்கவே நேரம் சரியாக இருக்கும். ஆனால் இப்போது என்னை பற்றி நினைப்பதே அபூர்வமாகிவிட்டது."

"எனக்கு அப்படி தோன்றவில்லை. இன்னமும் கோவில்களில் கூட்டம் குவிகிறதே. ஆனால் எத்தனை பெண்கள் வாரத்துக்கு 4 நாட்கள் கோவிலுக்கு செல்கின்றனர் தெரியுமா?"

"வருகிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் முழுவதும் டிவி  சீரியல் ஆரம்பிக்கும் முன் வீட்டுக்கு செல்வதிலேயே இருக்கிறது"

"சரி அவர்களை விடுங்கள். எத்தனை இளைஞர்கள்  கோவிலிலேயே  தவம் இருக்கின்றனர் தெரியுமா ?"

"அவர்கள் அங்கே தவம் கிடப்பது என்னை நோக்கி இல்லை. அங்கே வரும் இளம் பெண்களை நோட்டமிட. கோவிலுக்கு வரும்  இளம் பெண்களோ அவர்களின் தேர்வு முடிவுகளில் என்னை தலையிட சொல்லியே வேண்டுகோள் வைக்கின்றனர். நானும் அப்படி  எத்தனை பேரைத்தான் பாஸாக்கி விடுவது. முன்பு பெண்கள் நல்ல கணவன் வேண்டும் என்று வேண்டி கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் கணவனை, அவர்களே தேடி கொள்கின்றனர். நல்ல கணவனா என்றெல்லாம் அவர்கள் அதிகம் அலட்டி கொள்வதில்லை."

"புரிகிறது கடவுளே. ஆனாலும் நிறைய டூரிஸ்ட்கள் உங்களை தேடி வருகிறார்களே "

"அவர்களை பற்றி மட்டும் பேசாதே. கோவிலுக்குள் வந்து தங்களின்  டிரைவரை குறை கூறி கொண்டும், டாக்சி வெய்டிங் சார்ஜ் பற்றியும் பேசி கொண்டு இருப்பார்கள். ஏதோ தூரத்து சொந்தத்தின் வீட்டுக்குள் நுழைந்தது போல அவசரமாக கும்பிட்டு விட்டு ஓடி விடுகின்றனர் . இதை விட கொடுமை கோவிலுக்கு வருபவர்களில் பாதி பேரின் எண்ணம் வாசலில் விட்ட செருப்பின் மேலேயே இருக்கிறது."

"முதியோர்கள்?"

"வருகின்றனர். ஆனால் அவர்கள் என்னிடம் எதையும் பெரிதாக கேட்பதில்லை. அவர்கள் கோவிலுக்கு வருவது ஒரு மன நிம்மதிக்காக"

" கடவுளுக்கே job satisfaction இல்லாமல் போய் விட்டது போலும். உங்களிடம் ஒரு கேள்வி."

"ஆம். எனக்கு ஊழி பிரளயத்தை நடத்த  திட்டமிட வேண்டியது ஒரு முக்கிய வேலை. அந்த வேலையையும் நீங்கள் எனக்கு விட்டுவைக்கவில்லை.உங்கள் செயல்களே அந்த ஊழி பிரளயத்தை எப்படியும்  உலகத்தில் நடத்தி விடும். இப்போது எனக்கு கிட்டத்தட்ட வேலையே இல்லை. அதனால்தான் உன்னிடம் பேசலாம் என்று வந்தேன்"

எனக்கு அயர்ச்சியாக இருந்தது. இவருக்கு நான் என்ன பொழுதுபோக்கு சாதனமா? எனக்கு வேறு வேலையே இல்லை என்று நினைத்துவிட்டாரா? இவருடன் பேசி எனக்கு என்ன ஆக போகிறது. நான் கடவுளுடன் பேசினேன் என்று வெளியே சொன்னால் என்னை பைத்தியம் என்று நினைப்பார்கள். 

"கடவுளே! உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த கலிகாலத்தில் நீங்கள் ஆழ்வார்கள், நாயன்மார்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. நான் இப்போது  ஆபீஸ் கிளம்ப வேண்டும் கடவுளே. தாமதமாக சென்றால் சம்பளத்தை பிடிப்பார்கள். இன்னொரு நாள் பேசலாம். நான் தொடர்பை துண்டிக்க போகிறேன்"

"சற்று நேரம் இரு!"

கடவுள் சொன்னதை பொருட்படுத்தாமல் தொடர்பை துண்டித்தேன்.

Thursday, August 1, 2013

கனகா,மீடியா,சுஜாதா

ரு நாவலின் முன்னுரையில் சுஜாதா  "நாளைக்கே ரேடியோ, செய்தித்தாள் எல்லாம் சேர்ந்து மூன்றாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது என்று சொன்னால் நாமெல்லாம் நம்பத்தான் போகிறோம். கம்யூனிகேசன்  மீடியாவைவை கட்டுப்படுத்துபவர்களால் உலகையே கட்டுபடுத்த முடியும்" என்று எழுதியிருப்பார் . சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட நிலையில் மூன்றாம் உலகப்  போர் தொடங்கிவிட்டது என்றெல்லாம் எழுதி மக்களை நம்பவைப்பது கடினம். ஆனால் கனகா மரணமடைந்தார் என்று எழுதினால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

கனகாவை பற்றின அந்த செய்தி எப்படி உருவானதோ தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட எல்லா செய்தி இணைய தளங்களும் இந்த செய்தியை பதிவேற்றி விட்டன. இந்த செய்தி வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் கனகா கேரளாவில் கைவிடப்பட்ட கேன்சர் நோயாளிகளுக்கான மருத்துவமனையில் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணி வருவதாக இன்னொரு செய்தி. பாவம் கனகா . தான் மரணமடைந்த செய்தியை தானே படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். நல்ல வேளையாக  உள்ளூரில் இருந்ததால் உடனடியாக செய்தி தெரிந்து செய்தி அச்சில் ஏறும் முன் மறுப்பு வெளியிட்டு விட்டார். ஒரு வேளை வெளிநாட்டுக்கு சென்றிருந்து தமிழ்நாட்டில் நடப்பதை தெரிந்து கொள்ள முடியாத சூழலில் இருந்திருந்தால் அவ்வளவுதான். திரும்பி வந்து தான் கனகாதான் என நிரூபிக்க படாத பாடுபட்டிருக்க வேண்டும்.

 மீடியாக்கள் செய்திகளை தருவதை விட்டுவிட்டு, செய்திகளை உருவாக்கும் நிலைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. . அதற்கு ஒரு உதாரணம்தான் கனகாவுக்கு நடந்தது. இப்போது சுஜாதா சொன்னதை மீண்டும் நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.கம்யூனிகேசன் மீடியாவை கட்டுப்படுத்துபவர்களால் உலகையே கட்டுப்படுத்த முடியும்.

 *************************

து கடந்த வாரம் வந்த இன்னொரு செய்தி. பிசிசிஐ நியமித்த விசாரணை குழு ஸ்ரீனிவாசன் குற்றமற்றவர் என்று அறிக்கை அளித்து விட்டதாம். அதனால் ஸ்ரீனிவாசன் மீண்டும் பிசிசிஐ  தலைவராக பதவி ஏற்று விட்டார். அதாவது அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே விசாரித்து தீர்ப்பு அளித்து கொண்டுள்ளனர் 'முதல்வன்' ரகுவரன் பாணியில் சொல்ல வேண்டுமானால் "அவரே குண்டு வைப்பாராம். அப்புறம் அவரே அதை எடுப்பாராம்".

நல்ல வேளையாக இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்தபோது நீதிபதிகள் 'நாட்டாமை' விஜயகுமார் போல "செல்லாது!! செல்லாது!!" என்று அறிவித்து விட்டனர். பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...