Monday, April 7, 2014

பிரபஞ்சத் தேடல்

“நீங்கள் அந்த கிரகத்தில் இறங்கி விட்டீர்களா?” பூமியிலிருந்து நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அந்த தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நான் எதிர் பார்த்தது போல் பூமியுடன்   தொடர்பு துண்டிக்கப்படவில்லை.

“இன்னும் சில வினாடிகளில் இறங்கி விடுவோம்  சார்” குரலில் உற்சாகத்தை ஏற்றி சொன்னேன்.

“நல்லது. நீங்கள் செய்யப்போகும் காரியம்  மிகப் பெரியது. இதுவரை பிரபஞ்சத்தில் யாருமே செய்யாதது. மிகப் பெரிய பொருட்செலவில் இதை செயல்படுத்துகிறோம்  என்பதை உணர்ந்து கவனமாக செயல்படுங்கள்.”

“உத்தரவு சார்.”

“நியாபகம் வைத்து கொள்ளுங்கள். அதை கண்டறிய  வேண்டுமானால் நீங்கள் நம்முடைய விசேச கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.”

“நீங்கள் அதை பார்த்து விட்டீர்கள்தானே?”

“பார்த்து விட்டோம்”

“நேரில் பார்க்க எப்படி இருக்கிறது அது?”

“வர்ணிக்க தெரியவில்லை. ஒளி போல தெரிகிறது. கருப்பா, வெள்ளையா? உயரமா, குட்டையா? சொல்லத் தெரியவில்லை. எதையுமே  வர்ணிக்கத்  தெரியவில்லை.”

“ஆனால்  அது தெரிகிறதுதானே?”

“ஆமாம் சார்”

“அப்போது உன் குழுவிற்கு ஆணை பிறப்பிக்கலாம்”

“உத்தரவு”

சொல்லி விட்டு ஏன் அணியினருக்கு கட்டளைகளை அளிக்க தொடங்கினேன்

“எல்லாரும் தயாராகுங்கள். அதை பிடித்த மறு நிமிடம் நம் விண்கலத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். அதன் பதில் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எச்சரிக்கை.”

நான் கட்டளைகளை அளிக்கும் முன்னரே என்னுடைய அணியினர் தயார் நிலையில் இருந்தனர். முன்னர் வகுத்து இருந்த திட்டப்படி அதை நோக்கி முன்னேற தொடங்கினோம். அது நாங்கள் வருவதை அது கண்டுகொண்டதாகவே தெரியவில்லை

நான் என் கையில் இருந்த அந்த கதிர்வீச்சு துப்பாக்கியை தயாராக வைத்து கொண்டேன். இன்னும் சில அடிகளில் அதன் மேல் பிரயோகித்து விடலாம். அது இதற்கு கட்டுப்படுமா? கோபத்தில் எங்களையும் பூமியையும் அழித்து விடுமா? மனதில் நின்ற கேள்விகளை  தவிர்த்து வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

“கேப்டன்! பிரயோகித்து விடுங்கள் கேப்டன்! நாங்கள் எங்கள்  ஆயுதங்களை தயாராகவே வைத்துள்ளோம். ஏதேனும் சிக்கலென்றால் பார்த்து கொள்கிறோம்” என்னுடைய டெபுடி எனக்கு ஊக்கம் அளித்தான்.

“இதே பிரயோகித்து விடலாம்”

தயக்கத்துடன் என் துப்பாக்கியில் மாயக்கதிர் உருவாக வேண்டிய ஆரத்தை குறிப்பிட்டு ட்ரிக்கரை இழுத்தேன். எதிர்பார்த்தது போலவே கச்சிதமாக  அந்த மாய உருவத்தை எங்கள் கதிர்வீச்சு சிறை பிடித்தது. அந்த துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டு இருந்த  எங்கள் கம்ப்யூட்டர்கள் அந்த மாய வட்டத்தை அந்த உருவத்துடன் விண்கலத்தை நோக்கி இழுக்கத் தொடங்கின. சில நொடிகள்தான். அந்த உருவம் எங்கள் விண்கலத்தில் தனியாக வடிவமைக்கப்பட்ட அறையில் சிறைபிடிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அதை பிடித்து விட்டோம்.


“யாஹ்ஹூ” எங்கள் அணியினர் உற்சாக கூக்குரல் எழுப்ப தொடங்கினர்.

“கேப்டன்! எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இத்தனை சுலபமாக சாதித்து விட்டோம். அது துளி எதிர்ப்பு கூட காட்டவில்லையே?”

“எல்லாம் கடவுளின் கருணை.” என்னை அறியாமல் நான் சொன்ன பதிலை கேட்டு எங்கள் அணியினர் சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்
.
“என்ன கேப்டன் நீங்கள்? பிரபஞ்சத்தில் கடவுளையே தேடி கண்டுபிடித்து விட்டோம்; சிறையும் பிடித்து விட்டோம். இன்னமும் கடவுளின் கருணை என்கிறீர்களே?”

“உண்மைதான். ஆனால் இது என்னுடைய பழக்கம். ஆனால் நண்பர்களே. நான் இதை பூமிக்கு கொண்டு சென்று சேர்க்கும்வரை நம்முடைய மிசன் முடியவில்லை. பயணத்திற்கு தயாராகுங்கள்.”

சில நிமிடங்களில் பூமியை நோக்கி விண்கலத்தை செலுத்த தொடங்கினோம்.

“ஆரே!” என் பெயரை சொல்லி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தேன்.

விண்கலத்தில்  எல்லாரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். சத்தம் எங்கே இருந்து வந்தது. அதுவும் ஏன் பெயரை சொல்லி என்னை அழைக்கும் தைரியம் யாருக்கு வந்தது. ஒரு வேளை கடவுள்தான் பேசுகிறாரோ?

“ஆமாம்! நீ நினைப்பது சரி. கடவுள்தான் பேசுகிறேன்”

“நினைத்தேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

“நான் உன்னுடன் பேசலாமா?”

“விதிப்படி நான் உங்களிடம் கேள்விகள் கேட்கக்  கூடாது. ஆனால் உங்களுக்கு கேள்வி கேட்க  உரிமை உண்டு. ஆனால் எங்களிடம் இருந்து விடுதலை மட்டும் பெற்று விடலாம் என்று நினைக்காதீர்கள்”

“நான் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடித்தீர்கள்?”

“அதை விளக்குவது எளிது அல்ல. பல கோடிகள் செலவு செய்து பிரபஞ்சம் முழுவதும்  அலசி உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தோம்."

“என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”

“பூமிக்கு”

“அங்கே என்னை கொண்டு சென்று என்ன செய்யப் போகிறீர்கள்”

“உங்களை ஆராய்ச்சி செய்யப்போகிறோம். உங்களிடமிருந்து கடவுள் கூறு என்ன என்று ஆராய்ந்து மனிதர்களை கடவுளாக்க போகிறோம்.”

“நல்லது. அதன் பின்”

“அதன் பின் எல்லாரும் கடவுள். யாருக்கும் மரணமில்லை. ஆளுக்கு ஒரு பிரபஞ்சம் படைப்பார்கள். தனியாக ஒரு சொர்க்கம் படைத்தது அதில் வாழ்வார்கள். வாழ்க்கையின் ரகசியம் அனைத்தும் உங்களை கொண்டு அறிவோம். கவலையில்லா வாழ்வு வாழ்வோம்”

“என்னை பூமிக்கு கொண்டு சென்றால் என்ன ஆகும் என்று யோசித்தாயா? உங்கள் பூமியில் உள்ள அத்தனை மதத்தினரும் என்னை சொந்தம் கொண்டாடுவார்கள். மத மோதல்கள் அதிகமாகும். நாத்திகர்கள் நான் கடவுளே இல்லை என்பார்கள். என்ன செய்வீர்கள்?”

“அது  எங்கள் கவலை. உங்களுக்கு எதற்கு? மேலும் நீங்கள் பூமிக்கு சென்ற பின் மக்கள் உண்மையில்  மதங்களையே மறந்து விடுவார்கள்

“மனிதா! நான் சொல்வதை கேள். நீ  என்னை பூமிக்கு கொண்டு சென்றால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.”

“நான் இதை பற்றி எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. என்னுடைய பணி உங்களை பூமிக்கு கொண்டு செல்வது.”

கடவுளிடமிருந்து பதில் இல்லை. சில நொடி மௌனத்திற்கு பின் கடவுளிடம் கேட்டேன். 

“கடவுளே! என்னிடம் மட்டும் சொல்லுங்கள். எங்கள் மதத்தினர் வழிபாடுதானே உங்களை அடைய சரியான வழி?”

எது சரியான வழி என்று இப்போது அறிந்து கொள்வாய்

சொல்லிவிட்டு கடவுள் இடியென சிரித்தார்.  எங்கள் விண்கலம் கட்டுப்பாடு இழந்து  ஒரு பெரும் குலுங்கலுடன் திசை மாறியது. மிகப்பெரிய விண்கல் ஒன்று எங்கள் விண்கலத்தை  நோக்கி வந்து கொண்டிருப்பதை என்னால் விண்கலத்தின்  ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது.


Wednesday, April 2, 2014

வழி அறியா பூக்கள்

காயத்ரி! மீட்டிங் ரூமுக்கு வா”

என்னுடைய மேனேஜர் அழைத்தது என்னுடைய மூளையில் ஏற சில நொடிகள் பிடித்தது. சுதாரித்து கொண்டு எழுந்தேன். மற்ற சிந்தனைகள் விலகி என்னை எதற்காக அழைக்கிறார் என்ற ஒரே சிந்தனையோடு மீட்டிங் ரூமை நோக்கி மேனேஜரின் பின்னே நடக்க ஆரம்பித்தேன்.

மீட்டிங் ரூமின்  உள்ளே சென்றதும் அவர் அறையின்  கதவை மூடினார்.

“உட்கார் காயத்ரி”

அமர்ந்தேன்.

“காயத்ரி! நான் எதுக்காக உன்னை கூப்பிட்டேன்னு தெரியுமா?”

“தெரியாது ரூபிணி”

“கொஞ்ச நாளா ஜாப்ல உன்னோட பெர்பார்மன்ஸ் எங்களுக்கு திருப்தி இல்லை. உன்னோட ப்ரொஜெக்ட்ல எக்கச்சக்கமா தப்பு வருது. இப்பிடியே போனா உன்னை வேலைய விட்டு தூக்குறது தவிர எங்களுக்கு வேற வழி இல்லை. இதை சொல்லி  உன்னை வார்ன் செய்யத்தான் இந்த மீட்டிங்.”

“சரி பண்ணிக்கிறேன் ரூபிணி”

“சரி நீ போகலாம்.”

எழுந்து கதவை நோக்கி நடக்க தொடங்கினேன்.

“காயத்ரி! கொஞ்சம் நில்லு. திரும்ப வந்து உட்கார்.”

முகத்தில் கேள்விக்குறியுடன் மீண்டும் வந்து அமர்ந்தேன்.

“இப்போ நான் கொஞ்ச நேரம் ஒரு பொண்ணா உன்கிட்ட பேசலாம்னு நெனைக்கிறேன் காயத்ரி. நாலு மாசம் முன்னாடி டீம்லயே ரொம்ப டேலன்டட் பெர்சன் நீதான். ஆனா இப்போ வேலையையே இழக்க போற பொசிசன்ல இருக்க. ஆபிஸ்ல யாரு கூடவும் சரியா பேசுறது இல்ல. எப்போ பார்த்தாலும் எதையோ யோசிச்சுகிட்டு இருக்க. சொல்லு என்ன ஆச்சு உனக்கு?”

எனக்கு எரிச்சலாக வந்தது. இதெல்லாம் இவளுக்கு எதற்கு. பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டு எடுக்க வேண்டியதுதானே. ஏன் தேவை இல்லாமல் பேசுகிறாள்?

“அது பெர்சனல் ப்ராப்ளம் ரூபிணி. நான் போகலாமா?”

சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

“பெர்சனல் ப்ராப்ளம் அப்பிடின்னு எனக்கு நல்ல தெரியும், அதனாலதான் கேக்குறேன். என்னை உன்னோட அக்கா மாதிரி நினைச்சு சொல்லுமா?”

நான் பதில் சொல்லவில்லை.

“ஓகே காயத்ரி! நீ போகலாம்”

அந்த நொடியில் நான் எப்படி உடைந்தேன் என்று தெரியவில்லை. கண்களில் நீர் கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தது.

“என்னம்மா ஆச்சு? அழாதே.”

“ரூபிணி! நான் லவ் மேரேஜ் செஞ்சது உங்களுக்கு தெரியும்தானே?”

“ஆமா. வீட்ல சண்டை போட்டுக்கிட்டு ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சீங்கதானே. எனக்கு நியாபகம் இருக்கு.”

“கல்யாணம் முடிஞ்சதும் ஒரே மாசம்தான். அவனுக்கு காதல் கசந்து போச்சு. தொட்டதுக்கெல்லாம் சண்டை. பிரச்சனை. காதலிக்கும்போது என்னோட ஒரு நாள் கூட பேசாம இருக்க முடியாதுன்னு சொன்னான். இப்போ நாங்க பேசிகிட்டே பத்து நாள் ஆகுது. ஒரே வீட்ல இருந்துகிட்டு இப்பிடி இருக்கிறது எத்தனை கஷ்டம் தெரியுமா? தினமும் குடிச்சுட்டு வரான். என்னன்னு கேட்டா பொண்டாட்டி சரியில்ல. அதான் குடிக்கிறேன்னு சொல்றான்”

“காயத்ரி! கல்யாணத்துக்கு பின்னாடி இதெல்லாம் சகஜம்மா! இதே மாதிரி நானும் என்னோட புருஷன் கூட நாள் கணக்கா பேசாம இருந்திருக்கேன். அப்புறம் யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து பேசிக்குவோம். நீயும் கவுரவத்தை விட்டு பேசிடேன்.”

“பேசவா சொல்றீங்க. நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடான்னு நான் அவனை கட்டி பிடிச்சு அழுதேன். என்னை விலக்கி விட்டுட்டு போயிட்டான். . போன வாரம் நான் உடம்பு சரி இல்லாம ராத்திரி முழுக்க இருமினப்போ கூட ஒரு வார்த்தை என்னன்னு கேக்கல. அவனுக்கு என்னோட உடம்பு சலிச்சு போச்சு ரூபிணி. ஏமாந்துட்டேன்னு பயமா இருக்கு”

“ரொம்ப கஷ்டமா இருந்தா டிவர்ஸ் செஞ்சுடுமா”

“எப்பிடி? எங்க வீட்டுக்கும் என்னால இனிமே போக முடியாது. வாழ்க்கை முழுக்க தனியா வாழ்ற அளவு எனக்கு தைரியம் இல்ல”

“அப்போ இப்பிடியே இவன் கூட இன்னும் எத்தனை நாள் இருப்ப. உங்க அப்பா, அம்மாகிட்ட பேசு. புரிஞ்சுப்பாங்க. அவனை விட்டு பிரிஞ்சுடு.”

“அவங்க புரிஞ்சுப்பாங்க. ஆனா என்னால அவனை விட்டு பிரிஞ்சு வாழ முடியாது ரூபிணி”

அவர் சிரித்தார்.

“ஐடி கம்பெனில வேலை செய்யுற மாடர்ன் பொண்ணு மாதிரி பேசாம கிராமத்து கிழவி மாதிரி பேசுறம்மா. ஒன்னு செய்யலாம். நீ கூடவே இருக்குறதால உன்னோட அருமை அவனுக்கு தெரியலன்னு நெனைக்கிறேன். நீ அவனை விட்டு பிரிஞ்சு கொஞ்ச நாள் இருந்து பாரேன்”

“பிரிஞ்சு எங்க போறது? எனக்கு யாரையும் தெரியாதே”

“ நீ ஆபீஸ்க்கு ஒரு மாசம் லீவ் போடு. நானே லீவ் அப்ரூவ் செய்றேன். ப்ராஜெக்ட் விஷயமா வெளியூர் போறேன்னு உன்னோட புருசனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பு. பெங்களூர்ல என்னோட பிரண்ட் ஒருத்தி இருக்கா. அவ கூட தங்கிட்டு வா. ஒரு மாறுதல் இருந்தா உனக்கும் நல்லது. தெளிவா யோசிப்ப. பின்னாடி என்ன செய்யுறதுன்னு திரும்பி வந்த அப்புறம் யோசிக்கலாம்.”

“உங்க பிரண்ட் வீட்ல நான் எப்பிடி?”

“அவளுக்கு கல்யாணம் ஆகல. தனி வீட்லதான் இருக்கா. நீ தாராளமா அவ கூட தங்கலாம். என்ன யோசிச்சு சொல்றியா?”

“நாளைக்கே நான் பெங்களூர் கிளம்பலாமா?”

- தொடரும் 

இந்த வலைப்பூ பற்றிய  உங்கள் கருத்தை மேலே உள்ள வாக்கு பெட்டி மூலம் தெரிவிக்கவும் 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...