Saturday, March 8, 2014

தர்மமில்லா கூட்டணிகள்

வீட்டை கட்டிப்பார். கல்யாணத்தை செய்து பார்” என்று சொல்வார்கள். இன்றைய தேதிக்கு அதை “கூட்டணி அமைத்து பார். கூட்டணி பேச்சு வார்த்தை அமைத்து பார்” என்று மாற்றி கொள்ளலாம் போல. எத்தனை பேரங்கள், எத்தனை மணி நேர பேச்சு வார்த்தை. தேர்தலில் வெற்றி பெறுவதை விட வெற்றிகரமான கூட்டணி அமைப்பதே பெரும்பாடாக உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த கூத்துகளை நினைத்து பார்த்தாலே பிரமிப்பாக உள்ளது. கூடவே இருந்த தோழர்களை அதிமுக கழட்டி விட்டுவிட்டது. திருமாவுக்கு தொகுதிகள் பற்றவில்லை என்று தொண்டர்கள் உருவ பொம்மையை எரிக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்கு யாருடன் சேருவது என்றே தெரியவில்லை. மூழ்கும் கப்பல் என்று நினைத்து கொண்டு அவர்களுடன் சேர தயங்குகிறார்கள். இன்னும் சில கட்சிகள் யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

சொப்பன சுந்தரியை வைத்து இருப்பது யார் என்று கூட கண்டுபிடித்து விடலாம் போல. ஆனால் எந்த கூட்டணியில் எந்த கட்சியை  யார் வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் முன் மண்டை காய்கிறது. சில நாட்களுக்கு முன் கட்டி தழுவி கொண்டவர்கள் இப்போது கட்டி உருள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி என்றால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிலைமை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

இதில் கேப்டன் வழி தனி வழி. கூட்டணி பேச்சு வார்த்தைக்காக மற்ற கட்சிகள் ஏங்கும் மோஸ்ட் வான்டட் தலைவர். தொண்டர்களிடம் கூட்டணி வேண்டுமா என்று கேட்டு கொண்டார். யாருடனும் கூட்டணி இல்லை என்றார். கூட்டணிக்காக ஒட்டு மொத்த தமிழ்நாடும் அவரை தேடி கொண்டிருக்கும் நேரத்தில் வெளிநாடு சென்று விட்டார். எதற்கு என்று கேட்டால் மகனுக்கு லொகேஷன் பார்க்க சென்றேன் என்கிறார். ஆனால் சும்மா சொல்ல கூடாது. அரசியல் வியூகங்களில் தமிழ்நாட்டையே கலங்கடிக்கிறார். அவருடைய  ராஜதந்திரங்கள் எல்லாம் அவருடைய பேச்சை விட மிரட்டலாக உள்ளன.


இன்றைய தேதியில்  கூட்டணிகள்  ஓரளவு முடிவு செய்யப்பட்டு விட்டன. அரசியல்வாதிகளுக்கு பிரசாரத்தின்போது யாரை திட்டுவது என்று தெளிவாக  தெரிந்து விட்டது.  அவர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டது. ஆனால் மக்களின் பிரச்சினை? தேர்தலுக்கான கூட்டணி இப்போது முடிவாகி விட்டது என்று தெளிவாக ஓட்டு போட முடியாது. ஏனென்றால் தேர்தலுக்கு பின் பதவிக்கான கூட்டணி எப்படி அமையும் என்று யாருக்கும் தெரியாது. யாரோ ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்து நாம் ஓட்டு போட்டால் ஓட்டு வாங்கிய கூட்டணி கட்சி தேர்தலுக்கு பின்  வேறு யாருக்கோ ஆதரவு கொடுத்து விடுவார்கள். கட்சி தாவல் தடை சட்டம் போல கூட்டணி தாவல் தடை சட்டம் கொண்டு வந்தால்தான் இது போல வாக்கு அளித்தவர்கள் ஏமாறுவது தடுக்கப்படும்.


எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் பதவியை மட்டும் நோக்கமாக கொண்டு அமைக்கப்படும் கூட்டணிகள் நாட்டுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்காது. இருந்தாலும் என்ன செய்ய? துரோகம் இல்லாத அரசியலையும், கூட்டணி இல்லாத தேர்தலையும் நம்மால் எப்போதும்  கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.


1 comment:

  1. கொள்கை இல்லாத கட்சிகளுக்கு இருக்கும் ஒரே கொள்கை பதவியை அடைவது !
    கூட்டணி சேர்வதை தேர்தல் கமிஷன்தடை செய்ய வேண்டும் .கட்சிகள் பெறும் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப் படவேண்டும் !
    த ம 1

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...