Monday, May 19, 2014

தமிழக தேர்தல் முடிவுகள் – ஒரு வாக்காளனின் பார்வை

திமுக இத்தனை பெரிய வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிமுக  அப்படி ஒரு நல்லாட்சியையா கொடுத்து விட்டது? ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும்  மின்சார பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சமூக விரோதிகள் யாரும் ஆந்திராவுக்கு ஓடிய மாதிரியும் தெரியவில்லை. பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அனைத்தையும் ஏற்றி விட்டனர். இருந்தபோதும் மக்கள் எந்த அடிப்படையில் அதிமுகவை வெற்றி பெற வைத்தனர் என்று தெரியவில்லை.

இதே போலத்தான் 2001 தேர்தலும். 1991-1996ல்  அதிமுகவினர் மேல் இருந்த ஊழல் வழக்குகளுக்கு பின் அவர்கள் இனிமேல் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்றுதான் அனைவரும் கணித்து இருந்தனர். போதாக்குறைக்கு 1991-1996 திமுக ஆட்சியிலும் பெரிதாக எந்த குறையும் இல்லாததால் மீண்டும் திமுகதான் என்று எண்ணியிருந்த வேளையில் யாரும் எதிர்பாராத தீர்ப்பை அளித்தனர் மக்கள். 2006ல் மீண்டும் திமுக வென்றாலும் தனிப்பெரும்பான்மை  பெற முடியவில்லை. இவற்றை வைத்து பார்க்கும்போது மக்கள் கலைஞரை விட புரட்சி தலைவி மேலேயே அதிக நம்பிக்கை கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன என்பதுதான் புரியாத புதிர். இன்றைய நிலைமைக்கு அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக கௌரவமான இடங்களை பெறுவது சந்தேகமே.

திமுக மேல் நம்பிக்கை இல்லை, நடப்பது பாராளுமன்ற தேர்தல் வேறு. பின்னர் ஏன் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிக்கவில்லை என்றால் அந்த கட்சியில் கலைஞர்-ஜெயலலிதா போன்ற வசீகரமான தலைவர் இல்லாததுதான் காரணமாக தெரிகிறது. அதனால்தானே என்னவோ விஜயகாந்தை கூட்டணிக்கு இழுத்தனர். ஆனால் விஜயகாந்த் பிரசாரம் செய்த விதமோ பாரதிய ஜனதாவுக்கு இருந்த செல்வாக்கையும் துவம்சம் செய்து விட்டதாக இப்போது பாஜகவினரே  சந்தேகப்பட்டு கொண்டிருப்பார்கள். பாமக என்னும்  ஜாதிக் கட்சியை கூட்டணியில் சேர்த்தது அவர்களுக்கு எந்த பலனையும் தரவில்லை. விளைவு, அதிமுகவுக்கு எந்த போட்டியையும் இவர்களால் தர இயலவில்லை.

இவற்றில் இன்னொரு ஆச்சரியம் வைகோவின் தோல்வி. மனிதர் பெரியாறு ஆணை பிரச்சனையில் ஆளுக்கு முன் நின்று போராடினார். மக்கள் பிரச்சினை என்ன வென்றாலும் முதலில் வருகிறார். தமிழகம் முழுக்க அறியப்பட்டவர். இருந்தபோதும் வெற்றி  மட்டும் கிடைக்க மாட்டேன் என்கிறது. இதற்கு காரணம் ஜாதி அடையாளத்தால் பிரியும் வாக்குகள். ஜாதி பார்த்து ஓட்டு போடும் மக்கள் அத்தனை எளிதில் மாற மாட்டார்கள். எனவே இவர் துணிந்து தொகுதி மாறி நின்று பார்ப்பது நல்லது.

மொத்தத்தில் அதிமுகவின் வெற்றிக்கு எதிர் கட்சிகளின் மேல் நம்பிக்கையின்மையும், கட்சிகளின் பலமின்மையையுமே காரணமாக தெரிகிறது. புதிதாக ஒரு வலுவான அரசியல்  ஆளுமை உருவாகும் வரை மக்களுக்கு அதிமுகவை விட்டால் வேறு கதியில்லை.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...