Friday, November 14, 2014

இந்த கதையை நம்புறதும், நம்பாததும் உங்க இஷ்டம்!

தன் பின் வரும் எதையும் நீங்கள் நம்பப் போவதில்லை. உங்களை நம்ப வைப்பது எனது நோக்கமும் இல்லை. ஆனால் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதை ஒரு முறை படித்து விடுங்கள். கடந்த மாதம் கடவுள் என்னை சந்திக்க வந்திருந்தார். விடாத வேலைப்பளு அவரை சோர்வு கொள்ள செய்திருந்தது. வந்தவர் நேராக என்னை நோக்கி இந்த கேள்வியை வீசினார்.

இந்த மனுசங்களுக்கு என்னதான்பா வேணும். எப்ப பாரு அது இல்ல, இது இல்லன்னு வந்து புலம்பிகிட்டு. உங்களையெல்லாம் ஏன் படைச்சேன்னு இப்போ யோசிக்கிறேன்”

“டூ லேட் கடவுளே!”

“சரி இப்போ சொல்லு. நான் உலகத்தை எல்லாம் அழிக்க விரும்பல. ஆனா மனுஷங்களோட எல்லா பிரச்சினையையும் தீர்க்கணும்னு நினைக்கிறேன். எப்பிடி இருந்தா நீங்க சந்தோசமா இருப்பீங்க”

“கடவுளே! மனுசனோட முதல் பிரச்சினை ஆசை. அடுத்த பிரச்சினை பொறாமை. இது ரெண்டையும் தீர்த்து வச்சுடுங்க.”

“எப்பிடி சொல்லேன்?” கடவுள் ஆர்வமாக கேட்டார்.

“கொஞ்சம் பாருங்க. ஒருத்தன் பணக்காரனா இருக்கான். பெரிய வீட்ல இருக்கான். இன்னொருத்தன் ஏழையா இருக்கான். குடிசைல இருக்கான். எல்லாருக்கும் ஒரே மாதிரி சொந்த வீட்டையும், சொத்தையும் குடுங்க முதல்ல”

“இவ்வளவுதானா?” கடவுள் கேட்டுவிட்டு கைகளை தட்டினார். உலகம் எப்படி மாறிவிட்டது என்று என் கைகளில் பார் என்று உள்ளங்கையை விரித்து காட்டினார்.

ஆச்சரியம். அவர் உள்ளங்கைகளில் தெரிந்த உலகத்தில்  எல்லா வீடுகளும் ஒரே மாதிரி, எல்லா மனிதர்களும் விலை உயர்ந்த ஆடை அணிந்து. உலகமே மாறி விட்டது.

“சூப்பர் கடவுளே!“

“முடிந்ததா?”

“அது எப்பிடி முடியும் கடவுளே. கொஞ்ச நாள்ல மறுபடியும் புத்தி இருக்குறவன், மத்தவன் சொத்தை எல்லாம் ஏமாத்தி பிடிங்கிடுவான். அதனால எல்லாருக்கும் ஒரே மாதிரி புத்தியை குடுங்க.”

“இது முக்கியமா?”

“இதுதான் ரொம்ப முக்கியம்”

கடவுள் கைகளை தட்டினார். “இனிமே எல்லாரும் ஒரே மாதிரி புத்திசாலி” என்றார்.

“இனிமே மனுசங்க எல்லாரும் சந்தோசமா இருப்பாங்களா?”

“அதுக்குள்ள சந்தோசமா? உங்க கையை பாருங்க. அந்த பொண்ணு அந்த வடக்கு தெருல நடந்து போய்கிட்டு இருக்குற பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இல்ல?”

“ஆமாம்”

“பக்கத்து தெருல போற பொண்ணு இந்த பொண்ணை விட அழகு கம்மியா தெரியல?”

“மனிதா! அழகுங்குறது பாக்குற கண்ணுல”

“தத்துவம் எல்லாம் பேசாதீங்க கடவுளே. நீங்க என்ன பண்றீங்க உலகத்துல இருக்கிற எல்லா பொம்பளங்களையும் ஐஸ்வர்யாராய் மாதிரி அழகா மாத்திடுங்க. எல்லா ஆம்பளைங்களையும் அமெரிக்கால டாம் க்ரூஸ் அப்பிடின்னு ஒரு நடிகர் இருக்கார். அவரு மாதிரி மாத்திடுங்க”

“அப்போ ஒருத்தருக்கும் இன்னொருத்தருக்கும்  வித்தியாசம் தெரியாதே?”

“அட கடவுளே! அவங்கள மாதிரியே மாத்த சொல்லல. அவங்க மாதிரி அழகா மாத்திடுங்கன்னு சொன்னேன்.”

சொன்னதும் கடவுள் கை தட்டி கைகளை விரித்தார். ஆகா! உலகம்  முழுக்க  ஐஸ்வர்யாராய் மாதிரி பெண்கள். என்ன ஒரு கண் கொள்ளா காட்சி. ஆப்ரிக்காகாரனும், அமெரிக்காகாரனும் ஒரே நிறத்தில். இந்தியர்களும், வெள்ளைகாரர்களும் ஒரே மாதிரி அழகாக.

“அப்புறம் இன்னொன்னு நீங்க செய்யணும். இனிமே மனுஷனுக்கு பசிக்க கூடாது. நோய் எதுவும் வர கூடாது.”

“என்ன இது? முட்டாள்தனமா இருக்கு?”

“யோசிங்க கடவுளே. எல்லாருக்கும் ஒரே மாதிரி வீடு, சொத்து எல்லாம் கொடுத்தாச்சு. ஒரே மாதிரி புத்திசாலித்தனம் குடுத்தாச்சு. இனிமே யாரு எந்த வேலையை பாக்குறதுன்னு பிரச்சினை வரும். யாரும் வேலைக்கே போக மாட்டாங்க ஒரு கட்டத்துல. அப்போ பசியை எடுத்துட்டா எல்லாரும் இருக்குற வீட்ல சந்தோசமா அவங்களோட  ஐஸ்வர்யாராய் கூட வாழ்ந்துக்குவாங்களே.”

“சரிதான்! இனிமே யாருக்கும்  பசி, பிணி கிடையாது. போதுமா”

“செம கடவுளே! அப்புறம் எல்லாரையும் ஒரே மொழி பேச வச்சுடுங்க. எல்லாரையும் நீங்களே ஏதாவது ஒரு மதத்துக்கு மாத்தி விட்ருங்க. அப்புறம் பாருங்க.”

கடவுள் கைகளை தட்டினார்.

“இப்போ எல்லாரும் ஒரே மாதிரி பணக்காரங்க. எவனும் எவனையும் ஏமாத்த முடியாது. எல்லா பொம்பளைங்களும் அழகு. இனிமே யாரும் உங்க கிட்ட வந்து எதையும் கேட்க முடியாது. பசியும் கிடையாது. ஆசையும், பொறாமையும் இல்லாமலே போயிடும் இனிமே. சந்தோசம்தானே கடவுளே. இனிமே நீங்க நிம்மதியா தூங்கலாம்.”

“சந்தோசம்! இன்னும் ஏதாவது யோசனை இருந்தா என்னை கூப்பிட்டு சொல்லு. இன்னும் ரெண்டு நாள் டைம் எடுத்து நாம எந்த கரெக்சன் இருந்தாலும் செஞ்சுக்கலாம்”

கடவுள் மறைந்து விட்டார்.

டவுளுக்கு உலகை சீரமைக்க உதவிய திருப்தியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து  நடக்க தொடங்கினேன். நேராக என்னுடைய வீட்டுக்கு சென்றேன். உலகம் அமைதியாக இருந்தது. எல்லாரும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். அதனால் என்ன? யாருக்கும் எந்த குறையும் இல்லையே இப்போது. இதோ சமத்துவ உலகம். கடைகள் இல்லை. எந்த ஒரு போக்குவரத்தும் இல்லை. ஏதோ ஒரு டாம் க்ரூஸ் மட்டும்  தனது ஐஸ்வர்யாராயுடன்  என்னை கடந்து சென்றார். அவர்கள் எங்கே போகிறார்கள்? நேரம் போக்க  சிறிது உலாவிவிட்டு வருவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.  

ஏதோ ஒரு இனம் புரியாத கவலை என்னை கவ்வியது. வித்தியாசங்களே உலகை இயங்க வைப்பதாக தோன்றியது. பசி வேண்டும். கவலை வேண்டும். தேடல் வேண்டும். வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும். இப்படியே போனால் சிறிது நாட்களில் எல்லாருக்கும் பித்து பிடித்து விடும். உலகம் அதுவாகவே அழிந்து விடும். மீண்டும் கடவுளை கூப்பிட்டு பேச தொடங்கினேன். பின்னர் என்ன? சில நிமிடங்கள்  டாம் க்ரூஸ், ஐஸ்வர்யாராய் போல இருந்த நீங்களும் நானும் மீண்டும் பழைய உருவத்தையே அடைந்து விட்டோம். இதெல்லாம் எப்போது நடந்தது என்று யோசிக்க வேண்டாம். அதை கடவுள் அப்போதே  மறக்க வைத்து விட்டார். ஆனால் பாவம். அவரின் பிரச்சினைதான் இன்னும் தீர்ந்தபாடு இல்லை.

1 comment:

  1. இதில் நம்புவதற்கும் நம்பாதற்கும் ஒன்றுமில்லை. கதை நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...