Thursday, March 24, 2016

வசிய வாக்கு வங்கி

லக்சன்ல நம்ம கட்சி ஜெயிக்கணும்னா இதை செஞ்சே ஆகணும் தலைவரே. கொள்கை முரண்பாடு பத்தியெல்லாம் இப்போ யோசிக்காதீங்க” சோமுக கட்சித் தலைவரிடம் தனது யோசனையை அவர் மகன்  எடுத்து வைத்தார்.

“பதவி  மட்டுமே நமது ஒரே கொள்கை மகனே. வெற்றி பெற வழி  கூறடா என் கண்மணி. நிச்சயம் உன் யோசனை சிறப்பாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை”

“அதுல என்ன சந்தேகம் தலைவரே. இதுவரை இந்த தேர்தலுக்காக நாமளும் பேப்பர் விளம்பரத்துக்கு ஐம்பது கோடி, டிவி விளம்பரத்துக்கு  நூறு கோடின்னு எக்கச்சக்கமா செலவு செஞ்சுட்டோம். இருந்தாலும் எந்த கருத்துகணிப்பும் நமக்கு சாதகமா இல்ல. இந்த முறையும் அசோமுகதான் ஜெயிக்கும் போல தோணுது. இப்போ ஜெயிக்கணும்னா நமக்கு இதுதான் ஒரே வழி”

“பீடிகை போதும் மகனே. யோசனையை கூறு”

“ சொல்றேன் தலைவா. கவனமா கேளுங்க. உலகத்துலேயே  பெரிய ஹிப்னாடிச  நிபுணரை சீனால இருந்துவரவழைச்சு இருக்கேன். சாதாரண ஆளு இல்ல அவரு. டிவி வழியாவே அவரால மனோவசியம் பண்ண முடியும். அவரால”

“மனோவசியத்தை என் பகுத்தறிவு ஏற்று கொள்ள மறுக்கிறது”

“தலைவா, நம்ம பகுத்தறிவை தேவைப்படும்போது மட்டும்   பயன்படுத்திக்கலாம். இப்போ சொல்றதை கேளுங்க.”

“சரி சொல் மகனே”

“நாளையோட நம்ம பிரச்சாரம் முடியுது. நாம என்ன பண்ணப் போறோம்னா சரியா ராத்திரி 9:59க்கு நாம நம்மளோட பத்து சேனல்ல எந்த நிகழ்ச்சி நடத்துனாலும் அதை பாதில நிறுத்திட்டு  நம்ம மனோவசியக்காரரை நேரடி ஒளிபரப்புல பேச விடுறோம்”

“நேரடி ஒளிபரப்பா?”

“ஆமா. நேரடி ஒளிபரப்புலதான் அவரால வசியம் செய்ய முடியும்.”

“அது சரி மகனே. ஏன் கடைசி நிமிசத்துல வசியம் செய்யணும். பேசாமல் ஒருநாள் முன்பேசெய்து விடுவோமே?”

“வசியத்தை எவ்வளவு  தாமதம் செய்யுறோமா அவ்வளவு நல்லது தலைவா. ஏன்னா மக்களை வசியத்தோட பிடியில ஒரு குறிப்பிட்ட நேரம்தான் வைக்க முடியும். அது எவ்வளவு நேரம்ங்குறது வசியம் செய்யப்பட்டவன்களோட மன பலத்தை பொருத்தது”

“புரிகிறது”

“புரிஞ்சதுல. அப்புறம் என்ன? நம்ம சேனலை அந்த நேரத்துல ஒரு கோடி பேரு பாப்பாங்கன்னு டிஆர்பி சொல்லுது தலைவா. நாம அந்த சீனாகாரனுக்கு செலவழிக்கிற நூறு கோடி நமக்கு ஒரு கோடி ஓட்டா திரும்ப வரப்போகுது... வெற்றி நமக்கே

“வெற்றி என்ற  சொல்லை கேட்டவுடன் இதயம்இனிக்கிறது. தந்தையை காத்த தனயன் நீ. அந்த வசியக்காரர் என்ன பேசுவார் மகனே?”'

“சோமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு நாம எழுதி குடுத்துட்டா போதும். அதை அப்படியே  படிப்பார் அவர். அப்போ அவர் கண்ணை மட்டும் நாம டிவில காமிச்சாப் போதும்”

“இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது கண்ணே. பார்வைக்கு இது சாதாரண பிரசாரம். ஆனால் நமக்கோ வெற்றி கனியை பறித்துக் கொடுக்கும் ராஜ தந்திரம். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று நிரூபணம் செய்துவிட்டாயடா"

"வெற்றி நமக்கே தலைவா"

"வெற்றி என்பது மூன்றெழுத்து. கட்சி என்பது மூன்றெழுத்து. ஆனால் வசியம் என்பது மட்டும் நான்கெழுத்து.”

வர்கள் திட்டப்படியே வசிய நிகழ்ச்சி நடந்தது. ஆனால் ஆளுங்கட்சி   அசோமுக ஆட்சியை பிடிக்கிறது. தோல்வியை ஆராயும் கூட்டத்தில் தலைவர் கோபத்தோடு அமர்ந்திருக்கிறார். அவரது மகனும் மற்ற கட்சி முக்கிய உறுப்பினர்களும் தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருக்கின்றனர். கோபத்தில் தலைவர் செந்தமிழை மறக்கிறார்.

“என்னய்யா இது? எப்பிடி இவ்ளோ மோசமா தோர்த்தோம்? வழக்கமா வர்ற ஓட்டு கூட வரலியே?”

“அதான் தலைவா எங்களுக்கும் புரியல”

“போச்சு இனி அஞ்சு வருஷம் ஒன்னும் செய்ய முடியாது.. எனக்கு அந்த சீனாகாரன் மேலதான் சந்தேகமா இருக்கு. என்னய்யா செஞ்சான் அவன். அந்த வீடியோவை காட்டுங்க” என்று தலைவர் கூறியதும் தனது பையில் இருந்த மொபைலை எடுத்து கட்சியின் சேனாதிபதி அந்த வீடியோவை ஓட வைக்கிறார்.

வீடியோவில் “ஆஆஆஆஆஆஆஆஆ” என்று இழுத்து கொட்டாவி  விட்ட சீனாக்காரர் . சோமுகவுக்கு ஓட்டு போடுங்க” என்றார்

“இன்னொரு முறை போடு”

“ஆஆஆஆஆஆஆஆஆ................. சோமுகவுக்கு ஓட்டு போடுங்க”

“அது என்னய்யா ஆஆஆஆஆஆஆஆஆ”

“அது ஆஆஆஆஆஆஆஆஆ இல்ல தலைவரே . அவர் கொட்டாவி விட்டார்”

“அடப்பாவிகளா. அது கேக்க ஆசோமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு”

“அட ஆமாம் தலைவரே”

“ஆமாவா. வசியம் பண்றேன்னு சொந்த செலவிலே சூனியம் வச்சுட்டீங்களேடா. என்ன செஞ்சாலும் நம்மால ஜெயிக்க முடியலையே”


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...