Saturday, July 6, 2013

சிங்கம் II - itz சிங்கம் டான்ஸ்

கதை முன்னுரை :

 உங்களில் சிலருக்கு 'சிங்கம்' முதல் பாகத்தின் இறுதி காட்சி நினைவில் இருக்கலாம். அதில் காட்டியபடி வேலையை விடுவது போல நாடகமாடி தூத்துக்குடியில் நடக்கும் ஆயுத கடத்தலை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் சூர்யா. ஆனால் தன் பழைய வாழ்வை மறந்து வாழும் வழக்கமான ஹீரோக்கள் போல ஆட்டோ ஒட்டுநர் தொழிலிலோ, காய்கறி விற்கும் தொழிலிலோ இறங்காமல் ஒரு பள்ளியில் நேர்மையான  NCC ஆசிரியராக பணியில் சேர்கிறார். இது துரை சிங்கத்துக்கு முன்னுரை.


 இப்போது கதையில் ஒரு சின்ன  ட்விஸ்ட். 'சிங்கம்' முதல் பாகத்தில் சொல்லியது போல  சூர்யா-அனுஷ்கா திருமணம் முன்பே நடந்திருக்கவில்லை.  திருமணமான பின் அனுஷ்கா கவர்ச்சியாக டூயட் ஆடினால் ரசிகர்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள் என இயக்குனர் ஹரி அவர்களின் திருமணத்தை இந்த படத்தில் ரத்து செய்து விடுகிறார். இதனை அனுஷ்கா நன்கு பயன்படுத்தி கொண்டு அவ்வப்போது வந்து சூர்யாவுடன் காதல் செய்து விட்டு போகிறார். கூடவே சூர்யா வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் ஹன்சிகாவும் சூர்யா மேல் காதல் கொள்கிறார். இது துரை சிங்கத்தின்  காதல் வாழ்க்கைக்கு முன்னுரை

இப்போது கதை

கதை ஒன்றும் புதிதோ, வித்தியாசமானதோ இல்லை. ஆசிரியர் வேலை செய்து கொண்டே ஆயுத கடத்தல் பற்றி  ரகசியமாக புலனாய்வு செய்கிறார் சூர்யா. ஆனால் இயக்குனர் ஹரியோ ஆயுத கடத்தலை காட்டினால் விடுதலை புலிகள், நக்சலைட்டுகள் என சர்ச்சை கிளப்புவார்கள் என்று முன்னெச்சரிக்கையாக ஆயுத கடத்தல் கும்பலை போதை மருந்து கடத்த செய்து விடுகிறார்.அதையும் திறமையாக கண்டு பிடித்து விடுகிறார் சூர்யா. பின்னர் அந்த கும்பலை வேட்டையாடுகிறார். 

திரைக்கதை

விறுவிறுப்பான திரைக்கதை என்பார்களே. விறுவிறுப்பு அதிகமானால் என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். படம் முழுக்க சூர்யா யாரையாவது துரத்தி கொண்டே இருக்கிறார் அல்லது அடித்து கொண்டே இருக்கிறார். நகரம், கடல், காடு, மலை என ஐந்து வகை நிலங்களிலும் சேசிங் செய்து ஒரு புது சாதனையே படைத்துள்ளார்

படம் ஆரம்பித்ததும் ஒரு  பாடல் , சண்டை காட்சி . பின்னர் ஒரு காதல் காட்சி, பின்னர் ஒரு சேசிங் காட்சி, பின்னர் சந்தானம் காமெடி, அதன் பின் மீண்டும் ஒரு சண்டை காட்சி, ஒரு டூயட் பாடல், பின் மீண்டும் ஒரு சேசிங், அதன் பின் ஒரு சண்டை, பின்னர் காமெடி, அதன் பின் ...... என்ன தலை சுற்றுகிறதா. விறுவிறுப்பாக படம் எடுக்கிறேன் என்று சூர்யாவை அரை மணி நேரம் ஓடவும், ஒரு மணி நேரம் சண்டை போடவும், அரை மணி நேரம் ஆக்ரோஷமாக வசனம் பேசவும் வைத்துள்ளார் ஹரி.

சூர்யா:

வழக்கப்படி தன் வேலையை கட்சிதமாக செய்துள்ளார்.  அதிரடி போலீசுக்கு தேவையான சிறந்த உடல் மொழி. ஆனால் அமைச்சர் முதல் அடியாள் வரை வரை முறை இல்லாமல் எல்லாரிடமும் ஆக்ரோஷ வசனம் பேசுவது ஓவர். என்ன செய்வது? சிங்கம் வேஷம் போட்டால் சீறித்தானே ஆக வேண்டும்.

மற்ற நட்சத்திரங்கள்:

2 கதாநாயகிகள், நான்கு வில்லன்கள், 2 காமெடியன்கள், நிறைய குண சித்திர நடிகர்கள் என நிறைய பேர் உள்ளனர்.  ஆனால் யாருமே மனதில் பதியவில்லை. யாரையுமே முழுமையாக பயன்படுத்தவில்லை.

இசை, கேமரா, எடிட்டிங் மற்ற தொழில் நுட்ப விஷயங்கள்:

பாடல் இசையோ, பின்னணிஇசையோ  சொல்லி கொள்ளும்படி இல்லை.

மற்ற தொழில் நுட்ப விஷயங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. காரணம் அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

சர்ச்சை கிளம்ப  வாய்ப்புள்ள இடங்கள்:

1. ஆப்ரிக்க வில்லனை குரங்கு, அனிமல் என கண்டபடி இன வெறியோடு திட்டுகிறார் சூர்யா. எனவே ஆப்ரிக்காவில் இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது.
2. போலீஸ் துறையில் நேர்மையற்றவர்களே அதிகம் உள்ளது போல் காட்டுகிறார்கள்.
3. ஹன்சிகாவுக்கு ஏற்படும் சோக முடிவும் தங்கள் மனதை புண்படுத்துவதாக அவரின் ரசிகர்கள் போராட்டம் நடத்தலாம்.

முடிவுரை:

முதல் பாகத்தை விட சிறப்பாக எடுக்க வேண்டும் என ஹரிக்கு நெருக்கடி. எனவே  சிங்கத்தின் வேகத்தையும், சீற்றத்தையும் அதிகமாக்க முயன்றுள்ளார். கடைசியில் சிங்கம் ரசிகர்கள் மேலே பாய்ந்து குதறி விட்டது. முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் இந்த படம் மிக சுமார். ஆனால் என்னதான் கால்கள் பழுதுபட்டாலும் சிங்கம் சிங்கம்தானே. அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் நிச்சயம் ஒரு முறை பார்க்க கூடிய படம்தான் இந்த சிங்கம் II

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...