Saturday, October 26, 2013

தீபாவளி, கோயம்பேடு , தலை தீபாவளி

மேலே படிக்கும் முன் ராமும், நந்தினியும் யாரென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ராமின் சொந்த . ஊர் ராஜபாளையம். நந்தினி மதுரை. இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பெட்டி தட்டுவதற்காக சென்னை வந்த இடத்தில் காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் கடந்த கார்த்திகை மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விசயம் தெரிந்தும் நந்தினியின் அப்பா எல்லா படங்களிலும் நாம் பார்த்தது போலவே "அவ என் பொண்ணே கிடையாது. அவளை தலை முழுகியாச்சு"என்று சொல்லிவிட்டார். பின்னர் அவராகவே சமாதானம் ஆகி இப்போது அவர்களை தலை தீபாவளிக்கு வீட்டுக்கு அழைத்துள்ளார். இப்போது மதுரைக்கு செல்வதற்காக கோயம்பேடு ஜனத்திரளுக்குள் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

"உங்க அப்பாவுக்கு சமாதானம் ஆக வேற நேரமே கிடைக்கலியா? கரெக்டா தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் சமாதானம் ஆகணுமா?" இந்த கேள்வியை கேட்ட பொழுது முகத்தை சற்று கடுமையாக வைத்து கொண்டான்  ராம்.

"என்ன பேசுற ராம். அவர் இனிமே என்னோட மூஞ்சிலேயே முழிக்க மாட்டாருன்னு நெனச்சேன். அவரே இறங்கி வந்து நம்மை தலை தீபாவளிக்கு கூப்பிட்டு இருக்கார். நீ சந்தோசப்படாம சலிச்சிக்குற." என்று அவனின்  கோபத்தை சிறிதும் சட்டை செய்யாமல் கூறினாள் நந்தினி.

"இருக்குற கூட்டத்தை பாரு.   இப்பவே நாம பஸ் ஸ்டாண்ட் வந்து மூணு மணி நேரம் ஆச்சு. நாம கடைசி வரைக்கும் பஸ் ஏற மாட்டோம். உங்க அப்பாவுக்கு போன் போட்டு சொல்லிடு. நாம அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம்."

"அடுத்த வாரம் வரை தீபாவளி இருக்குமா? நாம வர்றோம்னு எத்தனை சந்தோசமா எல்லாம் தயார் செஞ்சு வச்சு இருப்பாங்க. நாம இப்போ டிக்கெட் இல்ல வரலன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டாங்களா?" இதை சொன்ன நந்தினியின் முகம் சற்று வாடி இருந்தது."

"நந்தினி! நீயே பாரு. இத்தனை பெரிய பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறதுக்கு கூட இடம் இல்லை. வர்ற எல்லா பஸ்சும் புல்லா வருது. நான் மட்டும் இருந்தா எப்படியாச்சும் ஏறிடுவேன். உன்னையும் கூட்டிகிட்டு"


 "இதுக்குதான் நேத்தே  தட்கல் டிக்கெட் போடலாமுன்னு சொன்னேன்."

"ஆமா. ஓபன் பண்ண ஐஞ்சே நிமிசத்தில எல்லாம் தீர்ந்துடுது. அது கூட ஃப்ளைட், டாக்சி, ட்ராவல்ஸ்  எல்லாத்துலயும்  பாத்துட்டேன். ஒரு டிக்கெட் கூட இல்லை. இங்க குடுத்த டோக்கனை யாரும் மதிக்கிற மாதிரி தெரியல. கடைசி நேரத்துல எங்க போறது?"

"எக்மோர் போய் ஸ்பெஷல் ட்ரைன் இருக்குதான்னு."

"பஸ்லயே இப்பிடி. ரயில்வே ஸ்டேஷன் போனோம் தொலஞ்சோம்"

இதை ராம் சொல்லி முடிக்கும் முன் நந்தினி இடை மறித்தாள். "ராம்! அங்க ஒரு பஸ் வருது. மதுரை மாதிரிதான் தெரியுது. இடம் கிடைக்குதான்னு பாரு"

இதை கேட்டு ராம் ஓட ஆரம்பிக்கும் முன்னரே ஒரு 50 பேர் அந்த பஸ்ஸை நோக்கி ஓட ஆரம்பித்தனர். ராம் ஒரு வழியாக அந்த பஸ்ஸில் ஏறி காலியாக கிடந்த ஒரு சீட்டை நோக்கி பாய்ந்தான்.

"பாஸ்! துண்டு போட்டு இருக்கோம் தெரியல." தலையில் கர்சீப் கட்டிய ஒருவன் ராமை நோக்கி குரல் கொடுத்தான்.

"மூணு சீட்லயுமா ஆளு வருது?"

"ஆமா ஆமா. வேற இடம் பாருங்க." அதற்கு பின் வேறு எங்கே இடம் பார்ப்பது? பேருந்து நிரம்பி விட்டது. ராம் பேருந்தில் இருந்து இறங்கி நந்தினியை நோக்கி நடந்தான்.

"சீட் இல்லையா ராம்?" நந்தினி ஏமாற்றமாக கேட்டாள்.

"இல்லை."

"எல்லாரும் கீழ உக்காந்து கிட்டு போறாங்க பாரு. அது மாதிரி போய்டலாமா?"

"எட்டு மணி நேர ட்ராவல் நந்தினி. உன்னோட உடம்பு அசந்துடும். அப்புறம் நீ வீட்டுக்கு போய் படுத்துப்ப, இப்பவே மணி 11 ஆச்சு. திரும்பிடலாம் நந்தினி. "

இப்பொழுது நந்தினியின் கண்களில் நீர் முத்து போல் தெரிந்தது. 

"சரி அழாத. என்னதான் படிச்சு பெரிய வேலையில இருந்தாலும் இப்பிடி அழுகுறதை மட்டும் நிறுத்த மாட்டீங்களே." ராம் சொல்லிவிட்டு அங்கே இருந்த ஒரு கண்டக்டரை நோக்கி நடந்தான்.

"சார்! எப்படியாச்சும் ஒரே ஒரு சீட் அட்ஜஸ்ட் செய்ய முடியுதான்னு பாருங்க சார்"

"சார்! நான் உங்க கிட்ட திரும்ப திரும்ப சொல்லிட்டேன். இது ரிசர்வேசன் செஞ்ச பஸ். எல்லா சீட்டும் புல்லு."

"புரியுது சார்!  கடைசில யாராவது வராம போய்ட்டா நாங்க ஏறிக்கலாம்னு."

"வராம போக வாய்ப்பே இல்ல சார்." சொல்லிவிட்டு அவர் சற்று யோசித்தார்.

"ஒன்னு செய்யலாம் சார்! டிரைவர் பின்னாடி இருக்குற சீட்ல இருக்குறவங்களை அட்ஜஸ்ட் பண்ணி உக்கார சொல்றேன். உங்க வொய்ப் ஏறிக்கட்டும். நீங்க பின்னாடி ஏதாவது ஒரு வண்டிய பிடிச்சு வந்துடுங்க"

"நானும் இதுலயே கீழ உக்காந்து வந்துடறேனே"

"பஸ் ஸ்டாண்ட் உள்ள அப்பிடி கீழ உக்கார சொல்லி ஆளு எத்த முடியாது சார். இதே தாம்பரம் போய்ட்டா அப்பிடி ஏத்திக்குவோம். உங்க வொய்ப்  மட்டும் ஏற சம்மதம்னா சொல்லுங்க "

ராம் நந்தினியிடம் இந்த யோசனையை கூறினான்.

"அதெல்லாம் சரி வராதுங்க.கல்யாணம் செஞ்சுட்டு முதல் தடவை வீட்டுக்கு போற பொண்ணு தனியா போனா நல்லா இருக்காது."

ராமுக்கு எரிச்சலாக வந்தது. நான்கு மணி நேரம் பேருந்துக்கு பின்னால் இப்படியும் அப்படியும் ஓடி கொண்டு கண்டவனிடமும் கெஞ்சி கொண்டும் சண்டை போட்டு கொண்டு இருக்கிறேன். கால் வேறு கடுமையாக வலிக்கிறது. இவள் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கிறாள். அவனின் சிந்தனையை ஒரு குரல் கலைத்தது.

"சார்! மதுரையா?'

"ஆமா"

"வெளிய ட்ராவல்ஸ் பஸ் நிக்கிது. 1800 ரூபாய் டிக்கெட். சரின்னா சொல்லுங்க"

ராம் பேரம் பேசும் நிலையில் இல்லை. நந்தினியை கூட்டி கொண்டு வெளியே நடந்தான். அந்த பஸ் அரசாங்க பேருந்தை விட மோசமான நிலையில் இருந்தது.

 "காசை கொடுங்க சார்"

ராம் எடுத்து கொடுத்தான்.

"மேடம் நாலாம் நம்பர் சீட்ல உக்காரட்டும். நீங்க 25ம் நம்பர் சீட் காலியா இருக்கும் அதுல உக்காரலாம்."

 அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே ஒரு மோட்டலில் நின்றது.ராம் வெளியே சென்று இயற்கை உந்துதலை தீர்த்து கொண்டு மீண்டும் சீட்டில் வந்து அமர்ந்தான்.

"அநியாயமா கொள்ளை அடிக்கிறாங்க. ஒரு தோசை அறுவது ரூவாய் சார்." ராமின் பக்கத்துக்கு சீட்காரர் அவனிடம் புலம்பும் குரலில் கூறினார்.

"இங்க எப்பவுமே இப்படிதான் சார்."

"நீங்களும் 1500 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தீங்களா?"

"இல்ல 1800." ராம் கூறிய பதிலை கேட்டதும் அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.

"ரொம்ப ஜாஸ்தி சார். தீபாவளி நேரம்னு கொள்ளை அடிக்கிறாங்க"

"என்ன சார் பண்றது. ஊருக்கு போயே ஆகணுமுன்னு பொண்டாட்டிங்க ஒத்தை கால்ல நிக்கிற வரைக்கும் இவனுங்களுக்கு கொண்டாட்டம்தான்," கொட்டி தீர்க்க ஆள் கிடைத்த சந்தோசத்தில் ராம் தன் மன எரிச்சலை வெளிப்படுத்தினான்.

"ஏழு மணிக்கு கோயம்பேடு வந்தோம் சார். வீட்டுக்கு போகலாம்னு சொன்னாலும் கேக்காம, முன்னாடி போ பின்னாடி வரோம்னு சொன்னாலும் கேக்காம. இவங்க எப்பவுமே இப்பிடித்தான் சார்."

"பொம்பளைங்க அப்படித்தான் சார். அவங்க உலகமே வேற. நமக்கு சின்ன விசயமா தெரியுறது அவங்களுக்கு பெரிய விஷயம். நமக்கு பெரிய விஷயம் அவங்களுக்கு சின்ன விஷயம்."

 "சரிதான் சார்! நாளைக்கு வீட்டுக்கு போனதும் அவ முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க. அதை பாக்குறதுக்கு இன்னும் ரெண்டு நாள் கூட பஸ் பின்னாடி ஓடலாம்" சொல்லிவிட்டு ராம் சிரித்தான். 

அந்த சிரிப்பு சத்தம் கேட்டு நந்தினி பின்னாள் திரும்பி பார்த்து விட்டு தன் அருகில் இருந்த பெண்ணிடம் கூற தொடங்கினாள். "பாருங்க அக்கா! பஸ் ஏறதுக்கு பெரிசா அலுத்துகிட்டார் . இப்போ இன்னும் தூங்காமா யாரு கூடயோ ஜாலியோ பேசி விளையாண்டுகிட்டு இருக்கார். நாளைக்கு மாமனார் வீட்டுக்கு போனதும் தூங்கி வழிவார். இந்த ஆம்பளைங்களே இப்படிதான் அக்கா. எது முக்கியமோ அதை விட்டுட்டு மத்ததை எல்லாம் செய்வாங்க."

3 comments:

  1. கோயம்பேடு... கடைசி நேர பேருந்து பயணம்... நிறையே பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கக் கூடும்... அருமை!

    ReplyDelete
  2. வருடா வருடம் இந்த தனியார் பேருந்துகளின் அநியாயம் தொடரத் தான் செய்கிறது... ம்...

    மாற்றி மாற்றி குறைகள் சொன்னாலும் எப்படியோ அவர்கள் தீபாவளியை சந்தோசமாக கொண்டாடினால் சரி...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...