Tuesday, October 29, 2013

தியாகராய நகரில் ஒரு நாள்

"என்னடா மச்சான்?  நம்ம ஊரு திருவிழால கூட இத்தனை ஜனம் பாத்ததில்லை. எவ்வளவு கூட்டம்?" ரங்கநாதன் தெருவை பார்த்து வியந்து போய் கேட்டான் என் நண்பன். நான் முதல் முறை இந்த தெருவை பார்த்தபோது அடைந்த அதே உற்சாகம் அவன் கண்களில் தெரிந்தது. 

"இதெல்லாம் ஒரு கூட்டமாடா? தீபாவளி, பொங்கல் மாதிரி சீசன் நேரத்துல கூட்டம் வரும் பாரு. நீயெல்லாம் உள்ள சிக்குன வெளிய வர வழி கண்டு பிடிக்க தெரியாது உனக்கு."  ஒரு வருடம் சென்னையில் வாழ்ந்த திமிரோடு அவனுக்கு பதில் சொன்னேன்.

"மச்சான்! இந்த தெருவதான அங்காடி தெரு படத்துல காட்டினாங்க?"

"ஆமாண்டா"

"டேய்! இப்பிடி நிக்காம போய்கிட்டே இருக்கியே. எதாவது கடைக்குள்ள போகலாம்டா."

"கூட்டிகிட்டு போறேன். ஆனா எதையாவது வாங்கணும்னு ஆசை இருந்தா உன்னோட காசுல இருந்துதான் வாங்கணும். என் கிட்ட காசு கேக்க கூடாது. நியாபகம் வச்சுக்கோ. நான் உன்னை ஷாப்பிங் கூட்டிகிட்டு வரல. முதல் தடவை சென்னை வந்து இருக்க. ஊருக்கு போக மெட்ராஸ்ல நாலு இடம் காமிக்கலாம்னுதான் கூட்டி வந்தேன்"

"நான் போறது வாங்குறதுக்கு இல்லை. அஞ்சலி மாதிரி சேல்ஸ் கேர்ள் இருக்காங்களான்னு பாக்கத்தான்."

"அஞ்சலி எப்போவோ ஆந்திரா பக்கம் போயாச்சு.  நீ வேணும்னா உனக்கு எத்த மாதிரி வேற எதாச்சும் சுண்டெலி கிடைக்குதான்னு பாரு."

சொல்லிவிட்டு அருகில் இருந்த கடைக்குள் அவனை அழைத்து சென்றேன்.

"எத்தனை மாடிடா இந்த கடைக்கு." அவன் ஆச்சரியம் அந்த கடையை பார்த்ததும் அதிகரித்தது.

"அஞ்சு மாடி இருக்கும்டா. நீ பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்தது மாதிரி பாக்காம எதாச்சும் துணிய பார்த்து வாங்க போறது மாதிரி பாவ்லா காமிச்சுக்கிட்டு இரு. கொஞ்ச நேரம் இங்க  இருந்துட்டு வெளிய போய் டீ குடிச்சிட்டு வீட்டுக்கு போகலாம்."



"என்ன அதுக்குள்ளயா? என்னை லிஃப்ட்ல மேல கூட்டிகிட்டு போய் காமிடா." 

அவன் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை. பாவம் எப்போதோ ஒரு முறை சென்னைக்கு வருகிறான். அவனை அழைத்து கொண்டு மூன்றாவது மாடிக்கு சென்றேன்.

"லிஃப்ட்ல ஏறிட்ட? இப்போ திருப்தியா"

"திருப்திதான்."

"இங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு போகலாம் வா."

"இங்க வேணாம்டா. நாலாவது மாடிக்கு போகலாம்"

"ஏன்?'

"இங்க ஒரே பொம்பளைங்க சமாச்சாரமா இருக்கு.. இங்க எப்பிடி நிக்கிறது."

"டேய்! இதே மத்த நேரம்னா இங்கதான் நிக்கணும்ன்னு சொல்லுவ.  இப்போ லிப்ட்ல ஏறணும்னு நல்லவன் வேஷம் போடுறியா?" சொன்னதை கேட்டு முறைத்தான். அவன் சொன்னதும் வாஸ்தவம்தான். இந்த தளத்தில் எங்களால் அதிக நேரம் நிற்க முடியாது. நான்தான் கவனிக்காமல் இங்கே இறங்கி விட்டேன். மீண்டும் லிப்டில் நான்காவது மாடிக்கு சென்றோம்.

"டேய்! அந்த பக்கம் எல்லாம் பொம்மையா இருக்குடா, துணிக்கடைல இதெல்லாமா விப்பாங்க." கேட்டுவிட்டு பொம்மைகளை நோக்கி நடந்தான். நான் அமைதியாக பின் தொடர்ந்தேன்.

"பக்கத்து வீட்டு பாப்பாக்கு அது மாதிரி பொம்மை வாங்கலாம்னு பாக்குறேன்." மேலே இருந்த ஒரு கரடி பொம்மையை கை காட்டினான்.

"டேய்! அதெல்லாம் நல்லா வளர்ந்த பணக்கார வீட்டு பாப்பாங்க கட்டி பிடிச்சு தூங்குறது. நமக்கு கட்டுபடியாகாது." நான் சொல்லி முடிக்கும் முன் அவனே அந்த பொம்மையின் விலையை கவனித்து இருந்தான். அதை வாங்கும் முடிவை மாற்றி கொண்டான் என்று அவன் முகத்தை பார்த்ததும் தெரிந்தது.

மற்ற பொம்மைகளை பார்க்க தொடங்கியவன் திடீரென "மச்சான்!"  என பெருங்குரலுடன் என்னை பிடித்து உலுக்கினான்.

"என்னடா?"

"அங்க நிக்குறது நடிகை அமோகினி தான?" அவன் காட்டிய பெண்ணை உற்று பார்த்தேன். அமோகினி மாதிரியும் தெரிந்தது. இல்லாததும் மாதிரியும் இருந்தது.

"சரியா தெரியலடா."

"என்னடா இப்பிடி சொல்ற. ரெண்டு வருஷம் முன்னாடி நம்ம ஊருல இவங்களோட முதல் படம் 'அன்பு காதலி' பார்த்தோமே. நீ கூட அவங்க போட்டோ வந்த பேப்பரை எல்லாம் தேடி தேடி கண்டு பிடிச்சு அவங்க படத்தை வெட்டி எடுத்து கணக்கு  நோட்டு முழுக்க ஒட்டிகிட்டயே "

"அதெல்லாம் அப்போ செஞ்சு இருப்பேன். அப்புறம் புதுசு புதுசா எத்தனையோ பேரு வந்தாச்சு. இவங்க நடிச்சே ரொம்ப நாள் ஆகுது. அதான் சரியா சொல்ல தெரியல"

"அவங்கதான்டா. நான் வேணும்னா போய் கேட்டுகிட்டு வரேன் பாரு" சொன்னவன் என் பதிலை கூட எதிர் பாராமல் அந்த பெண்ணை நோக்கி நடந்தான். சில நிமிடங்கள் கழிந்த  பின் ஏமாற்றம் அடைந்த முகத்துடன் திரும்பினான்.

"என்னடா ஆச்சு"

"அவங்க தான் அமோகினி இல்லன்னு சொல்றாங்க"

"சரி விடு"

"இல்லடா. அவங்க பொய் சொல்றாங்க. நான் அவங்க எதிர் பார்க்காத நேரத்துல அவங்களை அமோகினினு கூப்பிடுறேன். திரும்புவாங்க பாரு"

"நீ மட்டும் கூப்பிட்ட உன்னை கொன்றுவேன். இது சென்னைடா. நீ சினிமால பார்த்த எல்லாரும் இந்த ஊருலதான் இருக்காங்க. நீயே பாரு. இங்க எத்தனை பேரு இருக்காங்க. யாராச்சும் அவங்களை கண்டுகிட்டாங்களா. நீதான் தேவை இல்லாம போய் பேசி அவமானப்பட்டுட்ட. இப்போ இன்னொரு தடவை வேற அவமானப்பட பாக்குற." 

அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.  அந்த பின் பெண் சில நிமிடங்களுக்கு  அங்கிருந்து சென்று விட்டாள். நாங்களும் வீடு திரும்பினோம். என் நண்பன் மறுநாள் ஊர் திரும்பிவிட்டான்.

ரு வாரத்திற்கு பின் ஒரு காலையில் என் நண்பன் தொலைபேசியில் அழைத்தான்.

"நியூஸ் பாத்தியா?"

"இல்லை. ஏன்?"

"அமோகினி தற்கொலை செஞ்சுகிட்டாங்களாம்."

"ஓ!" என்றேன் அசுவாரசியமாக.

"டேய்! நாம அன்னைக்கு பேசி இருந்தா அவங்களை காப்பாத்தி இருக்கலாம்"

'என்னடா சொல்ற?"

"அவங்க லெட்டர்ல என்ன எழுதி இருக்காங்க தெரியுமா. 'முதல் படத்திற்கு பின் திரை உலகமும் ரசிகர்களும் என்னை தலையில் வைத்து கொண்டாடினர். அதன் பின் இரண்டே படங்களில் யாருக்கும் தேவை இல்லாதவளாக, அடையாளம் தெரியாதவளாக ஆகி போனேன். சினிமாவுக்காக எத்தனையோ இழந்தேன். ஆனால் என்னை திரை உலகம் ஒதுக்கி விட்டது' அப்பிடின்னு"

"டேய்! அவங்களுக்கு சான்ஸ் கிடைக்காட்டி நாம என்ன பண்றது?"

"இல்லடா. பேப்பர்ல போட்டு இருக்கான். அவங்க கடந்த சில நாளா சின்ன ரோல்லயாவது சான்ஸ் வேணும்னு ரொம்ப ட்ரை செஞ்சு இருக்காங்க . கடைசில விரக்தி ஆகி, போன வாரம் பைத்தியம் மாதிரி சென்னை முழுக்க சுத்தி இருக்காங்க. ஒரு காலத்துல அவங்களை தலைல தூக்கி வச்சுகிட்டு ஆடுன ரசிகர்கள் யாருமே அவங்களை கண்டுகிடலன்னுதான் அவங்களுக்கு மன அழுத்தம் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சாம்."

"பைத்தியக்காரத்தனம்"

"புகழோட உச்சத்துல இருந்து கீழ வர்றதோட வலி அதை அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்."

"நீ பேசுனியே?"

"நான் நீங்க அமோகினியானு கேட்டேன். அதுதான் அவங்களை ரொம்ப பாதிச்சு இருக்கும். எப்பிடி இருக்கீங்க அமோகினின்னு கேட்டு இருந்தா சந்தோசப்பட்டு இருக்கலாம்"

"நடிகைங்க தற்கொலை செஞ்சுக்குறது ரொம்ப சாதாரணமா நடக்குற விஷயம். .நீ எதையாவது போட்டு குழப்பிக்காத. விடு. நாளைக்கு பேசுறேன்."

சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தேன். என் நண்பன் கூறியது சரிதான் என்று தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த  பெண் அன்று வந்தது போல கடைக்கு சென்று இருந்தால் ஒட்டு மொத்த கூட்டமும் அவள் மேலே பாய்ந்து இருக்கும். கால ஓட்டத்தில் அவள் ரசிகர்களால்  மறக்கப்பட்டுவிட்டாள். அந்த புறக்கணிப்பே அவளுக்கு மன வேதனை தந்திருக்கும். அந்த நடிகையின் வாழ்க்கையையும், அவனை அன்று அவளிடம் பேச விடாமல் தடுத்ததையும் எண்ணி வருத்தப்பட தொடங்கினேன். 

திரட்டிகள் வழியாக அல்லாமல் நேரடியாக தளத்துக்கு வரும் வாசகர்கள் கவனத்துக்கு. அடுத்த பதிவுக்கு ஒரு வாரம் ஆகலாம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

6 comments:

  1. நல்ல பதிவு.
    என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
    தொடர்ந்து எழுதுங்கள்!
    நன்றி!

    ReplyDelete
  2. நல்ல 'கதை' நடையும் அருமை!

    தீபாவளி வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. /// புகழோட உச்சத்துல இருந்து கீழ வர்றதோட வலி அதை அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்... ///

    உண்மை தான்... ஆனால் எதையும் தாங்கும் மனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி சார்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...