Wednesday, October 9, 2013

அவசரமாய் சில காதல்கள்

ப்படி இரவு முழுக்க ஆஃபீசில் அமர வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய தளம் முழுவதும் காலியாக இருந்தது. இன்று இரவு யாராவது இருக்க வேண்டியது இருக்கும் என்று எங்கள் டீம் லீட் சொன்னதுதான் தாமதம். சுதா முதல் ஆளாக என்னை நோக்கி ஓடி வந்தாள்.

"ஜே! உனக்கே தெரியும் எனக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கு. நான் எப்படி நைட் முழுக்க இங்க ஸ்டே பண்ண முடியும்?"

"ஆமா. நீங்க இருக்க முடியாதுதான்" என்றேன். வேறு என்ன சொல்ல முடியும். ஆனால் அவள் ஏன் அதை என்னிடம் சொன்னாள் என்று எனக்கு சில நிமிடங்கள் பின்புதான் புரிந்தது. இப்போது என்னை நோக்கி வந்தவன் ஆண்டனி.

"ஜே! எனக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாள்தான் ஆகுது. அதுக்குள்ள ராத்திரி வீட்டுக்கு போகாட்டி பொண்டாட்டி சாமி ஆடிடுவா." என்றான்.

"சரி. நீ வீட்ல போய் வேலை பாரு" என்று பதில் சொன்னதற்கு முறைத்து விட்டு பின்னர் நன்றி சொன்னான். ஆக இன்று இரவு பலி கடா ஆக போவது நான்தான் என்பது உறுதி ஆகிவிட்டது.

உண்மையில் இப்போது எனக்கு   செய்ய வேண்டிய வேலை என்று ஏதும் பெரிதாக இல்லை. நாங்கள் உருவாக்கிய மென்பொருளை அமெரிக்காக்காரன் இப்போது சோதித்து பார்க்க போகிறான். ஏதேனும் பிரச்சினை என்றால் மெயில் அனுப்புவான். அப்படி அவன் ஏதேனும் அனுப்பினால் அந்த பிரச்சினையை சரி  செய்து தர வேண்டும். அவ்வளவுதான். இப்படி வேலை ஏதும் இல்லாமலே தனிமையில் அமர்ந்திருப்பது மனதை மேலும் சோர்வாக்கியது. இணையத்திலேயே இரவு முழுவதும் கழிக்க வேண்டுமே என்ற வெறுப்புடன் அமர்ந்திருந்த போதுதான் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.

மெதுவாக தலையை தூக்கி பார்த்தேன். ஒட்டு மொத்த மன சோர்வும் ஒரு நொடியில் காணமல் போனது. அங்கே வந்து கொண்டிருந்தவள் ஒரு பெண் என்று சொன்னால் அது மிக சாதாரண வார்த்தை. வந்து கொண்டிருந்தவள் ஒரு பேரழகி. கட்டான உடல். உடல் அமைப்பை எடுத்து சொல்லும் உடை. பளிச்சென்ற களையான முகம். அவள் நடந்து வந்த விதம் 'F' டிவியில் பார்த்த மாடல்களை நியாபகப்படுத்தியது. இதுவரை அவளை ஆபீசில் பார்த்ததே இல்லை. நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவள் போலும். வந்தவள் எனக்கு இரண்டு நான்கு சீட் தள்ளி அமர்ந்து தன்னுடைய கணினியை ஆன் செய்தாள்.

திருட்டுத்தனமாக பார்வையை திருப்பி அவளையே பார்க்க தொடங்கினேன். இறைவன் நமக்கு கஷ்டங்களை அளிப்பது போல வாய்ப்பையே அளிக்கிறான் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.  இன்று இரவுக்குள் எப்படியும் இவளிடம் பேசி இவள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும்  விட வேண்டும். நானும் எத்தனை ஞாயிற்றுகிழமைகளைதான்  தூங்கியே கழிப்பது? எனக்கும் ஒரு அழகிய பெண்ணை கூட்டி கொண்டு சினிமாவுக்கும், பீச்சுக்கும் போக வேண்டும் என்று ஆசை இருக்காதா?ஆசை தீர காதலித்த பின் இவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டேன். இப்பொழுதே போய் பேசி விடலாமா? வேண்டாம். வந்த உடன் பேசினால் தவறாக நினைப்பாள். ஒரு அரை மணி நேரம் போகட்டும்.

நான் மணியையே பார்த்து கொண்டிருந்த இருபதாவது நிமிடம் ஒரு குரல் கேட்டது.

"ஹாய்! ஐ ஆம் சந்தியா" பேசியது அவளேதான்.

"ஹாய்" குழறிய நாக்கை கட்டுப்படுத்தி கொண்டு அவளுக்கு பதில் சொன்னேன். இவளுடன் பேசும்போதே இதயம் இப்படி வேகமாக துடிக்கிறதே. 

"நீங்க இன்னைக்கு நைட் ஷிப்ட்டா?"

"ஆமா"

"தேங்க் காட். இன்னைக்கு என்னோட டீம் மேட் அமலா லீவ். தனியா இருக்கணுமேன்னு பயந்துகிட்டே வந்தேன். நல்ல வேளை நீங்க கம்பெனிக்கு இருக்கீங்க." சொல்லிவிட்டு அழகாக சிரித்தாள். பழம் நழுவி  பாலில் விழுவது என்றால் என்ன என்று புரிந்தது.

"நானும் தனியா இருக்கணும்னுதான் நினைச்சேன்". பொத்தாம் பொதுவாக ஒரு பதிலை சொல்லி வைத்தேன்.

"நான் கீழ காஃபி சாப்பிட போகணும். நீங்க என் கூட வர முடியுமா?"

"கட்டாயம் வரேங்க."

கேன்டீன் இருக்கும் முதல் தளத்தை அடைய இருவரும் நடந்து சென்று லிப்டில் ஏறினோம். இரவு நேரம் ஒரு அழகிய பெண்ணுடன் தனியாக லிப்டில் போவது மனதுக்கு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது.

"நீங்க எந்த ஊரு?" என்றாள்.

"மதுரை பக்கம். நீங்க"

"நான் கோயம்புத்தூர். ஆனால் வளர்ந்தது, படிச்சது எல்லாம் பாம்பே."

"எப்படி நைட் ஷிப்ட் பார்க்க ஒத்துக்கிடீங்க"

"நான்  ஈவ்னிங் மாடலிங்  செய்ய போய்டுவேன். எனக்கு நைட் ஷிப்ட்தான் சரி." அவள் சொல்லி முடிக்கவும் முதல் தளம் வரவும் சரியாக இருந்தது. கேன்டீன் சென்று இருவரும் காஃபி வாங்கி கொண்டோம். காஃபி குடித்து முடிக்கும் முன் காதலை மறைமுகமாகவாவது சொல்லி விட வேண்டும் என முடிவு செய்தேன்.

"பாம்பேல இருந்தேன்னு சொன்னீங்களே. குடும்பத்தோட இங்க வந்தாச்சா?" என கேட்டேன். அவள் சொல்லும் பதிலை வைத்து அவள் குடும்பத்தில் ஒருவனாக நான் விரும்புவதை எப்படியாவது உணர்த்தி விடுவது ஏன் திட்டம்.

"இல்லை. நான் மட்டும்தான் இங்க" சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தி விட்டு தன் கையில் இருந்த காபி கோப்பையை கீழே வைத்து விட்டு எழுந்து ஓட தொடங்கினாள். எங்கே போகிறாள் என நானும் எழுந்து வேகமா பின்னே சென்றேன். அவள் வாஷ் பேசினை நெருங்கி சென்று வாந்தி எடுக்க தொடங்கினாள். வாந்தி எடுத்து முடித்த பின் தன் முகத்தை கழுவி கொண்டாள். பின் நிதானமாக என்னை நோக்கி வந்தாள்.

"உடம்பு சரி இல்லையா?" என்றேன்.

"ஆமா"

"மாத்திரை போட்டுக்க வேண்டியதுதானே"

"மாத்திரை போட மறந்ததுதான் சிக்கலே." சொல்லிவிட்டு கண் சிமிட்டினாள்

"ஒண்ணுமே புரியல"

"எனக்கு ஒன்னும் இல்ல. வீக் எண்ட் ஹாஸ்பிடல் போய் கிளீன் செஞ்சுகிட்டா சரி ஆகிடும்"அவள் சொன்ன பதிலில்  எனக்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க?"

"லிவிங் டு கெதர்ல இதெல்லாம் சாதாரணம்தான். எப்பவாச்சும் கேர்லெஸ்ஸா இருந்திட்டா இப்படி ஆகிடும்." அடுத்த குண்டை சாதாரணமாய் வீசினாள்.

"அப்போ உங்க குடும்பம்"

"அவங்க பாம்பேல. நான் இங்க சுதீப் கூட லிவிங் டு கெதர்ல."

"ஆனா நேத்துதான் சுதீப்பும் நானும் செட் ஆகாது, பிரிஞ்சுடலாம்னு முடிவு எடுத்தோம். நான் இப்போ  வேற ஆளை தேடிகிட்டு இருக்கேன்."

"ஓ!"

"நாம சீட்டுக்கு போகலாமா?"

"ம்"

சீட்டுக்கு திரும்பினோம். இரவு முழுவதும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விடிந்ததும் அவளை  திரும்பி கூட பார்க்காமல் நடையை கட்டினேன்.

3 comments:

  1. //காஃபி குடித்து முடிக்கும் முன் காதலை மறைமுகமாகவாவது சொல்லி விட வேண்டும் //போன்ற நபர்களிடம் இருந்து தப்பிக்க
    //வீக் எண்ட் ஹாஸ்பிடல் போய் கிளீன் செஞ்சுகிட்டா சரி ஆகிடும்//
    ங்கற யோசனை(Idea) நல்லாருக்கே.

    ReplyDelete
  2. கிரேட் எஸ்கேப்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...