Tuesday, December 9, 2014

டாஸ்மாக்கை தேடியவர்!!!

“குடி குடியை கெடுக்கும்” என்று கேள்விபட்டு இருப்பீர்கள். கேள்விப்படாதவர்கள் யாராவது இருந்தால்  மீண்டும் முந்திய வரியை படித்து கேள்விப்பட்டு கொள்ளுங்கள். மது குடிப்பவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில்லை. மது குடிப்பவர்களுக்கு உதவ நினைத்தாலும் பாதிப்புதான். அப்படி உதவி செய்யப்போய் நஷ்டம் அடைந்த ஒரு அப்பாவியின் கதை இது.


அன்று ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை. மதுரைக்கு ட்ராவல்சில் டிக்கெட் எடுத்து வைத்து இருந்தேன். எதிர்பாராத தாமதம் காரணமாக  நான் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்த  நிறுத்தத்துக்கு செல்ல முடியாத நிலை. ட்ராவல்சுக்கு மீண்டும் போன் செய்து பேருந்தை என்னுடைய  வீட்டுக்கு அருகிலேயே  இருக்கும் நிறுத்தத்தில் நிறுத்த  கேட்டு கொண்டேன். முதலில் அதெல்லாம் முடியாது என்று மறுத்தவர்கள் பத்து மணிக்கு பேருந்து வரும். ஒரு சில வினாடி மட்டுமே நிறுத்துவோம், அதற்குள் நிறுத்தத்துக்கு வந்து பேருந்தில் ஏறவில்லை என்றால் கிளம்பிவிடுவோம் என்ற  நிபந்தனையுடன் என் கோரிக்கையை ஏற்று கொண்டனர். நானும் ஒப்பு கொண்டேன்.

பத்து நிமிடங்கள் முன்பே பேருந்து நிறுத்தத்துக்கு கிளம்பி  விட்டேன். பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போதுதான்  அவரை கவனித்தேன். எனக்கு எதிர் திசையில் பரபரப்பாக நடந்து வந்த அந்த நபர்தான் இந்த கதையின் திருப்புமுனை ஏற்படுத்தப் போகிறார் என்று அப்போது உணரவில்லை. அவர்  ஒரு வட இந்தியர். ஜீன்ஸ்,டீ சர்ட் என்று உடை உடுத்தி இருந்தவருக்கு நாற்பது வயது இருக்கும். அவர் நடந்து வந்த வேகத்தில் அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்று உணர முடிந்தது. வேகமாக வந்தவர் என்னை நெருங்கியதும் பிரேக் அடித்து நின்றார்.

இங்க எங்க ஒயின்ஷாப் இருக்குஎன்று கேட்டார் ஆங்கிலத்தில்.

தெரியாது என்று ஒரே வார்த்தையில் முடித்து இருக்கலாம். இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் சரக்கு கிடைக்காமல் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவுவது நம் கடமையல்லவா? அவருக்கு உதவ முடிவு செய்து என்னுடைய நினைவை தூசி தட்டி  யோசித்தேன். எங்கேயெல்லாம் கூட்டம் நிரம்ப நிரம்ப நிற்கும்.

சார்! நீங்க வந்த வழியே போங்க. அங்க ஒரு கடை இருக்கு.

அங்க இருந்துதான் வரேன். அதை மூடிட்டாங்க என்றார். பதட்டம் கூடி இருந்தார்.

9:50 தான ஆகுது. இந்த அரசு ஊழியர்களே  இப்படிதான். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாதவங்க

"ஆமாங்க. சரக்கு இல்லைன்னு காரணம் சொல்றாங்க. நம்புற மாதிரியா இருக்கு?"

“சரி விடுங்க. அப்படியே நேரா போனா  ஒரு கடை வரும். அங்க ட்ரை செஞ்சு பாருங்க.”

“அங்க அந்த கடையே இல்லங்க. மூடிட்டாங்க” குரலில் வருத்தம் காண்பித்தார். நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளை இடம் மாற்றியது எனக்கு  நினைவுக்கு வந்தது.

“சரி. கவலையை விடுங்க. அந்த கடையை பக்கத்துல  இருக்குற தெருல  கொண்டு வச்சு இருப்பாங்க. பார்த்தீங்களா?”

“அதெல்லாம் நேத்தே நல்லா தேடி பார்த்துட்டேன்”

“அரசாங்கத்துக்கு பொறுப்பே இல்லீங்க. இடம் மாத்துனா, எங்கே மாத்துறாங்கன்னு பழைய இடத்துல  ஒரு மேப் வைக்கணும். கஸ்டமர் மேலே அக்கறையே இல்ல. அமெரிக்கால எல்லாம் இப்பிடி செஞ்சா கோர்ட், கேசுன்னு போய் நஷ்டஈடு கேட்கலாம் தெரியுமா ”

அவர் நான் சொன்னதை கேட்கும் மன நிலையில் இல்லை. தன்னுடைய கடிகாரத்தை பார்த்துக் கொண்டார்.

“டென்சன் ஆகாதீங்க சார். இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. நீங்க அந்த பழைய கடைக்கு வலது பக்கம் இருந்த சந்துல போய் பார்த்து இருக்கமாட்டீங்க. சரிதானே”

“ஆமாம். அது சின்ன சந்துன்னு”

“தப்பு செஞ்சுடீங்களே சார். இடது பக்கம் இருந்த ரோட்ல பள்ளிக்கூடம் இருக்கு. அங்க கடையை வச்சு இருக்க மாட்டாங்க அந்த சந்துல போய் பாருங்க”

அவர் சந்தேகத்தோடு இடத்து விட்டு அகன்றார். நான் மணியை பார்த்தேன். 9:55 ஆகி இருந்தது. சற்று முன்னதாகவே கிளம்பியது நல்லதே. இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது பேருந்துக்கு. நிறுத்தத்தை நோக்கி நடந்து காத்திருக்க தொடங்கினேன். 10 மணி ஆகியும் பேருந்து வரவில்லை.

ஒரு பத்து நிமிடம் கடந்தது. பேருந்து வரவில்லை. எதற்கும் போன் செய்து விடலாம் என்று மொபைலை எடுத்தேன். 1 மிஸ்ட் கால் என்று கூறியது. ட்ராபிக் சத்தத்தில் போன் வந்ததே கேட்கவில்லை. அவசரமாக அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டேன்.

“எங்க இருக்கீங்க”

“நாங்க செங்கல்பட்டு தாண்டிட்டோம்.”

“நான் நிக்கிறேன்னு சொன்னேன்லங்க”

“எங்க நின்னீங்க. நாங்க நின்னு பார்த்தோம். போன் செஞ்சும் பார்த்தோம். அதையும் எடுக்கலை”


போன் வந்த நேரத்தை பார்த்தேன். 9:55

“10 மணிக்கு வரேன்னு சொல்லிட்டு முன்னாடியே வந்துட்டீங்க?”

“சார். நீங்க என்ன பஸ் ஸ்டாண்ட்லயா நிக்குறீங்க. நாங்க சொன்ன நேரத்துல வரலன்னு சொல்ல. வழில நிக்குறவரு ஒரு பத்து நிமிஷம் முன்னாடிதான் வரணும்”

தொடர்பை துண்டித்தேன். அவர் சொல்வதும் நியாயம். இனி பேசி பயனில்லை. டிக்கெட் பணம் 600 ரூபாய் காந்தி கணக்குதான். வீட்டுக்கு போய் தூங்க வேண்டியதுதான். அந்த ஆள் பேச்சு குடுக்காமல் இருந்திருந்தால் பேருந்தை தவற விட்டிருக்க மாட்டேன்.

அப்போதுதான் கவனித்தேன். அந்த வட இந்தியர் சந்தோசமாக கையில் புட்டியுடன் வந்து கொண்டிருந்தார். என்னை பார்த்து சிரித்து நன்றி கூறினார். அரசாங்கத்தின் வருவாய்க்கு உதவிய சிறு திருப்தியுடன் ஒரு விரக்தி சிரிப்பில் அந்த நன்றியை ஏற்று கொண்டேன்.

  

1 comment:

  1. பற்பல சிரமங்கள் ஏற்பட்டு இருந்தாலும் இருவர் இன்று உயிரோடு உள்ளார்கள்... இன்னொரு உறவினர் சொர்க்கத்தில் உள்ளார்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...