Tuesday, December 30, 2014

டிசிஎஸ் அடிக்கும் எச்சரிக்கை மணி

டி துறை ஊழியர்களின்  எதிர்காலம் கடுமையாக இருக்கப் போவதாய் தோன்றுகிறது. இனி ஐடி  துறை ஊழியர்கள் தேவைக்கு அதிகமான ஊதியம் பெறுவதாக கருதப்படும் பொது கருத்து விரைவில் மறைந்து போகும். அதற்கு பிள்ளையார் சுழி போட்டு இருப்பது டிசிஎஸ். 25000 பேரை வேலை நீக்கம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்தியாவில் இயங்கும் அமெரிக்க கம்பெனிகள் கூட செய்ய தயங்கும் ஒரு காரியத்தை செய்து, டிசிஎஸ் வேலை அரசாங்க வேலை போல என்ற கருத்தையும் தவிடுபொடியாக்கி விட்டது  டிசிஎஸ் நிர்வாகம். குறைந்த ஊதியத்தில் புது ஊழியர்கள் 50000 பேரை வேலைக்கு தாங்கள் உருவாக்கிய காலி பணியிடங்களை தாங்களே நிரப்பவும் போகிறார்கள்.

ஆட்குறைப்பு என்பது சில சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாததே. கம்பெனி நஷ்டத்தில் இயங்கும்போது செலவுகளை குறைக்க நினைப்பதும் இயல்பானதே. ஆனால் இருக்கும் இலாபத்தை அதிகரிக்க இவர்கள் ஆட்குறைப்பு செய்வதைத்தான் ஏற்று கொள்ள முடியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களை தூக்க போவதாக சொன்னார்கள். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு கீழே அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு மேலே அதிக ஊதியம் பெறுவதாக நிர்வாகம் கருதினால் அவர்களையும் வெளியேற்றுவதாக தெரிகிறது. கம்பெனியில் உள்ள சேர், பெஞ்ச் போன்ற ரிசோர்ஸ்(resource) களுக்கும்   மனித ரிசோர்ஸ்களுக்கும் எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை நிர்வாகம்.  

வெளியேறிய ஊழியர்களின் பாடு திண்டாட்டம்தான். அதிக அனுபவம் கொண்ட ஊழியர்கள் வெளியற்றப்பட்டால் அவர்கள் மீண்டும் வேலை பெறுவது அத்தனை சுலபம் இல்லை. பத்து, பதினைந்து ஆண்டுகள் தம்மை பயன்படுத்திய நிர்வாகம் தம்மை தூக்கி எரியும் என  அவர்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். வேறு ஏதாவது துறையின் ஒரு தொழிற்சாலை மூடப் போவதாக தெரிந்தால் அரசாங்கமே தொழிலாளர் நலம் கருதி எதாவது ஒரு வகையில் அந்த தொழிற்சாலையை இயங்க வைக்க முயற்சிக்கும். இத்தனை ஆண்டுகள் வருமான வரி கட்டிய இவர்களுக்கு பரிந்து பேச அப்படி  யாரும் வரப்போவதும் இல்லை.


டாட்டா தனது பிராண்ட் இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் செய்யும் இந்த காரியம் பாதிக்கப்போவது டிசிஎஸ் ஊழியர்களை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த ஐடி  துறை ஊழியர்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக மாற்றப்போகும் மோசமான  முன்னுதாரணம். நாளை இதே முறையை அனைத்து கம்பெனிகளும் பின்பற்றினால் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு மேலே ஐடி துறையில் யாரும் நிலை கொள்ள முடியாது. அப்படியே இருக்க விரும்பினாலும் ஊதிய உயர்வை எல்லாம் மறந்து விட்டே வேலை செய்ய வேண்டியது இருக்கும். மொத்தத்தில் ஐடி துறை ஊழியர்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றியும், தாங்கள் செய்து கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகளை பற்றியும் சிந்திக்க வைத்து விட்டது டிசிஎஸ். ஐடி துறையை தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களும் இதை கவனத்தில் கொள்வது நல்லது.


2 comments:

  1. வணக்கம்
    துறை சம்மந்தப்பட்டவர்களுக்கு விரிவான தகவல்.. சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட இல்லை...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...