Monday, March 23, 2015

முடிவில்லா காதல் கதை

நீங்கள் இந்த கதையை படிக்க ஆரம்பிக்கும் முன் நான் என்னை பற்றி சொல்லி விடுகிறேன். என்னுடைய பெயர் காயத்ரி. நான் மிக அழகாக இருப்பதாக நான் பத்தாவது படிக்கும்போது காதல் கடிதம் கொடுத்த ஷங்கர் எழுதி இருந்தான். அது நடந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னும் வெளியே போகும்போது என்னை உற்று உற்று பார்க்கும் ஆண்கள் நான் முன்பை விட அழகாகி இருப்பதை உறுதிபடுத்துகின்றனர்.

சரி என்னுடைய புராணம் இப்போது எதற்கு. இந்த கதை என்னை பற்றியது இல்லை. சற்று பொறுங்கள். உடனே அவசரப்பட்டு படிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.  நான் இப்போது சொல்லப்போகும் கதை என்னை விட அழகான என் தோழியை பற்றியது. அவள் பெயர் அர்ச்சனா. பெண்கள் கூட அவளை பேரழகி என்று பொறாமையில்லாமல் ஒத்து கொள்வார்கள். அப்படிப்பட்ட அழகு அவளுக்கு. ஓர் ஆண்டுக்கு முன் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில்தான் இந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தோம். எனக்கு அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டது. பார்த்தவுடன் சிரித்தாள். பின்னர் அவளே வந்து பேசினாள். ஒரே நாளில் நாங்கள் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டோம். நான் என்று இல்லை. அவள் யாரையும் எளிதில் ஒரே நாளில் தோழி ஆக்கிவிடுவாள். அடுத்தத்த இருக்கையாக பார்த்து  அமர்ந்து கொண்டோம்.

மூன்று மாதங்களுக்கு  பின் எங்கள் குழுவில்  புதிதாக வந்து சேர்ந்தான் ராஜேஷ். இவனை ஏனோ எனக்கு பார்த்தவுடன் பிடிக்கவே இல்லை. சோகம் அப்பிய முகம். எப்போதும் எதையோ பறி கொடுத்தவன் போல நடவடிக்கை. தேவை இருந்தால் மட்டும்  எங்களுடன் அளவாக பேசுவான். இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒரு சாதாரண வெள்ளிகிழமையில்தான் இந்த கதை ஆரம்பித்தது. ஒரு நாள் காலில் கட்டுடன் வந்து இருந்தான். நொண்டி நொண்டி வந்து இடத்தில் அமர்ந்தான். நான் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் விதியை மாற்ற முடியுமா. பேசி விட்டேன்.

“அர்ச்சனா! என்ன நம்ம கல்லுளிமங்கன் இன்னைக்கு நொண்டிகிட்டே வந்து இருக்காரு”

“பேசாம இருடி. பாவம் அடிபட்டு இருக்கு. அதை போய் கிண்டல் பண்ணிக்கிட்டு”

“பாருடா. அவரு மேல சாப்ட் கார்னரா”

“ஏன் இருக்ககூடாதா? அவனும் நம்மளை மாதிரிதானே”

“விட்டா அவன்கிட்டயே போய் நலம் விசாரிப்ப போல?”

“விசாரிச்சாதான் என்ன?”

சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென அவள் இருக்கையை நோக்கி நடந்தாள்.

“என்ன ஆச்சு ராஜேஷ் கால்ல”

“பைக்ல இருந்து விழுந்துட்டேன்”

“எப்பிடி?”

“ம்ம். பொத்துன்னு.”

எனக்கு எரிச்சல் ஆகியது. என்ன மனிதன் இவன். நலம் கேட்க வந்தவளையே எரிச்சல் அடைய செய்கிறான். ஆனால் அர்ச்சனாவோ புன்னகைத்தாள்.

“சரி. லஞ்ச் நான் வாங்கி வந்து தரேன். நீ கஷ்டப்பட்டு கேண்டீன் போக வேண்டாம்”

“நான் கேட்டேனா உன்கிட்ட. எனக்கு தெரியும் என்னை பார்த்துக்க.”

“இப்போ எதுக்கு கோபப்படுற?”

“நீங்க பாட்டுக்கு வருவீங்க. உங்களுக்கு வேலை முடியிற வரை பல்லைக் காட்டி பேசுவீங்க. அப்புறம் டாட்டா காட்டிட்டு போய்டுவீங்க. நாங்க  உங்களையே நெனச்சுகிட்டு உருகிகிட்டு இருக்கணும். ஆம்பளையா இருந்து பார். வலி தெரியும்”

படபடவென பொரிந்தான் அவன். அர்ச்சனாவின் கண்களில் நீர் திரண்டது தெரிந்தது.

“நான் கேசுவலாதான் கேட்டேன்”

“நீ இனிமே கேக்கவே கூடாதுன்னுதான் நான் பேசினேன்”

அர்ச்சனா திரும்பினாள்.

“தேவையாடி உனக்கு இது. லவ் பெயிலியர்ல பைத்தியம் ஆகிடிச்சு அது”

“சரி இனிமே அதைபத்தி பேசாதே”

ரண்டு மாதங்கள் ஆகியது. இப்போது அவனுடன் எங்கள் குழுவில் உள்ள யாரும் பேசுவதில்லை.  அவன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரிவதில்லை.  ஒரு நாள் மாலைப்பொழுதில் அவன் அர்ச்சனாவை நோக்கி வந்தான்.

“அர்ச்சனா! எனக்கு நம்ம அப்ளிகேசன்ல ஒரு சந்தேகம். உனக்கு மட்டும்தான் அதை பத்தி தெரியும்னு சொல்றாங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”

“எனக்கு வேலை இருக்கே. ஒரு அரை மணி நேரம் அப்புறம் வரவா?”
“இல்ல. இது கொஞ்சம் அவசரம்.”

“சரி வரேன்”

எழுந்து அவன் பின்னாலேயே சென்று விட்டாள். அரை மணி நேரத்துக்கு பின் திரும்பினாள். எனக்கு அவள் மேல் ஆத்திரமாக வந்தது.

“ஏய் அச்சு. உனக்கு இது தேவையா? அவன் என்னென்ன பேசுனான்னு அதுக்குள்ள மறந்துட்டியா. இப்போ உன்னோட வேலைய விட்டு போய் அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்னு யாரு என்ன தேவை”

“இன்னா செய்தாருக்கு நன்மை செய்யணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்கார்”

“ஹ்ம்ம். சில ஜென்மங்களை திருத்தவே முடியாதுன்னு எங்க அப்பா  சொல்லியிருக்கார்”

“ஹஹஹா”

“சரி.தேங்க்ஸ் எதுவும் சொன்னானா”

“இல்லை”

இது நடந்த மறுநாள் அவன் மீண்டும் எங்கள் இருக்கையை  நோக்கி வந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் அர்ச்சனா”

“என்ன தேங்க்ஸ் எல்லாம்”

“இல்ல நான் அன்னைக்கு ஏதோ ஒரு மூட்ல ரொம்ப பேசிட்டேன். அதை எல்லாம் மனசுல வச்சுக்காம”

“வேணும்னா எனக்கு ஒரு சிலை வச்சுடுறீங்களா?”

அவன் புன்னகைத்தான்

“உங்களுக்கு ஜோக் எல்லாம் அடிக்க தெரியுமா?”

“உங்களுக்கு சிரிக்க கூடத் தெரியுமா?”

இப்போது இருவரும் சேர்ந்து புன்னகைத்தனர்.

“ஆம்பளையா இருந்தாதான் கஷ்டம் தெரியும்னு சொன்னீங்களே. அப்பிடி என்ன கோபம் பொண்ணுங்க மேல உங்களுக்கு”

“பொண்ணுங்க மேல இல்ல. ஒரே ஒரு பொண்ணு மேல. எல்லாரும் அவளை மாதிரியே இருப்பாங்கன்னு நெனச்சது என்னோட முட்டாள்தனம்”

என்னால் அதற்கு மேல்  பொறுக்க முடியவில்லை.

“அச்சு. கொஞ்சம் வெளிய போகணும் வரியா?”

ரியாக இரண்டு நாட்களுக்கு பின் “காயத்ரி! அர்ச்சனா இன்னைக்கு வரலியா?” என்றவாறே வந்தான் அவன். எல்லாம் அர்ச்சனா கொடுக்கும் இடம். அவள் வந்தாலும் வராவிட்டாலும் இவனுக்கு என்ன?

“அவ லீவ்”

“என்ன லீவ் திடீர்னு. உடம்பு சரி இல்லையா?”

“தெரியலையே”

“நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்வீங்களா?”

“என்னது?”

“போன வருஷம் இதே மார்ச் மாசம். நான் லவ் பண்ண பொண்ணு என்னை விட்டுட்டு போய்ட்டா. அவ என்னை ஈசியா தூக்கி போட்டுட்டா. ஆனா என்னால அவளை மறக்கவே முடியல . எல்லா நேரமும் அவ நினைப்புதான் ஆறு மாசம் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன். ஒரு வழியா மனசை தேத்திக்கிட்டு இங்க வந்து வேலைக்கு சேர்ந்தேன்”

“நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க”

“சரி. அவ என்னை விட்டுட்டு போன பின்னாடி பொண்ணுங்கன்னாலே எனக்கு வெறுப்பு. எல்லா பொண்ணுங்களும் சுயநலம் பிடிச்சவங்..”

“ராஜேஷ். நான் அர்ச்சனா மாதிரி இல்ல. இப்பிடி எல்லாம் என்கிட்டே பேசுனா அவ்வளவுதான்”

“சரிங்க. நான் விசயத்தை சொல்லிடுறேன். நான் அர்ச்சனாவை லவ் பண்றேன். அவ வேற யாரையும் லவ் பண்றாளான்னு நீங்க சொல்லிட்டா போதும். நான் அவகிட்ட பேசிக்குவேன்”

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அர்ச்சனாவுக்கு இவன் பொருத்தமா? ஏதோ கவலையில் சிடுமூஞ்சியாக இருக்கிறான். ஆனால் அடிப்படையில் நல்லவன். ஆனால் அர்ச்சனா பற்றி தெரிந்திருந்தால் இவன் இப்படி கேட்டிருப்பானா. அர்ச்சனா என்ன சொல்லுவாள்.“நாளைக்கு அவ வந்துடுவா. நீங்க அவகிட்ட பேசுங்க” என்றேன்.

றுநாள் அர்ச்சனாவை அழைத்து கொண்டு பூங்காவுக்கு சென்று விட்டேன். ராஜேஷையும் வர சொல்லி இருந்தேன். அவன் வருவதை அவளுக்கு சொல்லவில்லை. எங்களுக்கு முன்னரே ராஜேஷ் பூங்காவுக்கு வந்து  விட்டான். அர்ச்சனா அவனை எதிர்பார்க்கவில்லை

“ஹே ராஜேஷ். நீ எங்க இங்க?”

“காயத்ரி! நீ சொல்லலியா?”

நான் அமைதியாக இருந்தேன்

“அர்ச்சனா! நான் நேராவே சொல்றேன். எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு”
அர்ச்சனா என்னை பார்த்தாள். “அவர் உன்னை நெஜமாவே லவ் பண்றாரு அச்சு”

“எப்பிடி திடீர்னு லவ்?” என்றாள் ராஜேஷை பார்த்து

“திடீர்னு வர்றதுதான் லவ். அதுவும் இது மனசை பார்த்து வந்த லவ் ”

“அப்போ நல்ல மனசு இருந்தா மட்டும் போதுமா உங்களுக்கு. என்னை பத்தி உங்களுக்கு வேற என்ன தெரியும்?”

“நல்ல பொண்ணுன்னு தெரியும். எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பீங்க”

“சாரிங்க. ஒத்துவராது”

“சரி உங்க இஷ்டம். ஆனா ஏன் பிடிக்கலைன்னு சொல்லுங்க?”

“சொல்ல தேவை இல்லன்னு நெனைக்கிறேன்”

“இதுதாங்க பொண்ணுங்ககிட்ட.ரொம்ப வீக்கான மனசு. எதுக்கு எடுத்தாலும் பயம் ”

“எனக்கா?”

நான் எதிர் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் அவள் முன் மண்டியிட்டான். “ நான் உங்களை நெஜமாவே லவ் பண்றேன். நீங்க எப்படி சொன்னாலும் நான் என்னை மாத்திகிடுறேன்” என்றான் 

 “நான் நேத்து ஏன் லீவ் தெரியுமா? கோர்ட் போயிருந்தேன்”

“எதுக்கு?”

“ரெண்டு வருஷம் முன்னாடி பெங்களுர்ல ஒரு பொண்ணை மூணு பசங்க ரேப் செஞ்சுட்டாங்கன்னு படிச்சு இருப்பீங்க. இப்போ நியாபகம் இருக்குமான்னு தெரியல. அந்த பொண்ணு பேரை சுதானு பேப்பர்ல எழுதுவாங்க. அந்த பொண்ணோட உண்மையான பேரு அர்ச்சனா. அந்த சம்பவம் நடந்த பின்னாடி ஆறு மாசம் கவுன்சிலிங் மேல கவுன்சிலிங் பொய் அந்த அதிர்ச்சியில இருந்து வெளிய வந்து உங்க முன்னாடி நிக்கிறா. அதுவும் சிரிச்ச முகமா”

அவன் முகத்தில் ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி.

“அன்னைக்கு சொன்னீங்களே. ஆம்பளையா இருந்தாதான் வலி புரியும்னு. அதே மாதிரிதான் என்னோட இந்த  வலிய உங்களால புரிஞ்சுக்க முடியாது”

அவனிடம் பதிலே இல்லை. என்னை சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் அவனை இங்கே கூப்பிட்டு இப்போது எல்லாருக்கும் சங்கடம்.

“பொண்ணா இருக்கிறதும்  கஷ்டம்னு இப்போவாச்சும் ஒத்துப்பீங்களா.” அவள் கண்ணில் நீர் திரள கூறினாள். ஆனால் அவள் ஒரு போதும் அழுததில்லை

“என்னங்க சொல்றீங்க. கல்யாணம் செஞ்சுப்பீங்களா?”

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய உங்களை போலவே நானும் காத்திருந்தேன்.  


   

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...