Saturday, March 28, 2015

சென்னை, மதுரை, கோவை – நான் கண்ட தமிழகம்

“வேற்றுமையில் ஒற்றுமை”(???) காணும் நாடு பாரத நாடு என்று படித்திருப்பீர்கள். இதை பாடப்புத்தகத்தில் படிக்கும்போது நானும் உங்களைப் போலவே பல மாநிலங்களில் பல மொழி பேசுபவர்களும், பல கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களும் வாழ்வதால் இந்த பெயர் வந்தது என்று எண்ணிக்  கொண்டிருந்தேன். பின்னர் தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்துக்கும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது ஒரு மாநிலத்துக்குள்ளேயே எத்தனை விதமான வேறுபாடுகள் என்று புரிந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், அந்த மொழியை பேசும் விதத்திலும், நடந்து கொள்ளும் முறையிலும் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்பது சற்று கவனித்து பார்த்தால்தான் புரியும்.

முதலில் தமிழ்நாட்டின் தலைநகரை எடுத்துக் கொள்வோம். சென்னையில் அடியெடுத்து வைத்த முதல் வாரம் மாநகரப் பேருந்தில் பயணித்தேன். கூட்டம் நிரம்பிய பேருந்தில் நீச்சல் அடித்து உள்ளே சென்று டிக்கெட் எடுக்கலாம் என்று நடத்துனரை கவனித்தவனுக்கு கிடைத்தது ஒரு கலாச்சார அதிர்ச்சி. “மேலே ஏறி வா. சில்லறையா குடு” என்று அறுபது வயது கொண்ட ஒரு பெரியவரை அதிகாரம் செய்து கொண்டிருந்தார்  முப்பது வயது  மிகாத  நடத்துனர். மரியாதை  இல்லாமல்  இப்படி எல்லாம் கூட  பேசுவார்களா  என்று நான்  வியந்து கொண்டிருக்கும்போது  “என்ன வேடிக்கை பாக்குற. டிக்கெட் எடு” என்று என் மேல் அன்பை பொழிந்தார் நடத்துனர். பேருந்தை விட்டு கீழே இறங்கும் முன் பேருந்தில் மேலும் இரண்டு வாய்த் தகராறுகள் வேறு.

இந்த ஊர் இப்படித்தானோ என்று எண்ணிக் கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். அங்கே நின்றிருந்த ஒருவரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்லி வழி கேட்டேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். “சரி! டீ வாங்கித்தா. வழி சொல்றேன்” என்றார்.  வழி சொல்வதற்கு எல்லாமா ஊதியம் கேட்பார்கள் இந்த ஊரில் என்று விழித்தேன். பக்கத்தில் இருந்தவர் எந்த ஊர்க்காரர் என்று தெரியவில்லை. என்னை கூப்பிட்டு வழி சொல்லி அனுப்பினார்.

பின்னர் சென்னை முழுக்க சுற்றி திரிந்தபோது பல தகராறுகளை பார்த்துள்ளேன். வலுகட்டாயமாக சில தகராறுகளிலும் இழுத்து விடப்பட்டுள்ளேன். ஆட்டோக்காரர்களுடன் தகராறு, பேருந்தில் தகராறு, சாலையில் தகராறு, கடைக்காரர்களுடன் தகராறு, அரசு அலுவலகங்களில் என்று யார் மேல் தவறு என்று கணித்து சொல்லிவிட முடியாத அளவுக்கு  தகராறுகள். அதில் பல தகராறுகள்  தேவையற்றவை  என்று கூட தோன்றும். அதே நேரத்தில் தங்கள் உரிமையை அறிந்து அதை பெற குரலை உயர்த்துவதில் சென்னை மக்களை மிஞ்ச முடியாது

பொதுவாகவே  சென்னை மக்கள் அனைவருமே படபடவென பேசக் கூடியவர்கள். அமைதியான இயல்பு கொண்ட சென்னைக்காரர்களை காண்பது அரிதிலும் அரிது. அமைதியாக இருந்தால் சென்னையில் வாழ்வது கடினம் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள் வரும் மனிதர்களை சென்னை தனக்கு தகுந்தாற்போல் மாற்றி கொண்டு விடும்.

இப்போது அப்படியே சென்னையிலிருந்து மதுரைக்கு வருவோம். மதுரைக்காரர்கள் சற்று வேறு விதம். முகவரி விசாரித்தால் அக்கறையாக பதில் சொல்வார்கள். இன்னும் சிலர் உங்களுடன் வந்து அந்த இடத்திலேயே விட்டுவிட்டு போவார்கள். அதே நேரத்தில் எந்த நேரத்தில் எப்போது கோபம் வரும் என்று கூற முடியாது. அதற்காக கோபம் வந்தால் சினிமாவில் காட்டுவது போல அரிவாளை தூக்கி கொண்டு ஓடி வர மாட்டார்கள். இயல்பாகவே மற்றவர்களிடம் அன்பு காட்டுபவர்கள். அதற்காக  மதுரை மக்கள் அனைவரும் தேவதூதர்கள் என்று அர்த்தம் இல்லை. ஜாதி உணர்வு சற்று அதிகமாக இருப்பது இவர்களின் பலவீனம். அதே போல் மதுரை வியாபாரிகளின்  மார்கெட்டிங் திறன் அலாதியானாது. சற்று அயர்ந்தால் நமக்கே தெரியாமல் நம்மிடம் பொருட்களை விற்று விட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

இப்போது கோவைக்காரர்களை எடுத்து கொள்வோம். இப்படி கூட மரியாதையாக பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு போனது இவர்களிடம்தான். சென்னைக்காரர்களுக்கு நேர் எதிர். கோவைகாரர்கள்  யாரிடமாவது முகவரி கேட்டு பாருங்கள். நீங்கள் வயதில் பெரியவரா, சிறியவரா என்றெல்லாம் யோசிக்காமல் “அண்ணா. அப்பிடியே ரைட்ல போங்கண்ணா. லெப்ட்ல வாங்கண்ணா” என்று இவர்கள் கொங்கு தமிழில் பேசும் அழகை கேட்டு நமக்கே கோவையில் நிரந்தரமாக தங்கி விடத் தோன்றும்.

இப்படி வாழும் இடத்திற்கு ஏற்ப குணங்கள் எப்படி மாறுகிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். ஆனால் இவை அனைத்தையும் கடந்து  தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும்  இருக்கும் ஒரே மாதிரியான சினிமா ரசிப்புத்தன்மையும், அரசியல் பார்வையும் ஒரு ஆச்சரியம்தான்.


1 comment:

  1. வணக்கம்
    உண்மைதான் எல்லா இடங்களிலும் வித்தியாசம் உள்ளது இறுதியில் சொன்னதில் ஒற்றுமை உன்டு நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...