Sunday, November 15, 2015

திப்பு சுல்தான் - ஹிந்து நாளிதழின் அதீத ஆராய்ச்சி

திப்பு சுல்தான் நல்லவரா?கெட்டவரா என்பதுதான் இந்த கட்டுரையில் ஹிந்து நாளிதழின் ஆராய்ச்சி. திப்பு மாபெரும் வீரர் என்று சொல்லும் ஹிந்து நாளிதழ் மன்னர் அசோகரும் கலிங்கப் போரில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று குவித்தார் என்று அசோகரையும் திப்புவையும் ஒப்பிடுகிறது. நல்ல வேளையாக திப்பு ஹிந்துக்களை கொன்றதை மட்டும் மறைமுகமாக  அந்த கட்டுரை ஒப்புக் கொள்கிறது.

சமீபகாலமாகவே ஊடகங்கள்  அதீதமாக ஹிந்துத்துவா எதிர்ப்பு நிலையை எடுக்கின்றன. ஹிந்துத்துவா அமைப்புகளை எதிர்க்க அவை எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. அதற்கு ஒரு உதாரணம்தான் ஹிந்துவின் இந்த கட்டுரை. அசோகரின் காலத்தில் இஸ்லாம் மதமே தோன்றவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தவறை கணக்கில்   எடுக்காமல் பார்த்தாலும் கட்டுரையில் கூறியுள்ளவாறு அசோகர் மதத்தை காரணமாக கொண்டு முஸ்லிம்களையும், வெளிநாட்டினரையும்  கொன்று குவிக்கவில்லை. போர் காரணமாகவே ஒரிய மக்களை கொலை செய்துள்ளார். அதிலும் போர் முடிந்த பின் அவர் மனம் மாறிய கதை யாவரும் அறிந்ததே. ஆனால் திப்பு சுல்தான்?

அவரை பற்றிய கேள்விப்பட்ட  செவி வழி செய்தி அவரின் ஆட்சிமுறைக்கு  சிறிய உதாரணம். தமிழகத்தில் தேவாங்கர் என்ற ஜாதியை சேர்ந்த மக்கள் உண்டு. தமிழகம் முழுக்க பரவி வாழும் இந்த மக்களின் பூர்வீகம் கர்நாடகா. அந்த மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததன் காரணம் பஞ்சம் பிழைக்க அல்ல. அந்த கால கட்டத்தில் திப்பு சுல்தானின் கட்டாய  மத மாற்றத்தில் இருந்து தப்ப. முஸ்லிம்களை தவறியும் கொல்லாத அசோகரின்  சகிப்புத்தன்மையையும், ஹிந்துக்களை மதம் மாற்றியும் அகதிகளாகவும் அலைய விட்ட திப்புவின் சகிப்புத்தன்மையையும் எப்படி இவர்கள் ஒப்பிடுகிறார்கள். இது போல திப்பு  துன்புறுத்திய இந்துக்கள் இன்னும் எத்தனை பேரோ? செவிவழி செய்தியை எப்படி ஆதாரமாக கொள்வது என்று கேட்டால் ஹிந்து தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இங்கு இந்தியர்கள் தங்கள் வரலாறுகளை  முறையாக  ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் தாங்கள் அறிந்ததை தங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறுவதில்லை.

ஹிந்து நாளிதழ்(கட்டுரையாளர்) அடிக்கடி திப்புவின் தேசபக்தியை வேறு சிலாகிக்கிறது. அவர் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய தேச பக்தராம். 
தனது மக்களையே கொடுமைப்படுத்திய ஒருவர், தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற போராடியதை எப்படி எப்படி தேசப்பற்று என்று எடுத்துக் கொள்ள முடியும்? நல்ல வேளையாக அவரின் சுதந்திர போர் வெற்றி அடையவில்லை. ஒரு வேளை அவர் வென்றிருந்தால் அவரிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியர்கள் இன்னும் கடுமையாக போராட வேண்டியதிருந்திருக்கும். 

போதாக்குறைக்கு அலா சிங் என்ற மன்னரை வேறு தனது சாட்சிக்கு அழைக்கிறது கட்டுரை. அலா சிங்கை தேசத்துரோகி என்று கூறாவிட்டாலும் அவரை தேசத் தலைவராக யாரும் கொண்டாடவில்லை. ஆனால் திப்புவை இந்தியாவின் கதாநாயகனாக முன்னிறுத்துவதுதான் பிரச்சினை. 

மோடியையும், ஹிந்துத்துத்வதையும் எதிர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா பத்திரிக்கை தர்மம்? முஸ்லீம் மன்னர்களை நாம் வேண்டுமென்றே கெட்டவர்களாக  சித்தரிக்கிறோம் என்றால் அக்பரை மட்டும் நாம் நல்லவர் என்று கூறுவது ஏன்? ஹிந்து நாளிதழ் மட்டும் இல்லாமல் பெரும்பாலான ஊடகங்களின் செயல்பாடும் ஒருதலைப்பட்சமாகவே உள்ளது. அந்த கட்டுரையாளரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் தமக்கு அரைகுறையாக தெரிந்த விஷயங்களை வைத்து கொண்டு முஸ்லிம் மன்னர்களை நியாயப்படுத்த அவர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். 


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...