Sunday, November 10, 2013

புதிய தமிழ்

நான் அழைப்பு மணியை அழுத்திய சில நொடிகளில் அந்த கதவு திறந்தது. திறந்தது என்னுடைய நண்பன் சுதாகரேதான். அவன் முகத்தில் பதற்றம் தெரிந்தது.

"என்னடா சுதா! அவசரமா வர சொன்ன"

"நீ முதல்ல உள்ள வா. பேசலாம்"

நான் வீட்டினுள் சென்று அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

"சொல்லுடா என்ன விஷயம்."

"வெங்கி! உனக்கே தெரியம்ல. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஏதாவது சாதிக்கணும்னு ஒரு வெறி."

" உண்மைதான் சுதா. காலேஜ்ல  படிக்கிற காலத்துல இருந்தே ஆராய்ச்சி, ஆராய்ச்சினு எந்நேரமும் லைப்ரரிலயே இருப்பே. இப்போ கூட வேலைக்கு போகாம எந்நேரமும் வீட்லயே அடைஞ்சு ஏதோ எழுதிக்கிட்டும், படிச்சுகிட்டும் இருக்க. இது நம்ம கூட படிச்ச எல்லாருக்கும் தெரியுமே"

"சரி. நான் என்ன ஆராய்ச்சி செஞ்சேன்னு உனக்கு தெரியுமா?"

"ஏதோ மொழி ஆராய்ச்சின்னு தெரியும். அவ்வளவுதான்"

"இதுதாண்டா நம்ம ஆளுங்க. இத்தனை வருஷம் உன் கூடவே இருக்கேன். உன்கிட்டயே நெறைய புத்தகங்கள் வாங்கி தர சொல்லி இருக்கேன். இருந்தாலும் நான் என்ன செஞ்சுகிட்டு இருக்கேன்னு நீ ஒரு நாளும் கேட்டதில்லை" என்றான் ஆவேசமான குரலில்.

"சரி கோவப்படாம சொல்லு. என்ன பிரச்சினை உனக்கு?"

"சுதா! எனக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே தமிழ் ஆர்வம் ஜாஸ்தி.  ஆனா வளர வளர தமிழர்கள் இங்கிலிஷ் பின்னாடி போறதை புரிஞ்சுகிட்டேன். நம்ம மொழியில என்ன இல்லைன்னு நம்ம மக்கள் வேற்று மொழியை தேடி ஓடுறாங்கன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அது மட்டும் இல்ல. இங்கிலிஷ் உலகம் முழுக்க பரவி இருக்குன்னா  அதோட காரணம் என்னன்னும் யோசிக்க ஆரம்பிச்சேன்"

"யோசிச்சதுல என்ன கிடைச்சது?"

"அதுக்கு காரணம் இங்கிலிஷோட சிம்ப்ளிசிட்டி. இங்கிலிஷ்ல 26 எழுத்து மட்டும் இருக்கிறதுதான். அதனால அது கத்துக்கிறது ரொம்ப சுலபமா இருக்கு. அந்த 26 எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி எப்பிடி வேணும்னாலும் வார்த்தைகளை உருவாக்கிக்கலாம்."

"அப்பிடி பார்த்தா 26 எழுத்து கூட இல்லாத மொழி எல்லாம் இருக்கே"

"ஆனா அதுல இங்கிலீஷ் மாதிரி அதுல நெறைய  வார்த்தைகள் இல்லை. அங்கதான் இங்கிலீஷ் ஜெயிக்குது"

"லேசா புரியுது."

"இதனால நான் என்ன செஞ்சு இருக்கேன்னா தமிழை எளிமைப்படுத்தி இருக்கேன். தமிழ்ல இருந்த எழுத்துகளை குறைச்சு 26 எழுத்தா ஆக்கிட்டேன். எல்லாம் புதிய எழுத்து வடிவம். தமிழ்ல இருக்குற எல்லா வார்த்தைகளையும் இந்த 26 எழுத்திலேயே கொண்டு வந்துடலாம்." முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் சொன்னான்.

"அட பாவி! அது எப்பிடி சாத்தியம்"

"இதை விளக்குறது கஷ்டம். எல்லாம் அந்த புத்தகத்தில் எழுதி இருக்கேன்." அவன் சுட்டி காட்டிய புத்தகத்தில் குறைந்தது 2000 பக்கங்கள் இருக்க வேண்டும்.

"சரிடா! என்னை எதுக்கு கூப்பிட்ட?"

"என்னோட இந்த ஆராய்ச்சி பத்தி ஒரு அமைச்சர் கிட்ட பேசுனேன். இந்த புது தமிழை நம்ம மக்களுக்கு அறிமுகப்படுத்துறது என் திட்டம். அப்பிடியே வரப்போற உலகத் தமிழ் மாநாடுல இதை பத்தி பேசவும் அனுமதி கேட்டு இருந்தேன்."

"என்ன சொன்னார் அமைச்சர்?"

"பார்க்கலாம் அப்பிடின்னு சொல்லிட்டு போய்ட்டார். ஆனா இந்த விஷயம் எப்பிடியோ வெளிய தெரிஞ்சு போச்சு. தமிழை வளர்க்க நினைச்ச எனக்கு இப்போ தினமும் கொலை மிரட்டல் வருது. ஏதேதோ சங்கம் பேரை சொல்லி எல்லாம் மிரட்டுறாங்க. நான் இனிமே  இந்த ஆராய்ச்சி பத்தி பேசவே கூடாதாம்."

"கொலையா? போலீஸ் கிட்ட சொன்னயா?"

"சொன்னேன். யூஸ் இல்லை."

"நீ கொஞ்ச நாளைக்கு எங்கயாவது போயிடு சுதா"

"எனக்கு என்னோட உயிரை பத்தி என்னோட ஆராய்ச்சி தமிழுக்கு பயன்படாம போக கூடாது. அதுதான் என்னோட கவலை."

"என்ன செய்ய போற?"

"நான் செய்ய ஒன்னும் இல்லை. இனிமே நீதான் செய்யணும். அதோ அங்க இருக்குற நோட்டை எடுத்துக்கோ. நாளைக்கு எனக்கு ஏதாவது ஆனாலும் என்னோட ஆராய்ச்சி மக்கள் கிட்ட போய் சேர்ற மாதிரி ஏதாவது செய். நீ என்னோட உயிர் நண்பனாச்சே. உன்னை விட்டா வேற யார் கிட்ட இதை நான் கேட்பேன்." அவன் கண்கள் கலங்கி இருந்தன.

"என்னால முடியாதுடா"

"ஏன்? உன்னையும் எதாச்சும் செஞ்சுடுவாங்கன்னு பயமா?"

"அப்பிடி இல்லைடா"

" தமிழ் அழிய போகுது. நான் அதை தடுக்க பார்க்குறேன். எனக்கு இருக்குற அக்கறை உனக்கு இல்லையா? தமிழ் மேல பாசமே இல்லையா உனக்கு?"

"நிச்சயம் இருக்குடா"

"அப்போ தமிழுக்கு என்ன  செய்ய போற?"

"நான் செய்யுறது இருக்கட்டும். நீ எனக்கு ஒன்னு செய்யணும்."

"என்னன்னு சொல்லு"

"உன்னோட ஆராய்ச்சி நோட்ஸ் அத்தனையும் நெருப்புல போட்டு கொளுத்தணும்."

"டேய்"

"ஆராய்ச்சி பண்றானாம் ஆராய்ச்சி. அர்த்தமே இல்லாம. எண்டா! எழுத்தை மாத்திட்டா மொழி வளர்ந்திடுமா?" கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திராமல் அவன் வீட்டை விட்டு வெளியேறினேன்.

1 comment:

  1. படிப்பதற்கு கடினம் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழை படித்த எத்தனை பேர் அது கடினமாக இருக்கிறதென்று சொல்கிறார்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...