Wednesday, February 26, 2014

குற்றவாளிகளா ஐடி நிறுவனங்கள்?

மா மகேஸ்வரி கொலையில் கொலையாளிகளை பிடித்து விட்டதாக அறிவித்து விட்டனர். பத்திரிக்கைகள் இன்னும் இரண்டு நாளுக்கு பின் இது சம்பந்தமான செய்திகளை பெட்டி செய்தி அளவுக்கு சுருக்கி விடுவார்கள். நாமும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை மறந்து விடுவோம்.

இந்த சம்பவம் பற்றி வந்த பெரும்பாலான கட்டுரைகளும், செய்திகளும்  உமா மகேஸ்வரி பணியாற்றிய நிறுவனமும் நடந்த கொலைக்கு ஒரு  காரணம் என்ற ரீதியில் எழுதி வருகின்றனர் சிலர். நிறுவனத்தில் வாகன வசதி செய்து கொடுத்து இருந்தால் குற்றம் நடந்து இருக்க வாய்ப்பில்லையாம். உண்மைதான். அலுவலக வாகனத்தில் வீடு திரும்பி இருந்தால் அந்த பெண் பாதுகாப்பாக வீடு திரும்பி இருக்கலாம். ஆனால் அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் அந்த நிறுவனம் ஊருக்கு வெளியே இருந்ததோ, அல்லது அந்த நிறுவனம் வாகனம் தராததோ மட்டும் அல்ல. உண்மையான காரணம் நமது சமூகம்தான்.

இருட்டிய பிறகு தனியாக  எந்த பெண்ணும் தெருவில் இறங்கி நடக்க கூடாது என்று சொல்வது போல இருக்கிறது இந்த சம்பவம். கிமு ஆக இருந்தால் என்ன? கிபி ஆக இருந்தால் என்ன? பெண்களின் நிலைமை இதுதான் என்று அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விட்டோம். இதை மாற்றும் வழி என்ன என்று சிந்திப்பதே இது போன்ற பிரச்சினைகளை நிரந்தரமாக தடுக்கும் வழி. அதை விட்டு விட்டு ஐடி நிறுவனங்களை சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்ப்பது சரி இல்லை. இது ஐடி நிறுவனங்கள் தங்களை சரி செய்து கொண்டால் தேசத்தின் ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைத்து விடும் என கூறுவது போல் உள்ளது.


ஹிந்து பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்கள். திருமணமான பெண்களுக்கு ஐடி துறையில் பணி உயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று ‘சேவ் தமிழ்ஸ்’ நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.


ஐடி துறையில் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதில் இரு வேறு கருத்தே இல்லை. ஆனால் திருமணமான பெண்கள் தங்களுக்கு திறமை இருந்தாலும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது என்பதெல்லாம் அபத்தம். உண்மையில் ஆணோ, பெண்ணோ திருமணமான பின் பொறுப்புகள் அதிகரிக்கின்றன. திருமணத்திற்கு முன்பு வேலை செய்ததை போல திருமணத்திற்கு பின் வேலை செய்ய முடிவதில்லை. குடும்ப பொறுப்புகள் வேலையில் அவர்களின் கவனத்தை குறைப்பது இயற்கையே. அதனால் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது அவர்களால் திருமணம் செய்யாதவர்களை போல விரைவில் பதவி உயர்வோ, ஊதிய  உயர்வோ பெற முடியவில்லை.

ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். இரண்டு பெண்கள்  இருபத்தி இரண்டு வயதில் வேலைக்கு சேர்கின்றனர் என்று வைத்து கொள்வோம் . அவர்களில் ஒருவர்  மணம் செய்து கொண்டு இருபத்தி ஏழு வயதில் தாயாகி விடுகிறாள். குழந்தையின் உடல் நலம் காரணமாக  அடிக்கடி விடுப்பு எடுக்கிறாள்.  வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதே நேரம் இன்னொருத்திக்கு திருமணம் ஆகவில்லை. கடினமாக உழைக்கிறாள். அந்த வருடம் யாரோ ஒருவருக்கு மட்டுமே பதவி உயர்வு தர முடியும் என்ற சூழலில் நிர்வாகம் மணமாகாத பெண்ணுக்கு பதவி உயர்வு தருகிறது. அதுதானே நியாயம். இப்போது ஒருவேளை மணமான பெண்ணுக்கு பதவி உயர்வு கொடுத்தால், மணமாகாத பெண்ணால் தொடர்ந்து  எப்படி சிறப்பாக வேலை செய்ய முடியும்?

பின்னர் ஏன்  திறமை இருந்தாலும் பதவி உயர்வு மறுக்கப்படுவதாக கூறுகின்றனர்? அதுதான் மனித சுபாவம். உங்கள் நிறுவனம் உங்கள் திறமைக்கு ஏற்ற ஊதியமும், பதவி உயர்வும் அளிக்கிறதா என  எந்த துறையிலும் பணிபுரியும்  ஊழியர்களிடம்  கேட்டு பாருங்கள். எண்பது சதவீதம் பேர் இல்லை என்றே சொல்வார்கள். நிர்வாகம் தங்களை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு நியாயமாக தர வேண்டியதை தரவில்லை என்றே சொல்வார்கள். இந்த கருத்து கணிப்பில் சொல்லியதை போல.

ஐடி நிறுவனங்கள் தர்மப்படி நடப்பதாக சொல்லவில்லை. இருந்தாலும் எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டுமே  குற்றம் சொல்வது சரியில்லை என்றே சொல்கிறேன். 


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...