Wednesday, March 5, 2014

தேவதை பெண்

மீண்டும் நேர்முகத் தேர்வில் தவறிய விரக்தியில் எரிச்சலுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். பழைய நிறுவனம் என்னை வேலையில் இருந்து  எடுத்த  பின் நான் கலந்து கொண்ட எட்டாவது நேர்முக தேர்வு இது.

கதவை மூடி விட்டு கண்ணாடி முன் நின்று என்னை நானே பார்த்து கொண்டேன். இனி எனக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால் யாராவது வரம் கொடுத்தால்தான் உண்டு என்று தோன்றியது.

“ஆண்டவா! காப்பாத்து” மேலே பார்த்து கொண்டு கத்தினேன். மனம் சற்று லேசானது.

“மானுடா!” யாரோ அழைப்பது போல இருந்தது.

என்ன இது? பூட்டிய வீட்டுக்குள் பெண் குரல். குரல் வந்த திசையில் திரும்பினேன். ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். என்ன கனவு காண்கிறேனா?

மீண்டும் அந்த பெண்ணை நன்றாக பார்த்தேன். ஜீன்ஸ்,டீ ஷர்ட்டில் மிக அழகாக இருந்தாள். ஒட்டு மொத்த உடலும் கச்சிதமாக அளவெடுத்து செய்தது போல இருந்தது.

“யார் நீங்க? இங்க எப்பிடி வந்தீங்க”

“நானொரு தேவதை. சிறிய வயதில் தேவதை கதைகளில் படித்தது இல்லையா? கஷ்டப்படுபவர்களுக்கு தேவதை வந்து உதவும் என்று.” சொல்லிவிட்டு பளிச்சென்று ஒரு சிரிப்பு சிரித்தாள் அந்த பெண் . மனதுக்குள் மின்னல் அடிப்பது போல இருந்தது.

“நம்பவே முடியலையே”

“என்னை நன்றாக பார். நீயே நம்புவாய்” என்றாள். நான் கண்களை அகல திறந்து கொண்டேன். அந்த பெண் புன் சிரிப்பு மாறாமல் என்னை பார்த்து கொண்டிருந்தாள். அவள் முதுகின் பின்னால் இருந்து எதுவோ விரிவது போல தெரிந்தது. அட அது இறக்கை. இத்தனை நேரம் இதை மடக்கி வைத்து இருந்தாளா? நான் யோசித்து  கொண்டிருக்கும்போதே அவள் தன் இறக்கைகளை பட படவென அடித்து கொண்டு மேலே எழும்ப தொடங்கினாள். சரியாக என் தலைக்கு நேராக அவள் பாதங்கள் வரும் உயரம் எழும்பி சென்று என்னை பார்த்து சிரித்தாள்.

“என்ன நம்புகிறாயா?”

“நம்புறேன் மேடம். கீழ வாங்க. கழுத்து வலிக்குது”

மெதுவாக கீழே இறங்கினாள்.

“தேவதை ஜீன்ஸ்ல வருமா?”

“தேவதைகள் காலத்துக்கு ஏற்ப மாறக் கூடாதா?”

“மாறலாம்தான். சொல்லப்போனால் தேவதை அணிந்தால்தான் ஜீன்சுக்கே மரியாதை”

“சரி சொல் மானிடனே. உனக்கு என்ன வரம் வேண்டும்?”

“வரமா?”

“ஆம். அதற்குதானே வந்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு வரம்தான். அதற்கு மேல் கேட்கக்கூடாது”

“போதும் போதும். ஒன்றுக்கு மேலே வேண்டாம் என்று அரசாங்கமே  பிரசாரம் செஞ்சு  இருக்கு ”

“சரி மானுடா! வரத்தை கேள்.”

“கேட்கிறேன் மேடம். அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம். ரொம்ப காலமா உங்கள மாதிரி தேவதைங்க பூமிக்கு வந்து யாருக்கும் வரம் கொடுக்கலியே.ஏன்?”

“மனிதர்கள் சுய நலவாதிகள். அவர்களுக்கு உதவ கூடாது என்று நாங்கள் முடிவு செய்து இருந்தோம். அதனால்தான்.”

“இப்போது எனக்கு மட்டும் உதவ காரணம்?”

“இத்தனை காலத்தில் மனிதர்கள் பண்பட்டிருப்பார்கள் என்பதுஎன் நம்பிக்கை. அதனால்தான் மீண்டும் கஷ்டப்படும் மனிதர்களுக்கு  உதவி செய்ய முடிவு செய்து முதல் ஆளாக உன்னை தேர்வு செய்தேன்.”

“சந்தோஷம்”

“சரி வரம் கேள் சீக்கிரம்.”

தேவதை அவசரப்படுத்த ஆரம்பித்தாள். என்ன கேட்பது என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“மேடம். தப்பா நினைக்காதீங்க. என்ன கேக்குறதுன்னு எனக்கு தெரியல”

“செல்வம்தானே  வழக்கமாக கேட்பீர்கள்?”

“நீங்க வேற. அது ராஜா காலத்துல. இப்போ திடீர்னு பணம் வந்தா அரசாங்கம் கணக்கு கேட்கும். பணம் இருந்தும் செலவழிக்க முடியாது. சிக்கல்”

“அப்படியென்றால் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுக்கவா?”

“நீங்க இன்னைக்கு  வேலை வாங்கி குடுப்பீங்க. நாளைக்கே அவன் என்னை வேலைல இருந்து தூக்கிடுவான் தேவையா இது?”

“அரசாங்க வேலை?”

“கிடைக்காம கிடைச்ச  வரத்தை வச்சு வேலை வாங்குறது எனக்கு புத்திசாலிதனமாப்படல ”

“இந்த நாட்டுக்கு பிரதமர் ஆக்கவா?”

“அது தொல்லை பிடிச்ச வேலைங்க. சுதந்திரமா இருக்க முடியாது. யார் யாரோ சொல்றதை கேட்டு ஆடணும்.”

“அமெரிக்க அதிபர்?”

“எனக்கு இங்கிலீஷ் வராதே. அமெரிக்கா போனா கஷ்டப்படுவேன்”

“என்ன மானிடா? வரம் கேட்க கூட இப்படி யோசிக்கிறாய்.”

தேவதை சலித்து கொண்டாள். அவளுக்கென்ன? ஒரு வரம் தந்துவிட்டு போய் விடுவாள். பின் வரத்தை வைத்து கொண்டு நான்தானே வாழ வேண்டும்.

“மேடம்! ஒரு வேண்டுகோள். நான் சற்று யோசிக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். நாளைக்கு  காலைல நான் கேட்குறேன்.”

“அது கடினம். நான் இப்போது சென்றால் மீண்டும் உன்னை சந்திக்க வர முடியாது.”

“சென்றால்தானே? இன்னைக்கு ராத்திரி இங்கயே இருங்க. நாளைக்கு வரம் குடுங்க”

“இல்லை. முடியாது.”

“ப்ளீஸ் மேடம். எனக்கு வரம் கிடைக்காம போனா நான் ரொம்ப ஏமாந்து போயிடுவேன்”

தேவதை யோசித்தாள்.

“சரி இருக்கிறேன். ஆனால் நாளை காலை எழுந்ததும் வரம் கேட்டு விட வேண்டும். தாமதம் ஆனால் நான் பறந்து சென்று விடுவேன்.”

“சரி”

தேவதை அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“மேடம்! நீங்க இந்த கட்டில்ல படுத்துகோங்க. நான் கீழ படுத்துக்குறேன். எதாச்சும் சாப்பிடுறீங்களா?”

“பசும்பால் இருக்கிறதா? எனக்கு மிகவும் பிடிக்கும். சாப்பிட்டுதான் அதிக நாட்கள் ஆகிவிட்டது.”

“இருக்கு. இதோ கொண்டு வரேன்.”

சமையல் அறைக்கு சென்று பாலை காய்ச்ச ஆரம்பித்தேன். உள்ளே நின்று கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்தேன். நாற்காலியில் இருந்து எழுந்து சென்று கட்டிலில் சென்று படுத்தாள். பின் உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்தாள். பறந்து வந்த களைப்பு போலும். நான் கண் இமைக்காமல் பார்த்தேன். இப்படி ஒரு அழகா? அப்போதுதான் எனக்கு அந்த எண்ணம்  தோன்றியது. அந்த பொடியை எடுத்து பாலில் கலக்கினேன். பால் கோப்பையோடு அவளை நெருங்கினேன்.

“எடுத்து கொள்ளுங்கள்”

“நன்றி”

சற்று நேரத்தில் அவள் மயங்கினாள். நான் அவளை நெருங்கினேன்.

திகாலையில் விசும்பல் ஒலி கேட்டது. எதிர்பார்த்ததுதான். கண்களை திறந்து பார்த்தேன். தேவதை அழுது கொண்டிருந்தாள்.

“மானிடா! என்ன காரியம் செய்தாய்”

“எல்லாம் நல்ல காரியம்தான்”

“என்னுடைய புனிதமே போய் விட்டது. இனி என்னால் என்னுடைய உலகம்  போகவே முடியாது.”

“அதற்குதானே செய்தேன்.”

தேவதையின் விசும்பல் அதிகரித்தது.

“ஏன் இப்படி  அழுற? உன் இறக்கையைதான வெட்டினேன். பொண்ணுங்களுக்கு  இறக்கை எல்லாம் இருக்க கூடாது”

“உனக்கு வரம் கொடுக்கத்தானே வந்தேன்.”

“என்ன வரம் கொடுத்துட போற. மிஞ்சி போனா பணம் குடுப்ப. ஆனா உன்னை மாதிரி அழகி எங்க கிடைப்பா. பேசாம என்னை கல்யாணம் செஞ்சுகிட்டு இங்கயே இரு.”

“நீங்கள் மாறவே மாட்டீர்களா?”

“நாங்கள் எத்தனை மாறினாலும், நீங்கள் எப்போதும் நாங்கள் சொல்வதை கேட்டு அடங்கியே இருக்க வேண்டும்.”


தேவதை பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். நேரம் ஆக ஆக அவளின் குரல் குறைந்து கொண்டே சென்றது. 


2 comments:

  1. தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

    http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
  2. ஹா... ஹா... சுவாரஸ்யம்...

    முதலில் தேர்ந்தெடுத்த மனிதனே இப்படி என்றால்...!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...