Wednesday, May 21, 2014

சென்னையை மெட்ரோ நகரமாக உணர்ந்த தருணம்

நான் முதல் முதலில் சென்னை வந்திருந்த சமயம். ஒரு மதியப்பொழுதில் கோடம்பாக்கத்தில் இருந்து தி.நகர் செல்ல பேருந்தில் ஏறி விட்டேன். பேருந்தில் கூட்டம் இல்லை. ஆனாலும்  இருக்கைகள் நிரம்பி இருந்தன. அமர்ந்திருந்த  நடத்துனரை தேடி  சென்று பயணசீட்டு வாங்க பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன்.

“ரெண்டு ரூபா டிக்கெட்டுக்கு பத்து ரூபாயை எடுத்து நீட்டினா எங்க போறது. பேசாம இறங்கிக்க” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து முன்னால் சென்று விட்டார்.

கையில் சில்லறை வேறு சுத்தமாக இல்லை. அவர் திரும்பி என்னை கடந்து செல்லும் நேரம் வரை காத்து இருந்து பாவமாக முகத்தை வைத்து கொண்டு “சில்லறை இல்லை சார்” என்றேன்.

கடுப்பாக முகத்தை வைத்து கொண்டு பத்து ரூபாயை வாங்கி கொண்டு  சில்லறை தேடி எடுத்து கொடுத்தார்

இது நடந்து முடிந்தபோது அடுத்த நிறுத்தம் வந்து இருந்தது. வட இந்தியர் போல இருந்த ஒருவர் காதில் மொபைலை வைத்து கொண்டு பதட்டமாக  பேருந்தில் ஏறி நடுவில் சென்று நின்று கொண்டார். நடத்துனர் அமர்ந்த இடத்தில் இருந்தே ‘டிக்கெட்’ என்றதும் பத்து ரூபாயை எடுத்து நீட்டி திநகர் என்றார்.

“சேன்ஜ் நஹி. இறங்கிக்க.” வாசலைகாண்பித்து என்னிடம் பாடிய அதே பாட்டை திரும்ப ஆரம்பித்தார் நடத்துனர்.

“வொய் சுட் ஐ கெட் டவுன். திஸ் இஸ் யுவர் ரெஸ்பான்ஸ்சிபிலிட்டி டு கிவ் சேன்ஜ்”

அடப்பாவி. அவன்தான் பஸ்ஸை வாங்கி விட்டவன் போல இப்படி கத்துகிறானே. இதே வார்த்தையை அவர் என்னிடம் சொன்னபோது நான் எப்படி பம்மினேன்.

“சில்லறை இல்லன்னா இல்லைதான். டோன்ட் டாக்  இங்கிலீஷ் . இறங்கிடு”

“ஐ கான்ட்! திஸ் இஸ் கவர்மென்ட் ப்ரோபர்ட்டி! யு ஆர் பப்ளிக் சர்வன்ட். யூ கான்ட் ஆர்டர் மீ. ஐ ஆம் எ லாயர். ஐ நோ மை ரைட்ஸ் ” என்று சத்தத்தை மேலும் கூட்டினார்.

நடத்துனர் இப்போது சற்று குழம்பி விட்டார். இப்போது வட இந்தியருக்கு ஒரு ஆதரவு குரல் எழுந்தது.

“அவர் கூட ஏம்பா சண்டை  போடுற. சில்லறை கொடுத்துடேன்”

“என் கிட்ட சில்லறையே இல்லம்மா.”

இது வரைக்கும் அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியம்மா அந்த வட இந்தியரிடம் தனது கருத்தை சொல்ல ஆரம்பிக்கும் வரை. ஆங்கிலத்தை தமிழில் தட்டச்சுவது சிரமமாக இருப்பதால் இனி எல்லாமே தமிழில்.

“நானும் தமிழ்நாடு இல்லை. சென்னை வந்து 25 வருஷம் ஆச்சு. தமிழ் தெரியலனா சென்னைகாரங்க இப்பிடித்தான் செய்வாங்க. அங்க கண்ணாடி போட்டு நிக்குறானே ஒரு பையன். அவன் பத்து ரூபாயை கொடுத்ததும் இவர் சில்லறை கொடுத்தார். இப்போ நீ இங்கிலிஷ்ல கேட்டதும் தர மாட்டேங்குறார்.”

அந்த பெரியம்மா எதற்காக இந்த கருத்தை சொன்னார்கள் என்றே தெரியவில்லை. அவருக்கு யார் மேல் கோபம் என்பதும் புரியவில்லை. அடிப்பாவி! இதுல ஏன் என்னோட பேரை இழுக்குற என்று எண்ணி கொண்டிருந்தேன். வட இந்தியரோ இப்போது  கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.


“நான் மேலதிகாரிங்ககிட்ட போவேன். நான் யாரு தெரியுமா” என்று பேருந்து முழுவதும் கேட்க உரத்து சொன்னார்.

இப்போது முன்னிருக்கையில்  நடந்ததை கவனித்து கொண்டிருந்த ஒரு வீர தமிழருக்கு கோபம் வந்து விட்டது.

“வாயை மூடுடா! என்ன பேசிகிட்டு இருக்க. எனக்கு திநகர் இன்ஸ்பெக்டரை தெரியும்” சட்டை கையை  மடக்கி விட்டு எழுந்தார். அவர் சொன்னது   வட இந்தியருக்கு புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனாலும் சட்டை கையை மடக்கி விட்டதன் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும். அவரின் உடல் விரைப்பானதை உணர முடிந்தது. அவர் கண்கள் சிவந்து விட்டன.

அடப்பாவிங்களா! ஒரு ரெண்டு ரூபாய்க்கு அடி தடிக்கெல்லாம் போறீங்களேடா

“ஒரு திநகர் கொடுங்க.” ஒரு குரல் என்னை கலைத்தது. இந்த நேரத்துலயும் டிக்கெட் கேட்கும் கடமையாளர் யார்? சிலிர்த்து கொண்டு திரும்பினேன். நடத்துனரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒருவர் டிக்கெட் எடுத்து கொண்டிருந்தார். இந்த பெண்கள் இத்தனை நேரமா டிக்கெட் எடுக்காமல் இருந்தார்கள் என்று அவர்களை நான் பார்த்து கொண்டிருந்தபோது அந்த பெண் அந்த டிக்கெட்டை வட இந்தியரிடம் நீட்டினார்.

“நீங்க எதுக்கு டிக்கெட் எடுக்கணும்?” வட இந்தியர்  கேட்டார்.

“பரவாயில்ல பிடிங்க” கொடுத்து விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தார். இது நடந்து இரண்டு நிமிடங்களில் வட இந்தியர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது. அடிக்க வந்தவரை முறைத்து கொண்டே யாருடனோ மொபைலில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இறங்கிவிட்டார்.

“கண்டக்டருங்க சில்லறை வச்சுக்க வேணாமா? அவன் என்ன டென்சன்ல இருந்தானோ?”

“இவருக்கு இன்ஸ்பெக்டர் தெரியும்னா அவனுக்கு யாரை எல்லாம் தெரியுமோ? யாரை கூப்பிடான்னு தெரியல. அடிக்க வந்தவரை லேசுல விட மாட்டான்”

மக்களின் பலதரப்பட கருத்துகள் பேருந்து முழுவதும் ஒலிக்க தொடங்கின.

இரண்டு ரூபாய் பிரச்சினை மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாகி விட்டதை யோசித்து கொண்டே பேருந்தில் இருந்து இறங்கினேன். தசாவாதாரம் கியாஸ் தியரிபடி இந்த சண்டைக்கு காரணம் யார்? யார் மேல் தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய நகரங்களில் சில நுணுக்கமான பிரச்சினைகள் இருப்பது மட்டும் தெரிந்தது

சரி இதை முழுக்க படித்து இருந்தால் நீங்களாவது சொல்லுங்கள். தவறு சில்லறை இல்லாத கண்டக்டர் மீதா? ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில் பேசிய ? சண்டையை பெரிதாக்கிய அந்த பெரியம்மா மீதா? அடிக்க வந்தவர் மீதா? இதை ஒரு விஷயம் என பதிவிட்டு கொண்டிருக்கும் என் மீதா? இல்லை எத்தனை மொக்கை பதிவிட்டாலும் வந்து படிக்கும் உங்கள் மீதா?



11 comments:

  1. அதே அதே எங்கள் மீதே... ஹிஹி...

    ReplyDelete
  2. இதில் ஒரு தவறை கண்டுபிடிக்க முயற்சிப்பவர்கள் மீதுதான் thavaru

    ReplyDelete
  3. இதில் ஒரு தவறை கண்டுபிடிக்க முயற்சி செய்பவர்கள் மீதுதான் தவறு

    ReplyDelete
  4. Replies
    1. டிக்கெட்டும் மாயை, சில்லரையும் மாயை, கண்டக்டரும் மாயை, இதை எழுதியவர்கள், கமெண்ட் போட்டவர்கள் என்று எல்லாமே மாயைதான்

      Delete
    2. அடுத்த பதிவை தேற்ற உதவிய உங்களுக்கு நன்றி

      Delete
  5. நல்ல ஒரு பதிவு. யார் மீது யார் தவறு சொல்வது.
    மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...