Tuesday, July 22, 2014

ஒரு ஆசிரியையின் மோசமான நாள்

ன்னை பொறுத்தவரை ஆசிரியர்களாக இருப்பது கடினமான காரியம். அதுவும் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக இருப்பது. அந்த வயது மாணவர்களுக்கு தாங்கள் பெரியவர்களா, சிறியவர்களா என்ற குழப்பம் இருப்பது போலவே ஆசிரியர்களுக்கும் அவர்களை பெரியவர்களாக நடத்துவதா, சிறியவர்களாக நடத்துவதா என்ற குழப்பம் இருக்கும். இது தவிர மாணவர்களின் கேலி, கிண்டல்களையும் கண்டும் காணாதது போல பொறுத்து கொள்ள வேண்டும்.

எங்கள் பள்ளியில் வாரம் ஒரு நாள்  பிரார்த்தனையின் போது கொடி ஏற்றுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியர் என்ற ரீதியில் கொடி ஏற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு நிறைந்த திங்கள்கிழமை நாளில் அந்த வாய்ப்பு பள்ளியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த   ஆசிரியைக்கு கிடைத்தது. அந்த ஆசிரியையும் தனக்கு எதிராக விதி சதி செய்யப்போவதை உணராமல் எல்லா பல்லும் வெளியே தெரியுமாறு சிரித்துக் கொண்டு உற்சாகமாக கொடி ஏற்ற கொடி கம்ப பீடத்தில் ஏறினார்.

உடற்கல்வி ஆசிரியர் கொடி ஏற்றும் கயிறை கையில் கொடுத்ததும் ஏதோ ஐ.நா சபைத் தலைவர்  போல தலையை நிமிர்த்தி மேலே பார்த்து கொண்டார். பின்னர் அந்த கயிறை ஒயிலாக இழுத்தார் பாருங்கள் . மின்னல் வேகத்தில் மேலே ஏறிய கொடி விரிந்து அதே வேகத்தில் மீண்டும் கீழே இறங்கத் தொடங்கியது. பதட்டத்தில் அந்த ஆசிரியை மீண்டும் கயிற்றின் ஏதோ ஒரு முனையை பிடித்து மீண்டும் இழுக்க கொடி சரியாக பாதி கம்பத்தில் நின்று கொண்டது.

 இது போதாதா? பள்ளியின் மாணவர் தலைவன் உட்பட அனைவரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள். ஒரு சில ஆசிரியர்களும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டார்கள். ஏதும் கொடி அவமதிப்பில் சிக்கி விடுவோமோ என்ற சந்தேகத்தில் தலைமை ஆசிரியரின்  முகத்தில் ஈ ஆடவில்லை. ‘வாரத்துல முதல் நாள்  கொடி ஏத்த சொன்னா இது துக்க நாள் மாதிரி  கொடியை பாதி கம்பத்துல பறக்க விடுது’ என்று பக்கத்தில் இருந்தவன் கமெண்ட் அடிக்கவும் நான் கொஞ்சம் அதிகமாகவே சிரித்து விட்டேன். உடற்கல்வி ஆசிரியர் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொடியை கீழே இறக்கி மடக்கி வைத்தார்.

எல்லாம் சற்று அடங்கியதும் தலைமை ஆசிரியர் பேச ஆரம்பித்தார். எதுவும் நடக்காத தொனியில் இன்று கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்த ஆசிரியைக்கு நன்றி என்று கூறி முடித்தவுடன் அருகில் இருந்தவன் மீண்டும் ‘ஏத்தி வச்சுச்சா? இறக்கில்ல வச்சுச்சு’’ என்று மெல்லிய குரலில் சொல்ல மீண்டும் அசர்ந்தப்பமாக சிரித்து தொலைத்து விட்டேன். இந்த முறை நான் மட்டும் சிரித்தால் தனியாக தெரிந்து விட்டது. நான்கு, ஐந்து தலைகள் என் பக்கம் திரும்பி விட்டன . இப்போது தலைமை ஆசிரியர் ‘நீங்கள் சிறுவர்கள் அல்ல. இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்’ என்று கூறி உரையை முடித்து விட்டார்.

தேசிய கீதம் பாடி பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் வகுப்புக்கு செல்ல முயன்றபோது பள்ளியின் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் எங்கள் வகுப்பு மாணவர்களை  சுற்றி வளைத்து வெயிலில் முட்டி போட சொல்லி அன்பு கட்டளை இட்டனர். ‘சின்ன பசங்களை  விட்டுடலாம்  சார்! எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டு எப்பிடி சிரிச்சானுங்க பார்த்தீங்கள்ள’ என்று ஒரு வழுக்கை தலை ஆசிரியர் கையில் குச்சியை தட்டி கொண்டே சொன்னார். எங்களில்  ஒரு மாணவன் மயக்கம் அடைந்ததால்  முப்பது நிமிடங்களுக்கு பின் வகுப்புக்கு திரும்பிவிட்டோம். எங்கள் வகுப்பு மட்டும் மாட்டியதற்கு நான்தான் காரணம் என்று எண்ணி என்னை மற்றவர்கள் அடித்து நொறுக்க போகிறார்கள் என்று எண்ணி பயந்து கொண்டே இருந்தேன். நல்ல வேளையாக எந்த முட்டாள் பயலுக்கும் அந்த எண்ணம் தோன்றவில்லை.

மறுநாள் கொடி ஏற்றிய ஆசிரியை ஓய்வறையில் அழுததாக ஒரு வதந்தி மாணவர்களிடையே பரவியது. முதல் மாணவர்கள் சில பேர் ‘பாவம் டீச்சர்’ என்று என்று பரிதாபப்பட்டுவிட்டு மீண்டும் முதல் நாள் நடந்ததை பற்றி பேசி சிரித்து கொண்டிருந்தனர்.

சில நாட்களுக்கு முன் பள்ளி பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை பிடித்து அந்த டீச்சரை பற்றி விசாரித்தேன். இப்போது கொடி நன்றாகவே ஏற்றுகிறார்கள் என்றான். ஆனால் அவன் ‘அந்த டீச்சர் என்ன கோமாளித்தனம் செஞ்சுச்சு தெரியுமா?’ என்று இன்னொரு கதை சொன்னான். இதே போல அத்தனை ஆசிரியர்களுக்கும் ஒரு கதை சொல்லி சிரித்தான். காரணங்கள் மாறினாலும் நிஜமாகவே ஆசிரியர்களாக இருப்பது கஷ்டம்தான்.

3 comments:

  1. உங்களைப் பற்றி என்ன சொல்லி சிரிக்கிறார்களோ?இந்த உதறல் உங்கள் எழுத்தில் தெரிகிறது !
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. அதிர்ஷ்டவசமாக நான் ஆசிரியர் இல்லை. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  2. சிரமம் தான்... அதுவும் இன்றைக்கு மிகவும் சிரமம் தான்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...